சீனாவில் புதிய கொவிட் –19 கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் தொகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் புதிதாக 2,009 பேரு க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வைரஸ் தொற்றால் புதிதாக 142 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கடந்த வாரத்தில் மேற்படி வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொகையில் ஆரம்பத்தில் வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டபோதும் பின்னர் அத்தொகைகளில் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் புதிதாக தொடர்ந்து 3 நாட்களாக வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளமை அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவது தொடர்பில் அனுகூலமான பெறுபேறு ஒன்றாக கருதப்படுகிறது.
சீனாவில் இதுவரை மொத்தம் 68,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம் இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் மட்டும் 1,666 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவிற்கு வெளியில் சுமார் 30 நாடுகளில் 500 பேருக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் பிரான்ஸ், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் வீதம் நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்பட்டுள்ள பிந்திய வீழ்ச்சியையடுத்து சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யி தெரிவிக்கையில், இந்த வைரஸ் தொற்று தொடர்பான தற்போதைய பெறுபேறானது மேற்படி தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது எனத் தெரிவித்தார். தாம் எந்தவொரு நாடும் எடுக்காத வகையில் முழுமையான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளை பரந்தளவில் முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வங்கி நாணயத்தாள்களுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை
சீனாவின் மத்திய வங்கியானது வைரஸ் பரவுவதை தடுக்க பயன்படுத்தப்பட்ட வங்கி நாணயத்தாள்கள் மீள்சுழற்சிக்கு விடப்படுவதற்கு முன்னர் அவற்றை சேகரித்து தொற்று நீக்கி குறிப்பிட்ட நாட்களுக்கு களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்பிரகாரம் யுவான் நாணயத் தாள்கள் புற ஊதா கதிர்களை அல்லது உயர்வெப்பத்தைப் பயன்படுத்தி தொற்று நீக்கிய பின்னர் அந்த நாணயத்தாள்கள் குறிப்பிட்ட பிராந்தியத்தில் நோய் பரவும் தீவிரத்தைப் பொறுத்து 7 நாட்கள் முதல் 14 நாட்கள்வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்படவுள்ளன.
ஆசியாவுக்கு வெளியில் முதல் தடவையாக மரணம்
பிரான்ஸில் புதிய கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான சீன சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை தெரிவித்தனர். இது கொரோனா வைரஸ் தொற் றால் ஆசியாவுக்கு வெளியில் இடம்பெற்ற முதலாவது மரணமாக கருதப்படுகிறது.
மேற்படி 80 வயது சீன சுற்றுலாப்பயணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி சீன ஹுபி மாகாணத்திலிருந்து பிரான்ஸுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து சுகவீனமுற்ற அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர் பாரிஸ் நகரிலுள்ள பிசட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளபோதும் அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானிய கப்பலில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஜப்பானிய கடற்கரைக்கு அப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கியுள்ள சுமார் 400 அமெரிக்கர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்கா விமானமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அதேசமயம் ஹொங்கொங்கும் அந்தக் கப்பலில் சிக்கியுள்ள தனது சுமார் 33 பிரஜைகளை வெளியேற்ற விமானமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி கப்பலை தனிமைப்படுத்தும் நடவடிக்கை நாளை மறுதினம் புதன்கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்போடியா கடற்கரைக்கு அப்பால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பல்
மேலும் எம்.எஸ். வெஸ்டர்டாம் கப்பலில் பயணித்த 83 வயது அமெரிக்கப் பெண்ணொ ருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்தக் கப்பல் கம்போடிய கடற்கரைக்கு அப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கம்போடியாவில் இறங்கிய அந்தப் பெண் விமானத்தின் மூலம் மலேசியாவை வந்தடைந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட கப்பலில் பயணித்த ஏனைய பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் சாத்தியமுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அந்தக் கப்பலை தனிமைப்படுத்தி அதிலுள்ள ஏனைய பயணிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேரில் ஒருவர் மருத்துவ சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.
சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் கள் தொகை 72 ஆக உயர்ந்துள்ளது. 18 பேர் சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவமனையைவிட்டு வெளியேறியுள் ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தொற் றைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ரெட்ரொஸ் அதானொம் கப்பிறியெஸஸ் நேற்று முன்தினம் சனிக்கிழமை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
மில்லியன்கணக்கானோர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்
உத்தியோகபூர்வமாக கொவிட் – 19 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சீன அரசாங்கத்தின் முயற்சிகளின் அங்கமாக சீனாவில் மில்லியன்கணக்கான மக்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலுள்ளனர். அவர்கள் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர். அதிகளவான கடும் கட்டுப்பாடுகளை மேற்படி வைரஸ் தொற்றின் தோற்றுவாய் பிராந்தியமான ஹுபி மாகாணம் மற்றும் அதன் தலைநகர் வுஹானிலுள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். வுஹான் நகரானது சீனாவிலுள்ள ஏனைய பிராந்தியங்கள் அனைத்திலுமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹுபி மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் அந்த மாகாணத்திற்கு வெளியே தொற்றுக்குள்ளானவர்கள் தொகை தொடர்ந்து 11ஆவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் தொகையிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் சீன பீஜிங் நகரானது தனது நகருக்கு திரும்பும் ஒவ்வொருவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ வேண்டும் எனவும் மீறுபவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM