முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனும் ஜக்கிய முன்னணி கடந்த 9ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் என்பன இவ் ஜக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கின்றன.
சுரேஷின் கட்சியைத்தவிர ஏனைய கட்சிகள் பதிவு செய்யப்படாத கட்சிகளாக இருப்பதனால் அக்கட்சியே பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக செயற்படப்போகின்றது. சின்னமும் மாற்றப்படவுள்ளது. சுரேஷின் கட்சியினது பூ சின்னம் மாற்றப்பட்டு பொங்கல் பானையை சின்னமாகப் பெறுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. தேர்தல் திணைக்களமும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வருகின்றன.
ஆரம்பத்தில் ஐக்கிய முன்னணியை அமைப்பது தொடர்பாக இழுபறிகள் காணப்பட்ட போதும் தற்போது கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியலை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு ஐக்கிய முன்னணி அவசியமானதே! தேசிய இன ஒடுக்குமுறை என்பது அந்த இனத்திற்கு புறத்தேயிருந்து வரும் ஒடுக்குமுறையாக இருப்பதனால் அத்தேசிய இனத்திலுள்ள அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியமானதே! தேசிய இனத்திற்குள் பல்வேறு கருத்து சார்ந்த பிரிவுகள் இருக்கலாம். அதனைக் கடந்து இணைப்பதற்கு ஐக்கிய முன்னணியே உதவியாக அமையும். தேசியம் என்பது மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையே! இந்த வகையில் தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மக்களின் கூட்டுப்பிரக்ஞை ஆகும். இந்த கூட்டுப் பிரக்ஞையை வினைத்திறனுடன் பேணுவதற்கு அக நிலையில் தமிழ்த் தேசியத்திற்கு வெளியிலும் எதுவும் இருக்கக் கூடாது. எதிராகவும் எதுவும் இருக்கக் கூடாது என்ற நிலை உருவாக்கப்படல் வேண்டும்.
தமிழ் அரசியலைப் பொறுத்தவரை ஒரு ஐக்கிய முன்னணி மூன்று விடயங்களை முக்கியமாகக் கொண்டிருத்தல் வேண்டும். ஒன்று கொள்கை உறுதிப்பாடு, இரண்டாவது சம பங்காளிகள் என்ற நிலை, மூன்றாவது வலுவான ஜனநாயகத் தன்மை வாய்ந்த அமைப்புப் பொறிமுறை. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. இதில் சம பங்காளிகள் என்ற நிலை மிகவும் முக்கியமானதாகும். சம பங்காளிகள் என்ற நிலை ஏற்கப்படாத ஐக்கிய முன்னணி ஒரு தேர்தல் கூட்டாக இருக்குமே தவிர ஒரு கொள்கைக் கூட்டாக இருக்க முடியாது. தமிழ் மக்கள் தேசம், இறைமை, சுயநிர்ணயம் கொண்ட ஒரு அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டிருப்பதனால் அந்த இலக்கை அடையும் வரை கொள்கைக் கூட்டே அவசியமானது.
ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கிய கூட்டைப் போலவோ அல்லது மஹிந்தரின் பொதுஜன முன்னணி உருவாக்கிய கூட்டைப் போலவோ அல்லது தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உருவாக்கிய கூட்டைப் போலவோ தமிழ் மக்கள் அமைக்க முடியாது. மேற்கூறியவையெல்லாம் தேர்தல் கூட்டுக்களே தவிர கொள்கைக் கூட்டுக்களல்ல. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அங்குரார்ப்பண கூட்டத்தின் போது அனந்தி சசிதரன் இது கொள்கைக் கூட்டல்ல. தேர்தல் கூட்டுத்தான் எனக் கூறியமை இங்கு கவனிக்கத்தக்கது.
தவிர தமிழ் அரசியலின் வரலாற்றையும் இது விடயத்தில் கவனத்தில் கொள்வது அவசியம். தமிழ் அரசியல் மரபில் உருவாகிய ஐக்கிய முன்னணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி (1972), ஈழத்தேசிய விடுதலை முன்னணி (1985), தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (2002), தமிழ் மக்கள் பேரவை (2016) அனைத்தும் தோல்விகளையே தழுவியுள்ளன. இத்தோல்விகளுக்கு பிரதான காரணம் சமபங்காளிகள் என்ற நிலை ஏற்கப்படாமையே! இந்நிலை ஏற்கப்படாததினால் தான் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட தமிழத் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தார்.
விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணி உருவாக வேண்டும் என்பதில் முதலில் அக்கறை கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில கருத்துருவாக்கிகளே! அவர்களில் இப்பத்தியாளரும் ஒருவர். இக்கருத்துருவாக்கிகளே விக்கினேஸ்வரனைச் சந்தித்து ஐக்கிய முன்னணியின் அவசியத்தை எடுத்துரைத்தனர். விரைந்து செயற்படுமாறு கூறினர். கருத்துருவாக்கிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விக்கினேஸ்வரன் அதற்கான கொள்கை ஆவணம் ஒன்றை நீங்களே தயாரித்து தாருங்கள் என்று வேண்டிக் கொண்டார்.
அவரது வேண்டுகோளுக்கிணங்க கொள்கை ஆவணம் தயாரிக்கப்பட்டது. அதில் சம பங்காளிகள் என்ற நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஐக்கிய முன்னணியின் தலைவராக விக்கினேஸ்வரன் இருப்பார் என்றும் அதன் பின்னர் தலைவர் மத்திய குழுவினால் பெரும்பான்மை அடிப்படையில் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்று கூறப்பட்டது. தலைவர் தவிர்ந்த ஏனைய பதவிகள் பெரும்பான்மை அடிப்படையில் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், அடங்கிய ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்றும் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர்களும், ஆலோசனைக்குழு அங்கத்தலைவர்களும் இணைந்து தயாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
கொள்கை ஆவணம் தயாரிக்கப்பட்டவுடனேயே விக்கினேஸ்வரனின் மின்னஞ்சல்
முகவரிக்கு அவ் ஆவணம் அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக அவ் ஆவணம் கிடைத்தது என்பதைக் கூட சம்பந்தப்பட்ட கருத்துருவாக்கிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. வற்புறுத்திக் கேட்ட பின்னர் தாங்கள் ஒரு ஆவணம் தயாரித்து இருப்பதாகவும் அதனை அனுப்பி வைப்பதாகவும் கூறி அதனை அனுப்பி வைத்தார்கள். அவ் ஆவணத்தில் விக்கினேஸ்வரனின் கட்சியான தமிழ்மக்கள் கூட்டணிக்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசியல் பீடத்தில் தலைவர் தவிர விக்கினேஸ்வரனின் கட்சிக்கு 50%, சுரேஷின் கட்சிக்கு 20% ஏனைய கட்சிகளுக்கு 10% என பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியலிலும் 50% விக்கினேஸ்வரனின் கட்சிக்கு இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
உண்மையில் மாற்று என்பது எந்த தவறுகளால் மாற்று உருவாக்கப்பட்டதோ அதன் தவறுகளை திருத்துவதாக இருக்க வேண்டும். இங்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்று என்று கூறியவர்கள் இன்னோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே உருவாக்கியுள்ளளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் இருப்பது போல இங்கு தமிழ் மக்கள் கூட்டணியின் மேலாதிக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முன்னணி தொடர்பாக இப்பத்தியாளரின் இலக்காக இருந்தது இது தான். முதலில் விக்கினேஸ்வரனின் தலைமையில் கொள்கை உறுதிப்பாடுடைய சம பங்காளிகளைக் கொண்ட முன்மாதிரியான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கி அதனை செயற்பட விடுவது. இதன் வளர்ச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்போடும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடும் ஒரு உரையாடலை நடத்தி அவர்களையும் இணைத்துக் கொண்டு பெரிய ஐக்கிய முன்னணியை உருவாக்குவது. பின்னர் பொது அமைப்புக்களின் ஐக்கிய முன்னணியையும் இதனுடன் இணைத்து தேசிய பேரியக்கம் ஒன்றை உருவாக்குவது. அந்த தேசிய பேரியக்கத்துடன் உலகத் தமிழர்களையும், உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்து உலகம் தழுவிய தேசிய பேரியக்கமாக அதனை வளர்த்தெடுப்பது. இப்பத்தியாளருடன் கூட இருந்த கருத்துருவாக்கிகள் இது நடைமுறைச்சாத்தியமற்றது என்றனர். ஆனாலும் இது விடயத்தில் இதுவே தமிழ் மக்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கான உகந்த வழிவரைபடம் என்பது இப்பத்தியாளரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் இருந்த அரசியல் சூழல் தற்போது இல்லை. பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகமே தற்போது ஆட்சியில் இருக்கின்றது. எதிர்க்கட்சியிலும் பெருந்தேசிய வாதத்தின் லிபரல் முகங்கள்
ஒதுக்கப்பட்டு விட்டன. அங்கு இனவாத முகமே மேல் நிலைக்கு வந்துள்ளது. ஆளும் கட்சியும் இனவாத முகம், எதிர்க் கட்சியும் இனவாத முகம் இரண்டும் இணைந்து தென்னிலங்கையை இனவாத பாசிச நிலைக்கு வளர்த்து விட்டுள்ளன. தமிழ் அரசியல் இந்த யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டும்.
அடுத்தது இலங்கைத் தீவு முன்னெப்போதையும் விட சர்வதேச நிகழ்ச்சி நிரலுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இனி சர்வதேச நிகழ்ச்சி நிரல் செல்லுமிடமெல்லாம் இலங்கைத் தீவும் செல்ல வேண்டும். தமிழ் அரசியலும் கூடவே செல்ல வேண்டிய நிர்ப்ந்த நிலை. இதனால் தமிழ்த் தரப்பு சர்வதேச அரசியலை கையாள வேண்டும்
எனவே பெருந்தேசிய வாதத்தின் இனவாத முகத்திற்கு முகங் கொடுத்தல், சர்வதேச அரசியலைக் கையாளல் என்ற இரண்டு பெரும் நெருக்கடிகள் தமிழ் அரசியலுக்கு இன்று ஏற்பட்டுள்ளன. தமிழ்த் தரப்பு பலமாக இல்லாமல் இந்த நெருக்கடிகளை வெற்றி கொள்ள முடியாது. அவ்வாறு பலமாக இருப்பதாயின் இன்று தேவையானது மாற்று அரசியல் அல்ல மாறாக ஒன்றிணைந்த அரசியலே! தமிழ்த் தேசியப்பரப்பில் செயற்படும் அனைத்துத்தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பது இன்று மிகவும் அவசியமானது.
ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலை நடத்தியது. தமிழ் அரசியலில் இருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்தது. தமிழ் அரசியலின் சர்வதேச மயத்தை நீக்கம் செய்தது. வெறும் அபிவிருத்தி அரசியலுக்குள் தமிழ் அரசியலை முடக்க முற்பட்டது மொத்தத்தில் தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழிறக்கியது. இந்நிலையில் தமிழ்த் தேசியத்தை கருநிலையிலாவது பாதுகாப்பதற்கு மாற்று அரசியல் தேவைப்பட்டது.
இன்று அவ்வாறான நிலை இல்லை. கோத்தா – மஹிந்த அரசு அனைத்துத் தமிழ்த்தரப்பினரையும் ஒரு பக்கத்திற்கு தள்ளிவிட்டுள்ளது. தமிழத் தேசியக் கூட்டமைப்பு விரும்பினாலும் இணக்க அரசியலுக்கு கோத்தா– மஹிந்த அரசு தயாராக இல்லை. கூட்டமைப்பு கொஞ்சி விளையாடுவதற்கு ரணிலும் மேல் நிலையில் இல்லை. மறு பக்கத்தில் மேற்கூறிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதனால் இன்று ஒன்றிணைந்த அரசியலே தேவை. இது விடயத்தில் தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அனைத்துத் தரப்பினரையும் பேருந்தில் ஏற்ற வேண்டும் கொள்கை உறுதிப்பாடுடையவர்கள் பேருந்தின் சாரதியாக இருக்க வேண்டும்.
பாராளுமன்ற அரசியல் மூலம் தமிழ்த் தரப்பு சாதிக்கப் போவது சொற்பமானது! மக்களின் அங்கீகாரம் கிடைத்தல், பாராளுமன்றத்தை மேடையாகப் பாவித்தல் என்பதற்கு அப்பால் இந்தத் தேர்தல் அரசியல் எதையும் தரப் போவதில்லை. உண்மையில் தேர்தல் அரசியலுக்கு வெளியில் தான் மாபெரும் பணி காத்துக் கிடக்கிறது. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரையிலும் கூட ஒன்றிணைந்த அரசியல் இல்லாவிட்டால் யாழ்ப்பாணம் - 01, வன்னி 01, திருகோணமலை 01, மட்டக்களப்பு 02, அம்பாறை 01, தேசியப்பட்டியல் - 01 என ஏழு ஆசனங்களை தமிழ்த் தேசியப் பரப்பு இழக்க வேண்டி ஏற்படலாம். காலம் இன்னமும் கடந்து விடவில்லை வலிமையான சிவில் தலையீடு ஒன்று உருவாக்கப்பட்டால் ஒன்றிணைந்த அரசியலைக் கொண்டு வரலாம். இது விடயத்தில் கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், மதத் தலைவர்களுக்கு தான் அதிகபணி காத்துக்கிடக்கிறது.
- சி.அ.யோதிலிங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM