முதன்மை தமிழ் கட்சியிடமிருந்து எனக்கு ஆதரவு கிடைக்கின்றதோ இல்லையோ அதைப் பொருட்படுத்தாமல் நாட்டின் பொருளாதாரத்தை பிரதேச ரீதியான எந்தப் பாகுபாடுமில்லாமல் அபிவிருத்தி செய்வதே எனது நோக்கம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட பிரதிநிதி திருமதி ஹானா சிங்கரை சந்தித்து பேசியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். இனங்களுக்கிடையில் அமைதியையும் இயல்பு நிலையையும் வளர்ப்பதற்கு எவ்வகையான முன்னுரிமையினை அரசாங்கம் வழங்கி வருகின்றது என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கின்றார்.
இலங்கை போன்ற தீவாக உள்ள நாட்டில் மீன்வளம் மற்றும் நீரியல் வள அமைச்சானது மிகவும் பிரதானமான ஓர் அரசாங்க அலகாகும். ஒன்பது முறை விடுதலைப்புலிகளால் இலக்குவைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை அதற்கு பொறுப்பான அமைச்சராக நான் நியமித்துள்ளேன். இந்த அமைச்சு வடக்கு, கிழக்கிற்கு மட்டுமானதல்ல. இது தெற்கிற்கும் நாடு முழுவதுக்குமான மிகவும் இன்றியமையாத ஒரு தொழிற்றுறை அமைச்சாகும். இந்த அமைச்சானது தனது பணியை நாடு முழுவதும் சமமாக வழங்கும் என்றும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் எடுத்துக்கூறியுள்ளார்.
இதனைவிட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் பொலிஸாருடன் தொடர்பாடலில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மொழிப்பிரச்சினையாகும். எனவே, இதற்கான உடனடித்தீர்வாக தமிழ் பகுதிகளில் 3000 பொலிஸாரை பணிக்கு அமர்த்தவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக தமிழர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காணாமல்போனோர் பிரச்சினைக்கும் தீர்வு காண முயல்வதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் தனது நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான தனது திட்டங்கள் குறித்து விபரிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான சிறுபான்மையின மக்கள் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை. பெரும்பான்மையின சிங்கள மக்களின் பெரும்பான்மையானோர் அவருக்கு வாக்களித்திருந்தனர். இதன் மூலமாகவே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதியாக அவர் பதவிப்பிரமாணம் செய்தபோது இந்த விடயத்தை நேரடியாகவே அவர் சுட்டிக்காட்டியதுடன் எதிர்காலத்தில் தனது வேலைத்திட்டங்களுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
தமிழ் மக்கள் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு காணவேண்டியதன் அவசியம் குறித்து அக்கறை கொண்டுள்ளனர். ஆனால், தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பு விடயத்தில் ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கரு முரண்பட்டதாகவே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அபிவிருத்தியின் மூலமே தீர்வைக் காண முடியும் என்ற எண்ணப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருக்கின்றார். அதன் மூலமே இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்று சிலவாரங்களில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போது அதிகாரப்பரவலாக்கல் தொடர்பிலோ சமஷ்டி குறித்தோ பேசுவதில் எந்தப்பயனும் இல்லை என்றும் பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்புக்கு மாறாக எத்தகைய செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தி மட்டும் போதுமானது என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனைவிட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறந்த அமைச்சை வழங்கியுள்ளமை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். தம்முடன் ஒரே ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரே இருப்பதாகவும் அவருக்கு நாடுதழுவிய ரீதியில் சேவை செய்யக்கூடிய அமைச்சினை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
தற்போதும் அதே நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளமை புலனாகின்றது. ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போதும் இந்த விடயங்களையே அவர் எடுத்துக்கூறியிருக்கின்றார் . வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு கெளரவமான பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதானமான தமிழ் கட்சியின் ஆதரவு இல்லாவிடினும் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அவர் கூறியதிலிருந்து இந்த விடயம் புலனாகின்றது.
யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அதற்கென விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாக உள்ளது. யுத்தத்தில் பேரழிவுகளை சந்தித்த இந்த மாகாணங்கள் இன்னமும் முழுமையாக அபிவிருத்தி அடையவில்லை. அங்கு வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னமும் கஷ்டப்பட்டே வருகின்றனர். எனவே, பிரதேச வேறுபாடுகள் இன்றி இந்த மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு மிகவும் சரியானதாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இந்த மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காண்பித்து வருகின்றார். இதற்கென அந்த மாவட்டங்களில் புத்திஜீவிகள் குழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகின்றார்,. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆயர்களை ஜனாதிபதி சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போதும் இந்த மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் புத்திஜீவிகள் குழுக்களை அமைத்து அவர்களிடம் திட்டங்களைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க தற்போது புத்திஜீவிகள் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி எதிர்வரும் வாரங்களில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கில் மக்கள் அனுபவிக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். அந்தப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியினால் முக்கிய தமிழ் கட்சி என்று கூறப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளது. அபிவிருத்தி விடயத்தில் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை தயாராகவே உள்ளது. அண்மையில் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் அதற்கான நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயார் என்று இவர்கள் அறிவித்திருந்தனர். ஆனாலும் அபிவிருத்தியினால் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது. கடந்த பல தசாப்தங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வும் காணப்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த விடயத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. உண்மையிலேயே யுத்தப்பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு ஏனைய மாகாணங்களை விட துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். அதேவேளையில் பேரிழப்புக்களை சந்தித்து தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உரிமைகளைப் பெறும் எண்ணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு அந்த விடயம் தொடர்பிலும் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாக வுள்ளது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், சிறுபான்மையின மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமானால் அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வுக்கும் வழிவகை செய்யப்படவேண்டும். அபிவிருத்தியை மட்டும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பார்களானால் கடந்த தேர்தல்களில் பல சலுகைகள் வழங்கப்பட்டபோது அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றியிருப்பார்கள். ஆனால், யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியம்.
(24.01.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM