(ரொபட் அன்டனி)
ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நெருக்கமான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து விரிவான சுயாதீமான பொறுப்புக்கூறல் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை தொடர்பில் கவலை வெ ளியிட்டுள்ள மனித உரிமை ஆணையாளர் 30–1 என்ற பிரேரணையை முழுமையாகவும் விரைவாகவும் அமுல்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
30–1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடருக்காக தயாரித்துள்ள இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையிலேயே இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே நேற்றைய தினம் வெ ளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு
2015 ஆம் ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை 30–1 என்ற பிரேரணைக்கு அமைய நல்லிணக்க விடயத்தில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் குற்றவாளிகளை தண்டிக்காத மற்றும் பாதுகாப்பு மறுசீரமைப்பு விவகாரங்களில் அரசாங்கத்தின் இயலாமை வெ ளிப்பட்டுள்ளது.
எனவே அமைதியான சமூகத்தை உருவாக்கவும் அனைத்து மக்களுக்கும் நிரந்தர முன்னேற்றத்தை வழங்கவும் 30– என்ற ஐ.நா. பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டியது அவசியமாகும்.
காணாமல் போனோர் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்துக்கு சுயாதீனத்துவமும் தேவையான வளங்களும் வழங்கப்படவேண்டியது அவசியமாகும். சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களுக்கான உரிமை உறுதிபடுத்தப்படுவது அவசியமாகும்.
மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கண்காணிப்புக்கள் சித்திரவதைகளங பழிவாங்கும் தன்மை போன்ற விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
சில இராணுவ தேசியவாதிகளினால் முஸ்லிம் சிறுபான்மையினத்துவர்களுக்கு எதிராக வைராக்கிய உரைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். இவற்றை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைளை எடுப்பது முக்கியமாகும்.
கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமை மக்களுக்கு அரசாஙகத்தின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து விரிவான சுயாதீமான பொறுப்புக்கூறல் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் .
அதுமட்டுமன்றி நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும். அதற்கு பதிலாக சர்வதேச தரத்துக்கு அமைவான சட்டத்தை கொண்டுவரலாம்.
இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30–1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஐககிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்கமான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும்.
40–1 என்ற பிரேரணையின் ஏற்பாட்டுக்கு அமைவாகவே இந்த அறிக்கையை நான் தாக்கல் செய்கின்றேன். இது தொடர்பாக தகவல்களை தருமாறு நான் இலங்கையிடம் கேட்டேன். ஆனால் அவ்வாறு தகவல்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் வாய்மூலமாக மறுத்துவிட்டது. மேலும் இந்த அறிக்கை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதில் கருத்தும் இலங்கையினால் வழங்கப்படவில்லை. இலங்கையின் பிரதிநிதி ஜெனிவா கூட்டத் தொடரில் உரையாற்றும்போது கருத்து வெ ளியிடுவதாக கூறப்பட்டுவிட்டது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 30–1 பிரேரணையின் வாக்குறுதிகளை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாஙகம் கடந்தகால நிகழ்வுகளை அபிவிருத்தியின் ஊடாக கையாள முயற்சிக்கின்றது.
வளமான இலங்கையை உருவாக்கவும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவும் 30–1 என்ற பிரேரணையை அமுல்படுத்துவது அவசியமாகும். பொறுப்புக்கூறலுக்கும் நல்லிணக்கத்துக்கும் இந்த பிரேரணையை ஒரு கட்டமைப்பை வழங்குகின்றது. மனித உரிமை ஜனநாயகத்தை பாதுகாத்தல் சட்டத்தின் ஆட்சிபடுத்தலை உறுதிபடுத்தலை இந்த பிரேரணையை வலியுறுத்துகின்றது.
இந்தப் பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமையானது தீர்க்கமானதாகும். இந்த நிலையில் கடந்த ஐந்து வருடகாலத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முழுமையான பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டில் வழங்கிய வாக்குறுதிகளை மீளப்பெறுவதானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். 30–1 பிரேரணையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பனவற்றுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றது.
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் வித்தியாசமான கருத்தை தெரிவித்தமை சர்ச்சையை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இது தொடர்பில் நீண்ட விரிவான அனுகுமுறையை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். இழப்பீடு வழங்குவதன் ஊடாக மட்டும் இதனை அடைய முடியாது.
காணாமல் போனோர் பிரச்சினைக்கு முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் காணாமல் போனோர் அலுவலகத்துக்கும் இழப்பீடு வழங்கும் அலுவலகத்துக்கும் அரசியல் ரீதியான ஆதரவை வழங்கவேண்டும்.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதில் முன்னேற்றத்தை காண முடியவில்லை. 30–1 பிரேரணையில் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைவாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆராய ஒரு நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதிலும் முன்னேற்றமில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் சட்டமா அதிபர் அதனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.
19ஆவது திருத்தச் சட்டம் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன தன்மையை உறுதிபடுத்துகின்றது. ஆனால் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அதனை நீக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. அத்துடன் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பாக ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெ ளியிட்டிருந்தார்.
பெப்ரவரி நான்காம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM