திருகோணமலை நகரசபையினால் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட ஞாயிறு வாராந்த சந்தை பெரும்பான்மையினரின் எதிர்ப்பு காரணமாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத ஜஹம்பத்தின் உத்தரவுக்கமைய மூடப்பட்டுள்ளது.
திருமலை நகரசபைக்கு சொந்தமான மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள மறைந்த நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தியினால் கட்டப்பட்ட ஐக்கிய பொதுச்சந்தை கட்டடத்தில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட வாராந்த சந்தையே இவ்வாறு மூடப்படும் நிலைமை உருவாகியிருக்கிறது.
பொதுச்சந்தையிலுள்ள பெரும்பான்மையின வியாபாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாகவும் ஆளுநரின் உத்தரவுக்கமையவும் ஆரம்பிக்கப்பட்ட ஞாயிறு சந்தை மூடப்பட்டிருக்கின்றது. திருமலை நகரசபையின் 24 உறுப்பினர்களின் ஒப்புதலுடன் உரிய சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக இந்த சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
திருமலையில் வாழும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் தமது சொந்த உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உந்து சக்தியாக இந்த வாராந்த சந்தை அமையும் என்ற அடிப்படையில் இன, மத பேதங்களற்ற வகையில் எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் நகரசபையில் அங்கம் வகிக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நகரசபையின் தலைவர் இராசநாயகம் தலைமையில் இந்த சந்தை திறக்கப்பட்டது. இதன்போது 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்வதற்கு தயாராக வந்திருந்தபோதிலும், 34 பேருக்கு வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு வியாபாரம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே பொதுச்சந்தையை சேர்ந்த பெரும்பான்மையின வியாபாரிகள் மற்றும் பெரும்பான்மையினர் சந்தையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இப்பகுதியில் பெரும் பதற்றநிலைமை ஏற்பட்டது. பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, வாராந்த சந்தையை தற்காலிகமாக மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத ஜஹகம்பத் நகரசபையின் தலைவருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்.
ஆனாலும் இதற்கான உத்தரவு தனக்கு எழுத்துமூலம் வழங்கப்படவேண்டுமென்று நகரசபைத் தலைவர் என். ராஜநாயகம் கோரியதையடுத்து, ஆளுநரின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து, திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரக்மன் தலைமையிலான குழுவினர் ஸ்தலத்துக்கு விரைந்ததுடன் ஆளுநரின் கட்டளைக்கமைய வாராந்த சந்தையை மூடிவிடும்படி பணித்ததுடன் அங்கிருந்த வியாபாரிகளை வெளியேறும்படியும் கட்டளை பிறப்பித்தனர். இதனையடுத்து அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகள் மூட்டை முடிச்சுக்களுடன் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள்.
திருகோணமலை மின்சார நிலைய வீதியில் 1997 ஆம் ஆண்டு திருகோணமலை நகரசபைத் தலைவராக இருந்த மறைந்த பெ.சூரியமூர்த்தியினால் இந்த ஐக்கிய பொதுச்சந்தை கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. அன்றைய காலப்பகுதியில் திருகோணமலை பொதுச்சந்தையில் தமிழ் பேசும் வியாபாரிகளுக்கு உரிய வசதிகள் இன்மை காரணமாகவும் தமிழ் வியாபாரிகளுக்கு உரிய வகையில் இடமளிப்பதற்காகவும் இந்த பொதுச்சந்தை கட்டடம் அமைக்கப்பட்டது. அன்று பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து வைப்பதற்கு அப்போது முயன்ற போது பல்வேறு காரணங்களினால் அதற்கு தடைகள் போடப்பட்டன.
பெரும்பான்மையினர் இந்த சந்தைக்கட்டடத் தொகுதியினை திறப்பதற்கு கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர். பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு பாதகம் ஏற்படும் என்று கருதி பெரும்பான்மையினர் அன்றும் இந்த கட்டடத் தொகுதியை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஐக்கிய பொதுச்சந்தை கட்டடத் தொகுதி திறப்பதற்கு ஆயத்தங்கள் இடம்பெற்றதையடுத்து, அதனைத் தடுப்பதற்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். இந்த விடயம் அன்று பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இதன்பின்னர் இந்த சந்தைக்கட்டடத் தொகுதி இராணுவ வசமானது. இதில் இராணுவத்தினர் தங்கவைக்கப்பட்டனர். இராணுவ முகாமாகவே இது 2017ஆம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றது. இதன் பின்னர் 2017ஆம் ஆண்டு இந்த சந்தை கட்டடத் தொகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர். அதன் பின்னர் இதனை திருகோணமலை நகரசபை பொறுப்பேற்றிருந்தது.
இவ்வாறு பொறுப்பேற்கப்பட்ட ஐக்கிய பொதுச்சந்தை கட்டடத்தை எத்தகைய தேவைக்கு பயன்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தன. திருமலை சண்முகா வித்தியாலயம் இந்த கட்டடத் தொகுதியை தமது தேவைக்கு வழங்குமாறு கோரியிருந்தது. இதேபோன்று சாஹிரா கல்லூரியும் கோரியிருந்ததாக தெரிகின்றது. இவ்வாறான நிலையில்தான் நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு வாராந்த ஞாயிறு சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹகம்பத்துடன் நகரசபைத் தலைவர் கலந்துரையாடியிருந்தார். பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமேயுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனைவிட கிழக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த விடயம் தொடர்பில் நகரசபைத் தலைவர் நேரடியாக சென்று விளக்கியிருந்தார்.
இதனைவிட மடத்தடி விகாரையின் விகாரதிபதிக்கும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அனைவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆளுநர் இந்த நடவடிக்கைக்கு தனது பூரண வரவேற்பை தெரிவித்தும் இருந்தார். இவ்வாறு அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று ஞாயிறு சந்தை திறக்கப்பட்டிருந்தது. 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய பொதுச்சந்தை கட்டடமானது 23 வருடங்களுக்கு பின்னர் செயற்பட ஆரம்பித்திருந்தது.
ஆனால், வாராந்த சந்தை திறக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் அந்த சந்தையை இழுத்துமூடவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் பெரும் முறுகல் நிலைமை நிலவிவந்தது. பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டது. அந்தவேளையில் பெரும்பான்மையினரின் எதிர்ப்பு காரணமாக ஐக்கிய பொதுச்சந்தை கட்டடம் திறக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
ஆனால், தற்போது திருகோணமலை மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. நகரசபையின் சகல உறுப்பினர்களின் ஆதரவுடனும் சகலரின் ஒத்துழைப்பையும் பெற்று அமைக்கப்பட்ட இந்த ஞாயிறு சந்தையானது, பெரும்பான்மையினரது எதிர்ப்பை அடுத்து மூடப்பட்டமை திருகோணமலை வாழ் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் கவலையளிக்கும் விடயமாகவே மாறியிருக்கிறது.
ஞாயிறு சந்தையை திறப்பதற்கு அனுமதி அளித்த கிழக்கு மாகாண ஆளுநர், எதிர்ப்பை கண்டு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல. திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமானால், சகல இன மக்களும் சமத்துவமாக வாழும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும். புதிதாக பதவியேற்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் சகல இன மக்களையும் சமமாக நடத்தவேண்டும்.
தற்போதைய நிலையில், அனுமதிக்கப்பட்ட ஞாயிறு சந்தையை மீளவும் திறப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விடயத்தில் சகல தரப்பினரையும் அழைத்து ஆளுநர் கலந்துரையாடவேண்டும். மத்திய சந்தை வியாபாரிகளுக்கு உள்ள அச்ச நிலைமை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். திருகோணமலை நகரசபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்த் தலைமைகள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் சுயநலன்களை பாராது இதனை தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினையாக கருதி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். திருகோணமலையில் சகல மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழவேண்டுமானால், ஆளுநர் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
( 04.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM