பிரித்தானியா உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முடிவெடுத்தது. இதை “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விடயத்தால் பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாமல் இருந்த நிலையில் அக்காலப்பகுதியில் பிரதமராகவிருந்த இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள்.
அதன் பிறகு UKயின் பிரதமராக வந்த தற்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற கடும் முனைப்புக் காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியப்படவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாததால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்குச் சென்றார்.
அத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றியும் பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் நீடிக்காமல் உடனடியாக பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றார். பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அவ் ஒப்பந்தம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேறியது.
பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்ற பின்னர், பிரெக்சிட்டுக்கு பிரித்தானிய ராணி 2ம் எலிஸபெத்தும் தனது ஒப்புதலை வழங்கினார்.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரித்தானியா எடுத்த இவ் முடிவின் மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கிய நிலையில் பேசினார்கள்.
அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரித்தானியாவுக்கு பல்வேறு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதே சமயம், பிரித்தானியாவின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
அதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தற்போதைய ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 பேரும், எதிராக 49 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்குப் பின் பிரித்தானியா இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி வெளியேறுகிறது.
பிரித்தானியாவின் நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு வெளியேறவிருக்கிறது. அத்துடன் ‘பிரெக்ஸிட்டும் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்காததால், பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான விடயங்களில் இந்த வருடம் இறுதிவரை ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரித்தானியா இணைந்தே பயணிக்கும்.
எதிர்வரும் December 31ஆம் திகதிக்குள் வர்த்தகம் மற்றும் வேறு பல விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தலைவர் டேவிட் சசோலி தெரிவிக்கையில்,
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பியப் பாராளுமன்றம் வாக்களித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா விலகுவதற்கான இறுதி ஒப்புதலை அளிக்க வேண்டும், அதன் பின்னர் ஜனவரி 31ஆம் திகதி நள்ளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறையாக வெளியேறலாம்.
முதல் முறையாக, ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது. இது வருத்தமளிக்கக்கூடியது என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் பிரித்தானியா மக்களின் விருப்பத்திற்கு எப்போதும் மதிப்பளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு ஏற்படவுள்ள மாற்றங்கள் .
*பிரித்தானியாவின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள்.
* ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடுகளில் பிரித்தானியா பிரதமர் மற்றும் அமைச்சர் பங்குபற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
* பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் பிரித்தானியா பேச ஆரம்பிக்க முடியும்.
* பிரித்தானியாவின் கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்படும். 30 வருடத்துக்கு முன்பு பாவனையிலிருந்த நீல நிறத்துக்கு பிரித்தானியாவின் கடவுச்சீட்டு மாறும்.
* ‘பிரெக்ஸிட்’ நினைவாக January 31 திகதியைத் தாங்கிய 50 பென்ஸ் நாணயம் (½ பவுண்ட்) ( சுமார் 115 ரூபா ) இன்று முதல் பாவனைக்கு வரும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM