யாழ்ப்பாணத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின் படையெடுத்துள்ள வெளிநாட்டுப் பறவைகள்

Published By: Digital Desk 4

05 Feb, 2020 | 11:33 AM
image

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் மற்றும் தீவகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன.

இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்டன. எனினும் இம்முறை சீரான மழைவீழ்ச்சி காணப்பட்டதால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதி மற்றும் தீவகம் அல்லைப்பிட்டி முதல் நாரந்தனை வரையான தரவைப் பகுதி என்பவற்றில் வரத்து நீர் காணப்படுகின்றது.

சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், புதிய வகையான ஆசிய ஓபன் பில் நாரைகள் அந்தப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த வகை நாரைகள் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நாரை தனது உணவைத் தேடி நீண்ட தூரம் பறக்கக் கூடியது. இந்த நாரைகள் தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்து அதிகளவில் தனித்தனியாக ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்துடன் பார்த்துச் செல்கின்றனா்.

ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் தமது நாடுகளிலிருந்து இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை அனுபவிக்க இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“மற்ற பறவைகளை போல் பிளமிங்கோ பறவைகள் மீன்களை சாப்பிடாது. கடலில் உள்ள பாசிகளையே உணவாக உட்கொண்டு வாழும் ஒரு சைவ பறவையாகும். மற்ற பறவைகளை போல் மரங்களில் கூடு கட்டி வாழாது. தண்ணீரிலேயே நின்ற படியே தூங்கும்” என்று பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right