காணாமல் போயுள்ளவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வெறுமனே கூற முடியாது. அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள், எப்போது கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள், ஏன் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்றால் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் எங்கே, அந்த சடலங்களுக்கு என்ன நடந்தது, சடலங்கள் புதைக்கப்பட்டனவா, அவைகள் எரிக்கப்பட்டனவா, அப்படியானால் அவற்றைச் செய்தது யார், அவைகள் எங்கே புதைக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன, ஏன் அவ்வாறு செய்யப்பட்டது என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் அரசியல் சார்ந்த உணர்ச்சிகரமான ஒரு நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது. ஒரு தசாப்த காலமாக இது விடயத்தில் மௌனம் சாதித்த அரசு இப்போது அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள், விடுதலைப்புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளதையடுத்து இந்த நிலைமை உருவாகியுள்ளது.
அத்துடன் காணாமல் போனவர்களை நிலத்தில் தோண்டித்தான் பார்க்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பொதுஜன பெரமுனவின் ஆதரவுத்தள முக்கியஸ்தருமாகிய விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தும், காணாமல் போனோர் விவகாரத்தில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கின்றது.
காணாமல் போனவர்கள் சாதாரண சூழலில் காணாமல் போகவில்லை. அவர்கள் அதிகாரமுள்ளவர்களினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற நீண்டகால வெளிப்படையான குற்றச்சாட்டும் உள்ளது. இதன் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்று உள்நாட்டில் மட்டுமல்லாமல் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அளவிலான சர்வதேச மட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் தாராளமாக இடம்பெற்றிருந்தன. குறிப்பாக தமிழ் இளைஞர்கள் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் தலைநகரம் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளைவேன்களில் கடத்திச் செல்லப்பட்ட பல சம்பவங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியிருந்தன. முறைப்பாடுகளும் பதிவாகி உள்ளன.
யுத்த மோதல்களின்போது அரச படைகளுக்கு எதிராக ஆயுதமேந்தியிருந்த விடுதலைப்புலிகளின் நடமாட்டங்கள், அவர்களுடைய ஆயுதந்தாங்கிய செயற்பாடுகள் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
அந்த நடவடிக்கைகளுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன ஆயுதப்படைகளுக்குப் பேருதவியாக அமைந்திருந்தன. இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினரும் பொலிஸாரும் தங்களுக்குச் சந்தேகமானவர்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கும் உரிய அதிகாரங்களைத் தாராளமாகப் பிரயோகித்திருந்தனர்.
மறைத்துத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் வெளியில் வந்தனர்
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி அவர்களைப் பலவீனப்படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது என்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால் சந்தேகத்திற்கு உரியவர்கள் என்பதற்காகக் கைது செய்யப்பட்டவர்களும், அடையாளம் தெரியாத வகையில் கடத்தப்பட்டவர்களும் பெருமளவில் சாதாரண சிவிலியன்களாகவும் விடுதலைப்புலிகளுடன் தொடர்பற்றவர்களாகவுமே இருந்தார்கள் என்பது பல்வேறு விசாரணைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களிலும் தேடிச் சென்று பிடிக்கப்பட்டவர்களிலும் பலர் குடும்ப உறவினர்களுக்குத் தெரியாமல் மறைத்துத் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே, அவர்கள் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
இராணுவ பொலிஸ் விசாரணைகளின்போதும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணைகளின்போது பலர் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகிய நிலையிலும் பலர் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இத்தகைய பின்புலத்தில் தெரிந்தும் தெரியமாலும் பிடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகாரபூர்வமாகக் கைது செய்யப்பட்டவர்களுமாக பெரும் எண்ணிக்கையானோர் காணாமல் போயுள்ளார்கள் - வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்கின்ற உரிமை அவர்களின் குடும்ப உறவினர்களுக்கு உண்டு. அந்த உரிமையை எவரும் மறுக்க முடியாது.
அதேவேளை, நாட்டை அதி உச்ச பாதுகாப்பில் வைத்திருப்பதற்காக, இராணுவத்தினரும் பொலிஸார் உட்பட ஏனைய படைத்தரப்பினரும் வடக்கு கிழக்குப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த நிலையிலேயே தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் போயுள்ளனர் என்பது சாதாரண விடயமல்ல. அதனை சாதாரணமாகக் கடந்து செல்லவும் முடியாது.
அது மட்டுமல்லாமல், 2009 மே 18 ஆம் திகதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம், உயிர் தப்பியிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் இராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் என்று கோரியிருந்தது.
சரணடைபவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்படும். விசாரணைகளின் பின்னர் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் என உத்தரவாதமளித்து, விடுதலைப்புலி உறுப்பினர்களை சரணடையுமாறு அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவித்திருந்தனர்.
போர்க்கைதிகள்
இந்த அறிவித்தலையடுத்து, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்ததை அவர்களின் உறவினர்களும் மற்றவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் தமது கண்களால் நேரடியாகக் கண்டிருந்தார்கள். ஏனெனில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த சுமார் 3 லட்சம் மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரிடம் போய்ச் சேர்ந்தார்கள்.
அவ்வாறு வந்தவர்களை இராணுவம் பொறுப்பேற்ற இடத்திலேயே விடுதலைப்புலி உறுப்பினர்களும் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சரணடைந்ததையும், அவர்களைப் பொறுப்பேற்ற இராணுவத்தினர் பேருந்துகளில் அவர்களை ஏற்றிச் சென்றதையும் பலரும் நேரடியாகக் கண்டிருந்தனர்.
இவ்வாறு இராணுவத்திடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளார்கள் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில் அவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே எந்த அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவே இல்லை.
இராணுவத்தினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலி உறுப்பினர்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணைகளின்போது இராணுவத்தரப்புக்காக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளும் இராணுவ அதிகாரிகளும் விடுதலைப்புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என மறுத்துரைத்திருந்தனர்.
இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ள உறவினர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்ற மனித உரிமை சட்டத்தரணிகள் இந்த மறுப்புரையை ஏற்கவில்லை. அது தொடர்பாகத் தமது ஆட்சேபனையையும் நியாயம் சார்ந்த வாதங்களையும் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
இந்த நீதிமன்ற விசாரணைகளும், ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட விடயமும் ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று இராணுவத்திடம் சரணடைந்வர்களைக் காணவில்லை என்று சாதாரணமாகக் கூறிவிட முடியாது.
இராணுவத்தினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய பின்னர் அரசாங்கத்தின் அழைப்பிலேயே அவர்கள் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கைதிகளாகவே இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார்கள். போர்க்கைதிகளை இறைமையுள்ள ஓர் அரசாங்கம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு சர்வதேச நியமங்கள் இருக்கின்றன.
பொறுப்பேற்பும் முரண் நிலையும்
அந்த சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்க்கைதிகள் என்ற ரீதியில் மனிதாபிமான முறையிலும் போர்க்கைதிகளுக்கே உரிய உரிமைகளுடன் அவர்களை அரசாங்கம் நடத்தியிருக்க வேண்டும். குறிப்பாக விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, நியாயமான வகையில் மனிதாபிமான ரீதியில் அவர்களுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்க வேண்டும்.
இத்தகைய கடப்பாடுடைய நிலையில்தான் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகள் அமைப்பில் வலிந்து சேர்க்கப்பட்டிருந்த சிறுவர்கள் என்றும் குறிப்பிட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்துள்ளது. இதனைத் தனது நல்லெண்ண வெளிப்பாடாகவும், மனிதாபிமானச் செயற்பாடாகவும் அரசாங்கம் பிரசாரம் செய்யத் தவறவில்லை.
ஆனால், அதேநேரத்தில் கடத்தப்பட்டவர்கள், பிடித்துச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற மூன்று வகையில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் காணாமல் போயுள்ளார்கள் அதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலைமையே நிலவுகின்றது. இவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய அரசு நீண்டகாலமாக அமைதி காத்திருந்துவிட்டு, ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். விடுதலைப்புலிகளினாலும் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்று சாக்குபோக்கு கூறுவது ஏற்புடையதல்ல.
இதனால்தான், இந்த விடயத்தை சாதாரண விடமயாகத் தட்டிக்கழித்துவிட முடியாது எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் மூன்று வருடங்களாகத் தொடர்கின்றது.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் சுமுக நிலைமையை ஏற்படுத்துவதற்காக நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கான பொறிமுறைகளை உருவாக்கி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.
அந்த உறுதிமொழிக்கமைவாக ரணில் - மைத்திரி கூட்டரசாங்கம் உருவாக்கிய காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை வடக்கு–கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் அலுவலகங்களைத் திறந்து, தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. அந்த அலுவலகம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்த போதிலும், காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசாங்கம் 'கவனம்' செலுத்தியிருந்த நிலையிலேயே 2019 ஜனாதிபதி தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கம், முரண்பாடான ஒரு நிலையில் காணாமல் போனவர்கள் உயிரோடு இல்லை என கூறியிருக்கின்றது.
கேள்விகள்
படைத்துறை அதிகாரிகளினதும், அரச அதிகாரிகளினதும் பொறுப்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக (ஏனெனில் அரசாங்கமே விடுதலைப்புலிகளை சரணடையுமாறு கோரியிருந்தது) அரசாங்கமே பொறுப்புள்ள நிலையில் மிகச் சாதாரணமாகக் காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களை விடுதலைப்புலிகளே பிடித்துச் சென்றார்கள் என்றும் நாட்டின் ஜனாதிபதி ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான இணைப்பாளரிடம் நேரடியாகக் கூறியிருக்கின்றார்.
அவ்வாறு கூறியிருப்பது, ஒரு வகையில் வேடிக்கையான விடயமாகவும் மறு புறத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களாகிய மனித உயிர்கள் தொடர்பிலான பொறுப்பையும் கடப்பாட்டையும் தூசாகக் கருதித் தட்டிக்கழிக்கின்ற மனிதாபிமானமற்ற தன்மையாகவும் வெளிப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த நிலைமை குறித்து சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், உள்ளூரில் ஜனநாயகத்தின் மீதும் இன ஐக்கியத்தின் மீதும் பற்றுள்ளவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் கூற்றுக்கு உரிய முறையில் அதிகாரபூர்வமாக விளக்கமளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
காணாமல் போயுள்ளவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வெறுமனே கூற முடியாது. அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள், எப்போது கொல்லப்பட்டார்கள், எவ்வாறு கொல்லப்பட்டார்கள், ஏன் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்றால் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் எங்கே, அந்த சடலங்களுக்கு என்ன நடந்தது, சடலங்கள் புதைக்கப்பட்டனவா, அவைகள் எரிக்கப்பட்டனவா, அப்படியானால் அவற்றைச் செய்தது யார், அவைகள் எங்கே புதைக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன, ஏன் அவ்வாறு செய்யப்பட்டன என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் இருந்து பதில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. காணாமல் போனவர்களை மண்ணில் தோண்டித்தான் பார்க்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்றதோர் அரசியல் பொறுப்பில் உள்ள விமல் வீரவன்ச பொறுப்பற்ற முறையில் கூற முடியாது.
கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அறிந்திருக்கின்ற ஒரு நிலையிலேயே அவ்வாறு அதனைக் கூற முடியும். வீதியில் செல்கின்ற ஒரு வழிப்போக்கனைப் போலவோ அல்லது அரசியல் அரட்டைக்காகக் கதை சொல்கின்ற ஒருவரைப் போலவோ பொறுப்பற்ற முறையில் காணாமல் போயுள்ளவர்கள் குறித்து விமல் வீரவன்ச கருத்து வெளியிட முடியாது. இந்த விடயத்தில் அவர் பொறுப்பான பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார்.
பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
எனவே பொறுப்பற்ற முறையிலான கருத்தாக அல்லது உள் விடயங்களை நன்கு தெரிந்து கொண்டு அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்ற வரையறையைக் கொண்ட ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள விடயம் குறித்து ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ கருத்து கூற முடியாது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதன் அமர்வில் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு அல்லது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது இந்த விடயம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு கருத்துக்கள் தொடர்பிலும் இலங்கையின் சார்பில் அந்த அமர்வில் கலந்து கொள்கின்ற பிரதிநிதிகளிடம் விரிவான விளக்கங்கள் கோரப்பட வேண்டும்.
அந்த விளக்கங்களை வெறுமனே அரசியல் ரீதியிலான சாக்குப் போக்கான கருத்துக்களாக மனித உரிமைப் பேரவை ஏற்றுக்கொள்ளக் கூடாது. மிகவும் பொறுப்புள்ள முறையிலான விளக்கத்தை அவர்களிடம் இருந்து பெற வேண்டியது அவசியம். அத்துடன் அந்த விளக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பிலான முழு விபரங்களையும் உடனடியாக இலங்கைப் பிரதிநிதிகளிடம் இருந்து ஐநா மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாட்டுப் பிரதிநிதிகள் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் இலங்கைப் பிரதிநிதிகளிடம் இருந்து பெறுகின்ற விபரங்கள் விளக்கங்களின் அடிப்படையில் இந்த விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் உரிய முறையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்படுவதையும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்த வேண்டும். அதன் ஊடாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைப்பதற்கும், இலங்கையில் இனிமேல் இவ்வாறு ஆட்கள் காணாமல் ஆக்கப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் வழி சமைக்கப்பட வேண்டும்.
காணாமல் போயுள்ளவர்கள் விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தென்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை நேயமுள்ளவர்களும் கண்டன அறிக்கைகள் விடுவதுடனும், ஆர்ப்பாட்டங்களைச் செய்வதுடனும் நின்றுவிடக் கூடாது.
அரச தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பொறுப்பற்ற முறையிலான கருத்துக்களுக்கும், அதன் அடிப்படையிலான அரசின் நிலைப்பாட்டுக்கும் எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுதியாகக் குரல் எழுப்ப வேண்டும். பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு, மறக்கடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போயுள்ளவர்கள் விடயத்தில் பொறுப்பேற்று பொறுப்பு கூறுவதற்கும், அது தொடர்பிலான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் உரிய அழுத்தத்தை அரசுக்குக் கொடுப்பதற்கு இதைவிட சரியானதொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கப் போவதில்லை.
எனவே சர்வதேச மட்டத்தில் - குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வு என்ற சர்வதேச அரங்கில் காணாமல் போயுள்ளவர்களின் விடயத்திற்கு நீதியும் நியாயமும் கிடைப்பதற்கான செயற்பாடுகளில் தமிழ்த்தரப்பினர் துரிதமாக ஈடுபட வேண்டும். அவ்வாறில்லாமல் இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடுவார்களேயானால் தம்மை நம்பியுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தவறிவிட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
- பி.மாணிக்கவாசகம் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM