தமிழர் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் அஹிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் போது பிளவுகளும் பிரிவுகளும் விமர்சனங்களும் இல்லாமில்லை.
அவ்வாறிருக்க, 1986இற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதித்துவ தலைமையால் 2001 ஒக்டோபர் 20இல் மென்போக்கு அரசியல் தரப்புக்களும் ஆயுதவழி வந்த அரசியல் விடுதலை இயக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் நகர்வுகளை செய்யும் ஒரே நோக்கத்துடன் பல்வேறு விமர்சனங்களையும் கருத்து வேறுபாடுகளையும் கடந்தகால கசப்புணர்வுகளையும் கடந்தே இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசிய அடிப்படைக் கோட்பாடுகளை பிரதான கொள்கைகளாகக் கொண்டு தேசிய அரசியலில் இக்கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தது. 2009 மே 18 வரையில் நெறிதவறாது சென்ற கூட்டமைப்பினுள் அதன் பின்னரான காலத்தில் புயல் வீச ஆரம்பித்தது.
2010 பாராளுமன்றத் தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் ஆசனப்பங்கீட்டு சர்ச்சை ஏற்படவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியது. 2013இல் புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னரான காலத்தில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி பல்வேறு அதிருப்திகளை வெளியிட்டு வெளியேறியது.
இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிந்த அழைப்பினால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சராக செயற்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்திகளை வெளியிட ஆரம்பித்து ஈற்றில் வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
அதுபோன்று, மாகாணசபையில் அமைச்சர்களாக இருந்த பொ.ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டமைப்பில் அதிருப்தியுற்று வெளியேறி கட்சிகளை ஆரம்பித்தனர். கடைசியாக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவிலிருந்து வெளியேறிய அதன் செயலாளர் ந.சிறிகாந்தா தலைமையிலான அணியினரும் தமிழ்த் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.
ஜனநாயக தளத்தில் புதிய கட்சிகள் தோற்றம்பெறுவது பலமானதாக இருந்தாலும் சிறுபான்மை தேசிய இனமாக இருக்கும் தமிழினத்துக்கு கட்சிகளும் அரசியல் அணிகளும் அதிகரித்துச் செல்வதானது அவ்வினத்தின் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை மீதான கேள்வியை இயல்பாகவே ஏற்படுத்துகின்றது.
இது ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தரப்பினர் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை, திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பாக இல்லை, இலங்கை தமிழரசுக்கட்சி ஆசனப்பங்கீட்டிலிருந்து அனைத்து தீர்மானத்திலும் ஆக்கிரமிப்பு செய்கின்றது, தமிழரசுக்கட்சி பங்காளிக்கட்சிகளை திட்டமிட்டு ஓரம்கட்டுகின்றது, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஏதேச்சதிகாரப் போக்கில் செல்கின்றார்கள், ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியக் கோட்பாடு, கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்து விட்டது, பொறுப்புக் கூறலில் பெரும்பான்மையின தலைவர்களை காப்பாற்றி விட்டது இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களையே அடுக்கி வந்தார்கள்.
அதுமட்டுமன்றி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் 'கூட்டமைப்புக்கு மாற்றாக தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு கொள்கை ரீதியான வலுவான கூட்டணியொன்று' அவசியமென்றும் தொடர்ச்சியாக பொதுவெளியில் கருத்துக்களை முன்வைத்து வந்தார்கள்.
இதனடிப்படையில் சிவில் மற்றும் மத அமைப்புக்களின் பங்கேற்புடன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையிலான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன. எனினும் அதில் முழுமையான வெற்றியைக் கண்டிருக்க முடியவில்லை.
குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கொள்கை ரீதியான காரணத்தினை முன்வைத்து மாற்று அணியிலிருந்து வெளியேறியிருந்தார்கள். ஒரு தரப்பு வெளியேறிய நிலையில் ஏனைய அனைத்து தரப்புக்களையும் ஒருங்கிணைத்து கூட்டணியை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.
அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கட்சியை ஆரம்பித்த விக்னேஸ்வரனை கூட்டணியின் தலைவராக கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அரசியல் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
கூட்டமைப்புக்கு நிகரான மாற்றுத்தரப்பு அவசியம் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டிருந்தவர்களும் சிவில், மத தரப்பினரும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியொன்றை உருவாக்குவதற்குரிய ஒத்துழைப்புக்களை நல்கினார்கள். தற்போதும் நல்கி வருகிறார்கள்.
கூட்டணிக்கான அடிப்படை விடயங்களை ஏற்படுத்தி, புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு காரணமான விடயங்களை களைந்த கூட்டணியொன்றையே உருவாக்குவதற்கும் பல்வேறு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால், புதிய கூட்டணியை கட்டமைப்பதற்கான செயற்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைகின்ற போக்கே வெளிப்பட்டு வருகின்றது.
ஒருவேளை புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டாலும் அதன் கட்டமைப்பு சார் அடிப்படையில் 'பழைய மொந்தையில் புதிய கள்ளாகவே அது இருக்குமோ' என்ற அச்சமான நிலைமைகள் அண்மைய நாட்களில் எழுந்துள்ளன.
அந்த அச்சங்களுக்கு காரணங்கள் இல்லாமலில்லை, விக்கி தலைமையிலான கூட்டணி அமைவதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்களின் போது, கொள்கையளவில் இணக்கப்பாடுகள் இருந்தாலும் கூட, கூட்டணிக்கான அரசியல் குழுவுக்கான 11 உறுப்பினர்கள் நியமனத்தில் தமிழ் மக்கள் கூட்டணிக்கு ஆறு அங்கத்துவங்கள் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.க்கு மூன்று அங்கத்துவங்கள் என்றும், தமிழ்த் தேசியக் கட்சி (சிறிகாந்தா –- சிவாஜிலிங்கம் தரப்பு), அனந்தி தரப்பு தலா ஒவ்வொன்றை பெறுமென்றும் ஐங்கரநேசன் ஈற்றில் இணைந்தால் ஈ.பி.ஆர்.எல்.எப் இடமிருந்து ஒரு அங்கத்துவத்தினை பெற்று அவருக்கு வழங்குவதென்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்றும் முன்மொழிந்தாகிவிட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் இந்த அறிவிப்பால், குறைந்த அங்கத்துவத்தினை கொண்டிருக்கும் தரப்புக்கள் ஒன்றிணைந்து சமபங்காளித்துவத்தினை கோருவதென தீர்மானித்தன. இதனால் முதலாவது கட்டமாக கருத்தியல் முரண்பாடுகள் எழுந்தன. கூட்டணியொன்றில் சமபங்காளித்துவம் வழங்குவது சாத்தியமாகாத விடயமாக இருந்தாலும் அங்கத்துவ ஒதுக்கீட்டில் அணுகுமுறை ரீதியான கலந்துரையாடல்கள் மூலமாக இந்த முரண்பாடுகளை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அடுத்தக்கட்டமாக, பெரும் இழுபறிகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தியிருக்கின்ற விடயமாக, கூட்டணியை பதிவு செய்தல் மற்றும் பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஆகியன காணப்படுகின்றன. முதலாவதாக, கூட்டணி பதிவு தொடர்பான விடயத்தினை எடுத்துக்கொண்டால், இந்தக் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டுமே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இருக்கின்றது.
ஆகவே இந்த கூட்டணியின் அரசியல் பிரசன்னத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியே அச்சாணியாக இருக்கின்றது என்று கொள்ள முடியும். இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பானது தனது கட்சியின் பெயரை 'தமிழர் ஐக்கிய முன்னணி' என்று பெயர் மாற்றுவதாகவும் நிறைகுடத்தினை சின்னமாக கொள்வதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்து விட்டது. ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தரப்பினரைப் பொறுத்தவரையில், 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணி' என்ற பெயரே பொருத்தமானதென்றும் 'பொங்கல் பானையே' சின்னமெனவும் 11உறுப்பினர்கள் கொண்ட அரசியல் குழுவினை கூட்டணியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் நிலைப்பாடாக கொண்டிருக்கின்றது.
ஈ.பி.ஆர்.எல்.எப் ஏலவே கட்சியின் பெயர் மாற்றத்தினையும் புதிய சின்னத்தினையும் அறிவித்து விட்ட நிலையில் கூட்டணியின் புதிய பெயர் மற்றும் சின்ன முன்மொழிவை எவ்வாறு ஏற்றுக்கொள்வதென்பது நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
அதேநேரம், 11உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவினை பதிவுசெய்வதும் நடைமுறை சாத்தியமற்ற விடயம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பு விவாதிக்கின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு தற்போதுள்ள மத்திய குழுவினை மாற்றி கூட்டணிக்கான அரசியல் குழுவினை மத்திய குழுவாக உள்ளீர்ப்பதென்றால் கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே அதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அத்தரப்பு கூறுகின்றது.
அத்துடன், மாநாடொன்று நடத்தப்படாது தலைவர், செயலாளர் மாற்றத்துடன் புதிய அரசியல் குழுவினை முன்மொழிந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புகின்றபோது அது சட்டவலிதாக்கத்துக்கு உள்ளாகாத நிலைமை ஏற்படலாம் என்றும் ஒருவேளை, அந்த முன்மொழிவுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எப் இற்குள் இருந்தோ வெளியிலிருந்தோ யாராவது நீதிமன்றத்தினை நாடினால் இறுதி நேரத்தில் சட்டச் சிக்கல் ஏற்படுகின்ற பட்சத்தில் தேர்தலுக்கு முகங்கொடுப்பது சிக்கலாகி விடும் என்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பில் கூறப்படுகின்றது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய குறைபாடாக விளக்கும் பதிவு மற்றும் கட்டமைப்புக்கள் அற்ற நிலைமையை விமர்சித்து விட்டு பின்னர் நாம் எமது கூட்டணியை பதிவுசெய்யாது ஒரு கட்டமைப்பின்றி தேர்தலை நோக்கிச் செல்வது பொருத்தமற்றதாகவே அமையும் என்பது தமிழ் மக்கள் கூட்டணியினரின் இறுக்கமான நிலைப்பாடாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில், கூட்டணி பதிவு விடயத்தில் மிக அண்மித்த உதாரணமொன்றை இங்கு குறிப்பிடுவது சாலப்பொருத்தமாக இருக்கும். வடக்கு கிழக்குக்கு வெளியில் செயற்பட்டுவரும் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஒருங்கிணைவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியை கட்சியாக பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளரிடத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு சொற்ப காலம் அவசியமாக இருந்தமையால் அந்தப் பெயரை உள்ளூராட்சித் தேர்தலில் பயன்படுத்த முடியாது போனது.
ஆகவே அந்த மூன்று கட்சிகளின் கூட்டணியின் சார்பிலான அரசியல் குழுவின் பதவிப் பெயர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் பெயர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயருக்கு மாற்றப்பட்டு தேர்தல்கள் ஆணையகத்துக்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆகவே கூட்டணி பதிவும் அதற்குரிய பொறிமுறைகளும் பாரதூரமானவை அல்ல என்பது இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது.
எனவே, கூட்டணி பதிவை வலியுறுத்துபவர்களும் அதனை ஏற்றுக்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறுபவர்களும் மேற்படி விடயத்தினை முன் உதாரணமாகக் கொண்டு இதயசுத்தியுடனான கலந்தாய்வுகளை செய்வது முறையான மாற்று அரசியல் அணியை உருவாக்குவதற்கு வழிசமைப்பதாக இருக்கும்.
இதனைவிடவும், விக்னேஸ்வரன் தலைமையில் இணையவுள்ள தரப்புக்கள் ஒருவேளை இறுதித் தருணத்தில் இணக்கப்பாட்டை எட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதாக இருந்தாலும் அதற்கான ஆசன ஒதுக்கீடுகளில் அதிருப்தியான நிலைமைகளே நீடிக்கின்றன.
அந்த அணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் விக்னேஸ்வரன், அருந்தவபாலன், பேராசிரியர் சிவநாதன், சிற்பரன் உள்ளிட்ட ஐவர் களமிறங்கவுள்ளனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட மூவர் களமிறங்கவுள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தரப்பு தலா ஒவ்வொரு வேட்பாளர்கள் என்றும் ஐங்கரநேசன் இணைந்தால் அவருக்கும் ஒரு ஆசனத்தை சுரேஸிடமிருந்து பெற்றுக் கொடுத்து வாய்ப்பளிப்பது என்றும் விக்னேஸ்வரன் பங்கீட்டுக் கணக்கொன்றை இறுதி செய்துள்ளார்.
இதற்கு அனைத்து பங்காளிகளிடத்திலிருந்தும் ஏகமனதான விருப்பு கிடைக்கப்பெற்றதா என்றால் இல்லை. அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டதா என்றால் அதுவுமில்லை என்றே கூறப்படுகின்றது. ஆக, ஆசனப்பங்கீட்டிலும் குடுமிச் சண்டையே நீடிக்கின்றது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றான அணி என்பது வெறுமனே அதிதீவிர தேசிய பற்றை உதட்டளவில் வெளிப்படுத்தி நிற்பதாக இருப்பதை விடவும் கொள்கைப்பற்றுறுதியுடனும் இதயசுத்தியுடனும் பலமிக்கதாக அமைவதே தமிழினத்துக்கு அவசியமாக இருக்கின்றது.
அவ்வாறில்லாது 'மாற்று அணி', 'மாற்றுத்தலைமை' என்ற மாயையில் அரசியல் பிரதிநிதித்துவத்தினை மலினப்படுத்தி பேரம்பேசும் சக்தியை இழந்து நிற்கும் தமிழ்த் தரப்பினை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது.
அதனைவிடவும் கேள்விக்குறியாகவிருக்கும் தமிழினத்துக்கான தலைமைத்துவ வெற்றிடத்தினை பூர்த்தி செய்யும் கடமையை மக்கள் தீர்மானத்துக்கு விட்டுவிடுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM