சுதந்திர தின நிகழ்வில் தமிழிழ் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டமையானது தமிழ் மக்களை திட்டமிட்டு அந்நியப்படுத்தியதாகவே கருத முடிகிறது. 1949ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது சுதந்திர தின நிகழ்வில் கூட தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரமாக அன்றைய அழைப்பிதழ் சான்று பகர்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அந்த செவ்வி வருமாறு :
கேள்வி : சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் புதிய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?
பதில் : நாம் இலங்கையர் என்ற வகையில் நாட்டின் தனித்துவத் தன்மையை பற்றி பேசும் போது அனைத்து இன மக்களும் ஒன்று என்றே கூறுகின்றோம். அவ்வாறிருக்கையில் ஏன் இந்த அரசாங்கதத்தால் இவ்வாறானதொரு தீர்வு எடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகும். இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி இதனை நடைமுறைப்படுத்தியது. ஏன் எதற்காக அரசாங்கம் அதனை புறக்கணித்திருக்கிறது என்பது எமக்கும் விளங்கவில்லை.
கேள்வி : தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடும் முறைமையை ஐக்கிய தேசிய கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தாலும் தற்போதைய அரசாங்கம் அதனை புறக்கணிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அழுத்தங்களை பிரயோகித்ததாகத் தெரியவில்லையே?
பதில் : இல்லை. நாம் அரசாங்த்திடம் வலியுறுத்தினோம். பாராளுமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். எனினும் அரசாங்கம் எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை.
1949ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கான அழைப்பிதழில் தேசிய கீதம் தமிழிலும் சிங்களத்திலும் பாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றவுடன் கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
கேள்வி : ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? தற்போது ஐ.தே.க. இரு குழுக்களாக பிரிந்து செயற்படுகிறது. இவ்வாறான முரண்பாடுகளுடன் எவ்வாறு பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போகிறீர்கள் ?
பதில் : முரண்பாடுகள் இருக்கின்றது என்பது ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஆனால் அரசியல் கட்சி எனும் போது சில முரண்பாடுகள் ஏற்படலாம். அது சாதாரண விடயமாகும். ஆனால் இங்கு அவ்வாறானதொரு பிரச்சினை இல்லை. கட்சி தலைமையகமான சிறிகொத்தாவிலும், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலும், பாராளுமன்றத்திலும் தினமும் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துகின்றோம். இதனை இரு குழுக்களாக பிரிந்து செயற்படுவதாகக் கூற முடியாது. இது ஊடகங்களின் சித்தரிப்பாகும்.
கேள்வி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா?
பதில் : இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் ரணில், கரு, சஜித், ரவி என்ற அனைவரும் ஒன்று தான். எனினும் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதை இலகுபடுத்துவதற்காக பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கேள்வி : ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை ?
பதில் : இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியாகும். என்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது.
கேள்வி : அவ்வாறென்றால் அவர் சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளாரா?
பதில் : இல்லை. கலந்து கொள்ளவில்லை என்பதற்காக புறக்கணித்துவிட்டதாகக் கூற முடியாது.
கேள்வி : அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணிக்கு யானை சின்னம் பெரும்பாலாேனாரால் முன்மொழியப்பட்டால் நீங்கள் அதற்கு இணங்குவீர்களா?
பதில் : ஆம். நிச்சயமாக இணக்கம் தெரிவிப்போம். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டு யானை சின்னத்தை புறக்கணிக்க முடியாது. இப்போதும் யானை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதே பலரது நிலைப்பாடாகவுள்ளது. இதுவே அனைவரும் நன்றாக அறிந்த சின்னமுமாகும்.
தற்போது நடைபெறவுள்ளது பொதுத் தேர்தலாகும். எனவே இதில் சின்னம் ஒரு பிரச்சினையாகாது. எனினும் ஜனாதிபதித் தேர்தலில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட்டதால் அன்னம் சின்னம் தீர்மானிக்கப்பட்டது.
கேள்வி : ஐ.தே.க.வுக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாக அண்மையில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுவது குறித்து சிந்திக்கவுள்ளதாகக் கூறியது. இது குறித்து உங்கள் நிலைப்பாடு? அவ்வாறு அவர்கள் தனித்து போட்டியிட்டால் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் ஐ.தே.க.வுக்கு வாக்கு வீதம் குறைவடையுமல்லவா?
பதில் : அவர்கள் தனித்து போட்டியிட தீர்மானித்தால் அதனால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று கட்சிகளை உள்ளடக்கியது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்துக்கு மாத்திரமே அதிக வாக்குகள் உள்ளன. எவ்வாறிருப்பினும் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி : கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. எனினும் அவர்கள் எதிர்பார்த்த தீர்வுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே ?
பதில் : அவ்வாறு முழுமையாகக் கூறிவிட முடியாது. காரணம் எம்மால் இயன்றளவு வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அபிவிருத்திக்காக அவர்கள் எதிர்பாராதளவு நிதியை நாம் ஒதுக்கினோம். எனினும் அவர்களால் செய்து கொள்ள முடியாமல் போன விடயங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி மீது குறை கூறுவதில் அர்த்தமில்லை.
அரசாங்கம் என்ற ரீதியில் போதியளவு நிதி ஒதுக்கப்பட்டது. எனினும் குறித்த பகுதிகளுக்கான அரசியல் தலைவர்கள் அவர்களே. எனவே அவர்கள் தான் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.
கேள்வி : நீங்கள் குறிப்பிடும் அபிவிருத்திகள் ஒருபுறம் மாத்திரமே. அவர்கள் கூறுவது அரசியல் தீர்வு, காணாமல் போனோர் விடயம் உள்ளிட்டவையாகும்.
பதில் : எமது அரசாங்கத்திலேயே காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவை ஊடாக காணாமல் போன ஆட்கள் பற்றிய சட்டத்தின் கீழ் இதனை நிறுவினோம். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்ட போது அன்றைய தினம் எமக்கு பாராளுமன்றத்தில் முழுமையான ஆதரவு வழங்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் இதற்கு முழுமையான ஆதரவளிக்க முன்வரலில்லை. கொள்கை ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்று காண்பித்தாலும் நடைமுறைப்படுத்தும் போது முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மையாகும்.
கேள்வி : பொதுத் தேர்தலில் கொழும்பில் தமிழ் வேட்பாளர்களுக்கான ஒதுக்கீடு எவ்வாறு?
பதில் : ஐக்கிய தேசிய கட்சிக்குள் கொழும்பில் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படும் வேட்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
கேள்வி : சஜித் பிரேமதாச பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாக ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர். நீங்களும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றீர்களா ?
பதில் : ஒன்றிணைந்து பயணிக்க தயார் என்றால் முன்னர் காணப்பட்டதைப் போன்று தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ, - பிரதமர் சஜித் பிரேமதாச என்று கூறுவதன் மூலம் சஜித்தை நெருக்கடிக்குள் தள்ள முற்படுகின்றனர். அவரை பிறிதொரு கட்சியின் உறுப்பினராக்குவதைப் போன்று கருத்துக்களை வெளியிடுகின்றனர். அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்தாலோசித்து அதனைச் செய்ய வேண்டும்.
கொள்கை ரீதியாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒன்றிணைய வேண்டும். கொள்கை என்பது அரசாங்கத்துடன் இணைந்து அதனைப் பாதுகாப்பது அல்ல. காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். நாட்டில் தேசிய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். கடந்த காலத்திலிருந்து இதற்கான தீர்வினை வழங்க அவர்கள் மறுப்பு தெரிவிக்கும் நிலையில் நாமும் அவர்களுடன் இணைந்தால் இறுதி வரையில் தீர்வு காண முடியாமல் போகும்.
இவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய தேசிய கட்சியில் இணைவாரா? இல்லையே. எனவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கூட்டணியை அமைப்பது தொடர்பிலேயே நாம் தற்போது கவனம் செலுத்த வேண்டும்.
கேள்வி : சஜித் பிரதமரானால் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில் : ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறான தீர்மானங்களை எடுத்தாலும் அதற்கேற்ப செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றேன்.
கேள்வி : கடந்த தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு சிறுபான்மை மக்கள் பெருமளவிலான வாக்குகளை வழங்கியிருக்கவில்லை. இந்நிலையில் தேசிய கீதம் விவகாரம், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றால் பொதுத் தேர்தலில் மேலும் அவர்களுக்கு சிறுபான்மை மக்களின் வாக்கு வீதம் குறைவடையும் நிலைமையே காணப்படுவதாக பரவலாகப் பேசப்படுகிறது. இது ஐக்கிய தேசிய கட்சிக்கு சிறந்த வாய்ப்பாகும். இதனை எவ்வாறு பொதுத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றீர்கள் ?
பதில் : இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதே தற்போது அத்தியாவசியமானதாகும். இலங்கை பல இனத்தவர்களை உள்ளடக்கிய நாடு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஒரு இனத்தவர் மாத்திரமே இருக்கின்றனர் என்று எண்ணி செயற்படக் கூடாது. அனைவரையும் ஒன்றிணைத்து புரிந்துணர்வுடன் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சிறந்த வாய்ப்பாக நாம் இதனைக் கருதுகின்றோம். அதற்கேற்ப இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம்.
கேள்வி : ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வழங்கும் வாக்குறுதி என்ன ?
பதில் : கடந்த 2015 ஆம் ஆண்டு எமக்கு அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நாம் அவர்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தினோம். தனி வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம், சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, வாழ்க்கை செலவு சீர்படுத்தப்பட்டது, பாடசாலைகள், வைத்தியசாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
பெருத்தோட்டத் தொழிலாளர்களானாலும், தமிழ் மக்களானாலும், முஸ்லிம் மக்களானாலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் அனைவரும் ஒன்று. எனவே நாம் வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கே எதிர்பார்த்துள்ளோம். ஆனால் சில கட்சிகள் இவர்களை வேறுபடுத்தி பார்க்கின்றன.
கேள்வி : அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்குவதாகக் கூறி தற்போது நாளாந்த சம்பளமாகவே 1000 ரூபாவை வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?
பதில் : அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்குவதாகக் கூறினால் அது சாத்தியமான விடயமா என்று சிந்திக்க வேண்டும். தற்போது வழங்குவதாகக் கூறியுள்ள நாட் சம்பளம் 1000 ரூபாய் வழங்கப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் அந்த மக்களுக்கு போதியளவு வருமானம் கிடைக்காது என்பதே உண்மையாகும். எவ்வாறிருப்பினும் அவர்கள் கூறியதை செயற்படுத்த வேண்டும். அத்தோடு பெருந்தோட்ட கம்பனிகள் இதனை புறக்கணித்துள்ளன என்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
கேள்வி : சம்பள அதிகரிப்புக்கு கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காவிட்டால் அனைத்து பெருந்தோட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்க தயார் என்றும் சில அமைச்சர்கள் கூறுகின்றனர். இது நடைமுறைச்சாத்தியமானதா ?
பதில் : இது போன்று தான் இந்த அரசாங்கம் வெறும் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கிறது. அரிசி விலையைக் குறைப்பதாகக் கூறினார்கள். அதனையும் செய்யவில்லை. ஏற்கனவே காணப்பட்ட விலையும் தற்போது அதிகரித்துள்ளது. பொது மக்களுக்கு அறிவிக்காமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்தபோது சொல்லியதைச் செய்தோம்.
வாழ்க்கை செலவை குறைக்க எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படவில்லை. கூறிய அனைத்து விடயங்களையும் 100 நாட்களில் செய்தோம்.
கேள்வி : 19 ஆம் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விட அதனை முற்றாக நீக்கி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகளை புதிய அரசாங்கம் முன்னெடுக்கப் போவதாகக் கூறுகின்றதே?
பதில் : 19ஆம் அரசியலமைப்பை நீக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
கேள்வி : பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
பதில் : மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதை விட பாராளுமன்றத்தில் முழு ஆசனத்தையும் தாமே பெற்றுக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல, 113 ஆசனங்களை பெற்றுக் கொள்வது கூட சவாலாகவே உள்ளது.
கேள்வி : ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாகக் கூறப்படுகின்றதே?
பதில் : ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மாத்திரமல்ல. இருதரப்பிலும் கட்சி தாவல்களை பொதுத் தேர்தலுக்கு பின்னரே அவதானிக்க முடியும். எவ்வாறிருப்பினும் நாடு பிளவுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றால் இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய கொள்கையொன்றின் கீழ் செயற்பட வேண்டும்.
கேள்வி : தற்போது நாடு முழுவதும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் தான் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை நாட்டு மக்கள் இராணுவ மயமாக்கலாக கருதக் கூடுமல்லவா?
பதில் : கோத்தபாய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும் என்று தேர்தலுக்கு முன்னரே நாம் கூறினோம். ஆனால் பெரும்பாலான மக்கள் கண்களை மூடிக் கொண்டு வாக்களித்துள்ளனர்.
கேள்வி : தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புக்கள் குறித்து ?
பதில் : நாம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கை செலவை குறைத்தோம். ஆனால் இவர்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு கடந்த அரசாங்கத்தை குறைகூறி நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி : எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்பட்டுள்ளமை பற்றி உங்கள் கருத்து ?
பதில் : எரிபொருள் விலை சூத்திரம் பாரியளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கருதவில்லை. எனினும் எரிபொருளினால் நஷ்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது மின்சார சபை 115 பில்லியன் கடனில் செல்லுகின்றது. அதே போன்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் 200 பில்லியன் கடனிலும், ஸ்ரீலங்கன் எயா ர்லைன்ஸ் 215 பில்லியன் கடனிலும் செயற்படுகின்றது. இவை சிறு தொகை அல்ல. எனவே இவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்காது நடைமுறை பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM