சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஷியாமளா கோமஸ் மற்றும் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் இலஞ்சம் தொடர்பில் செயலாற்றும் சிரேஷ்ட செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் அன்டோ அந்தப்பன் ஆகியோர் இலங்கையில் பாலியல் இலஞ்சம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தாம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அவர்கள் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.
கேள்வி: பாலியல் இலஞ்சம் (Sexual Bribery) என்பதன் அர்த்தம் என்ன?
பதில்: நபர் ஒருவர் பொதுத் துறை அதிகாரி, நீதித்துறை அதிகாரி, சமாதான நீதிவான், பொலிஸ் அதிகாரி (1965ஆம் ஆண்டின் இலஞ்ச ஒழிப்பு சட்ட இல 2இன் கீழ் உள்வாங்கப்பட்டவர்கள்) போன்றவர்களிடம் சட்டப்பூர்வமாக பெற்றுக் கொள்ளவேண்டிய சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு, ஒரு பாலியல் சலுகையை (sexual favors) கோரும் செயல் பாலியல் இலஞ்சம் என்று அழைக்கப்படுகிறது.
இது முன்னர் பெருமளவில் அறிந்திராத ஒரு சொற்பதமாகும். வட மாகாணத்தை சேர்ந்த பெண்கள் பொதுச் சேவைகளை பொதுத் துறை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள முயற்சி செய்யும் போது, அவர்களிடமிருந்து குறித்த அதிகாரிகள் பாலியல் ரீதியான சலுகைகளை கோருகின்றமை தொடர்பில் பெண் செயற்பாட்டாளர் ஒருவருடன் நாம் தொடர்பு கொண்ட போது அறிந்து கொள்ள முடிந்தது.
உதாரணமாக படையினர், பொலிஸார், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் காதி நீதிபதிகள் இந்த சொற்பதத்தினை நாம் மோசடி தவிர்ப்பு கட்டமைப்பு மற்றும் குற்றச்செயல்களில் (Anti corruption framework and as a criminal offence) ஒன்றாக உள்வாங்கும் வகையில் பிரேரித்திருந்தோம்.
கேள்வி: எக்காலப்பகுதியில் இந்த விடயம் உங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது?
பதில்: 2015 ஆம் ஆண்டு. எவ்வாறாயினும், 2016ஆம் ஆண்டிலிருந்து இந்த விடயம் தொடர்பில் நாம் கூடுதலாககவனம் செலுத்த தொடங்கியதுடன், இது தொடர்பான சம்பவங்களை ஆவணப்படுத்த ஆரம்பித்தோம்.
கேள்வி: உங்கள் ஆய்வின் போது, இலங்கையில் நிலவும் இந்தப் பிரச்சினை ஏனைய ஆசிய நாடுகளிலும் காணப்பட்டதை கண்டறிந்தீர்களா?
பதில்: ஆம். உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்த விடயம் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தப்படாத போதிலும், 2018ஆம் ஆண்டின் மோசடி தவிர்ப்பு (திருத்தம்) சட்டத்தின் கீழ் பாலியல் சலுகைகள் அடங்கலாக பாலியல் குற்றச் செயல்களில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் “தகாதமுறை அனுகூலம்” (undue advantage) எனும் தலைப்பில் இந்தியாவின் சட்டத்தில் மற்றுமொரு திருத்தம் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்தியாவின் சட்டத்தில் இந்த விடயங்கள் குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றமையானது இந்த பிரச்சினை இந்தியாவிலும் காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. இலங்கையில், போதியளவு விழிப்புணர்வு இன்மை என்பதனால், இந்த தோற்றப்பாடு நிகழவில்லை என கருதக்கூடாது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை இலக்காகக் கொண்டு இடம்பெறும் பாலியல் இலஞ்சம் தொடர்பில் எமது ஆய்வுகள் கவனம் செலுத்தியிருந்தன. எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட முடியாது. பொதுச் சேவை ஒன்றை எதிர்பார்க்கும் பெண் ஒருவர் தமக்கு தேவைப்படும் சேவையை பெற்றுக் கொள்வதற்கு பிரதியீடாக பாலியல் உபகாரத்தை வழங்க வேண்டிய ஒரு நிலையை எதிர்கொள்கின்றார்.
கேள்வி: தனியார் நிறுவனங்களுக்குள் பாலியல் இலஞ்சம் பெறுவது இடம்பெறுகின்றதா?
பதில்: ஆம் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள் நுண் நிதிச் சேவைகளை வழங்கும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் உபகாரத்தை கோரியிருந்தமை தொடர்பான சில சம்பவங்கள் பற்றி நாம் அறிந்தோம்.
கேள்வி: பாலியல் இலஞ்சம் தொடர்பில் எந்தளவு விழிப்புணர்வு காணப்படுகின்றது?
பதில்: இது ஓர் பரிச்சயமற்ற தலைப்பு என்பதால் ஒரு சில நிறுவனங்களினால் மாத்திரம் இந்த விடயம் பேசப்பட்டிருக்கும். மேலும், பாலியல் இலஞ்சம் காணப்படும் நிலையில், அது பாலியல் இலஞ்சம் என்பதாக விவரிக்கப்படுவதில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் தொடர்புடையதாக எமது ஆய்வு அமைந்திருந்தது. இதை நாம் முதன் முதலில் அறிமுகம் செய்திருந்த போது, பெண்களும் கிராமமட்டத்தில் அவர்களுக்கு உதவும் செயற்பாட்டாளர்களும் சற்று குழப்பமடைந்திருந்தனர். இதன் காரணமாக, வீடுகளில் இடம்பெறும் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலின அடிப்படையில் இடம்பெறும் இதர வன்முறைகளிலிருந்து வேறுபடுத்த சிரமமாக இருந்தது. தற்போது நாம் இந்த விடயம் தொடர்பில் செயலாற்ற ஆரம்பித்து சுமார் 5 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் பெண்கள் மத்தியில் இந்த விடயம் தொடர்பான புரிந்துணர்வு மற்றும் கவனம் செலுத்துவது என்பது மிகவும் குறைவானதாகவே அமைந்துள்ளது.
கேள்வி: பாதிக்கப்படுபவர் குறித்த நடவடிக்கையில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில், தாம் எதிர்நோக்கியுள்ள நிலை தொடர்பில் அவர் உணர்வது கடினமா னதா?
பதில்: எமது செயற்பாடுகளின் போது, யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை நாம் சந்தித்திருந்தோம். இவர்கள் நகர்ப் பகுதிகளை சேர்ந்தவர்களை போலன்றி, அவர்களின் சொந்த நிலை மற்றும் சூழல் அல்லது மூடிய சூழலில் வளர்க்கப்பட்டிருந்தமை காரணமாக இவ்வாறான கோரல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுபவர்களாக அமைந்திருந்தனர். அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டமையால், சிலர் வெட்கத்துடனும் தடுமாற்றத்துடனும் காணப்பட்டதால், தம்மை தவிர்த்த வண்ணமும் தமக்கு தேவையான பொதுச்சேவைகளை பெற்றுக் கொள்வதிலிருந்து தம்மை விலக்கியும் வைத்துள்ளனர். ஒரு சம்பவத்தில், தமது தேவையை நிறைவேற்றிக் கொள்ள அரச அதிகாரி ஒருவரை நாடிய பெண்ணின் வீட்டுக்கு குறித்த அரச அதிகாரி அடிக்கடி விஜயம் செய்து, அந்த பெண்ணின் நம்பிக்கையை வென்றவராக அமைந்திருந்தார். பெரும்பாலான பெண்களுக்கு இவ்வாறு ஏற்படும் நம்பிக்கை காரணமாக குழப்பநிலை ஏற்படுகின்றது.குறித்த நபர் பாதிக்கப்படுபவரின் அதே சமூகத்திலிருந்து அல்லது அவ்வாறான பின்புலத்தைக் கொண்டவராக இருந்தால் இந்த குழப்பநிலை மேலும் அதிகமாக காணப்படும்.
கேள்வி: இந்த நிலைக்கு இலகுவில் முகங்கொடுக்கக்கூடியவர்கள் யார்?
பதில்: கணவரை பிரிந்து, தனிமையில் அல்லது ஆண் துணையின்றி வாழும் பெண்கள் மற்றும் அவர்களின் தலைமையில் இயங்கும் குடும்பங்களின் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். குற்றமிழைப்பவர் பெரும்பாலும் இந்த நிலைமை தொடர்பில் அறிந்திருப்பார்.
கேள்வி: பாலியல் இலஞ்சம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு தற்போது அமுலிலுள்ள சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்புகள் யாவை?
பதில்: இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் (1965ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கம்) இலஞ்சம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலஞ்சத்தின் ஒரு வடிவமாக பாலியல் திருப்தி (sexual gratification) என்பது இதில் உள்ளடங்கியுள்ள போதிலும், பாலியல் இலஞ்சம் பற்றிய குறிப்பான விளக்கங்கள் எதுவும் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே, பாலியல் ரீதியான சலுகைகள் எவையும் பாலியல் திருப்தியுடன் இணைக்கப்படவில்லை. இலங்கை ஜனநாயக குடியரசு எதிர் அப்துல் ரசாக் குதுப்தீன் என்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் பாலியல் திருப்தியுடன் தொடர்புடைய இலஞ்சமும் உள்ளடங்கியுள்ளமை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், பாலியல் இலஞ்சத்தை சட்டத்தில் உள்ளடக்குவதற்கு வழியேற்பட்டிருக்கிறது.ஆனாலும் இது சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் எமது ஈடுபாட்டின் காரணமாக, பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயங்களை அடக்கிய திருத்தங்கள் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அது போதாது. சட்டம் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக, இலஞ்சம் வழங்கியமைக்காக பெண் தண்டிக்கப்படக்கூடாது.
கேள்வி: தற்போது பின்பற்றப்படும் செயன்முறை யாது?
பதில்: அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாட்டை அல்லது பொதுச் சேவை ஆணைக்குழுவில் அல்லது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்ட நபரைப் பொறுத்து பரிகாரங்கள் அல்லது தண்டனைகள் வேறுபடும்.
சி.சி.என்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM