சி.ஆ.யோதிலிங்கம்
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்றார் சிந்தனையாளர் அரிஸ்ரோட்டில். இதன் அர்த்தம் சமூகத்துடன் இணைந்து கூட்டாகவும் தனியாகவும் வாழ்வதேயாகும். மனிதன் சமூகமாக வாழும் போது தான் கூட்டடையாளத்தையும் கூட்டிருப்பையும் பேணிக் கொள்ள முடியும். அதன் வழி கூட்டுரிமைகளுக்காக போராடவும் முடியும். ஒரு சமூகம் அதன் அடையாளத்தின் பேரால் ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராக கூட்டுச் செயற்பாடுகள் மூலம் தான் தனிப்பட்ட நலன்களையும் கூட்டு நலன்களையும் பேணிக் கொள்ளவும் முடியும். கூட்டுரிமைகளை போராடி பெற்றுக் கொள்ளவும் முடியும். இதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கின்ற அதேவேளை, கூட்டுப்பொறுப்பும் இருக்க வேண்டும். இங்கு கூட்டுப்பொறுப்பு என்பது, சமூக நலன்களுக்கான பொறுப்பேயாகும். தன் சமூகத்தில் ஏனையவர்களோடு இணைந்து சமூகத்தின் பொது நலன்களுக்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவருக்குமுள்ள தார்மீக கடமையாகும்.
நான் மலையக சமூகத்தை சேர்ந்தவனல்ல. அதற்கு வெளியில் தன் விடுதலைக்காக போராடும் வடகிழக்கு சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனால், மலையக மக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடையவன், முடிந்தவரை அவர்கள் தொடர்பான தேடல்களை மேற்கொண்டு வருபவன். வடக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவன். எனினும் மலையக மக்களின் அபிலாஷைகளை அவர்கள் அனுபவித்து வெளிப்படுத்துவது போல ஒரு அகநிலை நின்ற ஆக்கத்தினை என்னால் கொணர முடியாது. எனவே ஒரு புறநிலையாளன் என்ற வகையில் எனது கருத்துகளை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துக்கள் எப்போதும் முடிந்த முடிவுகளல்ல, விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உரியவை. கருத்துகள் மோதுகின்ற போதுதான் உண்மைகளை தரிசிக்க முடியும். எனவே என்னுடைய கருத்துகளையும் விவாதத்துக்கும் கலந்துரையாடல்களுக்கும் எடுத்து கொள்ளுமாறும் அதே வேளை தவறுகளை மன்னிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை என்பவற்றை புறரீதியாக எதிர்நோக்குகின்றனர். அதே வேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதி ரீதியான ஒடுக்குமுறை, உள்ளக வர்க்க ஒடுக்குமுறை என்பவற்றுக்கு அக ரீதியாகவும் முகம் கொடுக்கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையும் வர்க்க விடுதலையும் பெற வேண்டிய நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது தேச அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவர்கள் அதே தருணத்தில் சமூக மாற்றத்துக்கான அரசியலையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரே நேரத்தில் புற ரீதியான ஒடுக்கு முறைக்கும் அக ரீதியான ஒடுக்கு முறைக்கும் எதிராக போராடுகின்ற போது போராட்ட தந்திரோபாயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனைய தேசங்களை விட மலையக தேசத்துக்கு இதற்கான கட்டாயம் அதிகமாக இருக்கின்றது. ஏனெனில் மலையக மக்களில் பெரும்பான்மையினர் அடிநிலை மட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே! இன விடுதலையையும் பெற வேண்டும் அதேவேளை அந்த விடுதலை அடிநிலை மக்களையும் போய்ச் சேர வேண்டும்.
ஆனால், ஒரு தேசப் போராட்டம் என்பது அந்த தேசம் புற நிலையிலிருந்து வருகின்ற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். இதனால் வர்க்க, சாதி, பிரதேச நிலைகள் கடந்து தேசத்தின் அனைத்துப்பிரிவினரையும் இணைக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. அதுவும் சிங்கள தேசத்தினால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு தேசம் வெற்றியடைவதற்கு தனது முழு ஐக்கிய பலத்தையும் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதனால் தான் அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டிய தந்திரோபாயங்களை மலையகத்தின் முன்னணி சக்திகள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எனது இந்தக் கட்டுரை அகஒடுக்குமுறை பற்றி அதிக கவனத்தினைக் குவிக்கவில்லை. மாறாக புற நிலை ஒடுக்குமுறையான இன ஒடுக்குமுறை பற்றியே கவனம் செலுத்துகின்றது.
இன ஒடுக்குமுறை தொடர்பான மலையகத்தின் இன்றைய அரசியல் நிலையையும் எதிர்கால பணிகளையும் பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்கு மலையக அரசியலின் வரலாற்று வளர்ச்சி, அது இன்று வந்தடைந்துள்ள கட்டம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.
மலையக மக்கள் சுமார் 100 வருடங்களாக நீண்ட போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக போராட ஆரம்பித்த ஆண்டாக 1919ஆம் ஆண்டினை குறிப்பிடலாம். இந்த ஆண்டே சேர். பொன்னம்பலம் அருணாசலமும் பெரிசுந்தரமும் இணைந்து 'தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்' என்ற அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர். 1919 ஆம் ஆண்டிலிருந்து 1935 ஆம் ஆண்டுவரை மலையக அரசியலின் முதலாவது கட்டம் எனக் கூறலாம். அன்றைய கால கட்டத்தில் கொடூர ஒடுக்கு முறையாக இருந்த துண்டு முறையினை ஒழிப்பதற்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனாலும் இக்கால கட்டத்தினை நகர்த்திய பெருமை நடேசையரையே சாரும். ஏ.ஈ.குணசிங்கவின் தொழிற்சங்கத்தில் உப தலைவராக இருந்த அவர் குணசிங்கவின் இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற்சங்கமான இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். டொனமூரின் அரசாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்பினராக 1936 – 1947 வரை கடமையாற்றியும் இருந்தார். தோட்டங்களுக்கு வெளியார் செல்லக் கூடாது என்ற கட்டளையையும் மீறிச் சென்று தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டினார்.
1935 – 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது கால கட்டம் எனக் கூறலாம். இக்கால கட்டம் இடதுசாரிக் கட்சிகள் மலையக மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கால கட்டமாகும். இடதுசாரிகளே மலையகத்தில் வேலை நிறுத்தம் உட்பட பல போராட்டங்களை அறிமுகப்படுத்தியவர்களாவர். இவர்களினால் நடத்தப்பட்ட முல்லோயா போராட்டம் புகழ் பூத்த ஒன்றாகும். பிரஸ்கேடில் சம்பவம் மலையக அரசியலை மையமாக வைத்தே நிகழ்ந்திருந்தது. (பிரஸ்கேடில் இடது சாரி தொழிற்சங்க நடவடிக்கைகளை மலையகத்தில் நகர்த்துவதற்கு முன்னோடியாக திகழ்ந்த ஒரு ஆங்கிலத் தோட்டத்துரையாவார்) மலையகத்தின் முதல் போராளி கோவிந்தனும் முல்லோயா போராட்டத்திலேயே மரணமானார். 1947 வரை மலையக அரசியலில் இன ஒடுக்குமுறை பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிரதானமாக தொழிற்பட்டது. இதனால் நடேசையரும் இடதுசாரிகளும் வர்க்க ஒடுக்குமுறைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரின் கைகளில் இருந்ததினால் இன ஒடுக்கு முறை பெரியளவுக்கு வளர்ச்சியடையவில்லை. ஆனாலும் கொழும்பு நகரத்தில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவாதம் 1920 களிலேயே ஆரம்பித்துவிட்டது.
அநகாரிக தர்மபால இந்திய வர்த்தகர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். ஏ.ஈ. குணசிங்க கொழும்பில் வாழும் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தினை தொடக்கி வைத்தார். அரச அதிகாரம் சிங்களத் தலைவர்களிடம் இல்லாததினால் அது பெரியளவுக்கு நடைமுறை செயற்பாட்டில் எழுச்சியடையவில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1931 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்புடன் இனவாத சக்திகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தமது செயற்பாட்டினை முடுக்கி விட்டனர். தமக்குக் கிடைத்த அரை குறை அதிகாரத்தை வைத்துக் கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளி அரசாங்க உத்தியோகத்தர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போன்றோரை பதவியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம் கொடுப்பதற்காகத் தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை– இந்திய காங்கிரஸ் 1939 இல் உருவாக்கப்பட்டது. 1940 இல் இதனுடைய தொழிற்சங்கமான இலங்கை – இந்தியர் தொழிற்சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது.
இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவாதம் கொழும்பில் ஆரம்பித்தாலும் இக்காலத்தில் மலையகத்தில் முற்றுமுழுதாக அது இடம் பெறவில்லை எனக்கூற முடியாது. 1937 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உள்ளூராட்சி சபை சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். பண்டாரநாயக்கா உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் மூலம் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளராகும் உரிமை மலையக மக்களுக்கு இல்லாமல் செய்யப்பட்டது. இதை விட அரசாங்க சபைத் தேர்தல்களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத்தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டுவரப்பட்டன.
மூன்றாவது கால கட்டம் 1947 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரை வருகின்றது. 1947 இன் சோல்பரி அரசியல் யாப்பு, அதன் பின்னர் 1948 இல் வழங்கப்பட்ட சுதந்திரம் என்பவற்றின் மூலம் இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுமையாக சிங்களத் தலைமைகளின் கைகளுக்கு சென்றது. ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவின் பன்முக சமூகத்தன்மையை கவனத்திலெடுக்காமல் ஒற்றையாட்சி அரசியலை அறிமுகப்படுத்தி விட்டுச் சென்றனர். பல்வேறு இனங்களும் நியாயமான வகையில் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ளும் தன்மை அதிகாரக் கட்டமைப்பில் இருக்கவில்லை.
சிங்களத் தலைமை தென் இலங்கையில் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இரு பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமும் வாக்குரிமை சட்டத்தின் மூலமும் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்தது. மலையக மக்கள் பலவந்தமாக தொழிற்சங்க அரசியலுக்குள் மட்டும் குறுக்கப்பட்டனர். மறுபக்கத்தில் அரச இயந்திரத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் முயற்சி நடைபெற்றது. 1950 இல் தேசியக் கொடி, 1956 இன் தனிச்சிங்கள சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செயற்பாட்டில் பிரதான விடயங்களாக இருந்தன. ஏனைய இனங்களுக்கு பாதுகாப்பாக சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29 ஆவது பிரிவு, கோமறைக்கழகம் என்பன மலையக மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பைக் கூட கொடுக்கவில்லை. பிரஜாவுரிமை பிரச்சினையில் உலக நீதிக்கு புகழ் பெற்ற கோமறைக்கழகமும் கையை விரித்திருந்தது.
இந்த அரசியல் அடையாளப் பறிப்பின் உச்ச நிலை அம்சமாகவே 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்தது. மலையக மக்களின் சம்மதமில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரைவாசி இந்திய வம்சாவளி மக்கள் நாடு கடத்தப்பட்டனர். 1974 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா – இந்திரா ஒப்பந்தமும் இந்த நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது. இந்த நாடு கடத்தலை பச்சையான இன அழிப்பு எனலாம்.
ஏற்கனவே டொனமூர் காலத்தில் நகர்ப்புறங்களில் பணியாற்றியவர்கள் வேலை நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறினர். பின்னர் வந்த ஒப்பந்தத்தின் மூலம் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த இருவகை வெளியேற்றங்களினால் 1940 களில் இரண்டாவது பெரிய இனமாக 13 வீதமாக இருந்த இந்திய வம்சாவளியினர் 1981 இல் 5.5 வீதமாக சுருக்கப்பட்டனர்.
சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை பறித்த ஆட்சியாளர்கள் 1972 இன் பின்னர் மலையக மக்களின் கூட்டிருப்பையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்காக மேற்கொண்ட பிரதான நடவடிக்கையே மண் பறிப்பாகும். 1972 இல் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்தச் சட்டம், 1975 இல் காணி உச்சவரம்பு சட்டம் என்பன மலையக மக்களை அவர்கள் வளமாக்கிய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத் தோட்டங்கள் பெருந்தோட்டத் துறையுடன் எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு எதிரான போராட்டத்திலேயே டெவன் தோட்டப் போராளி சிவனு லட்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை – இந்தியர் காங்கிரஸும் பின்னர் பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இக்காலகட்டத்தினை நகர்த்திய முக்கிய அமைப்பாக இருந்தன. தொண்டமான் பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பல தொழிற்சங்கங்கள் தொழிற்பட்ட போதும் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினையே குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் இலங்கை –- இந்தியர் காங்கிரஸினையே மலையகத்தின் முதலாவது தேசிய இயக்கமாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
நான்காவது காலகட்டம் 1977 தொடக்கம் 2009 வரையிலான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் நீண்ட போராட்டத்தின் வாயிலாக மலையக மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தொண்டமான் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியிலிருந்து மூன்றாவது அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை இக்காலகட்டத்தில் தான் வட கிழக்கில் தனிநாட்டு போராட்டமும் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரசாரம் செய்து போட்டியிட்டு வடகிழக்கிலுள்ள 19 தமிழ் தேர்தல் தொகுதிகளில் 18இனைக் கைப்பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங்களில் இரு இன அழிப்பு சம்பவங்களும் இடம் பெற்றன. இதில் வடகிழக்கு தமிழர்கள் மட்டுமல்ல மலையகத் தமிழர்களும் அழிக்கப்பட்டனர். 1983 இலிருந்து 2009 வரை வட கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்து கொண்டனர்.
வட- கிழக்கு நிலைமைகள் மலையகத்திலும் விழிப்புணர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கின. மலையகம், மலையக தமிழர் என்ற எண்ணக் கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மையமாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின.
பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது. 1978இல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்துக்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்க செய்தது. தொழிற்சங்க அரசியலில் இருந்து சற்று விடுபட்டு தேசிய இன அரசியலை நோக்கி மலையக அரசியல் நகரத்தொடங்கியது. மலையகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்ற கோஷங்கள் எழுச்சியடைந்தன. மலையகத்துக்கான அதிகார அலகு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM