(செ.தேன்மொழி)
பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சின்னம் ஒரு பெரிய விடயமாகாது. வலுவான கூட்டணியே முக்கியமானது என்று தெரிவித்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளீட்டு பிரச்சினைகள் இழுப்பறி நிலையில் காணப்படுவது எமது வெற்றிக்கு சாதகமாகவே அமைகின்றது என்றும் கூறியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலின் போது கிடைக்கப்பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை வெற்றிக் கொள்வதன் நோக்கில் சுதந்திரக்கட்சி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய தேர்தலை வெற்றிக் கொள்வதற்காக புதிய அமைப்பாளர்களை நேற்று கட்சின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நியமித்து வைத்தார். தற்போது அவர்களுக்கு தமது பகுதிகளில் உள்ள மக்களை தெளிவுப் படுத்துவது தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் தேர்தலை இலக்காக வைத்து தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான படிவங்களை அரசாங்க தரப்பினர் ஒருபோதும் விநியோகிக்குமாறு தெரிவித்ததில்லை. இதனால் அரசாங்கம் இதுவரையில் வென்றுள்ள நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும். சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்கள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான விண்ணப்பப்படிவங்களை நாங்கள் வழங்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்பட வில்லை. எதிர்வரும் இரு வாரங்களுக்கு பின்னர் இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. தேர்தலில் வெற்றிப் பெருவதற்கு சின்னம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாது. தேர்தலின் வெற்றிக்கு கட்சியே முக்கிய பங்கினைப்பெற்றுக் கொடுக்கும். இதனால் முதலில் வலுவான கூட்டணியொன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு பொருத்தமான சின்னத்தை தெரிவுச் செய்துக் கொள்ளலாம்.
தாமரை மொட்டு அல்லது கை பொதுச் சின்னமாக அறிவிக்கப்பட்டால், அது இனிவரும் காலங்களில் பொதுச் சின்னமாகவே கருதப்படும். ஒரு தனிப்பட்ட கட்சிக்கு உரிமைக் கோர முடியாது. அதனால் சின்னம் தொடர்பில் பொதுக் கூட்டணியில் இணையப்போகும் கட்சிகளுடன் பேசி தீர்மானம் எடுக்கப்படும்.
எதிர்கட்சித் தலைவர் சஜித், அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் எம்.சி.சி, எக்ஷா மற்றும் சோபா ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும் என்றும் அதற்கு பெரும்பான்மையை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்து வருகின்றார். ஆனால் அவர்களது ஆட்சிக்காலத்தின் போதே இந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதை அவர் தற்போது மறந்துபோயுள்ளார். இந்த எதிர்ப்பை அவர் முன்னரே காண்பித்திருந்தால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும். தற்போது இவர்களது கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவம் தொடர்பில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் , ஏனைய ஒப்பந்தங்கள் தொடர்பில் தலையிடுவதால் எந்த பயனும் ஏற்படாது.
இந்நிலையில் ஐ.தே. க. வின் உள்ளீட்டு பிரச்சினைகளின் இழுப்பறி நிலைமைகள் தொடர்ந்தும் காணப்படுமாயின் அது எமது வெற்றிக்கு பெரும் சாதகமாக அமையும். ஐ.தே.க. மூன்று தலைமைத்துவத்தின் கீழ் பிரிவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM