இயந்திரமயமான தற்கால உலகில் மனித சமுதாயம் ஓர் திட்டமிடப்பட்ட வரையறைக்குள் இறங்கிக் கொண்டிருக்கின்றது. இம்மனித குலத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் தமது நாளாந்த வேலைகளை கூட திட்டமிட்டு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதே போன்று திருமணபந்தத்தில் இணைந்து ஒரு குடும்பத்தை உருவாக்கும் ஒரு ஆணும் பெண்ணும் தமது குடும்பத்தை திட்டமிடுவதன் மூலம் ஒரு வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை கொண்டு நடத்தலாம்.
தமது வேலை வாய்ப்புகள், கல்வி நடவடிக்கைகள், பதவி உயர்வுகள் மற்றும் வருமானத்திற்கேற்ப தமது குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த காலப்பகுதிகளில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதைப் பொறுத்து தமது குழந்தைகளை திட்டமிடுகின்றனர். இவ்வாறு தமது சூழ்நிலைக்கேற்ப குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் உதவுகின்றன.
ஆனால், நடைமுறையில் எமது மக்கள் பலர் இவற்றின் மேல் அக்கறையற்ற தன்மையினாலும் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய சரியான விளக்கங்கள் இல்லாமையாலும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள்.
அதாவது தம்பதிகள் சிலர் தமது உயர்கல்விகளைத் தொடர்வதற்காகவோ அல்லது வெளிநாடு சென்று அங்கே தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காகவோ தமக்குரிய சிறந்த வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்காகவோ தமது ஒரு பிள்ளைக்குப் பின்னர் அடுத்த குழந்தையைத் தாமதித்து உரிய கால இடைவெளியில் பெற்றெடுப்பதற்காகவோ அல்லது குழந்தைப் பாக்கிய தேவைகளை முடித்துக் கொண்டவர்கள் தமக்குரிய குழந்தைகள் போதும் என நினைத்தால் மீண்டும் ஒரு கருத்தங்கலை தடைசெய்வதற்காகவோ இவ்வாறான குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் உதவுகின்றன. நடைமுறையில் பாவனையிலுள்ள குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் பற்றிய விபரங்களை அறியத்தருவது எமது கடமையாகும்.
அவசர குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள்
அவசர குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளாவன எதிர்பாராத தாம்பத்திய உறவின் பின் வேண்டப்படாத கருத்தங்கலை தவிர்ப்பதற்கு உறவு ஏற்பட்டு 72 மணி நேரத்திற்குள் பாவிக்கப்படும் மாத்திரைகளாகும். இவை எல்லா மருந்தகங்களிலும் வாங்கக் கூடியனவாகவுள்ளன.
ஆனால், இவை நூறு வீதம் வெற்றியளிக்கும் எனக்கூற முடியாது. சில வேளைகளில் தோல்வியிலும் முடியலாம் அத்துடன், இவற்றை மீண்டும் மீண்டும் பாவிக்கும் போது இவை வெற்றியளிக்கத் தவறிவிடுகின்றன. எனவே, குடும்பமாக வாழும் தம்பதியினருக்கு நீண்டகால நோக்கில் இது ஒரு சிறந்த குடும்பக் கட்டுப்பாட்டு முறை அல்ல. எனவே, இதனை அடிக்கடி பாவிக்கக்கூடாது.
புதிதாக மணம் முடித்த தம்பதி சிறிது காலம் பாவிக்க உகந்த குடும்பக்கட்டுப்பாட்டு முறை
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பல இருந்தாலும் புதிதாக மணம் முடித்த தம்பதியினர் சிறிது காலத்தின் பின் குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்ப்போர், அதுவரை பாவிப்பதற்கு சிறந்த முறை மாதம் மாதம் எடுக்கக்கூடிய குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைப் பக்கற்றுக்கள் ஆகும். இவற்றில் 28 மாத்திரைகள் உள்ளன.
மாதவிடாய் தொடங்கியதிலிருந்து நாளாந்தம் ஒவ்வொரு மாத்திரையை மறக்காது உட்கொள்ள வேண்டும்.
இவற்றை எடுத்து 28 வில்லைகள் முடிவடையும் போது அடுத்த மாதவிடாய் ஏற்படும். இந்த மாத்திரைகளை எடுப்பதன் மூலம் நீண்டகால நோக்கில் உங்களது குழந்தைப் பாக்கியம் வேண்டிய நேரத்தில் தாமதமடையப் போவதில்லை
குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையால் ஏற்படக் கூடிய நன்மை
இக்குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மாதவிடாய் நேரத்தில் தோன்றக் கூடிய வயிற்றுவலி மற்றும் அதிகப்படியான குருதிப்போக்கு என்பவற்றை கட்டப்படுத்துகின்றன. அத்துடன், மாதவிடாய் தோன்றுவதற்கு முன் ஏற்படும் அழுத்தங்கள் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகின்றது.
மற்றும் சூலகக்கட்டிகள், மார்பகக்கட்டிகள், கர்ப்பப்பை புற்றுநோய், சூலகப் புற்றுநோய் போன்றவற்றைக் குறைக்கின்றது. மாதவிடாயையும் மாதம் மாதம் ஏற்படுத்துகின்றது.
குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையை பாவிக்க முடியாத பெண்கள்
* இருதய நோய் மற்றும் மாரடைப்பு நோயுள்ளவர்கள்.
* உயர் குருதியமுக்கம் மற்றும் கொலஸ்ட்ரோல் நோயுடையவர்கள்.
* ஒற்றைத்தலைவலி உடையவர்கள்
* ஈரல் நோயுடையவர்கள்
* நீரிழிவு நோயுடையவர்கள்
* மார்பகப் புற்று நோயுடையவர்கள்
* அதிக உடல் பருமன் உடையவர்கள்
ஆகியோர் இம்மாத்திரையைப் பாவிப் பதனை தவிர்க்க வேண்டும். பிரசவத்தை முடித்த ஒருவர் பாவிக்கக் கூடிய குடும்பக்கட்டுப்பாட்டு முறை
பிரசவத்தின் பின் பெண்ணொருவர் ஒருமாத காலத்தில் தனது குடும்பக்கட்டுப்பாட்டு முறையை ஆரம்பிப்பது அவசியம். இதில் பாலூட்டும் தாய் என்பதால் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில், இவை பாலின் அளவைக் குறைக்கும். எனவே, மூன்றுமாதக் காலத்திற்கு ஒருமுறை போடப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி முறை இவர்களுக்கு சிறந்தது. பாவனைக்கு இலகுவானது.
ஆனால், இது சிலரின் உடல் நிறையை அதிகரிக்கலாம் .அத்துடன் மாதவிடாயின் அளவையும் குறைக்கலாம். இதனால் பெண்கள் இவ்வூசி முறையைப் பாவிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இவர்களுக்கு நீண்டகால நோக்கில் குடும்பக் கட்டப்பாட்டு லூப் முறைகள் அதாவது கர்ப்பப்பையினுள் போடப்படும் சிறிய குச்சிகள் மற்றும் மேல் கையினுள் போடப்படும் சிறிய குச்சிகள் என்பன பிரபல்யமானவை.
பெண்களின் கர்ப்பப்பையினுள் போடப்படும் சிறிய குச்சிகள் (லூப்) மூலம் கர்ப்பந்தரித்தலை தடைப்படுத்தி பின் குழந்தையொன்று தேவை எனும் போது அந்த லூப்பை கழற்றி விடலாம். இம்முறை நீண்டகாலமாக நடைமுறையிலிருந்து வருவது பலரால் அறியப்பட்ட விடயமாக இருந்து வருகிறது.
பெண்களின் கையில் போடப்படும் லூப் முறை
மேல் கையின் உட்புறத்தில் தோலின் கீழ் போட்டு விடப்படும் சிறிய தீக்குச்சி போன்ற லூப்கள் தற்போது சிறந்த முறையாக பிரபல்யமடைந்து வருகின்றன. இவற்றை நாம் சிறிய விறைப்பு ஊசியின் உதவியுடன் இலகுவாக உட்செலுத்தி விடமுடியும். கையில் எவ்வித தழும்புகளோ, காயங்களோ தெரியாது. அத்துடன், இதனை ஐந்து வருடங்களுக்கு பாவிக்கக்கூடியதாகவுள்ளது.
இதன் பக்கவிளைவுகள் என குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவுமில்லை. ஓரளவு மாதவிடாயின் அளவு குறைவாக இருக்கும். அத்துடன், தேவையான நேரத்தில் கழற்றி விடவும், பின் தாமதமின்றி மீண்டும் கருத்தரிக்கக் கூடியதாகவும் உள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை
இது ஒரு நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை முறை. தமக்குத் தேவையான குழந்தைகளைப் பெற்றுவிட்டோம் இனி குழந்தை பெறும் நோக்கம் இல்லை என்பவர்களுக்கு இவ்வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. அது பெண்களின் வயிற்றை சிறிதளவு வெட்டி செய்யப்படும். ஆனால், தற்பொழுது நவீன சத்திர சிகிச்சை முறையான லப்பிரஸ்கோப்பி மூலம் இது இலகுவாக்கப்பட்டுள்ளது.
பெண்ணை மயக்கி வயிற்றில் சிறு துளை மூலம் இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. இதன் போது 2-3 மணித்தியாலங்களின் பின் பெண் வீடுசெல்ல கூடியதாகவுள்ளது. சிலவேளைகளில் மீண்டும் சில காரணங்களுக்காக குழந்தை பெறத் தீர்மானிக்கும்போது இச்சத்திர சிகிச்சையை மறுசீரமைக்க முடியும். பழைய நிலைக்குக் கொண்டுவரமுடியும். ஆனால், வெற்றி 50 வீதம் மட்டுமே.
எனவே, உங்களுக்குத் தேவையான பொருத்தமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை வைத்திய ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து வளமான குடும்பத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM