தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு இணைந்த இணையதளங்களின் வளர்ச்சி, ஒன்லைன் நூல்விற்பனை, இலத்திரன் நூல்களின் விற்பனை வளர்ச்சி என்பன காரணமாக, புத்தகக் கடைகளின் தொகை பெருவீழ்ச்சி கண்டு வருகின்றது. இது மேலைநாடுகளில் காணப்படும் நிலைமையாயினும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இதே போக்கு எதிர்காலத்தில் தென்படலாம் போலத் தெரிகின்றது. அதன் காரணமாக எதிர்காலம் பற்றிய உணர்வுடன் செயற்பட புத்தகக் கடைகளின் உலகளாவிய போக்குகளை அறிந்துகொள்வது பயன்தரும்.
இங்கிலாந்தில் 2009 இல் 1289 புத்தகக் கடைகள் இருந்தன; இவை 2011 இல் 1094 ஆக வீழ்ச்சியுற்றுள்ளன. 2018 இல் மட்டும் 65 கடைகள் மூடப்பட்டன. புத்தக வர்த்தகசங்கத்தலைவரின் கருத்தின்படி, இதுவரை இல்லாத அளவுக்கு இலத்திரன் நூல்களும் இணைய தளங்களும் புத்தகநிலையங்களுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளன. அச்சிடப்பட்ட நூல்களின் விற்பனை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.
அதேவேளையில் இலத்திரன் நூல்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. பிரித்தானியாவில் அவ் விற்பனை அண்மையில் 360% ஆல் அதிகரித்துள்ளது.
மேலைநாடுகளில் புத்தகநிலையங்கள் (கடைகள்) ‘கலாசாரமையங்களாகக்’ கருதப்படுகின்றன. புத்தக நிலையங்கள் எழுத்தறிவை வளர்க்கின்றன; சமுதாயத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; சொந்தமாக நூல்களை வைத்திருக்கும் பழக்கத்தை வளர்க்கின்றன. அவை பலரும் சந்திக்கும் இடங்கள்; நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு. பிரித்தானிய சமூக வாழ்க்கையில் அவற்றுக்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பதால், அவற்றைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என்று பிரித்தானிய நூல் விற்பனையாளர் சங்கம் கருதுகின்றது.
புத்தக நிலையங்களுக்கு ஆதரவானவர்களின் கருத்தின்படி, புத்தக நிலையங்கள் படிப்படியாக மறைவதோடு ஆயிரக்கணக்கான உள்ளூராட்சி நூலகங்களும் மூடப்பட்டு முழு நாடுமே ஒரு புத்தக வனாந்தரமாகி விடும்.
இங்கிலாந்தின் தேசிய எழுத்தறிவை நம்பிக்கை பொறுப்பு நிலையத்தின் தலைவி ஜீடித்தின் கருத்தின்படி அந்நாட்டில் ஆறில் ஒருவருக்கு எழுத்தறிவுப் பிரச்சினை உண்டு. இதனால் அவருடைய தொழில், உடல்நலம் மற்றும் முழு வாழ்க்கையுமே பாதிக்கப்படலாம். எனவே, வாசிப்பை மேம்படுத்தக்கூடிய புத்தக நிலையங்களின் வீழ்ச்சி கவலைக்குரியது. மேலும் புத்தகக்கடைகள், நூலகங்கள் என்பவை வீழ்ச்சியடையும்போது மக்கள் மத்தியில் சமூக குற்றங்களும் அதிகரிக்கலாம் என பலரும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இத்தாலி, சீனா
இத்தாலியில் புத்தக நிலையங்கள் துரித கதியில் மூடப்பட்டு வருவதால் அந்நாட்டில் ஒரு கலாசார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் அங்கு 2300 புத்தக நிலையங்கள் மூடப்பட்டன. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்று நூல் விற்பனையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு உத்தேசச் சட்டத்தின்படி இத்தாலியில் வாசிப்புக் கலாசாரத்தை மேம்படுத்தி சிறிய விற்பனையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இச்சட்டம் நிறைவேற்றப்படாததையிட்டு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.
அறுபது ஆண்டு காலத்திற்கு மேலாக ரோம் தலைநகரில் இயங்கிவந்த ஆங்கிலமொழி நூலகமொன்று மூடப்படவுள்ளது. இதற்குக் காரணம் பல்வேறு இலத்திரன் வசதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமேயாகும். கடந்த தசாப்தத்தில் ரோம் நகரில் மட்டும் 200 புத்தக விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் இயங்கிவந்த மிகவும் பிரசித்தி பெற்ற புத்தக விற்பனை நிலையமொன்று (Book Worm) அண்மையில் மூடப்பட்டது. 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிலையம் ஆரம்பத்தில் ஒரு சிறிய நூல் நிலையமாக இருந்தது. பல நகரங்களில் கிளைகளும் தொடங்கப்பட்டன. எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கான சீனர்களின் வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்த இந்த நிலையமும் மூடப்பட்டது.
ஹொங்கொங்கில் சீனாவுடனான பிரச்சினைகளின் காரணமாக பல நூல் பதிப்பகங்கள் மூடப்பட்டு வருகின்றன. 5 பதிப்பகங்கள் மறைந்த 3 ஆண்டுகளின் பின்னர் ஹொங்கொங்கிலும் சீனாவின் நிர்ப்பந்தங்கள் காரணமாக மக்கள் புத்தகநிலையம் என்ற பிரசித்தி பெற்ற புத்தக நிலையமும் மூடப்பட்டது. சீன அரசாங்கம் ஹொங்கொங்கிற்கு வழங்கிய ‘ஒரு நாடு, இரு அமைப்புகள்’ என்ற விசேட அந்தஸ்து தற்போது கைவிடப்படுவதாகத் தெரிகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அப்பால் ஹொங்கொங்கில் அரசியல் பிரச்சினையும் இணைந்து புத்தக நிலையங்களின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
வாசிப்பின் வீழ்ச்சி
புத்தகநிலையங்கள், நூலகங்களின் தொகையில் ஏற்படும் வீழ்ச்சி வாசிப்புப் பழக்கத்தின் வீழ்ச்சியின் குறிகாட்டியாகவும் அடையாளம் காணப்படுகின்றது. வாசிப்புப் பழக்கம் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் பெரும்பாலும் அதற்கான காரணங்கள், அப்பழக்கத்தை மேம்படுத்துவதற்கான வழி முறைகள் பற்றியனவாக உள்ளன. ஆனால் இவற்றையும் மக்கள் வாசிக்காவிட்டால் என்ன செய்வது எனக் கேட்போர் உள்ளனர். திட்டமிடத் தவறுபவர்கள் தவறு செய்யத் திட்டமிடுகின்றார்கள் என்பது போல் வாசிப்புப் பழக்கத்தை இழக்கும் சமூகம் சிந்திக்கவும் தவறுகின்றது என்று ஒரு பேராசிரியர் (M.ஸ்டீபன்ஸ்) கூறினார்.
இப்பேராசிரியர் சஞ்சிகையியலில் நிபுணர் சமூக நிகழ்வுகளில் அவர் சந்திக்கும் பலரிடம் தாங்கள் அண்மையில் வாசித்த நூல் என்ன? என்று கேட்பது பலரை சங்கடத்துக்குள்ளாக்குவதாகக் கூறுகின்றார். மருத்துவரைக் காணக்காத்திருப்போர், விமானப் பயணிகள் என அனைவருமே நூல், சஞ்சிகை வாசிப்பதை விடுத்து வேறு பணிகளில் (தொலைக்காட்சி, கைபேசி, வீடியோ விளையாட்டு) என்பவற்றில் ஈடுபட்டிருப்பதாக அவர் அவதானித்துள்ளார். வாசிப்பு எவ்வாறு கலாசார வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றது என உறுதியாக நிறுவப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வாசிப்புப் பழக்கம் மறைந்து செல்வதாக அவர் கவலை தெரிவிக்கின்றார்.
நூல்நிலையங்களின் தொகையின் வீழ்ச்சியுடன் மேலைநாடுகளில் (உதாரணமாக, பிரித்தானியா, அமெரிக்கா) நூல் நிலையங்களைப் பயன்படுத்துவோர் தொகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய வளர்ந்தோரைப் பொறுத்தவரையில், கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வீழ்ச்சி 30 சதவீதமாக உள்ளது (கலாசார, ஊடக அமைச்சின் அறிக்கை) 16–24 வயது இளைஞர்களில் இவ்வீழ்ச்சியானது அண்மைக்காலத்தில் (2015இல்) 50 சதவீதமாக உள்ளது. இவ்வாறான வீழ்ச்சிக்கான காரணங்கள் ‘நேரமின்மை’, ‘வேறு இடங்களில் நூல்கள் கிடைப்பது’, ‘இலத்திரன் நூல்கள் என இவ்வறிக்கை கூறுகின்றது.
BBC வழங்கும் தகவல்களின்படி, 2010 இன் பின் 343 நூலகங்கள் மூடப்பட்டன; இவ்வாண்டில் மேலும் 111 நூலகங்கள் மூடப்படவுள்ளன. ஏனைய 224 நூலகங்கள் வெளியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
மொத்தத்தில் நூலகங்களும் புத்தகக் கடைகளும் வீழ்ச்சியடைவது என்பது நவீன யுகத்தில் பெரிதும் வருந்தத்தக்கதொரு விடயம். பல்வகைப்பட்ட தகவல் சாதனங்கள், ஆடம்பர வாழ்க்கை, கம்பெனிக் கலாசாரத்தின் எழுச்சி, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போன்ற காரணிகள் நூலகப் பயன்பாட்டையும் நூற் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றன. அறிவின் மீது நூலகங்கள் கொண்டிருந்த ஏகபோக உரிமை தற்போது சிதைவுற்று வருகின்றது. எண்மத் (Digital) தொழில்நுட்பமானது, அறிவின் மீது நூலகங்கள் கொண்டிருந்த அதிகார உரிமையைப் பறித்துவிட்டதாகக் கூறுப்படுகின்றது.
இன்று சர்வதேச நிறுவனங்களும் (யுனெஸ்கோ) தேசிய அரசாங்கங்களும் வாசிப்பை மேம்படுத்தல், நூலகப் பயன்பாட்டை அதிகரித்தல் தொடர்பாகப் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. யுனெஸ்கோவின் பின்வரும் செய்தி இதனை உணர்த்துகின்றது.
“மிக அத்தியாவசியமான மனித சுதந்திரங்களின் குறிகாட்டியாக நூல்கள் விளங்குகின்றன; பிரதானமாக, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் பிரசுரிக்கும் சுதந்திரமும். இச்சுதந்திரங்கள் பல சவால்களை எதிர்நோக்குகின்றன. பாடசாலைகள் தாக்கப்படுகின்றன. நூல்கள் அழிக்கப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் எமது கடமை இச்சுதந்திரங்களைப் பாதுகாத்து, எழுத்தறிவின்மைக்கும் வறுமைக்கும் எதிராகப் போராடுவது; வாசிப்பு, எழுத்துத்திறன்களை மேம்படுத்துவது’’
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
– யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM