யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில், இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான பகிடிவதை சம்பவங்களும் அதனைத் தட்டிக் கேட்பது என்ற பெயரில், மாணவன் ஒருவரின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்துக்கு தலைகுனிவு என்றே கூறலாம்.
தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியல் போராட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மைய நிலையில் செயற்பட்ட காலம் ஒன்றும் இருந்தது. தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்துவதிலும் அது தீர்க்கமான பங்களிப்புகளை செய்திருக்கிறது.
அவ்வாறான புகழைக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று, பகிடிவதை குற்றச்சாட்டுகளால், கூனிக் குறுகி நிற்கும் நிலையில் இருக்கிறது.
பகிடிவதை என்ற பெயரில், மாணவிகள் மீது பாலியல் வக்கிரங்கள் அரங்கேற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.
இதற்குப் பின்னர், வக்கிரமான பகிடிவதைகளில் ஈடுபட்ட மாணவர்களின் படங்கள் ஊடகங்களில் பரவின. புதிய மாணவர்களை அச்சுறுத்தும், ஒலிப் பதிவும் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.
ஸ்மார்ட் போன்கள் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை, உலகின் ஒரு பகுதி மக்கள் பொருளாதார வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, தொடர்பாடல் திறன் விருத்திக்காக பயன்படுத்திக் கொண்டிருக்க, கேவலமான பகிடிவதைகளுக்கு இந்த நவீன தொடர்புசாதன வசதிகளைப் பயன்படுத்தும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பது தமிழினத்தின் சாபக்கேடு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முற்றிலும் புனிதமானதாக இருந்தது என்று கூற முடியாது. கடந்த காலங்களிலும் அவ்வப்போது பகிடிவதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு எல்லை மீறிய செயற்பாடுகள் அரங்கேறியிருக்கவில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழல் இன்று இல்லை. அப்போது, தமிழ் மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்கும் சூழல் நிலவியது.
இப்போது, மூவின மாணவர்களும் கற்கிறார்கள். வெளியிடத்தில் இருந்து மாணவர்கள் வருகிறார்கள். வெவ்வேறான கலாசார சூழல்களில் இருந்தும், பொருளாதாரப் பின்னணிகளில் இருந்தும் வருகின்ற சூழலில் கலாசாரப் பிறழ்வுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும், கீழ்த்தரமான பகிடிவதை குற்றச்சாட்டுகளில் பிற இடங்களில் இருந்து வந்த மாணவர்கள் சிக்கிக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயம்.
தமிழ் மாணவர்களே, இந்தக் கேவலமான பகிடிவதைகளுக்குப் பின்னால் இருந்திருக்கிறார்கள். சமூகத்தில் முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்களும் வழிகாட்டிகளாக மாற வேண்டியவர்களும் வழிதவறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடப்பதாக கூறப்பட்டாலும் அது எந்தளவுக்கு உண்மையானதாக நேர்மையானதாக நடக்கும் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே தோன்றியிருக்கின்றன.
குற்றச்சாட்டுகள் குறித்த பல ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும் யாரும் முறைப்பாடு தெரிவிக்கவில்லை என்று அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் நழுவ முயலுகின்றனர்.
பகிடிவதைக்கு எதிராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கம் கடும் போக்கை வெளிப்படுத்தியிருந்த போதும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் இந்தளவுக்கு துணிச்சலுடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது.
இந்தப் பகிடிவதை சம்பவங்கள் வடக்கில், பல்கலைக்கழக சமூகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. அதேவேளை, இந்தச் சம்பவத்தை சாட்டாக வைத்துக் கொண்டு ஆவா குழுவும் வன்முறையில் இறங்கியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை பீதியில் உறைய வைத்திருந்த நிலையில், ஆவா குழுவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.
பொலிஸ் மற்றும் படை அதிகாரிகளின் ஆதரவுடன் தான் இந்த வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கின்றன.
மறுபக்கத்தில் இத்தகைய ஆயுதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகளே தடையாக இருக்கின்றனர் என்றும் அவர்கள் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்ச் சமூகத்தில் வன்முறை கலாசாரத்தை உட்புகுத்தி, மக்களை பீதியுடன் வாழும் நிலைக்குத் தள்ளியதில் இந்த வாள்வெட்டுக் குழுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
வாள்வெட்டுக் குழுக்கள் தமக்கிடையில் மோதிக் கொண்ட சம்பவங்களும் ஏராளம் நடந்திருக்கின்றன. இவையெல்லாம் தென்னிந்திய தமிழ் சினிமாவின் தாக்கத்தினால் உருவான விளைவுகள் என்று அரசாங்க மற்றும் இராணுவத் தரப்புகள் நீண்டகாலமாகவே குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழ் இளைஞர்கள் வழிமாறிச் செல்வதற்கு தென்னிந்திய சினிமா மோகம் தான் காரணம் என்பது அவர்களின் கருத்து. அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை அடுத்து, வாள்வெட்டுக் குழுக்கள் சற்று அடங்கிப் போயிருந்தன.
ஆனால் பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்களை சாட்டாக வைத்துக் கொண்டு ஆவா குழு மீண்டும் கிளம்பியிருக்கிறது.
பகிடிவதை குற்றச்சாட்டுக்குள்ளாகி, இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவன் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, அங்கு சேதங்களை விளைவித்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு முகநூலில் உரிமையும் கோரப்பட்டிருக்கிறது.
பகிடிவதை எந்தளவுக்கு மோசமான விஷக் கிருமியோ, அதைப் போன்றதே இந்த வன்முறைகளும். மாணவனைத் தேடிச் சென்ற ஆயுதக் குழுவினர், அவர் இல்லை என்றதும் வீட்டிலிருந்த பொருட்களையும் வாகனங்களையும் அடித்து நொருக்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.
ஏதோ பெரிதாக சாதித்து விட்டதைப் போல, இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதுடன், தாங்களே சமூகத்தின் காவலர்கள் என்பது போல எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கிறார்கள். சினிமா கதாநாயகன்களைப் போல, அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களாக அவர்கள் தங்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். அவ்வாறு தான், இடைநிறுத்தப்பட்ட மாணவனின் வீட்டின் மீதும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் இத்தோடு முடியும் என்றில்லை. சிறிது காலம் ஓய்ந்திருந்த வாள்வெட்டுகள் மீண்டும் அரங்கேறலாம். வன்முறைகளும் பழிக்குப் பழி தீர்ப்பதும் தொடர்ந்து நிகழலாம். வாள்வெட்டு வன்முறைகளால், சமூகத்தை திருத்தி விடலாம் என்பது பொய்யான கற்பனை. இவ்வாறான செயல்களினால், தமிழ்ச் சமூகம் வன்முறை சூழலில் சிக்கிய ஒன்றாகவே வெளியே அடையாளப்படுத்தப்படும். அதைவிட, பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் வாள்வெட்டுக் குழுக்கள் தலையெடுக்க முனைந்திருப்பது, அவற்றின் கடந்த கால கறைகளை கழுவுகின்ற நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
மாணவர்களின் பகிடிவதையும் வாள்வெட்டுக் குழுக்களின் வன்முறைகளும் தமிழ் மாணவர்களின் கல்விச் சூழலுக்கும் தமிழ் மக்களின் இருப்புக்கும் அச்சுறுத்தலானவை.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரச நிர்வாகம் எந்தளவுக்கு காத்திரமாகச் செயற்படும் என்ற சந்தேகங்கள் உள்ளன.
இவ்வாறான நிலையில், தமிழ்ச் சமூகம் தான் தங்களின் இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்கு தவறான வழிகளிலிருந்து திரும்பிக் கொள்ள முனைய வேண்டும்.
- சத்ரியன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM