(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு குறுகிய கால தீர்மானங்களை மேற்கொள்ளாமல் நீண்டகால தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுடன் அரசாங்கம் கலந்துரையாடி வருகின்றது. இதன் ஆரம்பமாக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது தொடர்பாக அரசாங்கம் கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேணைக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதி கோத்தாயவின் வேலைத்திட்டத்துக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்திருக்கும் பிரேரணையை பூரணமாக ஏற்றுக்கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
மேலும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க கடந்த அரசாங்கத்தினாலும் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அதற்கான முறையொன்று தயாரிக்கப்படவில்லை. அதனால் அனைத்து தரப்பினரதும் பிரேரணைகள் ஏற்றுக்கொண்டு சம்பள அதிகரிப்புக்கான முறைமையொன்றை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரமானியம் வழங்கப்படுகின்றது. என்றாலும் கம்பனிகளின் நடவடிக்கையால் சில தோட்டங்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக குறுகிய கால தீர்மானம் எடுப்பதை விடுத்து நீண்டகால தீர்மானம் ஒன்று குறித்து தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்றார்.
இதன்பேது அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட கோத்தாபய தோட்டத் தொழிலாளர்க ளுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அதற்கமைய இப்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் முன்னைய அரசாங்கம் ஆட்சியை அமைக்கும் போது 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கும் என்றார்கள். பின்னர் 50 ரூபா தருவதாக கூறினார்கள். இறுதியாக ஆட்சியாளர்கள் ஆயிரம் ரூபாவையும் கொடுக்கவில்லை, ஐம்பது ரூபாவையும் கொடுக்கவில்லை. ஜனாதிபதி கோத்தாபய கொடுத்த வாக்குறுதியை இரு மாதங்களில் மீண்டும் உறுதிப்படுத்தி மார்ச் மாதத்தில் இருந்து வழங்க தீர்மானம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினர், அவ்வாறு ஆயிரம் ரூபா கொடுத்தால் தோட்டக் கம்பனிகள் மூடப்பட வேண்டி வரும் என கூறுகின்றனர். இன்றும் ஐக்கிய தேசிய கட்சி தோட்ட கம்பனிகளுக்கு சார்பாகவே தீர்மானம் எடுக்கின்றது. ஆனால் எமது அரசாங்கம் இப்போதும் தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்து மார்ச் மாதத்தில் இருந்து சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. 22 தோட்ட நிறுவனங்கள் இன்றும் நிர்வகித்து வருகின்றது. இதில் சுமார் 18 நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகின்றன. அவர்கள் தான் சம்பள அதிகரிப்பை நிராகரித்து வருகின்றனர். தொழிலாளர் பக்கம் சில தியாகங்களை செய்ய வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னைய ஆட்சியில் வாக்குறுதி கொடுத்தவர்கள் இன்று சபையில் இல்லை.ஆனால் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். வெறுமனே சம்பள அதிகரிப்பு மட்டும் அல்ல, தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்றார்.
இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தாபய தோட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் ஆயிரம் ரூபா அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என தெரிவித்து பாராளுமன்றத்தில் தீ மூட்டிக்கொள்ளப்போவதாக தெரிவித்த வடிவேல் சுரேஷ் இன்று சபையில் இல்லை. அவர்களுக்கு 50 ரூபா கூட தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும். அத்துடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் பிரகாரம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள கம்பனிக்காரர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்துக்கு ஒப்படைக்க வேண்டும். அதேபோல் இன்று பல ஏக்கர் காணிகள் பயிரிடப்படாது காடாக மாறியிருக்கின்றன. அவ்வாறான காணிகளை தோட்ட மக்களுக்கு நிபந்தனையுடன் குத்தகைக்கு வழங்கி அதில் பயிரிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற பிரேரணையை முன்வைக்கின் றேன் என்றார்.
இதன்போது ஆளும்தரப்பு உறுப்பினர் அநுராத ஜயரத்ன குறிப்பிடுகையில், ஜனா திபதி கோத்தாபய தோட்டத் தொழிலாளர் களின் கஷ்டத்தை உணர்ந்தே ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவ தாக தெரிவித்திருந்தார். நாட்டின் வருமானத் துக்கு பிரதான காரணமாக இருக்கும் தோட் டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் கஷ்டமான நிலையிலேயே இருக்கின்றது. அதனால் அரசாங்கம் இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை மிகவிரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM