சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகநாடுகளில் பரவி வருவதனால் பெரும் அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த வைரஸ் தெற்காசியாவில் பல நாடுகளிலும் பரவி வருவதனால் இலங்கை மக்களை அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல், தலைவலி, தொண்டைவலி, உடம்புவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும் என்றும் இத்தகைய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்திய பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப்பாதிப்பு இன்னமும் பன்மடங்காக அதிகரிக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
உலகத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் பல்வேறு வைரஸ் தாக்கங்களினால் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. 1976 ஆம் ஆண்டு தென்சூடான் பகுதியிலும் காங்கோ குடியரசு நாட்டிலும் எபோலா வைரஸ் பரவியிருந்தது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 2013 தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையில் 11300 பேர் பலியாகியிருந்தனர். 2019இலும் மத்திய ஆபிரிக்காவில் 1800 பேர் வரையில் இதனால் பலியாகியிருந்தனர்.
இதேபோன்றே 2002 ஆம் ஆண்டளவில் தென்சீனாவில் பரவிய சார்ள்ஸ் வைரசினால் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இந்த வைரஸ் 26 நாடுகளில் 8000க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. இதேபோன்றே ஜிகா வைரஸ், நிபா வைரஸ் போன்றவற்றினாலும் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகின்றது.
கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, அதன் பாதிப்புக்கள் என்ன என்பது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் உருவாக்கத்திற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனாலும் இன்னமும் உறுதியாக அதற்கான மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் தாக்கம் தொடர்வதனால் உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு நாடும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் எமது நாட்டிலும் அதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டிருக்கின்றது. இந்த வைரஸ் தாக்கத்தை குணப்படுத்துவதற்கு மருந்துகள் இல்லாத நிலையில் அதன் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியதே தற்போதைய நிலையில் இன்றியமையாததாக உள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு இலங்கையர்களும் இரு சீனர்களும் அங்கொட தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர்களுக்கு அந்த தாக்கம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனாலும் சீனப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த வைரஸ் தொற்றினை பரவாது தடுப்பதற்கும் தொற் றினை கட்டுப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை உடனடி யாக எடுக்கவேண்டும். இந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டு குழுவொன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவாமல் இருப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வாய்ந்த குழுவினரும் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக்குழுவில் உறுப்பினர்களாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியல் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார செயலாளர் ஹதுனி ஜயவர்த்தன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க, மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் த சில்வா உள்ளிட்ட விசேட வைத்தியர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக பிரிகேடியர் வைத்தியர் கிருஷாந்த பெர்னாண்டோ, விமான சேவை நிறுவன தலைவர் ஜெனரல் சந்திரசிறி, குடிவரவு, குடியகல்வு பிரிவின் உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
இந்தக்குழு கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று கூடி ஆராய்ந்திருக்கின்றது. சீனா உட்பட இந்த வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரு இடங்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த நடவடிக்கை பூரண வெற்றி அளிக்குமா என்ற விடயத்திலும் தற்போது சந்தேகம் எழுந்திருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க, கொரோனா தொற்று இலங்கையில் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். விமான நிலையத்தில் இரு இடங்களில் டேர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சலுடன் கூடிய அறிகுறியுடன் ஒருவர் நாட்டுக்குள் வந்தால் அங்க அடையாளம் காண முடியும். எனினும் இதனை நூற்றுக்கு நூறு வீதம் வெற்றிகரமான நடவடிக்கை என்று நான் கூறமாட்டேன். ஏனெனில் இந்த வைரஸ் தொற்று ஒருவரின் உடலில் செயற்பட அல்லது தாக்கத்தை வெளிப்படுத்த இரு வாரங்கள் வரை செல்லும். எனவே அவ்வாறான பின்னணியில் காய்ச்சல் இல்லாமல் ஒருவர் அந்த தொற்றுடன் வந்தால் அவர் நாட்டுக்குள் தடையின்றி வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அவர் வந்த பின்னர் வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகலாம். எனவே அவ்வாறான நிலையில் அதற்கு முகம்கொடுக்க நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இந்த வைரஸின் தாக்கம் இரு வாரங்களிலேயே வெளிப்படும் நிலையில் இதனை பரவாது தடுக்கும் விடயத்திலும் பல சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது. இவ்வாறு நோயாளர்கள் நாட்டுக்குள் வந்தால் அதற்கு ஏற்ற வைத்திய வசதிகள் செய்யப்படவேண்டியதும் தற்போதைய நிலையில் அவசியமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் உஹான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்திருக்கின்றது. அங்கு கல்வி பயிலும் 150 இலங்கை மாணவர்களை அடுத்துவரும் 48 மணிநேரத்திற்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கின்றது. இதேபோன்றே சீனாவில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாகவே ஆரம்பித்துள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடேயாகும். இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இறங்கவேண்டும். பொதுமக்களுக்கு இந்த விடயம் தொடர்பிலான உரிய எச்சரிக்கைகளை விடுப்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் உரிய அறிவிப்புக்களை வெளியிடவேண்டும். இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்படாதபோதும் தற்காப்பு கருதி கொழும்புக்கு வரும் அனைவரும் மூக்குப்பகுதியை மறைக்கத் தக்கதாக மறைப்பொன்றினை (மாஸ்) அணிந்து கொள்ளுமாறு கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி அறிவித்திருக்கின்றார்.
இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதாக அமையும். இதேபோன்றே இந்த தொற்றை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கையாளவேண்டியது இன்றி யமையாததாக உள்ளது. இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதிருப்பதற்கும் பரவுவதை தடுப்பதற்கும் துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் கைக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம்.
(28.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM