(எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் எஸ். ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவூடாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சட்ட மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், அதனை சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா முற்றாக நிராகரித்துள்ளார். குறித்த விசாரணைப் பிரிவுகளால் முன்னெடுக்கப்பட்ட பிரசித்தமான விவகாரங்கள் குறித்த வழக்கு விசாரணைகளை இடை நிறுத்த முடியாது என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் திட்டவட்டமாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த விசாரணைப் பிரிவுகள் மூன்று ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் எவருக்கேனும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிரத்தியேக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு முன்னெடுக்கப்படும் வழக்குகளை இடை நிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார்.
அந்த விசாரணைகள் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு ஒன்று ஊடாக முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந் நிலையில் குறித்த விசாரணைகளில், அவ்விசாரணைப் பிரிவுகள் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகள் பக்கச் சார்பின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியானால் மட்டும் , குறித்த வழக்குகளை முன் கொண்டு செல்வது உசிதமானது என பதில் பொலிஸ் மா அதிபர் , சட்ட மா அதிபருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
ஒரு விசாரணையின் போது வெளிப்படுத்த வேண்டிய சாட்சிகளை மறைத்து, பொய் சாட்சிகளை உருவாக்கி ஒரு பக்கச் சார்பாக செயற்பட்டு விசாரணை அதிகாரிகள் செயற்பட்டிருந்தால் நியாயத்தை நிலை நிறுத்தும் செயற்பாடுகளுக்கு அது பாரிய தடையாக அமையும். ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில், பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை மையப்படுத்தியே இந்த விஷேட கோரிக்கையை முன்வைக்கின்றேன்.' என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த கோரிக்கை கடிதம் தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இரண்டு பக்கங்களைக் கொண்ட ஆங்கில மொழி மூலமான பதிலை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்த அத்தனை விடயங்களையும், ஜனாதிபதி ஆணைக் குழு சட்டத்தின் 393 ஆம் அத்தியாயம், அரசியலமைப்பின் 4 (சி) உறுப்புரை, 105 ஆம் உறுப்புரை ஆகியவற்றை தெளிவுபடுத்தி சட்ட மா அதிபர் நிராகரித்து பதில் அனுப்பியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM