எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிர ஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபி விருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார். எனினும் கம்பனிகளின் இழுபறிக்கு மத்தியில் இது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற இயல்பான சந்தேகம் பலரது மனங்களிலும் மேலோங்கிக் காணப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர் ஒருவரும் இந்தச்சந்தேகத்தை நியாயப்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் விடாமுயற்சியுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். எவ்வாறெனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் என்பது அவர்களின் உழைப்புடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. இருப்பினும் தமது பொருளாதார நெருக்கடியை ஓரளவேனும் நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்தச் சம்பள உயர்வு ஓரளவாவது உந்துசக்தியாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவையாவது பெற்றுக்கொடுக்க மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் முரண்பாடுகளை மறந்து கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இம்மக்கள் மீதான நெருக்கீடுகள் நீண்ட காலத்துக்கு முன்னதாகவே ஏற்படுத்தப்பட்டு விட்டன. இம்மக்களின் ஒவ்வொரு நகர்வையும் பேரினவாதிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். தப்பித் தவறியேனும் இவர்களுக்கு எதுவித நன்மையும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இனவாதிகள் முனைப்பாக இருந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெருந்தோட்ட காணி சுவீகரிப்பு, உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்காமை, சகல துறைசார் புறக்கணிப்பு நிலைமைகள் என்பவற்றின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருப்பையும் அடையாளத்தையும் சிதைப்பதற்கும், இம்மக்களை நிர்வாணப் படுத்துவதற்கும் திரைமறையில் திட்டமிட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் காரியங்கள் இடம்பெற்று வருவதாக ஏற்கனவே எம்மவர்கள் பலரும் விசனங்களை முன்வைத்திருந்தனர். இனவாத சிந்தனையாளர்களின் இத்தகைய செயற்பாடுகளை இவர்கள் கண்டித்துப் பேசி இருந்தனர். எனினும் சாதக விளைவுகள் ஏற்பட்டனவா என்பது சிந்திக்கத்தக்க விடயமாக உள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு துறைகளிலும் பின்னடைவு நிலைமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தோட்ட மக்களின் சமூக, பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கென்று 1992 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக்குழு பெருந்தோட்ட மக்கள் பின்வரும் துறைகளில் பின்தங்கி இருப்பதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இதனடிப்படையில் குடியுரிமை, தொழில் வாய்ப்புகள், கல்வி, தொழிற்பயிற்சி, வீட்டு வசதியும் சுகாதாரமும், சமூக நலன் பேணல், மின்சார வசதி, தொடர்பாடல் வசதிகள், சமூக மற்றும் கலாசார மேம்பாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றுக்கான வசதிகள், பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் என்ற விடயங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காணிப் பங்கீட்டில் இம்மக்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாரபட்சங்கள், தனிமனிதரதும் சமூகத்தினதும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என்பவற்றையும் இதில் சேர்த்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று பேராசிரியர் எம்.சின்னத்தம்பி தனது கட்டுரை ஒன்றிலே சுட்டிக்காட்டி இருக்கின்றார். மேலும் தேயிலைத் தோட்டங்களில் காலத்துக்குக் காலம் எல்லைக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் தோட்ட மக்களுக்கு காணித்துண்டுகள் வழங்கப் படுவதில்லை. தோட்டக் காணிகளில் இருந்து தோட்ட மக்களை அப்புறப்படுத்தி வேறு தேவைகளுக்காக அக்காணிகள் சுவீகரிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உண்டு.
1977ஆம் ஆண்டு முதல் இம்மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கும் உட்பட்டு வந்துள்ளனர். இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படுவதில்லை. நாட்டின் தென் பகுதியில் இவ்வித தாக்குதல்கள் இன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என்றும் பேராசிரியர் எம்.சின்னத்தம்பி நினைவுபடுத்தி இருக்கின்றமை நோக்கத்தக்கது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன 1948 இல் பறிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பின்னடைவுகள் இம்மக்களைப் பொறுத்தவரையில் அதிகமாகும். ஏனைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்துக்குமான விரிசல் நிலை இதனால் அதிகரித்தது. இதனைச் சீர்செய்ய இன்றும் கூட முடியாதிருக்கின்றது.
மலையக மக்களின் அபிவிருத்தி கருதி அரசாங்கம் விசேட உதவிகள் பலவற்றையும் வழங்குதல் வேண்டும். சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தியா பின் தங்கிய மக்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் இந்த நிலைமைகள் காணப்படுகின்றன. இத்தகைய உதவிகளை மலையக மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று பல கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டிருந்தன. கடந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை முன்வைக் கும் வகையில் காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தது. மக்கள் கருத்தறியும் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த மக்கள் கருத்தறியும் குழுவின் முன்னால் மலையக மக்களின் பின்தங்கிய நிலைமைகளை இல்லாது ஒழிப்பதற்கு அரசாங் கம் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் இச்சலுகைகள் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் பலரும் கருத்துகளை முன்வைத்திருந்தனர். எனினும் புதிய அரசியலமைப்பு கைகூடாத நிலையில் எதுவும் சாத்தியமாகவில்லை.
வேதனம்
நாட்டிலுள்ள ஏனைய பல தொழிலாளர்களுடன் ஒப்பிடுமிடத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தளவு வேதனத்தைப் பெற்று வருகின்றனர் என்பது தெரிந்த விடயமாகும். இம்மக்களின் நன்மை கருதி கூட்டு ஒப்பந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றபோதும் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்குரிய சாதக விளைவுகளைப் பெற்றுக் கொடுத்ததா என்பதும் கேள்விக்குரிய ஒரு விடயமே. பல்வேறு போராட்டங்கள் மற்றும் இழுபறிகளுக்கு மத்தியில் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக குறைந்தளவு சம்பளத்தையே பெற்றுக்கொண்டனர் என்பதும் நாம் நன்கறிந்த ஒரு விடயமே. இலங்கையில் பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்ட காலம் முதல் பல்வேறுபட்ட தொழிற்சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
இருப்பினும் 1830களில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் 1929ஆம் ஆண்டு வரையிலுமான சுமார் நூறு வருடங்களாக இங்கு வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கான அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் ஒன்றை நிர்ணயிக்கும் சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்று வலியுறுத்தல்கள் பலவும் இடம்பெற்றிருப்பதையும் காணக்கூடியதாகவே உள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேதனத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்ட போதெல்லாம் இக்கோரிக்கையானது தோட்ட முகாமையாளர்களுக்கு எரிச்சலூட்டும் விடயமாகக் கருதப்பட்டது. இது அவர்களின் விருப்பங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையாகக் கருதப்பட்டது மட்டுமன்றி சோம்பேறிகளே குறைந்தபட்ச கொடுப்பனவைக் கேட்பார்கள் என்று வேதனம் மறுக்கப்பட்டது என்பதை கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஷ் போன்றவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
1927ஆம் ஆண்டில் இந்தியத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வேதனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1929ஆம் ஆண்டு வேயிட் என்பவரின் தலைமையில் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்களின் வேதனங்கள் தொடர்பாக விசாரணைகள் செய்து நியாயமான வேதனத்தை சிபாரிசு செய்யுமாறும் இக்குழுவிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. ‘வேயிட் குழு’ மற்றும் வேதனச் சட்டமும் வேதனம் குறித்து கருத்துகள் பலவற்றையும் முன்வைத்திருந்தன. தோட்டத் தொழிலாளர்களுக்கென்று வேதன சபை ஒன்றை அமைத்தல், குறைந்தபட்ச வேதனத்தை நிர்ணயித்தல், தொழிலாளர்களுக்கு ஒரு மணித்தியாலத்துக்கான பகல் நேர விடுமுறையுடன் ஒன்பது மணிநேர வேலை வழங்குதல், மேலதிக வேலைகளுக்கு மேலதிகக் கொடுப்பனவுகள், பத்து வயதுக்கும் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு அவர்கள் 16 வயது வரும் வரையிலான காலப்பகுதி வரை மாதாந்தம் இலவசமாக 1/8 புசல் அரிசி வழங்குதல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்தல், தொழிலாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு மாதத்தின் பத்தாம் திகதிக்கு முன்பதாக வழங்கப்பட வேண்டும், மொத்தக் கொடுப்பனவும் தொழிலாளர்களுக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விட யம் நீண்ட காலமாக இழுபறி நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது. இலங்கை பெருந்தோட்ட நாளாந்த வேதனங்கள் குறித்து நாம் ஆராய்கையில் அது பின்வருமாறு அமைகின்றது. 1944ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆண்களுக்குரிய நாட் சம்பளமாக 41 சதமும், பெண்களுக்குரிய நாட் சம்பளமாக 37 சதமும், சிறுவர்களுக்குரிய நாட்சம்பளமாக 25 சதமும் வழங்கப்பட்டதாக தொழில் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1947இல் ஆண்களுக்கு ஒரு ரூபா 72 சதமும் பெண்களுக்கு ஒரு ரூபா 38 சதமும் சிறுவர்களுக்கு ஒரு ரூபா 12 சதமும் நாளாந்த வேதனமாக வழங்கப்பட்டுள்ளது. 1967இல் ஆண்களுக்கு மூன்று ரூபா ஒரு சதமும் பெண்களுக்கு இரண்டு ரூபா 45 சதமும் சிறுவர்களுக்கு இரண்டு ரூபா 13 சதமும் வழங்கப்பட்டது. 1984இல் ஆண், பெண் இருவருக்கும் 24 ரூபா 23 சதம் நாட் சம்பளமாகவும், 1987 இல் ஆண், பெண் இருவருக்கும் 33 ரூபா 92 சதமும் வழங்கப்பட்டது. 1984 இல் மேற்கொள்ளப்பட்ட 44 வீத சம்பள அதிகரிப்பு முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுவதாக பேராசிரியர் மா.செ.மூக்கையா குறிப்பிடுகின்றார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது சம்பள அதிகரிப்பு இடம்பெற்ற போதும் இது எந்தவிதத்திலும் போதுமானதாக இருக்கவில்லை என்பதும் தெரிந்த விடயமாகும். பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டின் ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் சம்பள உயர்வுகள் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களின் வேதன நிலைமைகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகப் பலரும் விசனப்பட்டுக் கொள்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்கு வித்திடும் வகையில் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படுகின்றது. தொழிலாளர்களின் சம்பள விடயம், தொழிலாளர்களின் சேம நலன்கள் என்பவற்றில் மேம்பாட்டை ஏற்படுத்துவது இதன் நோக்கம். கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முந்திய காலப்பகுதியில் தொழிலாளர்களின் சம்பள சபைகளின் மூலமாகவே சம்பளம் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளது. சம்பள நிர்ணய சபையில் தொழிலாளர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளத்தைத் தீர்மானிப்பதே சம்பள நிர்ணய சபையின் வரம்புக்கு உட்பட்ட அதிகாரமாகும். சம்பள நிர்ணய சபையால் எதிர்நோக்கப்பட்ட சிக்கல்கள் பலவுள்ளன. எனவே இவற்றுக்கு மாற்றீடாகவே கூட்டு ஒப்பந்த நடைமுறை முன்வைக்கப்பட்டது.
எனினும் கூட்டு ஒப்பந்த நடைமுறை எந்தளவுக்கு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்தது என்பது சிந்திக்கத்தக்கது. கூட்டு ஒப்பந்த நடைமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது ஓர் அடிமைச்சாசனம் என்றும் மரண சாசனம் என்றும் பல்வேறு கருத்துகள் எதிரொலிக்கின்றன. இதேவேளை கூட்டு ஒப்பந்தத்தில் சில சரத்துகள் தொழிலாளர்களுக்குப் பாதகமாகக் காணப்படுவதாகவும் இந்த சரத்துகளை தொழிலாளர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு கூட்டு ஒப்பந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமையும் நோக்கத்தக்க விடயம். கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சில தொழிற்சங்கங்கள் கைச்சாதிடுகின்ற நிலைமை மாற்றப்பட்டு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த நடவடிக்கையில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டு ஒப்பந்த நடைமுறையின் கீழ் தொழிலாளர்களின் வேதனக் கட்டமைப்பில் இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்னரே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கூட்டு ஒப்பந்தத்தால் தீர்மானிக்கப்படும் சம்பளம் பின்வரும் அடிப்படை விடயங்களைக் கொண்டுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கேற்ப குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் தேயிலை விற்பனை விலையில் ஏற்படும் மாற்றங் களுக்கேற்ப அதில் ஒரு பங்கை நாளாந்தக் கொடுப்பனவில் இணைத்துக் கொள்வது, தோட்டங்களில் வழங்கப்படும் வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தொழிலாளர்களுக்கான விசேட நாளாந்த கொடுப்பனவு போன்ற அடிப்படை விடயங்களை ஒப்பந்தம் கொண்டுள்ளது. ஒப்பந்தத்தின் ஊடான வரவுக் கொடுப்பனவுகளை அனைத்துத் தொழிலாளர்களும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தொழிலாளர்களின் உடல் சோர்வு நிலைகள், தேவைகள், வேலை வழங்கலில் உள்ள இழுபறி நிலைகள் போன்ற பல காரணங்களால் இந்நிலை ஏற்படுகின்றது. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதால் மாற்றுமுறை குறித்து கவனம் செலுத்த வேண்டும என்றும் கோஷங்கள் எழுகின்றன.
இதனிடையே வெளியார் உற்பத்தி முறை குறித்து இப்போது அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. இம்முறையின் மூலம் தொழிலாளர்கள் நிலவுடைமைச் சமூகமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அதிகளவிலான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமென்றும் கருத்து வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பான அனுபவமானது இம்மக்கள் அதிகரித்த உற்பத்தியைப் பெற்றுக் கொள்ள உந்துசக்தியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளியார் உற்பத்தி முறை தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்தை கேள்விக்குறியாக்கக் கூடுமென்றும் கருத்துகள் தெரிவிக்கின்றன.
வேதனமும் வறுமையும்
வேதனம், வறுமை என்ற இரண்டுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. வேதன அதிகரிப்பின் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகையில் வறுமை குறைகின்றது. வேதனப் பற்றாக்குறைக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடி மேலெழுகின்ற போது வறுமை தாண்டவமாடுகின்றது. மலையக பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறுமை இவர்களை விடுவதாக இல்லை. இவர்களைப் பின் தொடர்கின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. பெருந்தோட்ட வரலாற்றின் ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் யாவருமே கங்காணிமாரிடம் கடன்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். கடனில் பிறந்து கடனில் வளர்ந்து கடனிலேயே இவர்கள் மடிந்திருப்பதாக முக்கியஸ்தர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகிகளிடமும் கடன்பட்டிருந்தனர். வேதனங்களை வழங்கும் நடவடிக்கை கங்காணியிடமே ஒப்படைக்கப்பட்ட நிலையில் வேதனங்கள் முறையாக வழங்கப்படவில்லை.
‘சம்பளங்கள் வழங்கும் விடயத்தில் தோட்ட நிர்வாகிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துபவராக தலைமைக் கங்காணி விளங்கினார். தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிதி விஷயங்களுக்கு அவரே பொறுப்பாளராக விளங்கினார். அத்துடன் தொழிலாளர்களின் பல்வேறு உள் விவகாரங்களும் அவருடைய கட்டுப்பாட்டிலேயே இருந்தன. கங்காணி மாதச் சம்பளத்தைப் பெற்றதுடன் வேலைக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு நாளைக்கு இரண்டு சதம் என்ற முறையில் தலைப்பணம் எனப் பெயர் பெற்ற தரகுப் பணத்தைப் பெற்றார்’ என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தனது ‘இலங்கை இந்தியர் வரலாறு’ என்ற நூலில் கோடிட்டுக் காட்டுகின்றார். இலங்கையில் வறுமையின் துறைசார் போக்குகள் குறித்து நாம் ஆராய்கையில் அது பின்வருமாறு அமைகின்றது. 1990/91 இல் இலங்கையின் வறுமை நிலை 26.1 வீதமாக இருந்தது. தோட்டத்துறை வறுமை 20.5 வீதமாக இருந்தது. 1995/96 இல் இலங்கையின் வறுமை நிலை 28.8 வீதமாகவும் தோட்டத்துறை வறுமை நிலை 38.4 வீதமாகவும் இருந்தன. 2001/02 இல் தோட்டத்துறை வறுமை 30 வீதமாகவும் 2012/13 இல் 10.9 வீதமாகவும் இருந்தது. தோட்டத் துறையில் வறுமை நிலை வீழ்ச்சி கண்டதாக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியபோதும் இதன் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களின் வறுமை நிலை இம்மக்கள் பல துறைகளிலும் வீழ்ச்சி காண்பதற்கு உந்துசக்தியாகி இருக்கின்றது என்பதும் தெரிந்த விடயமே. இதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கின்றது. ஏனைய இனங்கள் முன்னேறிச் செல்கையில் பெருந்தோட்ட மக்களின் வறுமை நிலை முன்னேற்றத்துக்குத் தடையாக விளங்குகின்றது. எனவே இந்த மக்களுக்கு உரிய சம்பள அதிகரிப்பையும் ஏனைய பொருளாதார மேம்பாட்டு உதவிகளையும் வழங்கி இவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
ஆயிரம் ரூபா
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோஷங்கள் நீண்ட காலமாகவே எதிரொலித்து வருகின்றன. நல்லாட்சிக் காலத்திலும் இது எதிரொலித்தது. ஆயிரம் ரூபாவை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்போம் என்று மேடையில் முழங்கியவர்கள் பின்னர் மெளனமாகினர். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்பள விடயம் மீண்டும் எதிரொலித்தது. சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா பெற்றுக் கொடுக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். இதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தபாய தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க உள்ளதாக வலியுறுத்தி இருந்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இச்சம்பள அதிகரிப்புக்காக அழுத்தம் கொடுத்திருந்தது. மலையக மக்களின் மேம்பாடு கருதிய 32 அம்ச கோரிக்கைகளையும் கோத்தபாயவிடம் இ.தொ.கா. முன்வைத்திருந்த நிலையில் அதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் தெவித்திருந்தது.
இதனிடையே பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நிச்சயமாக ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார். சம்பள உயர்வு குறித்த ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட இருந்தது எனினும் சில சரத்துகள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக இருந்ததால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளுமாறு தாம் பணிப்புரை விடுத் ததாகவும் இதன் காரணமாக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆறு முகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அரசாங்கத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு செல்வாக்காக இருந்த ஆறு பேரும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. ஐயா காலத்தில் இருந்து காங்கிரஸ் தான் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் நாம்தான் பெற்றுக் கொடுப்போம். அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது என்றும் ஆறுமுகன் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை பெருந்தோட்டத் தொழிலா ளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்டதைப் போல ஆயிரம் ரூபா சம்பளம் நிச்சயம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் தெரிவித்திருக்கின்றார்.
ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் கம்பனிகளிடையே ஒருமித்த போக்கு காணப்படாது இழுபறி நிலை காணப்படு வதாகவே தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாக ராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். ஆனால் அரசாங் கத்தின் விடாமுயற்சியான போக்கையும் அவர் குறிப்பிட்டுக் கூறி இருக்கின்றார். இத்தகைய கருத்து வெளிப்பாடுகளுக்கும் இழுபறிகளுக்கும் மத்தியில் ஆயிரம் ரூபா சாத்தியமா? அரசாங்கம் கம்பனிகளை திருப்திப்படுத்தி எவ்வாறு இலக்கை அடையப் போகின்றது? கம்பனிகள் மசியுமா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- துரைசாமி நடராஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM