கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகலாவிய சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்திருக்கின்ற போதிலும், சீனா மீது பயண, வாணிபக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதை ஒத்துக்கொள்ள அது மறுத்திருக்கிறது.
அவ்வாறான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு உலக நாடுகளினால் மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்க்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் வியாழனன்று இரவு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நெருக்கடிநிலை கமிட்டியின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பேசிய அதன் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானொம் கேப்றிஜீசஸ், கொரோனா வைரஸ் தொற்று சர்வதேசத்தின் கவலைக்குரிய பொதுச்சுகாதார நெருக்கடியாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகளின் கீழ் சர்வதேச கவலைக்குரிய பொதுச்சுகாதார நெருக்கடி என்று குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் சுகாதார அனர்த்தங்களைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ரெட்றோஸுக்கு இருக்கிறது.
2007 ஆம் ஆண்டில் இந்த சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு பெருவாரியான சந்தர்ப்பங்களில் சுகாதார ஸ்தாபனம் உலகலாவிய சுகாதார நெருக்கடி நிலைகளைப் பிரகடனம் செய்திருக்கிறது.
கட்டுப்படுத்துவதில் சீனா முழு நம்பிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான முழு நம்பிக்கையும், இயலுமையும் சீனாவிற்கு இருக்கிறது என்று இன்று வெள்ளிக்கிழமை பீஜிங்கில் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா ஷீன்ஜிங் தெரிவித்தார்.
உலகலாவிய சுகாதார நெருக்கடிநிலையாக கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த பிறகு பெய்ஜிங்கில் ஊடக அறிக்கையொன்றை ஹுவா வெளியிட்டார். அதில் அவர் ' கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து மக்களின் சுகாதாரத்தின் மீதான உயர்ந்த பொறுப்புணர்வுடன் சீன அரசாங்கம் விரிவானதும், கடுமையானதுமான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சீன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகளின் தேவைகளையும் விட மேம்பட்டவையாக அமைந்திருக்கின்றன. வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான ஆற்றலும், நம்பிக்கையும் சீனாவிற்கு இருக்கிறது' என்று தெரிவித்திருப்பதாக சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிற்குப் பாராட்டு
வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேரடியாகக் கண்காணிப்பதாக ஜெனீவாவில் குறிப்பிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், வைரஸ் தொற்றை சீனா கண்டுபிடித்த வேகம், வைரஸை கட்டுப்படுத்துவதில் காட்டிய துரிதம், நோயின் குணங்குறிகளை உலக சுகாதார ஸ்தாபனத்துடனும் உலக நாடுகளுடனும் பகிர்ந்துகொள்வதில் காட்டிய உத்வேகம் சொற்களால் வர்ணிக்க முடியாதளவிற்கு பிரமிக்கத்தக்கவையாக இருக்கின்றன. இந்த வைரஸ் தொற்று தொடர்பிலான நெருக்கடியில் ஒழிவுமறைவற்ற முறையில் சீனா பற்றுறுதியை வெளிக்காட்டுகிறது. ஏனைய நாடுகளுடனும் ஒத்துழைத்துச் செயற்படுகிறது என்று குறிப்பிட்டார்.
தொற்றுநோய் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் சீனா பல வழிகளில் புதிய தராதரங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. தனது சொந்த மக்களின் உயிர் மற்றும் சுகாதார நலன்கள் மீது மாத்திரமல்ல, உலகலாவிய ரீதியில் தொற்றைத் தடுப்பதற்கு உறுதியான ஆதரவை வழங்குவதிலும் சீனாவிடமுள்ள உயர்ந்த பொறுப்புணர்வை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
இது இவ்வாறிருக்க சர்வதேச கவலைக்குரிய பொதுச்சுகாதார நெருக்கடி நிலையாக கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியிருப்பது இத்தகைய அனர்த்தங்களின் போது அது வழமையாகக் கடைப்பிடிக்கின்ற நடவடிக்கையாகும் என்று கூறிய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான சீன நிலையத்தின் பிரதம தொற்றுநோய்க்கட்டுப்பாட்டு நிபுணர் வூ சுன்யூ, சீனாவின் தற்போதைய கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கண்டிப்பானவையும், பயன்தருபவையுமாகும். இந்த வைரஸ் தொற்றை வீரார்ந்த முறையில் கட்டுப்படுத்தி இறுதியில் எம்மால் வெல்ல முடியும் என்று முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பலியானோர் தொகை 213 ஆக அதிகரிப்பு
இது இவ்வாறிருக்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 213 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, சீனாவிற்கு செல்ல வேண்டாமென ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை வூஹானிலிருந்து 83 பிரிட்டிஷ் பிரஜைகளையும், 27 வெளிநாட்டுப் பிரஜைகளையும் ஏற்றிக்கொண்டு பிரிட்டிஷ் விமானமொன்று நேற்று லண்டன் வந்திறங்கியது. இதுவரையில் மரணங்கள் சகலதும் சீனாவிலேயே இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் எவரும் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM