இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத் தடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது.
2009ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தின்போது கட்டளைப் பொறுப்புக்கு ஊடாக இலங்கை இராணுவத்தின் 58ஆவது படையணியினால் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சவேந்திர சில்வாவின் தொடர்பு பற்றிய நம்பத்தகுந்த தகவல்களின் காரணமாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் உப பிரதானியாகவும் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பயணத்தடையை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை என்றும் இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தனது டுவிட்டர் தளத்தில் செய்தியொன்றை பதிவிட்டிருந்தார். அதில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது முன்னெடுக்கப்பட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் சம்பந்தப்பட்டமை காரணமாக சவேந்திர சில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவராக பிரகடனம் செய்கிறேன். போர்க்குற்றங்களை இழைப்பவர்கள் மற்றும் மனித உரிமைகளை மீறுகின்றவர்கள் விடயத்தில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் விடயத்தில் அமெரிக்கா பின்நிற்கமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த பயணத்தடை அறிவிப்பை அரசாங்கம் விமர்சித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், சவேந்திர சில்வா மீதான தடையானது சுயாதீனமாக ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஷ்ட நிலையை கருத்தில் கொண்டே சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய பதவிகளுக்கு நிரூபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் தடை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கின்றார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்துக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளமை வருந்தத்தக்கதுடன் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்த வீர களத்தளபதிகளில் சவேந்திர சில்வாவும் ஒருவராவார். தேவைப்படும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கின்றோம். ஒரு நாடு என்ற வகையில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் வீரர்களுடன் நாம் எப்போதும் நிற்போம் என்று தெரிவித்திருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்துவந்த இலங்கை அரசாங்கத்தின் கண்களை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதனை நாம் காண்கின்றோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவேளை இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியதுடன் அவரது நியமனத்தைக் கண்டித்திருந்தது. சவேந்திர சில்வா மீதான பயணத்தடையை அடுத்தாவது இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளில் ெவளிவந்த சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இடம்கொடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற வேளையில் 58ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டிருந்தார். இவர்மீது யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இராணுவத் தளபதியாக இவரை நியமித்தபோது இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருந்ததுடன் பல்வேறு சர்வதேச அமைப்புக்களும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருந்தபோது அதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்தது. ஆனால் அந்த வேளையில் இந்த விடயங்கள் எதுவும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
சவேந்திர சில்வா மீது தற்போது ஏன் அமெரிக்கா இந்த பயணத்தடையை விதித்துள்ளது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சவேந்திர சில்வா அமெரிக்காவில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இருக்கும் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் துணைத் தூதுவராக பணியாற்றியிருந்தார்.
அந்த வேளையில் இவ்வாறான தடையினை அமெரிக்கா விதித்திருக்கவில்லை. இராணுவத் தளபதியாக பதவியேற்றவுடன் இத்தகைய தடையினை அமெரிக்கா விதிக்கவில்லை. தற்போது இராணுவத் தளபதியாக பதவியேற்று ஆறு மாதங்களின் பின்னரே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் இந்த செயற்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சும் கேள்வியெழுப்பியிருக்கின்றது.
உண்மையிலேயே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு இன்னும் நீடித்து வருகின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் இன்னமும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் பொறுப்புக்கூறும் விடயத்தில் உரிய அக்கறை செலுத்தியிருக்கவில்லை.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்ட பின்னர் ெபாறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை காண்பிக்கப்படும் என்று அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இலங்கை வந்திருந்த அன்றைய ஐ.நா. ெசயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு உறுதி வழங்கியிருந்தார். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாகவே 2012ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை செலுத்தியிருக்கவில்லை.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைக்கான பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிேரரணை நிறைவேற்றப்பட்டது. அன்றைய அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியபோதிலும் உரிய வகையில் பொறுப்புக்கூறும் விடயம் செயற்படுத்தப்படவில்லை. கால அவகாசங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில்தான் தற்போது கோத்தபாய ராஜ
பக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றிருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில்தான் இராணுவத் தளபதி மீதான பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. பொறுப்புக்கூறும் விடயத்தில் புதிய அரசாங்கம் அக்கறை செலுத்தவேண்டியதன் அவசியம் இதன்மூலம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. பொறுப்புக் கூறும் விடயத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய அக்கறை செலுத்தியிருந்தால் இத்தகைய தடை விதிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது. எனவே எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்தவேண்டும். இல்லையேல் இத்தகைய தடைகளும் அழுத்தங்களும் தொடரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(17.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM