அரசாங்கம் கூறியதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படும். 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை முழுமையாக வழங்க தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் உறுதி வழங்கியிருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளப் பிரச்சினை குறித்து கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்த உறுதிமொழியினை வழங்கியிருக்கின்றார்.
இதனைவிட அன்றைய தினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விசேட அறிக்கையினை வெளியிட்டு பிரதமர் உரையாற்றியபோதும் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது. 1000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதன்படி மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இருதரப்புக்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பெருந்தோட்ட நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தேயிலை, தெங்கு, இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களிலும் மற்றும் சிறு தேயிலைத்துறைக்கும் அரசாங்கம் முக்கியம் வழங்கி செயற்படும் என்று இதன்போது பிரதமர் கூறியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த கோத்தபாய ராஜபக் ஷ உறுதி வழங்கியிருந்தார். இதேபோன்றே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த சஜித் பிரேமதாச தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வழங்கியிருந்தார்.
தேர்தலில் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவானதையடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கான இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில் கடந்த தைப்பொங்கல் தினத்துக்கு முதல் நாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படும் என்றும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த கொடுப்பனவுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தம்முடன் கலந்துரையாடாமல் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனாலும் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறி வந்தது. இத்தகைய முரண்பாடான நிலைமை காரணமாக 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்குமா என்ற கேள்வி தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை கம்பனிகள் வழங்க வேண்டுமென்றும் இல்லையேல் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உட்பட பலரும் கருத்துகளை தெரிவித்திருந்தனர். தொடர்ந்தும் தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுக்கள் இடம்பெற்று வந்தன. சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பான மாற்று யோசனை ஒன்றை கம்பனிகள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே 1000 ரூபா எந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுமா அல்லது சகல கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய விதத்தில் இந்தக் கொடுப்பனவு அமையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் மார்ச் மாதம் முதல் வழங்கப்படும் என்றே தெரிவித்திருக்கின்றார். இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்றும் தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. மலையக தொழிற்சங்கங்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளினால் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் புதிய ஒப்பந்தத்தில் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. கொழும்பு காலிமுகத்திடலில் கறுப்பு நிற ஆடை அணிந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியிருந்தனர். வேலைநிறுத்தப் போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
ஆனால், இழுத்தடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் 750 ரூபா சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அரசாங்கத்தில் அன்று அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தம் காரணாக நாளொன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் இணங்கியிருந்தது. அமைச்சரவையிலும் இரண்டு தடவைகள் இதற்கான அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனாலும் 50 ரூபா கொடுப்பனவு கூட அன்று வழங்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் அந்த முயற்சியும் கைகூடியிருக்கவில்லை. இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில்தான் தற்போது 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இம்முறையாவது ஏமாற்றப்படாது தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும். அதுவும் அடிப்படைச் சம்பளமாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருக்கின்றார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த சம்பள அதிகரிப்பு அடிப்படைச் சம்பளமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து சம்பள பொதியாக வருகைக்கான கொடுப்பனவுகள் அடங்கலாக 1000 ரூபா வழங்கப்படக்கூடாது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதேபோன்றே பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றினை கொண்டுவந்து கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தினர் 2018ஆம் ஆண்டே 1000 ரூபா தருவதற்கு உடன்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடிதமெழுதப்பட்டது. அதன்படி அன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் முதலாம் இரண்டாம் ஆண்டுகளில் மொத்தச் சம்பளம் 1000 ரூபாவாகவும் மூன்றாவது ஆண்டில் 1058 ரூபாவாகவும் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இதனை மறுத்துவிட்டு தற்போது காலம் தாழ்த்தி அந்தத் தொகையை பெற்றுக்கொடுக்க எத்தனிப்பது அரசியல் நோக்கம் கருதிய செயற்பாடா என்று கேள்வியெழுப்பியிருக்கின்றார்.
எது எப்படியிருந்தாலும் தற்போதைய நிலையில் 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். அடிப்படைச் சம்பளமாக இந்த 1000 ரூபாவை வழங்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் கம்பனிகளுடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். இனியும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள விவகாரத்தில் ஏமாற்றப்படுவதற்கு அனுமதிக்க முடியாது. இந்த சம்பள அதிகரிப்பு விடயத்தில் சகலரும் ஒத்துழைத்து தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
(07.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM