(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை காலை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
அதேவேளை 30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இம்முறைக் கூட்டத் தொடரில் அறிவிக்கவுள்ளார்.
இம்முறைக் கூட்டத் தொடரில் அரசாங்க தூதுக்குழுவினர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
இன்றைய ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இதன்போது இலங்கை குறித்தும் பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பிரேரணை விடயத்தில் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க 30–1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இம்முறைக் கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
அதனடிப்படையிலேயே எதிர்வரும் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றவிருக்கின்றார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாளை 25 ஆம் திகதி ஜெனிவா வந்தடைவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெ ளியிட்டிருககின்றார். அவர் அதன் சாரம்சத்தை பேரவையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்வைக்கவுள்ளார்.
அதன்படி மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாகவே எதிர்வரும் 27 ஆம் திகதி பேரவையில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் உரையாற்றவுள்ளனர்.
இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் இலங்கைக்கு ஏற்கனவே சமர்ப்பித்திருந்தபோதிலும் இலங்கை அதற்கு பதிலளிக்கவில்லை.
அனந்தி ஜெனிவாவில்
இதேவேளை இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தற்போதைய நிலைமையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஜெனிவா வருகை தந்துள்ளார்.
ஜெனிவாவுக்கு படையெடுக்கும் தமிழக முக்கியஸ்தர்கள்
இது இவ்வாறு இருக்க இம்முறைக் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து அரசியல்வாதிகள் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி ஷேவியர் இளம்பரிதி வைத்திய தாயப்பன் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு மகாராஷ்டிரா மாநில வழக்கறிஞர் நிலேஷ் யுக்கி உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்த 30-1 என்ற பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது 2017 ஆம் ஆண்டாகும்போது இந்த பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
எனினும் அக்காலப்பகுதியில் பிரேரணை முழுமையாக நிறைவேறாததன் காரணமாக 2017 ஆம் ஆண்டு 30-1 என்ற பிரேரணை மேலும் இரண்டு வருடங்களுக்கு நிறைவேற்றப்பட்டது. அது 34-1 என்ற பிரேரணை ஊடாக முன்னெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டாகும்போது 30-1 என்ற பிரேரணையை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்று தெரிவித்தே 34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இந்தப் பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30–1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்கமான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM