அரசியல் ரீதியாக மக்கள் தமது பிரதிநிதிகளாக அரசியல் நிர்வாக அமைப்புகளான பாராளுமன்றம், மாகாணசபைகள், மாநகர, நகர, பிரதேச சபைகளுக்குத் தகுதிவாய்ந்தவர்கள், செயற்றிறமையுள்ளவர்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவு செய்பவர்கள் அவற்றின் உறுப்பினர்களாகவிருந்து குறிப்பிட்ட சில ஆண்டுகள் செயலாற்றவேண்டும். அதுவே எதிர்பார்ப்பாகும். அது முறையாக அமைந்துள்ளதா, நமது பிரதிநிதிகள் நமது எதிர்பார்ப்புக்கமைய மக்கள் பணியாற்றுகின்றனரா என்பதை வாக்களித்து தெரிவு செய்த மக்கள் ஆராயாமலிருப்பதால் சமூகப்பின்னடைவுகள் பல தினமும் நிகழ்கின்றன.
சமூகம் பெற்றுக்கொள்ள வேண்டிய பல அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறையுடன் செயற்பட வேண்டிய நமது மக்கள் பிரதிநிதிகள் அவை பற்றிய அக்கறையின்றி, அலட்சியமாகச் செயற்பட்டு வருவதையும், தம்மிடையே மோதி தரந்தாழ்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் சமூக அக்கறையும், பொறுப்பும் கொண்ட எம்மால் சகித்துக்கொள்ள முடியாதுள்ளது. தமிழன் தலைவிதி இதுவா என்று எண்ணத் தோன்றுகின்றது.
நடைமுறையில் காணப்படுபவை எம்மை ஏமாற்றமடையச் செய்பவையாகவேயுள்ளன. உண்மையை மறைக்கமுடியாது. வெளிப்படுத்தியேயாக வேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உரிமையிழந்த சமூகமாக நாம் இந்நாட்டில் வாழ்வது? நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பிடுங்கப்படுகின்றன. தடுக்கப்படுகின்றன. தட்டிப்பறிக்கப்படுகின்றன. என்று மேடைகளில் முழங்கும், அறிக்கைமேல் அறிக்கை விடும் நமது மக்கள் பிரதிநிதிகள் அதற்கு அப்பால் எதுவும் செய்வதில்லை. முழக்கங்களும் அறிக்கைகளும் மட்டுமே அரசியல் என்று தாமும் நம்பி மக்களையும் நம்ப வைக்கின்றனர்.
முதலிலே அரசியலரங்கிலே புகுந்து மக்கள் சேவையாற்றவென்று புறப்பட்டு அரங்குகளிலே ஆடவந்துள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் புரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவை அரசியல்வாதிகள் நலன் சார்ந்தவை அல்ல. பொதுமக்கள் நலன் சார்ந்தவையாகும். சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி யென்றெல்லாம் கூப்பாடு போட்டு தமிழ் மக்களை வசியப்படுத்தி வாக்கு வேட்டையாடுவது அரசியலா? மேற்குறித்தவற்றில் உண்மையான அக்கறை, நம்பிக்கை நம் அரசியல்வாதிகளிடம் உள்ளதா? நிச்சயமாக இல்லை என்ற உண்மை ஆராய்ந்தால் வெளிப்படும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிறைவேற்றப்படவேண்டிய பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றைக் கூறியே கடந்த காலங்களில் தொடர்ந்தும் மக்களிடம் வாக்குக் கேட்கும் கலாசாரம் காணப்படுகின்றது. பதவிகளைப் பெற்றபின் அடுத்த தேர்தல் வரும்வரை பிரச்சினைகள் பற்றிய சிந்தனை ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இவை நமது சமூகப் பின்னடைவுக்கு நாம் விரித்துள்ள வலைகள். தமிழ் அரசியல்வாதிகள் தம் மத்தியிலே மோதிக்கொள்வதுதான் தமிழர் அரசியலாயுள்ளது.
அதுவும் ஒரே அணியில் மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு கையேந்தி அதிகாரம் பெற்றவர்கள் மக்களை மறந்து ஒருவரையொருவர் காலைவாரிக்கொள்ள முயல்கின்றனர். தமிழர் நலன் தேவைகள் எப்படிப் போனாலென்ன. நாம் பதவி சுகத்தை அனுபவிப்போம் என்ற மனநிலை நிலவுகின்றது. பதவியொன்று பறிக்கப்பட்டது பற்றி நீதி கேட்டு படியேறும் அளவு பதவி மேல் பாசம்கொண்ட சமூகமாக இன்று நாம் உள்ளோம். சில ஆண்டுகள் அனுபவிக்கும் பதவி மேல் பற்றுக்கொண்ட நம்மவர்கள். தமிழ் மக்கள் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நீதி கேட்டுப் படியேறத் தயங்குவதேன்?
இந்நாட்டின் குடிமக்களான தமிழ் மக்கள் உரிமையுடன் வாழப் பல தடைகளுள்ளன. அத்தடைகளைத் தகர்த்தெறிய நீதியின் துணையை நாட நமது சட்டம் தெரிந்த மக்கள் பிரதிநிதிகள் தயங்குவதேன்? தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் பின்னடைவுகள் மேலும் தொடர்ந்தால் மட்டுமே அவற்றைக் கூறி, பெற்றுக் கொடுப்போமென்று தேர்தல் காலங்களில் வாக்குறுதியளித்து மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்திலா? உண்மையைச் சொல்லுங்கள் என்று மக்கள் கேட்கின்றார்கள்.
இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு மூலமாக அமைந்தது மொழிப்பிரச்சினை. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றி தமிழரது மொழியுரிமை பறிக்கப்பட்டது. அதன் மூலம் தமிழரின் பல உரிமைகள் இழக்கப்பட்டன. இருப்பினும் 1956 இல் பறிக்கப்பட்ட தமிழ் மொழியின் உரிமை 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அழுத்தத்தால் வழங்கப்பட்டது. தமிழ் மொழியின் உரிமை நாட்டின் அரசியலமைப்பில் உட்படுத்தப்படுவதில் நமது தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லையென்பது மறைக்கமுடியாத உண்மை.
வெளிநாடொன்றின் அழுத்தத்தால் பெற்றுக்கொடுக்கப்பட்ட தமிழரின் மொழியுரிமை உரியபடி அனுபவிக்க முடியாமலுள்ள நிலையில் அதையாவது செயற்படுத்தத் தூண்டும் எந்தவொரு முயற்சியையும் நமது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எடுக்கவில்லை. மொழியுரிமை இன்றும் புறக்கணிக்கப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது. குறித்த மொழியுரிமையைத் தமிழ் மக்கள் அனுபவிக்க இன்றுவரை நீதி கேட்டு குரலெழுப்ப நம்மவர்கள் தயங்குவதேன்? சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வழியிருந்தபோதும் அதுபற்றி அக்கறை செலுத்தாதிருப்பது ஏன்?
மாற்றுக்கொள்கைக்கான நிலையம் இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மொழியின் உரிமைக்கான வழக்குகளை நீதிமன்றங்களில் தொடுத்துள்ளபோது நமது தமிழ் அரசியல்வாதிகளோ, அரசியலமைப்புகளோ இன்றுவரை மெளனமாக ஒதுங்கியிருப்பதேன்? குறித்த நிலையத்தின் லயனல் குருகே என்பவரின் மகன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின்படி தேசிய அடையாள அட்டையில் மும்மொழிகளும் குறிப்பாக தமிழிலும், சிங்களத்திலும் பதிவுகள் இடம்பெற வேண்டுமென்று தீர்ப்பு கிடைத்தமையை சட்டம் தெரிந்த அரசியல் பிரதிநிதிகள் அறியாதுள்ளனரா? தமிழ் மொழிக்கு நாட்டில் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமையை உறுதிப்படுத்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தயங்குவதேன்?
அடுத்தது கல்வி. நாட்டின் தேசிய கல்விக்கமைய சமத்துவக் கல்வி, உரிய உயரிய கல்வி என்று பல உயர் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், தமிழ்மொழி மூலமான கல்வியில் சமத்துவத்தைக் காணமுடியவில்லை. இலங்கையில் தமிழர் வரலாறு மறைக்கப்பட்ட கல்வியே பாடசாலைகளில் வரலாற்றுப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண இராச்சியம், வன்னித் தமிழ் அரசு, மண்முனை தமிழ் அரசு பற்றிய வரலாறு அற்ற நிலையில், புறக்கணிக்கப்பட்ட நிலையில் திட்டமிட்ட முறையில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு, மறைக்கப்பட்ட நிலையில் வரலாற்றுக் கல்வியுள்ளது. இது தொடர்பாக கவனம் செலுத்தும் அறிவு நமது அரசியல் பிரதிநிதிகளுக்கில்லையா?
இந்துக்களின் ஒப்புதலின்றி பதியுதீன் மகமூத் என்ற கல்வியமைச்சர் காலத்தில் கலாநிதி பிரேமதாச உடகம என்ற அமைச்சின் செயலாளரின் திட்டத்தின்படி இந்து சமயம் என்ற பாடப்பெயர் சைவசமயம் என்று மாற்றப்பட்டது. வேறு சமயத்தவர் இவ்வாறான மாற்றத்தை ஏற்பார்களா? நமது தமிழ்ப் பிரதிநிதிகள் இதுபற்றி சிந்தித்ததுண்டா?
காணியுரிமையுள்ள பாரம்பரிய சொந்த மண்ணிலிருந்து வெளியேறியும், வெளியேற்றப்பட்டும் அகதிகளாக, அனாதைகளாகப் பல்லாயிரம் தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் நிலையில் அவர்களது காணிகளைப் பெற்றுக்கொடுக்க சட்டத்தின் துணையை நாட எதுவும் செய்யப்பட்டுள்ளதா? காணாமற் போனோர் பிரச்சினை, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டிருப்போர் பிரச்சினை என்று பலவும் உள்ளன. இவற்றுக்கு நியாயம் கிடைக்க சட்டத்தில் வழியில்லையா?
போதைப்பொருள் பாவனையின் மூலம் சமூகச் சீரழிவு நடைபெறுகின்றது. பொருளாதார வளமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். தொழில் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக சமூகம் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டு வருகின்றது. நிம்மதியாக வீடுகளில் உறங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறு மக்கள் அவதிப்படும் நிலையில் அவை பற்றி அக்கறை செலுத்தப்படாது அதிகாரப்போட்டியில் ஈடுபட்டு சமூகப் பெறுமதியை தரமிறக்கும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட சபைகள் வழங்குவதற்கே எதிர்ப்பானவர்கள் இந்திய அழுத்தத்தால் மாகாண சபைகளை வழங்கும் நிலை ஏற்பட்டது. அது போதாது அதற்கும் மேல் அதிகாரம் வேண்டும் என்று கூறப்படும் நிலையில், மாகாண ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்பட்டு மாகாண முதலமைச்சரின் அதிகாரம் அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறப்படும் நிலையில் மாகாண முதலமைச்சரைவிட மாகாண ஆளுநருக்கே சட்டப்படி அதிகாரம் உண்டென்று நிரூபிக்கும் வெளிப்படுத்தும் சட்டமூளையே நம்மவருக்குள்ள விநோதத்தை என்ன என்பது?
ஒரே சின்னத்தில் ஒரே அணியாகப் போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் அரசியல் அதிகாரத்தைப் பெற்றபின் ஒன்றாக இணைந்து செயற்பட முடியாத பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத நமது அரசியல் தலைமைகளால் நாம் நமது உரிமைகளை வென்றெடுக்க, உறுதிப்படுத்த முடியுமா? மக்கள் பிரச்சினையை இனங்கண்டு, அணுகி தீர்வு காண எத்தனிக்காது, பதவிகளை எவ்வாறு அடைவது? அதற்காக என்ன செய்வது? யாருடன் கூட்டுச்சேர்வது என்ற சிந்தனையில் மட்டுமே செயற்படும் நமது அரசியல்வாதிகளால் நமது சமூகம் அடையப்போகும் நன்மைகள் என்ன? சிந்திக்கவேண்டும். சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அண்மித்து விட்டது. அரசியல் களப் போட்டியில் அரசியல்வாதிகள் ஆட ஆயத்தமாகிவிட்டார்கள். அவர்களது ஆட்டத்தை நாம் வேடிக்கை பார்த்து ரசிப்பது நமது சமுதாயப் பொறுப்பு. தகைமையும், திறமையும், ஆற்றலும், ஆளுமையும், சமுதாய நல உணர்வும் கொண்டவர்களை கட்சி மற்றும் அரசியல் பேதங்களுக்கப்பால் இனங்கண்டு அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு வீரவசனம் பேசிவிட்டால் தலைவர்களாகிவிட முடியாது. சமூக நல்நோக்குடன் செயற்படும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகச் செயற்படக்கூடியவர்களை காலம் தாழ்த்தாது அடையாளம் கண்டு நமது இருப்பை, பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்தகால செயற்பாடுகள் எமக்கு வழிகாட்டும் பாடங்களாக அமையட்டும். பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயற் படும் தலைமைத்துவங்களுக்கு உரமூட்டு வோம்.
- த.மனோகரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM