இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைசாட்சியான முத்திப்பேறுபெற்ற தேவசகாயம்பிள்ளை உட்பட, மேலும் இருவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற அற்புதங்களை பாப்பரசர் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளமையினால் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
புனிதர் பட்ட பேராய குழுவின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு ஆண்டகை, பாப்பரசர் பிரான்சிஸை கடந்த வெள்ளிக்கிழமை வத்திக்கான் அரண்மனையில் சந்தித்து இம்மூவரின் பரிந்துரைகளால் நடைபெற்ற அற்புதங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பித்தார்.
இவர்களது அற்புதங்களை பாப்பரசர் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளார். இதனால் அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்கான தகுதியைப் பெறுகின்றனர். இதன்மூலம் புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை முத்திப்பேறுபெற்ற தேவசகாயம்பிள்ளை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறைசாட்சியான முத்திப்பேறு பெற்ற தேவசகாயம்பிள்ளை, தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில், 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார்.
கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால், கோபம்கொண்ட திருவிதாங் கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா, தேவசகாயம்பிள்ளைக்கு மரணதண்டனை விதிப்பதற்காக சிறையில் அடைத்தார்.
அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாக கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூமாலை அணிவிக்கப்பட்டு, எருமைமாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்றார்கள். 1752 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் ஆணைப்படி தேவசகாயம்பிள்ளையை குமரி மாவட்டத் தின் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மறைசாட்சியாக மரித்த முத்திப்பேறுபெற்ற தேவசகாயம்பிள்ளையின் கல்லறை, கோட்டாறு மறைமாவட்டத்தின் புனித சவேரியார் முதன்மைக் கோவிலில் உள்ளது.
ஓய்வுபெற்ற பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம்பிள்ளையை ''முத்திப்பேறு பெற்றவர்'' என்ற நிலைக்கு உயர்த்தி அதிகாரபூர்வமாக அப்போஸ்தலிக்க ஆணை வெளியிட்டார். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பாப்பரசரின் பிரதிநிதியாக இந்தியாவுக்கு சென்ற கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ ஆண்டகை, கோட்டாறிலுள்ள தேவசகாயம்பிள்ளையின் கல்லறை அமைந்துள்ள ஆலயத்தில் பாப்பரசரின் ''முத்திப்பேறு பெற்றவர்'' என்ற அப்போஸ்தலிக்க ஆணையை வாசித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முத்திப்பேறு பெற்ற தேவசகாயம்பிள் ளையை அதிகாரபூர்வமாக புனிதராக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் இந்திய ஆயர் பேரவை மேற்கொண்டிருந்தது. இதன்படி அவரது பரிந்துரையால் நடைபெற்ற அற்புதங்கள் வத்திக்கானுக்கு அனுப்பப் பட்டு பாப்பரசரினால் அங்கீகரிக்கப்பட்ட மையினால் அவர் புனிதராகும் தகுதியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-கீதன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM