இலங்கை இன்று 72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. இந் நிலையில் சுதந்திரம் எந்தளவுக்கு நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி இருக்கின்றது, சுதந்திரக் காற்றினை சுவாசிக்கும் வாய்ப்பு எல்லா இன மக்களுக்கும் உரியவாறு கிடைத்ததா, சுதந்திரம் சிறுபான்மையினரின் நலன்களுக்கு வலுசேர்த்ததா? என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இதனிடையே சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புத்திஜீவிகள் 'மனப்பாங்கு ரீதியான சுதந்திரம் ஈட்டப்படாதவரை ஒருநாடு சுதந்திரத்தின் ஆரோக்கியமான அறுவடையைப் பெறமுடியாது' என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாக உள்ளது.
சுதந்திரம் என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாக உள்ளது. தனிமனிதனாயினும் சரி, சமூகமாயினும் சரி, அல்லது ஒரு நாடாயினும் சரி அடிமைத்தளையில் இருந்து விடுபடுவதில் ஆர்வம் செலுத்துவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவனுக்குள்ள அத்தியாவசிய அனுமதிகள் உரிமைகளாகும். அவற்றை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுமாயின் அது சுதந்திரம் எனப்படும் சாதாரண நிலையில் சுதந்திரம் எனும்போது, தான் விரும்புகின்ற எந்த ஒரு செயலையும் தங்கு தடையின்றி செய்யும் நிலையைக் குறிக்கும் என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளது. இயற்கையான சமூகத்தில் பூரண சுதந்திரத்தோடு மனிதன் வாழ்ந்தான். எனினும் நாகரிக வளர்ச்சியால் இது கட்டுப்படுத்தப்பட்டது என்கிறார் கலாநிதி க.பிரபாகரன். மேலும் இயற்கை சமுதாயத்தில் பூரண சுதந்திரத்தோடு வாழ்ந்த மனிதன் சிவில் சமுதாயத்தில் அதில் ஒரு பகுதியை இழந்தான். இயற்கை சமுதாயத்தில் அனைத்து மனிதரும் சுதந்திரமாக வாழ்ந்ததை ஏற்கமுடியாது. சமுதாயத்தில் பலம் உள்ளவன் மட்டும் சுகமாக வாழ, பலமற்றவன் அடக்கி ஒடுக்கப்பட்டான் என்றும் கலாநிதி பிரபாகரன் கூறுகின்றார்.
சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பலவுள்ளன. அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளை சேர்த்திருத்தல், சுதந்திரமான நீதித்துறை, சட்டவாட்சிக் கோட்பாடு, அரசியலமைப்பு சட்டங்கள், மனித உரிமை ஆணைக்குழு, வெகுசன தொடர்பு சாதனங்கள் என்பன அவற்றுள் சிலவாகும். உரிமையும் கடமையும் எத்துணை தொடர்புடையதோ அந்தளவுக்கு சமத்துவமும் சுதந்திரமும் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது. சமத்துவம் இல்லாவிட்டால் ஒருவருக்குக் கிடைக்கும் சுதந்திரம் மற்றொருவருக்கு இல்லாது போகும். எனவே சுதந்திரத்துக்கு சமத்துவம் அவசியம். ஆகவேதான் உரிமைக்காகப் போராடுவோர் உரிமைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுதந்திரம் மற்றும் சமத்துவம் என்பவற்றுக்கும் வழங்குகின்றனர் என்பதனையும் அரசியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடக்கியாள முற்படுதல் கூடாது. இதைப்போன்றே ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கியாள முற்படுதல் கூடாது. அடங்கிக்கிடக்க வேண்டிய அவசியமும் இல்லை. மற்றைய மனிதனின் விருப்பமின்றி அதனை நிருவகிப்பதற்கு எந்தவொரு மனிதனுக்கும் தகுதி கிடையாது என்ற ஆபிரஹாம் லிங்கனின் கூற்று ஆய்ந்து சிந்திக்கத்தக்க ஒரு விடயமாக உள்ளது.
எமக்கு சுதந்திரம் ஏன் இருக்க வேண்டும்? எமது அடிப்படை உரிமைகளுடன் மோதலை ஏற்படுத்தும் சமத்துவமின்மை, பாரபட்சமாக நடத்தப்படுதல் என்பவை நிறைந்த எமது சமூக அமைப்பை மாற்றியமைக்கவே சுதந்திரம் வேண்டும் என்று சுதந்திரத்தின் அவசியத்தை இந்திய அரசியலமைப்பின் சிருஷ்டி கர்த்தாவான பீ.ஆர்.அம்பேத்கார் விளக்குகின்றார். சுதந்திரம் என்பது வெறுமனே வாய்ச்சொல்லில் கூறி மகிழும் விடயமல்ல. அதன் செயற்பாடு ஆக்கபூர்வமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைதல் வேண்டும். சுதந்திரத்தின் நன்மையினை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து ஒரு சாரார் மட்டுமே அல்லது ஒரு இனம் மட்டுமே சுதந்திரத்தின் பயன்களை அனுபவிக்குமானால் அந்த சுதந்திரத்தினால் எவ்விதமான பயனும் கிடையாது.
இலங்கையின் நிலை
இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திரம் அடைந்தது.இதனடிப்படையில் நாடு இன்று 72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திரமானது நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை எத்தளவு நிறைவேற்றியுள்ளது அல்லது ஒரு கவிஞன் கூறியதைப்போல் ‘‘பட்டு வேட்டிக்கு ஆளப்பட்ட நிலையில் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டு விட்டதா?’’ என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இலங்கை 1948 இல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட போதும் அதன் பிற்கால செயற்பாடுகள், முன்னெடுப்புக்கள் தொடர்பில் அதிருப்தியான வெளிப்பாடுகள் முன்வைக்கப்படுவதனையே எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. காலனித்துவ ஆட்சி ஒன்றிலிருந்து நாடொன்று விடுபடுகின்றது எனும்போது, அது தனது சுயவெளிப்பாட்டின் முக்கிய கட்டத்தை எய்திவிட்டது என்பதும் கிடைக்கும் அரசியல் சுதந்திரத்தின் பின்னர் அது தன்னை செழுமையும் சிறப்பும் உள்ள ஒரு நாடாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கப்போகின்றது என்பதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். எனினும் இலங்கையின் வரலாறோ அந்த எதிர்பார்ப்புகளை மறுதலிப்பதாகவே அமைந்திருக்கின்றது என்று வருத்தப்பட்டுக் கொள்கின்றார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
இலங்கையின் சுதந்திரத்தை விளங்கிக்கொண்ட முறைமையில் உள்ள அடிப்படைத் தவறு இந்த நாட்டை, நாட்டின் வரலாற்றை சீர்குலைத்திருக்கின்றது. பிரித்தானிய காலனித்துவம் விட்டுச்சென்ற அரசியல் எண்ணக்கருக்களுக்கு வெளியே வரமுடியாமல் ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில் எம்மை இன்று நோக்கும் பிரச்சினை தீரப்போவதே இல்லை என்றும் சிவத்தம்பி உள்ளம் குமுறுகின்றார்.
சுதந்திரம் வேண்டி நாட்டு மக்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தனர். எனினும் சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் விரிசல்களும் வேற்றுமைகளும் தலைதூக்கியிருக்கின்றன. சுதந்திரத்தின் பயன்களை சகலரும் பெற்றுக் கொள்ளாத ஒரு நிலையில் சுதந்திரம் என்பது இந்நாட்டில் சிங்களவர்களுக்கு மட்டும் தானா? என்று சிறுபான்மை மக்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிக்கின்றனர் என்கிறார் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ். விஜயச்சந்திரன். சிறுபான்மையினரை பொறுத்தவரையில் இந்நாட்டில் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு நிலையே காணப்படுகின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது. சிங்களத்திலேயே பாட வேண்டும் என்ற கருத்து பிழையான ஒன்றாக உள்ளது. சுதந்திரத்துக்காகப் போராடிய சிறுபான்மையினரைப் புறந்தள்ளுவதாகவே இந்நிலை அமைந்துள்ளது. சுதந்திர இலங்கையில் சிறுபான்மையினரும் சிங்களவரும் ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழும் நிலைக்கு வித்திடுதல் வேண்டும். இது சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும். ஒரு இனத்தின் எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் நாம் இலங்கையர், இலங்கை எமது தாய்நாடு என்று ஒவ்வொருவரும் நாட்டுப்பற்றுடன் வாழுகின்ற நிலைக்கு வித்திடப்படுதல் வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து இனங்களும் சமமாக உரிமைகளையும் சுதந்திரத்தினையும் அனுபவிக்கும் நிலை ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.
மொழி, அபிவிருத்தி, அரசியல், கலை, கலாசாரம், சமூக நிலைமைகள், கல்வி உள்ளிட்ட சகல துறைகளிலும் சகலருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுதல் வேண்டும். இது சாத்தியப்படாதவிடத்து, சிறுபான்மை மக்கள் சுதந்திரத்துக்கான ஒரு போராட்டத்தினை உள்நாட்டுக்குள்ளேயே முன்னெடுக்க வேண்டியநிலை மேலோங்குதல் தவிர்க்க முடியாததாகி விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. சுதந்திரத்தின் குறிக்கோள் உரியவாறு நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பதும் பேராசிரியர் விஜயச்சந்திரனின் கருத்தாக உள்ளது.
பிரித்தாளும் நடவடிக்கைகள்
சுதந்திரத்துக்கு முன்னதான காலப் பகுதியில் சிறுபான்மை மக்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வர்த்தக ரீதியாக முஸ்லிம்களை ஒடுக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இந்திய வம்சாவளியினருக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்ற கருத்துக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. கொழும்பில் வசிக்கும் இந்தியரை விட தோட்டத்துக் கூலிக்கு நான் மிகவும் அஞ்சுகின்றேன். இந்தியத் தொழிலாளி காலை 6 மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஆறுமணிக்கே தனது கூலி லயன்களுக்குத் திரும்புகின்றார். இத்தீவில் நிகழ்வன பற்றி அவனுக்கு என்ன தெரியும்? எனவே அரசியல் விடயங்களில் வாக்களிக்கும் தகைமை அவனுக்கு இல்லை என்றே கூறுவன்' என்று தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பல குரல்கள் மேலோங்கிக் காணப்பட்டன. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதோர் துரோகிகள் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். டொனமூர் ஆணைக்குழுவினருடைய சிபாரிசு அபாய அறிவித்தலாக அமைந்தது. இந்தியத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையளிக்கும் பிரேரணை என்று டி.எஸ்.சேனாநாயக்க பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக இந்தியத் தமிழ் மக்கள் பல்வேறு எதிர்ப்புகளின் பின்னர் வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ளும் நிலைமை உண்டானது. சுதந்திரத்துக்கு முன்னதாக இன்னும் பல நிலைகளிலும் இந்திய வம்சாவளி மக்கள் சிக்கல்கள் பலவற்றையும் எதிர்நோக்கி இருந்தனர்.
1948 இல் இலங்கை சுதந்திரத்தை பெற்றுக் கொண்டவுடன் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் தமது வாழ்வில் புதிய ஒரு அத்தியாயம் எழுதப்படப்போகின்றது. எனினும் தாம் இதுகாலவரை அனுபவித்த எல்லா துன்பங்களுக்கும் ஒரு முடிவு கிடைக்கப்போகின்றது என்றும் எண்ணியிருந்தனர். எனினும் அவர்களின் எண்ணத்தில் மண் விழுந்ததுதான் மிச்சமாக இருந்தது. சுதந்திரத்தை விளங்கிக்கொண்டதில் இருந்த தவறு ஆட்சியாளர்களை பிழையான வழிக்கு இட்டுச் சென்றது. தனது அரசியல் இருப்பினை உறுதி செய்து கொள்ள ஆட்சியாளர்கள் இனவாதத்தை கையிலெடுத்து பிழையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். மக்களை இனவாதம் என்கின்ற ஆயுதத்தால் கூறுபோட்டு குளிர்காயவும் தொடங்கினார்கள். நாடு சுதந்திரமடைந்ததும் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறிப்பதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி, இதில் வெற்றியும் கண்டனர். இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறைந்ததாக இல்லை. மலையக சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்குமிடையிலான பாரிய இடைவெளி நிலைக்கும் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை பறிப்பு நிலைமை உந்து சக்தியானது என்பது நீங்கள் அறிந்த ஒரு விடயமேயாகும்.
1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் இந்நாட்டின் சிறுபான்மையினருக்கு இன்னொரு அடியாக விழுந்தது. ‘சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருப்பதில் எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட எதிர்ப்பும் கிடையாது. இதனால் எத்தகைய தீங்கோ, அபாயமோ, இடர்பாடோ ஏற்படும் என்றும் நான் கருத வில்லை என்று 1944 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார். எனினும் தனது அரசியல் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் தனது நிலையை மாற்றிக்கொண்டு 1956 இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்படுவதற்கு பண்டாரநாயக்க காரணகர்த்தாவாக இருந்தார்.
சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற ஒப்பந்தங்கள் இந்திய வம்சாவளியினருக்கு பாதகமாக அமைந்தன. வன்செயல்களினால் சிறுபான்மை சமூகத்தினர் பெரிதும் பாதிப்புகளுக்குள்ளானார்கள். இலங்கையில் நிலவிய கொடிய யுத்தம் இந்நாட்டின் அபிவிருத்திக்கு ஆப்பு வைத்தது. யுத்தத்தின் மேலெழும்புகைக்கு பல்வேறு புறக்கணிப்புகள் உந்து சக்தியாக அமைந்தன என்பதும் தெரிந்த ஒரு விடயமே. யுத்தத்தின் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கக் கூடிய பல இளைஞர்கள் இரு தரப்பிலும் கொன்றொழிக்கப்பட்டனர். இது இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு அத்தியாயமாக மாறிப் போனது. இனவாதத்தின் காரணமாக நாடு பல்வேறு பின்னடைவுகளை சந்திக்கவும் சர்வதேசத்தின் முன் தலைகுனியவும் நேர்ந்தது. எனினும் இனவாதிகளின் போக்கானது விரிசல்களுக்கு வித்திடுவதுமான செயற்பாடுகள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையில் இனவாத விதைப்புநிலை குறித்தும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இரா. நித்தியானந்தன் போன்றவர்கள் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
இலங்கையின் சுதந்திரகால அரசியல், சமூக, பின்னணியில் நாம் விளங்கிக்கொள்வது இலங்கையின் வர்க்க அடுக்கமைவானது ஒன்றையொன்று சுரண்டியும் மேலாதிக்கம் செலுத்தியும் வந்தபோது அந்தச் சுரண்டலை தொடர்ச்சியாகப் பேணுவதற்கும் அரசியல் அதிகாரத்தினை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்கும் இலங்கை மக்களுக்கு இனவாத வழிகாட்டப்பட்டது. இதுவரை இருந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு அவ்வாறான ஒரு வழியையே காட்டிச்சென்றார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து நலன்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற புத்திஜீவிகளின் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.
இழுபறிகள்
இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட போதும் இச்சுதந்திரம் ஒரு சாராருக்கே உரியதாக விளங்குகின்றது. சுதந்திரத்தின் இலக்குகள் மாறிச் செல்கின்றன. அனைத்து இன மக்களையும் நாடு அரவணைத்து அபிவிருத்திக்கு வலுசேர்க்கின்றதா? என்ற கேள்விக்கும் திருப்தியான விடைகள் இன்னும் கிடைக்கவில்லை. நாடும் நாமும் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று நாட்டை நேசிக்கும் பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். சுதந்திரத்தின் பின்னரான நிலைமைகள் திருப்திதராத நிலையில், ஒருவரை இன்னொருவர் சந்தேகக்கண் கொண்டு பார்க்கின்ற அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை மழுங்கடித்து அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்துவதில் இனவாதிகள் குறியாக இருந்து வருகின்றனர். அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றன.
இலங்கை என்ற பெரு அலகை திரித்து விளங்கியுள்ள சிங்களத்துவ இனவாதம், நாட்டை சின்னாபின்னமாக்கியுள்ளது. காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை அறிந்திராத அந்தக் குறைபாடு காரணமாக இன்று நாட்டின் எதிர்காலத்தையே விலைபேசுகின்றது. பின் காலனித்துவ வரலாறு என்பது காலனித்துவ வரலாறுகளில் இருந்தும் விடுவிக்கும் வரலாறாகவே இருத்தல் வேண்டும். எனினும் காலனித்துவ காலத்திலும் மோசமாகிப் போன பின்காலனித்துவ நிலைமையினையே இங்கு காணமுடிகின்றது என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கூற்று முற்றிலும் உண்மையானதே.
சுதந்திரத்தின் நன்மைகளை நாட்டு மக்கள் அனைவரும் சமமாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். நாடு சுதந்திரமடைந்தாலும் நவ காலனித்துவம் சிறுபான்மையினரின் கழுத்தினை இறுக்கிக்கொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கை பெற்றுக்கொண்ட சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல என்றும் மனப்பாங்கு ரீதியாக இலங்கை சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மனப்பாங்கு ரீதியான சுதந்திரம் ஈட்டப்படாத வரை ஒரு நாடு சுதந்திரத்தின் ஆரோக்கியமான அறுவடையைப் பெற முடியாது என்ற என்.எம்.எச்.எம். ஷம்ஸின் கருத்து நியாயமானதே.
துரைசாமி நடராஜா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM