தொழிற் சந்தைக்கு பொருத்தமான வகையில் பல்கலைக்கழக கலைத்திட்டத்தை மறுசீரமைப்பது குறித்து ஜனாதிபதி கவனம்

Published By: Digital Desk 4

10 Feb, 2020 | 07:47 PM
image

துரித பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் கல்வி முறை மாற்றப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுதேச மற்றும் சர்வதேச தொழிற்சந்தைக்கு பொருத்தமான வகையில் பல்கலைக்கழக கலைத்திட்டத்தை மறுசீரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உபவேந்தர்களுடன் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பணிப்புரை விடுத்தார்.

உயர் கல்வித் தகைமையுடனும் நவீன தொழிநுட்பத்துடனும் முன்னோக்கிச் செல்லக்கூடிய தொழிற்படையொன்று எமது நாட்டில் உள்ளது. எளிமையான முறையினூடாக தொழிற்சந்தைக்கு பொருத்தமான முறையில் அவர்களை தகைமைப்படுத்தக்கூடிய இயலுமை எம்மிடம் உள்ளதென்பதை தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, பெருந்தோட்ட மற்றும் தொழிநுட்பத் துறையை அடிப்படையாகக்கொண்ட தொழில்களை உருவாக்குவதன்மூலம் நாட்டிற்கு துரித பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். மருத்துவம், பொறியியல், தாதி மற்றும் தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு தகுதியானவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து உருவாகாது இருப்பது பாரிய பிரச்சினையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு உயர் தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு மூன்றாம் நிலைக் கல்வி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். கலைத்துறை பட்டப் படிப்புடன் தகவல் தொழிநுட்பம் மற்றும் சர்வதேச மொழியை கற்பதற்கான வழிவகைகளை செய்வதன் மூலம் அடுத்த மூன்று வருடக்காலப் பகுதியில் துரித முன்னேற்றத்தை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

பாடசாலை முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து பிள்ளைகளுக்கும் தலைமைத்துவம் தொடர்பான அனுபவத்தையும் சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இயலுமையையும் வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பல்கலைக்கழக பாடநெறி தொழிற்சந்தைக்குப் பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட வேண்டும். இதன்போது அரசியல் குழுக்கள் அல்லது சிறியதொரு தரப்பிடமிருந்துவரும் எதிர்ப்புக்களை கருத்திற்கொள்ள வேண்டியதில்லை. நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டை சரியான  திசைக்கு கொண்டு வருவதற்கு நேரடியாக செயற்படுங்கள் என்றும் ஜனாதிபதி  உபவேந்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தேசிய கல்விக்கொள்கையொன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்குத் தேவையாயின் மக்கள் கருத்துக் கணிப்பொன்றுக்கும் செல்ல வேண்டுமென்றும் அத்தகைய நிலைமைகளில் அரசாங்கம் அல்லது அமைச்சர்கள் மாறுகின்றபோது கொள்கைகள் மாற்றமுறாது என்றும் சுட்டிக் காட்டினார். 

பாடநெறிக்கேற்ப மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் உரிமை பல்கலைக்கழகங்களுக்கு இருக்க வேண்டும். புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிலவும் குறைபாடுகளை தீர்த்தல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணியாகும். புதிய பாடநெறிகளுக்காக மாணவர்களை நெறிப்படுத்தும் வழிகாட்டல்களுக்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்ற இடங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு கல்வி அமைச்சிற்கு முடியுமென்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையை கற்கும் மாணவர்களுக்கு சட்டக் கல்லூரி விதித்துள்ள சில ஒழுங்கு விதிகளை நீக்குமாறு ஜனாதிபதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் மட்டுப்பட்டிருக்காது முழு கல்வி நடவடிக்கைக்கும் வகை கூறக்கூடிய, அவற்றை கண்டறியக்கூடிய நிறுவனமாக மாற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்காக ஒதுக்கப்படும் ஏற்பாடுகளை பாரிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு செலவிடுவதற்கு பதிலாக கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான ஆராய்ச்சிகளுக்காகவும் தொழிநுட்ப சாதனங்களுக்காகவும் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

பல்கலைக்கழக மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்காகவும் ஆராய்ச்சிகளுக்காகவும் அதிவேக இணையத்தள வசதிகளை விரிவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரும் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56