ஈரானின் சிறப்புப் படையணியான குட்ஸின் தளபதி காசிம் சொலைமானியை கொன்றதை அமெரிக்கா பலமுனை வெற்றியாகப் பார்க்கின்றது. லிபியாவின் பென்காசியில் அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டமைக்கு காசிம் சொலைமானி பொறுப்பு என நம்பிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மூதவை உறுப்பினர் மைக் பொம்பியோ பல மாதங்களாக சொலைமானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு தருணம் பார்த்து காத்திருந்தார். சொலைமானியைக் கொன்றதன் மூலம் இனி ஒரு அமெரிக்கத் தூதுவர் கொல்வது தடுக்கப்பட்டது மட்டுமல்ல எதிர்காலத்தில் ஈரான் ஜனாதிபதியாக சொலைமானி வரும் வாய்ப்பு, ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்தமை, தீவிர அமெரிக்க விரோத கொள்கையுடைய ஹிஸ்புல்லா அமைப்பின் உச்ச நட்பை அழித்தமை போன்றவையும் அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றிகளாகக் கருதலாம்.
நிறைவேறாத கனவுகள்
ஈரானின் கடற்படையை அழிப்பது, ஈரானின் அணுகுண்டு உற்பத்தி நிலைகளை அழிப்பது போன்றவை கூட சொலைமானியைக் கொல்வதற்கு ஈடாகாது என மைக்கேல் பிரெஜென்ற் என்னும் ஈராக்கில் பணியாற்றிய அமெரிக்கப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி அமெரிக்க பாராளுமன்றத்தின் முன் சாட்சியமளித்திருந்தார். அந்த அளவுக்கு அமெரிக்காவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பவராக சொலைமானி திகழ்ந்தார். 2003இலிருந்தே அமெரிக்காவுக்கு எதிராக ஈராக்கில் ஈரான் செயற்படுகின்றது. யேமன் முதல் ஈராக் வரை அமெரிக்க நகர்வுகளை சிக்கலாக்குவதில் சொலைமானி வெற்றி கண்டார். ஆனால் அமெரிக்காவை மேனா என்று அழைக்கப்படும் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்க பிரதேசத்திலிருந்து விலக்க முன்னர் சுலைமானி கொல்லப்பட்டார். அல்ஜீரியா, எகிப்து, லிபியா, லெபனான், சிரியா, யேமன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈரானிய பேரரசை உருவாக்கும் ஈரானிய மதவாதிகளின் கனவு கரு நிலையில் இருக்கும் போதே சுலைமானி கொல்லப்பட்டார்.
மைக் பொம்பியோ காத்திருந்த தருணம்
2018 மே மாதம் அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைபட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஓராண்டு பொறுத்திருந்த ஈரான் கடந்த மே மாதம் ஹோமஸ் நீரிணையூடாக செல்லும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் செய்யத் தொடங்கியது. அடுத்த மாதம் அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது. அதற்கு அடுத்த மாதம் பிரித்தானியக் கொடியுடன் சென்ற ஒரு எரிபொருள் தாங்கிக் கப்பலை கைப்பற்றியது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து சவூதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதலை செய்து பின்னர் டிசம்பரில் ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் செய்யப்பட்டதில் ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டார். அதை ஈரானின் ஆதரவு பெற்ற படைக்குழுக்களே செய்தன என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஈரான் மறுத்தது. ஈரானின் சேட்டைகளுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்காது என ஈரான் கருதுவதாக அமெரிக்கா நம்பியது. அதனால் காத்திரமான பதிலடி கொடுக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தது. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்களின் நிலைகளில் தாக்குதல் செய்து ஐம்பது போராளிகளைக் கொன்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதி நாளில் ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதுவரகத்தை போராளி அமைப்பினர் முற்றுகையிட்டு முன்னரங்க காவல் நிலைகளை அழித்தனர். இந்தச் செயல் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பொம்பியோ காத்திருந்த தருணத்தை அவர் காலடியில் போட்டது. சொலைமானி இலகுவாகக் கொல்லப்பட்டார். கடந்த 3 ஆம் திகதி சொலைமானி கொல்லப்பட்டவுடன் சவூதி இளவரசர் தனது உடன்பிறப்பான துணைப் பாதுகாப்பு அமைச்சரை அவசரமாக அமெரிக்கா அனுப்பினார். அவரது பயணத்தின் நோக்கம் ஒரு அமெரிக்க – ஈரான் மோதலை தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.
ஈராக் மீது ஈரானின் பிடியை அமெரிக்கா தகர்க்குமா?
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஒழிப்பதற்கான முதற்படியாக சொலைமானியின் கொலை அமைந்துள்ளது. ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்துக்கு எதிராக இனி அமெரிக்கா காய்களை நகர்த்தும். அதனால் ஈரான் -– அமெரிக்கா மோதல் களமாக ஈராக் மாறும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஈராக் பாராளுமன்றம் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தாலும் அது பிரதமரின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது. தற்காலிக பிரதமராக இருக்கும் அதில் அப்துல் மஹ்தி ஈரானின் ஆதிக்கம் ஈராக்கில் அதிகரிக்கும் போது தனக்கு ஆபத்து எனக் கருதுவதால் அவர் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவர் ஒப்புதல் அளித்தால் அமெரிக்க நடுவண்வங்கியில் உள்ள ஈராக்கிய அரசின் கணக்கு முடக்கப்படும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா ஈராக்குக்கு விடுத்துள்ளது. சொலைமானியுடன் கொல்லப்பட்ட ஈராக்கிய பொது நகர்வு அலகின் தளபதியின் இழப்பு பல படைக்குழுக்களைக் கொண்ட அந்த அலகை நிலை குலையச் செய்துள்ளது.
பழிவாங்குமா ஹிஸ்புல்லா?
சுலைமானியின் படுகொலை உலகெங்கும் உள்ள சியா இஸ்லாமியர்களுக்கு அமெரிக்கா மீது உள்ள வெறுப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈரானியத் தளபதி காசிம் சொலைமானியையும் ஈராக்கிய போராளிக் கூட்டமைப்பான பொது நகர்வுக் குழுவின் தளபதி அபு மஹ்டி அல் முஹண்டிஸையும் கொன்றமைக்கு ஈடாக பழிவாங்கல் செய்யப்பட வேண்டுமென ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த 5ஆம் திகதி சூளுரைத்திருந்தார். மேலும் அவர் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் தமது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினரை அகற்றும் வகையில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி அமெரிக்கப் படையினருடன் ஒரு நேரடி மோதலை ஹிஸ்புல்லாவால் செய்வது கடினம். இஸ்ரேலின் அச்சுறுத்தல் லெபனானில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஹிஸ்புல்லா உள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் ஆளணி இழப்பை ஹிஸ்புல்லா சந்தித்துள்ளது. லெபனானின் அரச படைகளுக்கு அமெரிக்கப் படையினர் பயிற்சியளித்து வருகின்றனர். அவர்களின் மீது சிறிய அளவிலான அதிக தாக்குதலை ஹிஸ்புல்லா மேற்கொள்ளலாம். சொலைமானியின் கொலையால் அவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படும் ஹிஸ்புல்லா உட்பட்ட படைக்குழுக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருக்கலாம்.
அந்த கிளர்ச்சியை அடக்கும் போர்வையில் அந்தப் படைக்குழுக்களை முற்றாக அழிப்பதற்கு அமெரிக்கா முற்படலாம் என்பதையும் ஹிஸ்புல்லா உணரும். ஹிஸ்புல்லா வெறும் படைக்கலத் தாக்குதல் மட்டுமல்ல இணையவெளித் தாக்குதல்களையும் செய்யக்கூடியது.
ஈரான் குழம்புமா?
சொலைமானி கொல்லப்பட்டவுடன் ஈரானிய மக்கள் ஆட்சியாளர்களின் பின்னால் திரண்டது உண்மை. ஆனால் ஈரான் கொடுத்த பதிலடி போதாது என்பதை அவர்கள் உணரும் போது அவர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பலாம். அமெரிக்காவின் உளவுக்கான எதிர்ப்பு நடவடிக்கையை ஈரான் சரியாகச் செய்யவில்லை. ஈரானின் பெரும் சொத்தான தளபதியை அமெரிக்க உளவாளிகள் நிறைந்த லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு காசிம் சொலைமானியை போதிய பாதுகாப்பின்றி அனுப்பியது தவறானது என ஈரானியர்கள் கருதினால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுக்கலாம். உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தி பல ஈரானியர்களை ஈரானியப் படையினர் கொன்றதும் ஈரானிய மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. அந்த சினத்துடன் ஈரானியப் பொருளாதார தேய்வால் ஏற்படும் விரக்தி இணையும் போது ஈரானிய ஆட்சியாளர்கள் பெரும் உள்நாட்டுக் குழப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த மே மாதம் ஈரானுக்கு எஸ்-400 என்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பனை செய்ய ரஷ்யா மறுத்திருந்தது. ஆனால் ஈராக்குக்கு விற்பனை செய்ய ரஷ்யா தற்போது முன்வந்துள்ளது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஈரானின் ஆதிக்கம் வளர்வதை ரஷ்யா விரும்பவில்லை. அதனால் ரஷ்யாவிடமிருந்து பெரும் உதவியை ஈரான் எதிர்பார்க்க முடியாது.
சொலைமானியின் திறன் தீவிரவாத அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து அவற்றை புவிசார் நலன்களுக்குப் பாவிப்பதில் முதன்மையானதாக அமைந்திருந்தது. அமெரிக்க அரசுறவியலாளர்கள் அந்த அமைப்புக்களை கையாளும் வழிகள் தெரியாமல் கடந்த 40 ஆண்டுகளாக திணறுகின்றார்கள். அவற்றில் கையாள்வதற்கு மிகவும் கடினமானது ஹிஸ்புல்லா அமைப்பு. அதனால் அமெரிக்காவுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சிறிய தாக்குதல்களில் தொடங்கி ஒரு பெரிய போராக மாறக்கூடிய வாய்ப்பு தற்போது அதிகமாகக் காணப்படுகின்றது.
- வேல்தர்மா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM