உலக ஒழுங்கு மாறிவருகின்றது. பாரதத்தின் பாதுகாப்பு இலங்கைவாழ் தமிழ் மக்களை பாதுகாப்பதில்தான் தங்கியிருக்கின்றது என்ற நிலை உணரப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் எமது கோரிக்கையான சமஷ்டி தீர்வு விரைவில் சாத்தியமாகும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- ஆறாவது ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழாவில் உரையாற்றியநீங்கள் தாயகத்தில் உள்ள தமிழர்களின் நிலைமைகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில் உலகத் தமிழர்களின் பிரதிபலிப்பு எவ்வாறிருந்தது?
பதில்:- பலருக்கு எமது உண்மைநிலை தெரியாதிருந்தது. அதனை நான் வெளிப்படுத்தியதை இட்டு நன்றி தெரிவித்தார்கள். சிலருக்கு எமது விடயங்கள் தெரிந்திருந்தன. தாம் எவ்வாறு உதவி புரிய முடியுமென்று கேட்டார்கள். மொத்தத்தில் கூட்டத்தை ஒழுங்கு செய்தோர் மனமகிழ்வுற்றார்கள். ஏனென்றால் கூட்டம் தமது குறிக்கோள்களில் ஒன்றை எய்து விட்டதாக உணர்ந்தார்கள். அதாவது தமிழர்களின் தற்போதைய நிலைபற்றி இலங்கையில் இருந்துவந்தவர் போதியவாறு யாவருக்கும் உணர்த்திய காரணத்தினால்.
கேள்வி:- தமிழக, புதுச்சேரி நீதித்துறை தரப்பினருடனான சந்திப்பு, நீதிகோரி நிற்கும் தமிழர்களுக்கு எத்தகைய சாதகமான நிலைமைகளை உருவாக்கும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- இந்தியா முழுவதுமுள்ள சட்டத்தரணிகள் சங்கங்களுக்கு இலங்கை தமிழர்கள் பற்றிய நிலையை அவர்கள் எடுத்துரைக்க முன்வந்தார்கள். சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒரு பாரிய மாநாடு விரைவில் நடைபெறும்.
நான் சில வருடங்களுக்கு முன்னர் அஹமதாபாத்தில் உள்ள சட்டத்தரணிகள் சங்கத்தில் பேசினேன். அப்போது அச்சங்கத் தலைவர் சோனி என்று நினைக்கின்றேன், எமக்கு பாகிஸ்தானில் என்ன நடக்கின்றது என்று தெரியும். அவ்வாறே ஆப்கானிஸ்தானில், பங்களாதேஷில், மாலைதீவுகளில் கூட என்ன நடக்கின்றது என்று தெரியும். ஆனால் இலங்கையில் பயங்கரவாதிகள் பிரச்சினை ஒன்று இருப்பதாகவே நினைத்திருந்தோம். இப்போது தான் நீதியரசர் அங்குள்ள உண்மை நிலையை எமக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.
எமது நிலை இந்தியா எங்கிலும் தென் பிராந்தியத்துக்கு அப்பால் புரிந்துணர்வைக் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தான் இந்திய பாராளுமன்றத்திலும் எமது உண்மைநிலை உணரப்படும்.
கேள்வி:- மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்திய- – இலங்கை ஒப்பந்தத்தினையே முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவால் இலங்கை அரசாங்கங்களுக்கு அழுத்தமளிக்க முடியாத சூழலில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை தமிழர்களுக்கு பெற்றுத்தரும் என்று தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியுமா?
பதில்:- நிச்சயமாக முடியும். உலக ஒழுங்கில் பல சம்பவங்கள் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை எமக்கான ஒருசாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு இலங்கைவாழ் தமிழ் மக்களை பாதுகாப்பதில்தான் தங்கியிருக்கின்றது என்ற நிலை உணரப்பட்டு வருகின்றது.
கேள்வி:- அதிகாரப்பகிர்வு அவசியமே இல்லை என்ற நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார். பிரதமர் இந்தியாவை தமிழர்கள் நம்புவதால் பயனில்லை என்கிறார். இந்நிலையில் அதிகாரப்பகிர்வு அல்லது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற விடயம் எவ்வாறு நடைமுறை சாத்தியமாகும்?
பதில்:- இருவரும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகின்றார்கள். தேர்தலின் பின்னர் தான் யதார்த்த நிலைபுரியும்.
கேள்வி: தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தாது, ரஜினிகாந்துடன் சந்திப்புக்களை நடத்தியமைக்கான காரணம் என்ன?
பதில்:- நான் உத்தியோகபூர்வமாக செல்லவில்லை. உலகத் தமிழர்களில் ஒருவனாக இலங்கையிலிருந்து சென்றேன். அத்துடன் தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திப்பதற்கான வசதி கிடைத்திருந்தால் கட்டாயமாக சென்றிருப்பேன். ரஜினியின் சந்திப்பு தற்செயலாக நடந்தது. அதில் அரசியலுக்கு இடம் இருக்கவில்லை.
கேள்வி: அமிர்தலிங்கத்துக்குப் பின்னர் தமிழக அரசியல் தலைவர்களுடன் தாயக தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் நெருங்கிய உறவினை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனம் காணப்படுகையில், நீங்கள் தற்போதைய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது பா.ஜ.க. உள்ளிட்ட குறிப்பிட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை மட்டுப்படுத்தி விட்டீர்களே?
பதில்:- எமக்கு யாதும் ஊரே யாவருங் கேளீ ரே. வசதிகள் கிடைத்திருந்தால் யாவரையுஞ் சந்திப்பதில் எனக்கு ஒரு இடர்பாடும் இருக்கவில்லை. நான் சென்ற காரணம் உலக வம்சாவளித் தமிழர் ஒன்றுகூடல் கூட்டத்துக்கு. அதை வெற்றிகரமாக முடித்து விட்டு வந்துள்ளேன். வசதிப்பட்ட சந்திப்புக்களை மனமுவந்து ஏற்று மறுபடியும் இலங்கை வந்துள்ளேன். இத்துடன் என் இந்தியப் பயணங்கள் முடிவடைந்துவிட்டன என்று கருத வேண்டும்.
கேள்வி:- இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தினை மறுதலிப்பதற்கு தயாராகி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டது என்று கூறுகின்றது. நீங்கள் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கின்றீர்கள். அது நடைமுறையில் சாத்தியப்பட என்ன செய்யவேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- கூட்டு அங்கத்தினருக்கு எமது நிலைமை முற்றும் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஒருமித்த கருத்துடன் எமது முகவர்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களை கண்டுபேச வேண்டும். எமது புலம் பெயர் உறவுகள் இதற்கு ஒத்தாசை வழங்கவேண்டும்.
கேள்வி:- ஆட்சிமாற்றத்தின் பின்னர் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக நீங்களே குறிப்பிட்டுள்ள நிலையில் இந்தியாவில் அகதிகளாகவுள்ள இலங்கைத் தமிழர்களை மீண்டும் தாயகம் திரும்புமாறு கூறியுள்ளமை கருத்தியல் முரண்பாட்டை ஏற்படுத்துவதாக அமைகின்றதே?
பதில்:- அச்சுறுத்தல்கள் பாராளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரை என்பதே எமது கணிப்பு. எது எவ்வாறெனினும் அகதிகள் எனப்படுவோர் இலங்கை நாட்டுப் பிரஜைகள்.
அவர்கள் மீதான பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதனை அது தட்டிக்கழிக்க முடியாது. இந்தியாவில் இருந்து திரும்புவோர் மீதான கரிசனையும் பொறுப்புணர்ச்சியும் இந்தியாவுக்கும் இருக்கின்றது. இதில் முரண்பாடு இல்லை.
கேள்வி:- உங்களுடைய தலைமையில் உருவாகி வருகின்ற கூட்டணியின் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன? புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடுவதற்கான ஏது நிலைகள் உள்ளன?
பதில்:- பேசிக் கொண்டிருக்கின்றோம். கட்சி நிலைகளுக்கு அப்பால் போய் மக்களின் மீது கரிசனைகாட்ட வேண்டிய ஒரு நிலை தற்போது உதித்திருந்தமையை எல்லோரும் உணர்ந்துள்ளார்கள் என்றே நம்புகின்றேன் நடக்க வேண்டியது நடக்கும்.
கேள்வி:- அரசியல் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம், பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகளில் தமிழ் மக்கள் கூட்டணி ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?
பதில்:- எமக்கு மற்றவர்கள் தேவையா மற்றவர்களுக்கு நாம் தேவையா என்ற ஒரு கேள்வி பலமாக அலசி ஆராயப்படுகின்றது. விரைவில் பதில் கண்டுவிடுவோம்.
கேள்வி:- கூட்டமைப்பில் கூட்டமைப்பாக செயற்படுவதில் காணப்படும் பின்னடைவுகளை விமர்சித்த நீங்கள் உங்களுடைய கூட்டணியில் சமபங்காளித்துவம் உட்பட முற்போக்கான கட்டமைப்புசார் செயற்பாடுகளை கொண்டிருக்கின்றீர்களா?
பதில்:- அரசியல் கட்சிகள் பல சேர்ந்து கூட்டாக தேர்தல்களை சந்திக்கும் போதும் மற்றைய நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் POLITBUREAU எனப்படும் அரசியல் பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு அமையவே குழு அங்கத்தவர்கள் உள்ளடக்கப்படுவார்கள். எமது கட்சி பதிவு செய்யப்பட சில காலம் உள்ளது என இருக்கும் போது மேற்படி அரசியல் பீடம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
கேள்வி:- ஒரு வேளை, உங்களுடைய அணியில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப்.உடன் இணக்கப்பாடு எட்டப்படாதவிடத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கைகோர்ப்பீர்களா?
பதில்:- காலந்தான் பதில் சொல்லும்.
நேர்காணல் - ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM