வரலாறு எம்மீது சுமத்தியுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றுசேருமாறு அனைத்து இலங்கைவாழ் மக்களுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார்.
72ஆவது சுதந்திரதின தேசிய வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்திருக்கின்றார்.
எமக்கு பல சவால்கள் இருக்கின்றன. அதில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் அனைவரதும் ஆதரவு தேவையாகும். நான் உங்கள் முன்னிலையில் வைத்த கொள்கைப் பிரகடனம் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய செயல்நெறியாகும். அதன்வாயிலாக சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
சுதந்திரதின உரையின்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பல்வேறு யதார்த்தபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமை உண்டு. அவர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும் சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் நாம் உறுதி செய்வோம். எந்தவொரு பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்காக உள்ள உரிமையை நாம் எப்பொழுதும் மதிப்போம். தற்போதைய அரச தலைவர் என்ற வகையில் எனது பதவிக்காலத்துக்குள் நாட்டின் அனைவரினதும் தலைவராக நாட்டின் நலன்கருதி உச்சக்கட்ட அர்ப்பணிப்போடு சேவையாற்ற நான் தயாராக உள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
ஜனநாயக ரீதியிலான ஒரு நாட்டில் தகுந்த முறைமையின் கீழ் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின் அவர் இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாவார். அவர் தனது பதவிக் காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சேவையாற்ற முடியாது. ஒரு சமூகத்துக்கு சேவை புரியும் அரசியல் தலைவர் அல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்குள்ளது.
ஜனாதிபதியாக இன, மத, கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையே நான் இன்று பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் வலுவான நிறைவேற்றுத் துறையும் சட்டவாக்கத்துறையும் அத்துடன் தன்னாதிக்கமுள்ள நீதிமன்றமும் தேவைப்படுகின்றது என்றும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருக்கின்றார்.
எனது ஆட்சிக்காலத்தின் கீழ் எந்தவொரு பிரஜைக்கும் அநீதி விளையாத தார்மீகமான அரச நிர்வாக முறைமையை நடத்துவதற்கே பெளத்த தத்துவத்தின்மூலம் எமது ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது. இன்று எமது மக்கள் சமூகத்தினுள் இருப்பவர், இல்லாதவர் எனும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வு இருக்கிறது. எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வசதிகள் சமநிலையில் இல்லை. சுகாதார வசதிகள், தொழில்வாய்ப்புகள் சமநிலையில் இல்லை. இதுவொன்றும் இனரீதியாகவோ மதரீதியாகவோ வலுப்படும் நிலைமைகள் அல்ல. இவை நாட்டின் பொதுப்பிரச்சினைகளாகும். வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்போது நாங்கள் முதன்முதலாக செய்யவேண்டியது மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதாகும். அதிகாரப்பரவலாக்கலின்போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கிடையே சிறந்த ஒருமைப்பாடு இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் கருத்திலிருந்து, நாட்டில் மத சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் சகல மக்களுக்கும் பாரபட்சமின்றி பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளமை புலனாகின்றது. இதனைவிட தனக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக சேவையாற்றுவேன் என்பதையும் அவர் தற்போதும் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையின மக்களின் பேராதரவினைப் பெற்று ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவுசெய்யப்பட்டிருந்தார். சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையானோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில், அவர் ஜனாதிபதியாக பதவியேற்றபோதும் சிறுபான்மை மக்கள் தனக்கு ஆதரவு வழங்காவிட்டாலும் சகலருக்கும் ஜனாதிபதியாக சேவையாற்றுவேன் என்று உறுதி வழங்கியிருந்தார். அதேபோன்றே தற்போது மீண்டுமொருமுறை தேசிய சுதந்திர தின நிகழ்விலும் ஜனாதிபதி இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கும் என்ற அச்சம் மேலெழுந்திருந்தது. சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அத்தகைய அச்சத்தைப் போக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் இத்தகைய கருத்துக்கள் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கன.
ஆனாலும் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சிங்கள பெளத்த தேசியவாதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பெளத்தத்துக்கே முன்னுரிமை என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய செயற்பாடுகள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான் நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரம் உண்டு என்றும் அதற்காக அரசாங்கம் பாடுபடும் என்றும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
சிறுபான்மையின மற்றும் மதங்கள் மத்தியில் பெளத்த சிங்கள மேலாதிக்கவாதம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் நிலவிவந்த நேரத்தில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடானது சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. சர்வதேச நெருக்கடி குழுவில் முன்கூட்டியே எச்சரிக்கும் அவதானிப்புப் பட்டியலில் இலங்கை மோதல் நெருக்கடியிலுள்ள அல்லது வன்செயல் அதிகரிக்கும் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான அறிக்கைக்கு இலங்கையின் அபாயகரமான பாரிய மாற்றம் என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது.
எதிர்காலத்தில் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் சீர்குலையக்கூடிய ஆபத்தான நிலைமைகள் உள்ளதாக இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசிய பிராந்தியத்திலேயே இலங்கை மட்டுமே இத்தகைய நிலைமைக்கு உள்ளாகியிருக்கின்றது.
இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டே இந்த அமைப்பானது இத்தகைய அறிக்கையை விடுத்திருக்கின்றது. எனவே இவ்வாறான சூழ்நிலைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
தேசிய சுதந்திரதின நிகழ்வில் இம்முறை சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட்டது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் இருமொழிகளிலும் பாடப்பட்ட தேசிய கீதம் தற்போது ஒருமொழியிலேயே பாடப்பட்டிருக்கின்றது. இந்த விவகாரமானது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிச்சயமாக பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையின மக்களின் மனங்களை வெல்லவேண்டுமானால் இத்தகைய சிறிய விடயங்களையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை ஒதுக்கும் விதத்திலேயே இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதைப் போன்று வரலாறு சுமத்தியுள்ள பொறுப்பை ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டுமானால், சிறுபான்மையின மக்களின் மனங்களை அரசாங்கம் வெல்லவேண்டியது அவசியமாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்திலாவது எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தெரிவித்துள்ளதைப் போன்று பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சிறுபான்மையின மக்களின் பிரத்தியேகமான அவர்களுக்கே உரிய பிரச்சினை களுக்கும் தீர்வுகாண அரசாங்கம் முன்வரவேண்டும். வெறுமனே பெரும்பான்மையின மக்களை மட்டும் திருப்திப்படுத்தும் செயற்பாடு களை மேற்கொள்வதை விடுத்து ஜனாதிபதி தெரிவித்ததைப் போன்று சிறுபான்மையின மக்களுக்கும் இன, மத வேறுபாடின்றி சேவையாற்ற அரசாங்கம் முன்வரவேண்டும். இனியும் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவார்களாக இருந்தால் நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதுடன் ஜனாதிபதியின் வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் செயற்றிட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(05.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM