இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை காலமும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்துள்ளது. இருந்தும் இம்முறை சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும் என தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரத்தின் ஆலோசனைக்கு ஏற்ப, அட்டன் ருவான்புர வட்டாரத்தைச் சேர்ந்த ரொத்தார்ஸ் குடியிருப்பு பகுதியில் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் ஊடாக 20 இலட்சம் ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ள “கொங்கிரீட்” பாதையை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்வில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். ராம், மாநிலப் பிரதிநிதி எஸ். மதுரைவீரன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
அட்டன் நகருக்கு மிக அருகில் ரொத்தார்ஸ் குடியேற்றப் பகுதி இருந்தும், எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டபோது இந்தப் பிரதேசம் அம்பகமுவ பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட குழுவில் முன்னாள் அமைச்சர் உதயன் கம்மன்பிலவும் இருந்தார். அவருக்கும் அட்டன் நகர மீள் எல்லை நிர்ணயத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இத்தகையவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை எமது மக்களுக்குத் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மீண்டும் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படும் போது, ரொத்தார்ஸ், பொன்னகர், ஆரியகம போன்ற குடியேற்றப் பகுதிகளை மீண்டும் அட்டன் நகர சபையுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஒத்துழைப்பை இங்குள்ள மக்கள் தர வேண்டும். அதேநேரம் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பாக குரல் எழுப்ப வேண்டும்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல்களை சந்தித்து வந்துள்ளது. அந்தக் கட்சியின் உள்ளே காணப்பட்ட முரண்பாடுகள் ஓரளவு குறைந்துள்ளன. எனவே, தேர்தல் காலத்தில் நிலைமைகளை அனுசரித்து அதற்கு ஏற்ற வகையில் வியூகம் அமைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தனது வேட்பாளர்களை களம் இறக்கத் தயாராகவுள்ளது.
இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இன்று அந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. வழமையாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த தேசிய தைப்பொங்கல் விழா ரத்துச் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்த நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டு தமிழிலும் பாடப்பட்டு வந்த தேசிய கீதம் இம்முறை சுதந்திர தினத்தன்று தமிழில் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சுதந்திர இலங்கையில் சுதந்திர தினத்தன்று தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாக அமைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து மூன்று மாத காலத்தில் நடைபெற்று வருகின்ற விடயங்களை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மக்களே மேற்கொள்ள வேண்டும். கடந்த நாலரை ஆண்டுகளில் எமது தலைவரும் முன்னாள் அமைச்சருமான திகாம்பரம் தலைமையில் நாம் மேற்கொண்டு வந்த அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் சீர்தூக்கிப் பார்த்து பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்து மேலும் மலையகம் அபிவிருத்தி காண வழிவகுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM