இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த விஷேட அந்தஸ்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் நீக்கி அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரங்குறைத்து பிரித்து வைத்த செயலின் பின்னணியில் நோக்குகையில், இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்குமாறு அவர் வலியுறுத்துவது வெறுமையானதாகத் தோன்றுகிறது என்று இந்தியாவின் இரு பிரபல தேசிய ஆங்கில பத்திரிகைகள் நேற்று புதன்கிழமை கூறியிருக்கின்றன.
இலங்கையின் பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து ஆசிரிய தலையங்கங்களை தீட்டியிருக்கும் த இந்துவும் டெக்கான் ஹெரால்டும் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த வேண்டுகோள் தொடர்பில் பிரதமர் ராஜபக் ஷ உறுதியான முறையில் பதிலளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருப்பதுடன் இலங்கை அரசாங்கம் மோடியின் கோரிக்கையை பாரதூரமான அக்கறையுடன் கவனத்தில் எடுப்பது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றன.
த இந்து
'முதல் வருகை : இந்தியா - இலங்கை உறவுகள் குறித்து' என்ற தலைப்பில் த இந்து பத்திரிகை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கம் வருமாறு :
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்ற பிறகு வெளிநாடொன்றுக்கான முதன் முதலான விஜயமாக கடந்த வருடம் நவம்பரிலும் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக பதவியேற்ற பிறகு முதன் முதலாக வெளிநாட்டுப் பயணமாக கடந்த வாரமும் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயங்கள் புதிய இலங்கை - இந்திய அத்தியாயமொன்றின் தொடக்கத்துக்கான நம்பிக்கைக்கு சமிக்ஞை காட்டியிருக்கின்றது. 2015 ஜனவரியில் முடிவுக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் முன்னைய ஆட்சி காலத்தின் இறுதியில்
(அப்போது கோத்தபாய ராஜபக் ஷ பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்தார்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பல காரணிகளினால் கசப்புக்குள்ளானதற்கு முரணாக புதிய ஒரு ஆரம்பத்தை செய்வதற்கு விருப்பங்களைக் கொண்டிருப்பதாக புதுடில்லியும் அறிகுறி காட்டியது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக முன்வைத்திருக்கும் யோசனைகள் உட்பட பல அபிவிருத்தி செயல்திட்டங்களில் பணியாற்றுவதற்கு இந்தியா அக்கறை காட்டியிருக்கிறது.
இந்தியாவின் 40 கோடி டொலர்கள் கடனுதவியை விரிவுபடுத்துவது குறித்தும் நாடளாவிய ரீதியில் வீடமைப்பு திட்டங்களுக்கான இந்தியாவின் மேலதிக உதவி குறித்தும் மஹிந்த ராஜபக் ஷ தனது புதுடில்லி விஜயத்தின்போது இந்திய பிரதமருடன் ஆராய்ந்தார். இலங்கையின் வடக்கிற்கும் கிழக்கிற்குமான விமான சேவைகள் ஏற்கனவே மேம்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவிலிருந்து ஒரு விமான சேவை இடம்பெறுகிறது. மட்டக்களப்புக்கான இன்னொரு விமான சேவை குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷவும் பிரதமர் மோடியும் பாதுகாப்பு விவகாரங்களைப் பொறுத்தவரை, புலனாய்வு தகவல் பரிமாற்றம், பயிற்சியளிப்பு, கடந்த வருடம் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு பிறகு இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட 5 கோடி டொலர் விஷேட கடனுதவியைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆராய்ந்தார்கள். இந்தியாவும் இலங்கையும் மாலைதீவும் பாதுகாப்பு தொடர்பான முத்தரப்பு ஏற்பாடுகளை புதுப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுக் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகியவையும் இதில் உள்ளடங்கும். இறுதியாக ராஜபக் ஷ இலங்கையின் நட்புறவுகளைப் பொறுத்தவரை வரலாறு மற்றும் கலாசாரப் பிணைப்புக்கள் காரணமாக இந்தியாவை உறவுக்கார நாடாக பார்ப்பதாகக் கூறியதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரத்தியேக உறவுகள் பற்றிய தனது நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நட்புரிமை உணர்ந்து கொள்ளப்படக்கூடியது. ஆனால் அதில் இருக்கக் கூடிய கீறல்களையும் வெளிப்படையாகப் பார்க்கக் கூடியதாய் இருக்கின்றது. சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை நிறைவேற்றும் என்றும் அரிசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அதிகாரத்தைப் பரவலாக்கும் செயற்பாடுகள் முன்னோக்கி நகர்த்தப்படுமென்றும் இந்தியா நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இந்த விவகாரத்தில் எந்த உறுதிப்பாட்டையும் வழங்கியிருக்கவில்லை. 13ஆவது திருத்தத்தை தாம் விரும்புவதாகவும் ஆனால் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கு ஏற்புடையதல்லாத தீர்வுகளைக் காணமுடியாது என்றும் த இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் கூறியிருந்தார். இலங்கையின் வடக்கு–கிழக்கு மாகாணங்களுக்கு விஷேட அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று இந்தியா கொடுக்கின்ற குரல் ஜம்மு - காஷ்மீருக்கான விஷேட அந்தஸ்தை நீக்குவதில் மோடி அரசாங்கம் வெளிக்காட்டிய உறுதியான நிலைப்பாட்டுடன் முரண்பாடானதாக இருக்கிறது.
திருகோணமலையில் சக்தி மற்றும் உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களில் இந்தியாவின் பங்கேற்பையும் மத்தள விமான நிலையத்தில் இந்தியா பங்குகளைக் கொண்டிருப்பதையும் அனுமதிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கைசாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முன்னெடுப்பதற்கு வாய்ப்புக்களே இல்லை என மஹிந்த ராஜபக் ஷ திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் இலங்கை அதன் கடன் நெருக்கடியை கையாள்வதற்கு இந்தியாவின் உதவியை பிரதமர் ராஜபக் ஷ கேட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் 6000 கோடி டொலர்கள் நிலுவையாக உள்ளது. இதில் வருடாந்தம் சுமார் 500 கோடி டொலர்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. மூன்று வருடங்களுக்கு கடன் மீள செலுத்துகையை முடக்கி வைப்பதற்கு அவர் விடுத்திருக்கும் வேண்டுகோளை புதுடில்லி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு இந்தியா அளிக்கக் கூடிய பதில் நேர்மையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தருமாறு இலங்கை முன்னர் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி ஏற்றுக் கொள்ளாததால் சீனாவுக்கு அந்த வாய்ப்பு போய்ச் சேர்ந்த கடந்த காலத்தைப் போன்று இலங்கையின் புதிய வேண்டுகோளை அலட்சியம் செய்வதோ அல்லது மறுப்பதோ இருதரப்பு உறவுகளுக்கு பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.
டெக்கான் ஹெரால்ட்
'இலங்கையுடன் இன்னொரு அடி முன்னோக்கி' என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்ட் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை அல்லது எந்த உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என்றபோதிலும் அந்த விஜயம் ஆக்கபூர்வமாக அமைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை முன்னாலுள்ள பாதை குறித்து சிறந்த தெளிவை இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுகள் கொடுத்திருப்பது போல் தெரிகிறது. கடந்த டிசம்பரில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் விஜயத்தின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அறிவிக்கப்பட்ட 40 கோடி டொலர் கடனுதவியையும் பயங்கரவாத எதிர்ப்புக்கான 5 கோடி டொலர்கள் மென் கடனுதவியையும் பயன்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்திருக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் குறித்தும் ஆராய்ந்த இரு தரப்பினரும் தங்களுக்கு இடையிலான இருதரப்புக் கூட்டுப் பங்காண்மையின் பிரதான கவனக்குவிப்பு பாதுகாப்பின் மீதானதே என மீளவும் வலியுறுத்தின.
இலங்கையில் ராஜபக் ஷக்கள் அதிகாரத்திற்கு வருவது குறித்து இந்தியா பெரிய விசனத்தைக் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் சீனாவுடனான இலங்கையின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை பெருமளவுக்கு வளர்ந்தது. கடன் நெருக்கடிக்குள் சிக்குப்பட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் சீனாவின் கோரிக்கைகளுக்கு
(இந்தியாவுக்கு பாதகமாக அமையக் கூடிய வகையில்) இணங்க நிர்ப்பந்திக்கப்படும் என்று புதுடில்லி அஞ்சியது. கொழும்பு துறைமுகத்தில் சீனக் கப்பல்கள் வந்து தரித்து நிற்பதற்கு இலங்கை அனுமதித்த போது அத்தகைய அச்சங்கள் வலுவடைந்தன. சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடகால குத்தகைக்கு கையளித்த போது இந்தியாவின் பாதுகாப்பு மீது இலங்கையின் கடன்களினால் ஏற்படக் கூடிய விளைவுகள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டன. சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டிய பெருமளவு கடனுக்கு கைமாறாகவே அந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவுக்கு பங்குகளை கொடுத்து ஒரு பரிமாற்ற ஏற்பாட்டை முன்னைய அரசாங்கம் செய்ய வேண்டியிருந்தது.
கடன் மீள செலுத்துகையை 3 வருட கால கட்டத்திற்கு தாமதிக்குமாறு இந்தியாவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது விடயத்தில் இந்தியா தாராள மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் கடன் மீள செலுத்துகையில் இலங்கை எதிர்நோக்கும் நெருக்குதல்கள் தணியும் என்பது மாத்திரமல்ல, சீனாவின் அரவணைப்பிலிருந்து கொழும்பை விடுவிப்பதை நோக்கிய ஒரு நேர் மறையான நடவடிக்கையாகவும் அது அமையும். கடந்த காலத்தை போன்றே இந்தியாவை வர்ணிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தாராளமான சொற்களை பயன்படுத்தியிருக்கிறார். இந்தியா உறவுக்கார நாடென்றும் ஏனைய நாடுகள் நட்பு நாடுகள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அவரின் இந்த வார்த்தைகளை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவுகளுக்கு மேலதிகமாக இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு ராஜபக் ஷ அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய எந்தவொரு புதிய அக்கறையின் அல்லது விருப்பத்தின் வெளிப்பாடாக புதுடில்லி அர்த்தப்படுத்தி விடக்கூடாது. பாகிஸ்தானுடனான கொழும்பின் உறவுகளுடன் அருகருகாக இந்திய - இலங்கை புலனாய்வுத் தகவல் பகிர்வும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஒத்துழைப்பும் எவ்வாறு முன்னேற்றம் காண முடியும் என்பது இந்தியா தீவிரமான பரிசீலனைக்கு எடுக்க வேண்டிய ஒரு விவகாரமாகும்.
இலங்கை தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை பொறுத்தவரையில் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை மஹிந்த ராஜபக் ஷ உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக் கேட்டார். இதுவே இந்தியாவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்தியா அதன் சொந்த மாகாணங்களுக்கு வழங்கியிருக்கின்ற அளவு சுயாட்சியை மாத்திரமே இலங்கையின் தமிழ் மாகாணங்களுக்கு வழங்குமாறு சிபாரிசு செய்ய முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிலைப்பாடு அமைந்தது. காஷ்மீரியர்களுக்கு சுயாட்சியையும் அரசியல் உரிமைகளையும் மோடி அரசாங்கம் நிராகரித்திருக்கும் பின்னணியில, தமிழர் உரிமை தொடர்பான மோடியின் வலியுறுத்தல் ஒரு சாரமற்ற - வெறுமையான ஒன்றாகவே ஒலிக்கிறது. இலங்கை அரசாங்கத்தினால் மோடியின் வலியுறுத்தல் அக்கறையுடன் நோக்கப்படக்கூடிய சாத்தியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM