பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தமது இந்திய விஜயத்தின் போது இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் நேரடியாகவே கூட்டமைப்பை குற்றம் சாட்டும் ஒரு பிரசாரமாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விருவரும் இந்தியாவில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுக்கும் உதவாத கட்சியென தரம் தாழ்த்தியுள்ளதுடன் மறைமுகமாகவே தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் அருகதை கூட்டமைப்புக்கு இல்லையென்ற விமர்சிப்பைக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக் ஷ, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த சனிக்கிழமை (8.2.2020) இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த நமது பிரதமர், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இப் பேச்சுவார்த்தையின்போது இந்தியப் பிரதமர், இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை, வெளிப்படுத்தியதோடு 13ஆவது திருத்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். அவை மட்டுமின்றி பல தசாப்த காலமாக தீர்க்கப்படாமல் நீண்டு புரையோடிப் போயிருக்கும் இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு கால அட்டவணை வகுத்து தீர்வு காணப்பட வேண்டுமென்ற தனது ஆலோசனையையும் அழுத்திக் கூறியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்திகளைத் தெரிவித்திருந்தன.
இலங்கைக்குள் இனங்களுக்கிடையிலான சமத்துவம், சமாதானம், நீதி, அரசியல் தீர்வு ஆகியவற்றுக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென்று நம்புகிறோமென தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் இந்தியப் பிரதமர். இந்தியப் பிரதமரின் ஆலோசனையை இலங்கைப் பிரதமர் கவனமாகச் செவிமடுத்தபோதும் பதில் வார்த்தைகள் எதையுமே தெரிவிக்காமல் ஓர் அரச தூதுவன் போல் விடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில்தான் இந்தியப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த இலங்கைப் பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தது மாத்திரமல்ல, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தானும், தனக்குப் பின் – முன்னுள்ள அரசாங்கங்களும் தாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளோம். ஆனால் தம்மை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாணக்கியமாகவும் சாதுரியமா கவும் நடந்து கொள்ளவில்லையென நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது பேச்சுவார்த்தைகளில் அக்கறையில்லை. அவர்கள் இலங்கையின் பெரும்பான்மைச் சமூகம் விரும்பாத விடயங்களையே தமது கோரிக்கைகளாக முன்வைத்து வருகிறார்கள். அரசியல் அமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பகிர்வை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமானால் தமிழர்களுக்காக பேசக்கூடிய பொறுப்புள்ள தலைமைகளும் இல்லை, காத்திரமான கட்சிகளுமில்லை. இதன் காரணமாகவே பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி தமிழர்களால் தெரிவு செய்யப்படும் எல்லாப் பிரதிநிதிகளுடனும் பேசக் காத்திருக்கிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அவரின் இக் கருத்தானது நேரடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் தலைமைகளையும் குற்றம் சாட்டும் முயற்சியாகவே காணப்படுகிறது. இவரின் இக் கருத்தோடு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது இந்திய விஜயத்தின்போது தெரிவித்த கருத் ஒப்பிட்டுப் பார்ப்பின் இரண்டுக்கும் இடையேயுள்ள நேர்த் தன்மைகள் மறைமுக கருத்துகள் மிகத் துல்லியமாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் பொறுப்பு வாய்ந்த இரு வேறுபட்ட பதவி களை வகிப்பவர்கள். அது மட்டுமின்றி தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மாத்திரமின்றி அவர்களின் ஆழமான அபிலாஷைகளை அறிந்தவர்கள். இதற்கும் அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிணாம வளர்ச்சிப் பாதையை நன்கு அறிந்தவர்களுங்கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய உணர்வுக்கும் ஒரு நீண்ட கால வரலாறுண்டு. அது பாராளுமன்ற ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவோ அன்றி குடும்ப பாரம்பரியங்களை பறைசாற்றுவதற்காகவோ பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்சியல்ல. ஒரு யுகம் இன்னொரு யுகத்தை பிரசவிக்கும்போது அந்த யுகப் பிரசவம் காரணமாக உதித்த கட்சி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது பேச்சுவார்த்தையில் அக்கறை யில்லை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின் அவர்கள் பாதையில் தமிழர்களுக்கான தனி நாடொன்றை உருவாக்கு வதற்கான முயற்சியிலும் அதிகாரப் பகிர்வு பற்றியுமே அதிகமாகப் பேசி வருகிறார் கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பேட்டியளித்துள்ளார். அவரின் இக் கருத்து குற்றம் சாட்டும் வகையிலும் தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்தும் வகையிலுமேயே கூறப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகவே விளங்கிக் கொள்ளக் கூடிய விடயமாகும்.
புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்ட மறுவாரமே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு வருமாக இருந்தால் அதில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறோமென்ற சமிக்ஞையை கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் வெளிக்காட்டியிருந்தார். அது மட்டுமின்றி ஜனாதிபதியவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் நன்மை கருதி செயற்பட வாருங்கள் என அவரால் விடுக்கப்பட்ட அழைப்பையும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை கொண்டவர்களாகவே கூட்டமைப்பினர் செயற்பட்டு வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் ஆர்வமில்லையென்று கூறுவது ஏற்புடைத்தான குற்றச்சாட்டல்ல.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இந்திய அரசின் தூண்டுதல் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பேன் என வாக்குறுதி நல்கியவர் இன்றைய பிரதம ரும் அந்நாள் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக் ஷ. ஆனால் அவரின் வாக்குறுதிகள் எந்தவொரு நிலையிலும் முன்கொண்டு செல்லப்படவில்லை. தமிழ்த் தலைமைகளும் மக்களும் பெருத்த ஏமாற்றத்துக்கே ஆளாக்கப்பட்டார்கள்.
மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியாக இருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையாக இருக்கலாம். வெறும் வாய்ப்பேச்சாக இருந்ததே தவிர அவற்றை நிறைவேற்றுவதற்கோ அல்லது கலந்துரையாடுவதற்கோ எந்தக் கரிசனையும் காட்டப்படவில்லை. தமிழ் மக்கள் யுத்தத்தில் மாத்திரம் தோற்றுப்போனவர்களாக எண்ணப்பட்டது மாத்திரமின்றி அதிகாரப் பகிர்வு விடயத்திலும் திட்டமிட்ட முறை யில் ஏளனப்படுத்தப்பட்டார்கள்.
யுத்தம் முடிவு காணப்பட்டதாக பிரசங்கம் செய்த மஹிந்த ராஜபக் ஷ, தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வைக் காண்பதற்கு தான் தயார் என்ற பொய்யான மொழிகளையெல்லாம் அவிழ்த்து விட்டார். இந்த வாக்குறுதிகளை அவர் வாரி வழங்கியிருந்த போதிலும் அதற்கான முயற்சிகளையோ நடவடிக்கைகளையோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளாமல் போக்குக் காட்டிய வித்தையே காணப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய அரசானது பலமான அழுத்தத்தைப் பிரயோகித்ததன் காரணமாக தமிழ் தேசியக் கூட்ட மைப்புடன் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. இந்த நிர்ப்பந்தத்துக்குப் போக்குக்காட்டும் வகையிலேயே 2011 ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடையேயுள்ள சுமார் 12 மாத காலங்களில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. நடத்தப்பட்ட ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் அர்த்தமற்றதாகவும் காலத்தைக் கடத்தும் பேச்சுவார்த்தைகளாகவுமே இருந்ததென கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
சுமார் 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்றபோதிலும் அவை அனைத்துமே அர்த்தமற்றதாயும் இலக்கை நோக்கி நகராத பேச்சுவார்த்தையாகவும் இருந்தன. மாத்திரமின்றி அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டவர்கள் தீர்மானம் எடுக்கத் தகுதியற்றவர்களாகவும் பேச்சுவார்த்தையின் குறிக்கோள்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவர்களாகவுமே காணப்படுகிறார்கள் என்று விமர்சனங்கூட முன்வைக்கப்பட்டிருந்தது. இப்பேச்சுவார்த்தையை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் இடை நடுவில் முறித்துக் கொண்டு வெளியேறியமைக்கு அதன் உண்மைத் தன்மை இன்மையே காரணம் என்று கூடக் கூறலாம்.
பேச்சுவார்த்தையின் முறிவைத் தொடர்ந்து புதிய நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. அதுதான் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்தமை. இத் தெரி வுக் குழுவுக்கு கூட்டமைப்பு கலந்து கொண்டால் மாத்திரமே அரசியல் தீர்வு குறித்து விவாதிக்க முடியும் என்று புதிய தொரு நிபந்தனையை முட்டுக்கட்டையாகப் போட்டது.
இவ்வேளையில் புதியதொரு நிபந்தனையை முன்வைக்க வேண்டியிருந்தது. ஏலவே முறிவடைந்த பேச்சுவார்த்தை காரணமாக ஏமாற்றம் அடைந்திருந்த கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடொன்று எட்டிய பின்னரே தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியுமென பகிரங்கமாகவே அறிவித்திருந்தது.
அரசாங்கம் தனது இந்த முயற்சியும் தோல்வி கண்ட நிலையில்தான் பேராசிரி யர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வ கட்சிக் குழுவை அமைத்துக் கொண்டது. ஒன்றன் பின் ஒன்றான எந்த முயற்சிகளுமே கைகூடும் அளவுக்கு முயற்சிகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கபடாத நிலை காரணமாவே பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டன. பாராளுமன்றத் தெரிவுக்குழு வெற்றியளிக்கவில்லை. விதாரண தலைமையில் அமைக்கப்பட்ட சர்வ கட்சிக் குழு போலிப் போக்குக்கு சந்தித்து கலந்துரையாடப்பட்ட போதும் ஆண்டி கள் கூடி மடம் கட்டிய கதையாகவே அமைந்தது. அறிக்கையில் சொல்லப்பட்ட ஆலோசனைகள் அனைத்தும் பெட்டகத்துக்குள் பூட்டி வைத்த பட்டுக் குஞ்சத்தை கறையான் அரித்த நிலையாக மாறியது. அதிகாரப் பகிர்வு விடயத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய அம்புலிமாமா கதை போல் மாகாண சபை முறைமையை நாம் பலப்படுத்தப் போகிறோம். அவ்வாறு செய்யும்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக நாம் வழங்கவிருக்கும் நிதி வளங்களை குறித்த மாகாண சபைகள் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை. அபிவிருத்திகளுக்கு நாம் உதவினோம். ஆனால் பிராந்தியங்களை அபிவிருத்தி செய்யாமல் நாம் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பி வைத்தார்கள். நாமே நேரடியாக அபிவிருத்திகளைச் செய்ய வேண்டியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு கூட்டமைப்பு எப்போதும் அக்கறை காட்டவில்லை என்ற விடுகதையே அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டு வட, கிழக்குப் பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு தங்களின் விசுவாசிகளின் கையில் கிழக்கு மாகாண சபை ஒப்படைக்கப்பட்டிருந்தது. நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்போ அல்ல தமிழ்க் கட்சிகளோ சுதந்திரமாக போட்டியிடும் சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் செல்லப் பிள்ளையான சிவனேச துரை சந்திரகாந்தன் நான்கு வருடங்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். இவ்வேளையில் கிழக்கில் எவ்வித பாரிய அபிவிருத்திகளும் செய்யப்படவில்லை. கூட்டமைப்பை திட்டுவதிலும் விடுதலைப் புலிகளை சங்காரம் செய்வதிலுமே காலம் கடத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற காரணம் கூறப்பட்டு கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் படுகொலைகளே இடம்பெற்றன. இதை கண்டும் காணாமலும் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்ட அரசு, கூட்டமைப்பு அபிவிருத்தியில் பங்கெடுத்துக் கொள்ளவில்லையென்று கூறுவது வேடிக்கைக்குரிய விடயமாகும். மாறாக 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது தேர்தல் நடத்தப்பட்டபோது வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தட்டிக் கழித்து வந்தது.
2012 இலும் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசம் கைக்கொள்ளப்பட்டது. கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஆசனத்தில் மாத்திரம் அமர முடிந்தது.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தமைக்கான காரணம் வட மாகாண சபை கூட்டமைப்பின் வசம் போய்விடக் கூடாது என்ற உள்நோக்கமாகும். வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும்படி சர்வதேசமும் இந்தியாவும் கொடுத்த அழுத்தம் காரணமாக கிழக்கு நடத்தப்பட்டு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
அவ்வாறு தேர்தலை நடத்தி மாகாண சபையை அமைத்தபோதும் அச்சபையை நிம்மதியாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு அரசாங்கம் வழிவிட்டதா என்றால் அதுவுமில்லை. மத்திய அரசாங்கத்தின் தேவையற்ற தலையீடுகள் ஆனைப் பசிக்கு சோளம் பொரி போட்டது போல் நிதிப் பற்றாக்குறை, பிரதம செயலாளருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான அதிகாரப் போட்டிகளைத் தூண்டி விட்டமை, முதலமைச்சருக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயுள்ள விரிசலை தூண்டிவிட்டமை, அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் என ஏகப்பட்ட சங்கடங்களுக்குள் வட மாகாண சபையை இயங்கவிடாமல் தடுத்தவர்கள் யார் என்பதை கைரேகை பார்த்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறான நெருக்கடிகளும் சவால்களும் துஷ்பிரயோகங்களும் மாறி மாறி மூட்டி விடப்பட்ட நிலையில் வடமாகாண சபையின் அபிவிருத்தியில் கூட்டமைப்பு கவனம் செலுத்தவில்லை. நேரடியாக நாமே அபிவிருத்திப் பணிகளைச் செய்தோ மென பறையடிப்பது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளாகும்.
அதிகாரப் பரவலாக்கல் விவகாரத்தில் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்துகளின்படி அரசாங்கம் மாகாண சபைகளை இல்லாது ஒழிக்கப் போகிறதா என்ற பீதி தமிழ் மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதில் கவலைப்பட வேண்டிய மற்றும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஜனாதிபதியோ அதிகாரப் பரவலாக்கத்துக்கு இலங்கையில் என்னுடைய ஆட்சியில் இடமில்லையென்று அடித்துக்கூறுகிறார். பிரதமரோ அதிகாரப் பரவலாக்கலின் தேசிய வடிவமான மாகாண சபை முறைமையை பலப்படுத்தப் போவதாகக் கூறியிருக்கிறார். உண்மையைக் கூறப்போனால் அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் அல்லது அரசியல் தீர்வு விடயத்தில் என்ன செய்யப் போகிறது என்பது யாருக்கும் புரியாத புதிர். இவ்வாறான ஓர் இருண்ட சூழ்நிலையில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வர
விருப்பமில்லை, அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லையென்றெல்லாம் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் கெட்டித்தனமா கும். தமிழ்த் தலைவர்களோ அதிகாரப் பரவலாக்கலிலேயே தமிழ் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது என்பதை முழுமையாக நம்பி வந்துள்ளனர். அதன் வழியிலேயே அவர்களது அரசியல் நடவடிக்கைகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் இலங்கையில் ஆட்சியில் அமைந்த எந்தவோர் அரசாங்கமும் மாகாண சபையின் தற்போதைய எல்லையை விட கூடுதலான அதிகாரங்களை வழங்குவதற்குத் தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்திருக்கும் விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கடந்த அரசாங்கத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளின் முன்னெடுப்பாக அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கான பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும் வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்த கதையைப் போல் எல்லாமே தலைகீழ் நிலைபெற்றது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினரின் ஆர்வமின்மை, அதேபோன்றே தேசிய அரசாங்கத்தில் அங்கம் பெற்ற மைத்திரிபால சிறிசேன வின் கட்சி சார்ந்தவர்களின் முரண்பட்ட கருத்துகள் இழுத்தடிப்புகள் அரசியல் சாசன முயற்சிகளைத் தூங்க வைத்துவிட்டன என்றே கூற வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேசி அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்ற விடயத்தில் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டதன் காரணமாகவே சில பல விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாராக இருந்தது. அவ்வாறு இருக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான தனி நாடொன்றை உருவாக்குவதற்கான பேச்சு முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகின்றார்கள் என்று கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினையை இன்னும் மழுங்கடிக்கும் செயலாகும்.
பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டு வழிப்படுத்தல் குழுவில் ஆராயப்பட்டு இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு கூட்டமைப்பின் ஒப்புதலும் ஆலோசனைகளும் பெறப்பட்ட பின்பும் கூட யானையொன்று வெண்கலக் கடையில் புகுந்தது போல் பிரதமரை மாற்றி பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட குழப்ப நிலைகள் அரசியல் சாசன முன்னெடுப்புகளை மூலையில் முடக்கி வைத்துவிட்டன.
மஹிந்த ராஜபக் ஷவின் இன்னொரு எதிர் பாணம், இலங்கையின் பெரும்பான்மைச் சமூகம் விரும்பாத கோரிக்கைகளை முன்வைத்து நாட்டைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நாட்டின் பெரும்பான்மைச் சமூகமென்பது சிங்கள மக்கள் என்பது சனத்தொகை அடிப்படையில் ஏற்றுக் கொள்வதற்கும் அரசியல் உரிமை, பொருளாதார சமூக அடிப்படையில் நோக்கப்படுவதற்கும் பாரிய வித்தியாசமுண்டு. 1505ஆம் ஆண்டுக்கு முன் இலங்கையின் ராஜ்ஜியங்கள் இருந்த நிலைக்கும் 1948 சுதந்திரத்துக்குப் பின்னுள்ள பிரதேச சமூக நிலையோடு ஒப்பீடு செய்து பெரும்பான்மை சிறுபான்மையென்று அர்த்தப்படுத்துவது யதார்த்தத்துக்குப் புறம்பான விடயம்.
இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகமாகிய சிங்கள மக்களும் அவர்களுக்கு தலைமை தாங்கிய தலைமைகளும் இரு வேறுபட்ட பார்வையில் சமூகங்களை நோக்கியதன் பாரதூரமான விளைவே பெரும்பான்மை – சிறுபான்மையென்ற கோட்பாட்டு வாதமும் அடிப்படைவாதமும் உருவாகக் காரணமாகிறது.
இன்னொரு புறம் பெளத்த மேலாதிக்கம் எங்கிருந்து தலைதூக்கத் தொடங்கியதோ அன்றைய நாளிலிருந்து சிறுபான்மை இனம் என்ற ஒதுக்கு நிலைகளும் உதாசீனங்களும் இடம்பெற ஆரம்பித்தன. எது எவ்வாறு இருந்தபோதிலும் சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென்ற முயற்சிகள் அரசியல் முறையில் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா உடன்படிக்கை, சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதி, ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள், இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏன் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைப்பேன் என்ற இன்றைய பிரதமரின் வாக்குறுதிகள் அனைத்துமே சிறுபான்மை மக்களின் தீர்வுக்கான அடிப்படைகளாக இருந்து வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது பெரும்பான்மை விரும்பாத கோரிக்கைகளையும் கோஷங்களையும் கூட்டமைப்பு முன்வைத்து நாட்டைக் குழப்பப் பார்க்கிறது, நாட்டை துண்டாடப் பார்க்கிறது என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய குற்றச்சாட்டு அல்ல. இதன் மறுபுற அர்த்தம் யாதெனில் தமிழ் மக்கள் இந்நாட்டில் உரிமையற்றவர்களாக அடிமை வாழ்வு வாழுவதையே சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள் என்ற தொனிப்பொருளை வெளிப் படுத்துவதாக இருக்கிறது. இரட்டை நாக்குக் கொண்டவர்கள் பேசுவது போல் அங்கொன்று பேசுவதும் இங்கொன்று தெரிவிப்பதும் ஆட்சியாளர்களின் நேர்மையற்ற தன்மையையே எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. இவ்வாறு தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுமாக இருந்தால் எத்தனை நூற்றாண்டு சென்றாலும நாட்டில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவது என்பது எவ்வளவு கடினமான காரியமென்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான குழப்ப நிலைகளை ஏன் உருவாக்கப் பார்க்கிறார்கள் என்று பார்ப்போமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் குறிப்பாக வட,கிழக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்பது பற்றி அதிகமாக கவனத்துக்கு உட்படுத்துவதன் காரணமாகவே இத்தகைய எதிர்முனைக் கருத்துகளை ஆட்சியாளர்கள் முன்வைத்து வருகிறார்கள் என்பது நினைக்கத் தோன்றுகின்றது.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் 13ஆவது திருத்தம் தொடர்பிலோ அல்லது மாற்றுத் திட்டம் தொடர்பிலோ நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு மட்டும் பேசத் தயாரில்லை. பொதுத் தேர்தலின் பின் பிரதிநிதிகளாக வரும் அனைவருடனும் பேசுவதற்கே விரும்புகின்றோமென அரசாங்கத் தரப்பினர் இப்பொழுது கூறி வருகிறார்கள். இது காட்டுகின்றதென்னவென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதை மறைமுகமான இலக்காகவும் அதேவேளை, கூட்டமைப்புக்கு எதிரான அம்புகளை ஏவி விட்டு அதைச் செல்லாக் காசாக்கி மாற்று அணிகளை அடிபணிய வைக்கும் ஒரு சூழ்ச்சியையே இன்றைய ஆட்சியாளர்கள் யுக்தியாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இதை அரசியல் சாணக்கியத்துடன் கூட்டமைப்பு தெரிந்து கொள்ள வேண்டும்.
எது எவ்வாறு இருந்தாலும் இன்றைய அரசாங்கம் எதிர்பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிறுபான்மையின் ஆதரவு இன்றிப் பெற முடியுமா? கூட்டமைப்பை ஓரங்கட்ட நினைக்கும் அரசாங்கத்தின் சூழ்ச்சி வெற்றியளிக்குமா? கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் தமிழ் மக்களின் அரசியல் நகர்ந்து செல்லுமா? என்பதையெல்லாம் பொதுத் தேர்தலின் முடிவுகள் தெளிவாக உணர்த்தும்.
- திருமலை நவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM