இன்னும், இரண்டு மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடக்கப் போவது பெரும்பாலும் உறுதியாகி விட்ட நிலையில், அரசியல் கூட்டணிகளை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இருந்து வந்த இழுபறிக்கு கடைசியில் தீர்வு காணப்பட்டிருக்கிறது.ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, அன்னம் சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்திருக்கிறது. பொதுஜன பெரமுன தனது மொட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்காமலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற பெயரை விட்டுக் கொடுக்காமலும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.
மொட்டு சின்னத்தில் போட்டியிட முடியாது என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த- இணைத் தலைவர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்ற- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒரு வழியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடவும், மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டணியின் தவிசாளர் பதவி போதும் என்றளவுக்கும் இறங்கிப் போயிருக்கிறது.
சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி தேவையில்லை என்றும், தனித்தனியாகப் போட்டியிடலாம் என்றும் கூறிக் கொண்டிருந்த பொதுஜன பெரமுனவும், கடைசி நேரத்தில், சுதந்திரக் கட்சியுடனான கூட்டை உறுதி செய்திருக்கிறது. பொதுஜன பெரமுன என்ற பெயரை விட்டுக் கொடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் போட்டியிட அது இணங்கியிருக்கிறது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற விரக்தி மக்கள் மத்தியில் காணப்படுவதால் தான், இந்த இரண்டு கட்சிகளுமே விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருக்கின்றன என்ற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.தனித்துப் போட்டியிடுவோம் என்று மல்லுக்கட்டிய பொதுஜன பெரமுனவும், மொட்டு சின்னத்தில் போட்டியிட இணங்க மாட்டோம் என்று வீறாப்புக் காட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், கடைசியில் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயிருக்கின்றன.அதுமாத்திரமன்றி, இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடாது என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி வடக்கு, கிழக்கில் போட்டியிடாது என்று தயாசிறி ஜயசேகர முதலில் கூறியிருந்தார். அது குறித்து கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை இரண்டு பிரதான கட்சிகளும் எடுத்துள்ளதற்கு முக்கியமான காரணம், வடக்கு, கிழக்கில் மொட்டு சின்னம் இதுவரை செல்வாக்கைப் பெறவில்லை. மொட்டு சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட இரண்டு தேர்தல்களிலும், வடக்கு, கிழக்கில் படுதோல்வி காண நேரிட்டது.
உள்ளூராட்சித் தேர்தலில் ஏனைய பிரதேசங்களில் மொட்டு சின்னம் வெற்றி வாகை சூடிய போதும், வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில், அது படுதோல்வி கண்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வடக்கு, கிழக்கில் மிகக் குறைந்தளவு வாக்குகளே கிடைத்திருந்தன. மொட்டுச் சின்னம் சிறுபான்மையின மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் ஒன்றாக இருப்பதே அதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கவில்லை. இந்தநிலை பாராளுமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடும் என்ற அச்சம் பிரதான கட்சிகளிடம் இருக்கின்றன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்படியாவது யாழ். மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெறலாம் என்று நம்புகிறது. மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால், அதுவும் கிடைக்காமல் போய்விடலாம் என்ற அச்சம் அதனிடம் உள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் தோல்வியடைந்த மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈ.பி.டி.பியும் தயாராக இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் நிர்வாக குழுவில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ள போதும், ஈ.பி.டி.பி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடமளிக்கப்படவில்லை ஏற்கனவே ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டிலிருந்து வருகிறது. அந்தக் கட்சி கூட, கடந்த தேர்தல்களில் தனித்தே வீணை சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.வீணை சின்னத்தில் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றக் கூடிய நிலையில் உள்ள ஈ.பி.டி.பி, மொட்டு சின்னத்திலோ, வெற்றிலைச் சின்னத்திலோ களமிறங்கத் தயாராக இல்லை. அதுபோலத் தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மொட்டு சின்னத்தில் வடக்கு, கிழக்கில் களமிறங்க விரும்பவில்லை.
பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில், மொட்டுச் சின்னம் அதற்கு முக்கியமானதென்றாலும், வடக்கு, கிழக்கில் அந்தச் சின்னத்தை மீண்டும் ஒருமுறை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள தயங்குகிறது போலத் தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னம் தமிழ், முஸ்லிம் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதுபோன்ற நிலை, மீண்டும் பொதுத் தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பது பொதுஜன பெரமுனவின் கவலையாக இருக்கலாம். மீண்டும் மொட்டுச் சின்னம் தமிழ், முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்டால், சர்வதேச அளவில் அரசாங்கத்தின் அங்கீகாரத்துக்கு சவாலாக இருக்கும். அதனால் கூட மொட்டுச் சின்னத்தை தவிர்க்கும் முடிவை அரசாங்க உயர் மட்டங்கள் எடுத்திருக்கலாம்.
அதேவேளை, வெற்றிலைச் சின்னத்தில் இந்தக் கூட்டணி தனியாக களமிறங்கினாலும் கூட, இரண்டு பிரதான கட்சிகளின் செல்வாக்கு கேள்விக்குள்ளாக நேரிடும். வடக்கு, கிழக்கில் ஒரு முகத்தையும், தெற்கில் மற்றொரு முகத்தையும் காட்டுகின்ற நிலையில் தான் ஆளும்தரப்பு உள்ளது என்ற விமர்சனங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். அரசாங்கம் தனது சுயமுகத்துடன் வடக்கு, கிழக்கிற்கு செல்ல முடியாமல் இருக்கிறது என்பது உறுதியாகும். வடக்கு, கிழக்கில் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு வெற்றியைப் பெறுகிறதோ இல்லையோ, என்பது முக்கியமல்ல. அது எந்த வடிவத்தில் போட்டியிடப் போகிறது என்பதைக் கொண்டே, ஆளும்கட்சியின் உண்மையான நிலை வெளிப்பட்டு விடும்.
-சத்ரியன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM