* அதிக இழப்பால் வட்டி செலுத்த கடினமாக உள்ளது - இ.மி.ச
* இ.மி.ச அறிவுறை, வழிகாட்டல்களை அமுல்படுத்துவதில்லை – PUCSL
* வட்டி வருவாய் 3.1 பில ;லியன் ரூபாய் – COPE அறிக்கை
தொடர்ந்தும் நஷ்டத்தில் இயங்கும் இலங்கை மின்சார சபை (CEB) அதன் நுகர்வோர் வைப்புச் செய்யும் பாதுகாப்பு வைப்புக்களுக்கான (security deposits) வட்டி வருமானத்தை சட்டத்தின் படி நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்திலிருந்து கழிக்கத் தவறியுள்ளமை, செய்திப் புலனாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழு (COPE COMMITTIEE) அறிக்கையின்படி, 2018 இன் இறுதியில் இலங்கை மின்சார சபையானது வட்டி வருமானமாக 3.1 பில்லியன் ரூபாயை திரட்டியுள்ளது. (RTI) தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி, 2009 முதல் 2018 இறுதிவரை நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு வைப்பு தொகையாக 14.3 பில்லியன் ரூபாய் பணம் வைப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக 2009 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்ட மின்சார சட்டத்தின்படி வட்டி வருமானத்தை, வீட்டு பாவனையாளர்களுக்கு வருடாந்த அடிப்படையிலும், மொத்த பயன்பாட்டு நுகர்வோருக்கு மாதாந்த அடிப்படையிலும் அவர்களின் மின் கட்டணத்தில் இருந்து கழிக்க வேண்டும் அல்லது அத்தொகையை மீள் செலுத்த வேண்டும்.
ஆனால், இலங்கை மின்சார சபை இவை இரண்டையும் செய்ய தவறியுள்ளது.
கண்டியில் பாரிய பரப்பளவில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஒருவர் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்>
“எனது வணிகத்தின் விரிவாக்கத்தின் போது பாதுகாப்பு வைப்புத் தொகையாக சுமார் ஒரு மில்லியன் ரூபாவை செலுத்தினேன் இலங்கை மின்சாரசபை அப் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வட்டி வருமானத்தை எனக்கு மீள் செலுத்தவுமில்லை, மின்சார கட்டணங்களிலிருந்து வட்டியை கழிக்கவுமில்லை. என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உரிமையாளர் கூறினார்.
இலங்கை மின்சார சபையின் பழிவாங்கல்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவே தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“எனது சில தொழிற்சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன ஆனால் இதுவரை எந்த விதமான பதுகாப்பு வைப்பு பணமோ அல்லது வட்டி வருமானமோ எனக்கு கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
மின்சார சபை சட்டத்தின்படி தொழிற்சாலை மூடப்பட்டாலோ அல்லது பாவனையிலிருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ பாதுகாப்பு வைப்புத்தொகை திருப்பி கொடுக்கப்பட வேண்டும். நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதை தடுக்கும் நோக்குடன் நுகர்வோரின் சராசரி மின்சார பயன்பாட்டிற்கு ஏற்ப பாதுகாப்பு தொகையானது அறவிடப்படுகிறது.
இலங்கை மின்சார சபையுடன் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால் பாதுகாப்பு வைப்புத்தொகையையும் அதனூடாக பெறப்பட்ட வட்டி வருமானத்தையும் பெறுவதற்கு நுகர்வோருக்கு உரிமை உண்டு என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை மின்சார சபையோ விரல் விட்டு எண்ணும் அளவிற்கான நுகர்வோருக்கு மாத்திரமே குறித்த வைப்புத்தொகையை வழங்கியுள்ளது. அவற்றுள் பெரும்பாலானவை நுகர்வோர் சட்டரீதியாக வழக்குத்தொடுத்த பின்னரே இலங்கை மின்சார சபை இவ்வாறு பணத்தை மீள் செலுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இவ்வாறான ஒரு சட்டம் இருப்பது பற்றி பொதுமக்களுக்கு போதிய அறிவு இல்லை என்று இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவிக்கிறது.
“சட்டத்தின்படி, இந்த வட்டி வருமானம் நுகர்வோருக்கு செலுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பெரும் இழப்புக்களை எதிர்கொண்டுள்ளோம்.
இந்நிலையில் குறித்த வைப்புத்தொகையை மீள் செலுத்துவது கடினமானதாகும்” என்று இலங்கை மின்சாரசபை ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
“மேலும் நுகர்வோர் பாதுகாப்பு வைப்புக்களுக்கான வட்டி செலுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்" எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சாரசபை 2018 இல் 28.9 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந் நட்டமானது கடந்த வருடத்தில் 85 பில்லியன் ரூபாயும் இவ்வாண்டு 120 பில்லியனாகவும் இருக்கலாம் எனவும் மதிப்பிடபட்டுள்ளது.
பாதுகாப்பு வைப்புத்தொகையாக சாதாரண வீடுகளுக்கான நுகர்வோரிடம் 650 ரூபாயும் நிறுவனங்களிடம் 1500 ரூபாயும் அறவிடப்படுகிறது. பாரிய அளவிலான வியாபாரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தாம் பயன்படுத்தும் ஒவ்வொரு (KVA-kilo-volt-ampere) மின் அலகிற்க்கும் 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.
மொத்த பாதுகாப்பு வைப்புத் தொகையானது 2009 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை இச்சட்டத்தை அமுல்படுத்தியதிலிருந்து 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளமை இலங்கை மின்சார சபை தகவல்களில் இருந்து தெரியவருகிறது.
நுகர்வோர் வட்டி வருமானம் மற்றும் பாதுகாப்புத் தொகையை மீள் செலுத்துதல் குறித்து இலங்கை மின்சார சபை எந்தவிதமான தகவலையும் இதுவரை வழங்கவில்லை.
வட்டி வருமானத்தை செலுத்தாதது குறித்து இதுவரை மூன்று முறையீடுகள் நுகர்வோரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகத்தின் (PUCSL) ஊடக பேச்சாளர் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட நிறுவன தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
“இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு வட்டி செலுத்துவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று கூறுவது தவறானது. மத்திய வங்கியின் சராசரி எடையுள்ள நிலையான வைப்பு வீதத்தின் படி (AWFDR) வட்டி வீதங்கள் குறித்து PUCSL இலங்கை மின்சார சபைக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
( பொதுப் பயன்பாட்டு ஆணையகத்தின் (PUCSL) ஊடக பேச்சாளர் மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட நிறுவன தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் )
எவ்வாறாயினும், வட்டி வருமானம் அல்லது வட்டி வீதம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை மின்சார சபை ஊடக பேச்சாளர் ஜெயவர்தன தெரிவித்தார்.
மின்சார சட்டத்தின்படி 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கு வட்டி செலுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல் அறிக்கையை இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா மின்சார நிறுவனத்தின் தனியார் லிமிடெட் (LECO)க்கு இலங்கைப் பொது பயன்பாட்டு ஆணையகம் (PUCSL) அனுப்பியுள்ளது.
இலங்கை பொதுபயன்பாட்டு ஆணையகம் (PUCSL) பாதுகாப்பு வைப்புத்தொகைகளுக்கான வருடாந்த வட்டி வீதமாக 8.93% தை 2017 இல் தீர்மானித்து அனுமதி வழங்கியுள்ளது . ஆனால், இலங்கை மின்சார சபை ஒரு போதும் அதனை பொருட்படுத்தவுமில்லை அதனை அமுல்படுத்தவுமில்லை. அத்துடன் வட்டி வருமானத்தை மின்சார கட்டணங்களில் இருந்து குறைப்பதற்க்கான நடவடிக்கைகளை எடுக்கவுமில்லை என ஹேரத் தெரிவித்தார்.
- யஹியா ரிகாஷ் அஹமட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM