இலங்கை விவகாரத்தில் இந்தியா கையாளப் போகும் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது, அண்மைக்காலமாக அரசியல் இராஜதந்திர மட்டங்களில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தை அடுத்தே இந்த விவாதம் சூடு பிடித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அடுத்த 10 நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதற்குப் பின்னர், இந்த மாத தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன புதுடெல்லிக்கான பயணத்தை மேற் கொண்டிருந்தார்.
அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தின் தொடக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதையடுத்து, சீனாவுக்குப் பயணம் செய்யும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் பயண நிகழ்ச்சி நிரல் இன்னமும் இழுபறியாகவே இருந்து வருகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை, தமது நாட்டுக்கு வருமாறு இந்தியாவின் போட்டி நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் அழைப்பு விடுத்திருக்கின்றன.
அந்தப் பயணங்களில் இழுபறிகள் காணப்படுகின்ற போதும், புதுடெல்லியுடன் சீரான உறவைப் பேணுவதில் புதிய அரசாங்கம் கவனமாக இருக்கிறது.
அதனால் தான், குறுகிய காலத்துக்குள்ளாகவே ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் புதுடெல்லி சென்று திரும்பியுள்ளனர். பிரதமரும் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், சீனாவின் முதலீடும் பொருளாதார உதவிகளும் அதற்குத் தேவைப்படுகின்றன. இந்தியாவின் ஆதரவும் நட்பும் அவசியம் என்ற நிலைப்பாட்டிலும் இருக்கிறது.
இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாமல், சீனாவின் பொருளாதார உதவிகளைப் பெறுவது அரசாங்கத்தின் திட்டம். அதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ புதுடெல்லியில் கூட, வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே, இந்தியாவை அரவணைத்து செல்லும் அணுகுமுறையை மிகக் கவனமாக கடைப்பிடிக்க முனைகிறது கொழும்பு. இந்தியாவுடன் முரண்பாட்டையோ, பகைமையையோ வளர்த்துக் கொள்வது, நீண்டகால ஆட்சி இலக்கை வைத்துச் செயற்படும் ஆளும்கட்சியினருக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால், மிகுந்த முன்னெச்சரிக்கையாக விடயங்கள் கையாளப்படுகின்றன.
ஆனாலும் தமிழர் பிரச்சினை, அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்களில் தான், இரண்டு நாடுகளும் அதிகம் முரண்படும் நிலை காணப்படுகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இந்தியா சென்றிருந்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், அனைவருக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட்டு நீதியான, நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அந்த இடத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எந்தக் கருத்தையும் வெளியிடாத போதும், பின்னர் இந்திய ஊடகங்களுடன் நடத்திய சந்திப்புகளில், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி அவர் பெரும்பாலும் பேசவேயில்லை. தமிழர்களுக்கு நாட்டில் பிரச்சினை ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டில் அவர் இல்லை. அபிவிருத்தி மூலம் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதே அவரது சித்தாந்தம்.
கோத்தாபய ராஜபக் ஷ ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இராணுவ அதிகாரிகளுக்கு கிளர்ச்சிகளை ஒடுக்கும் வழிமுறைகள் பற்றிய ஏராளமான கற்கைநெறிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இடதுசாரி நக்சலைட் கிளர்ச்சிகள் ஏராளம் உள்ளன. இது இந்தியாவுக்கு சவாலான ஒரு விடயம். நக்சலைட் கிளர்ச்சிகளுக்கு மூலகாரணம், அபிவிருத்தியில் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவது, கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது தான்.
இதனை அடிப்படையாக வைத்து, நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வது, கல்வி வசதிகளை அளிப்பது, வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது போன்ற மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முனைப்புகள் கையாளப்படுகின்றன. இது சில இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் வெற்றி கிட்டவில்லை. இந்தியாவிடம் கிளர்ச்சிகளை ஒடுக்கும் கற்கைநெறிகளை இலங்கை இராணுவமும் கற்று வருகிறது.
ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ,
தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நக்சலைட் பிரச்சினையைப் போலவே புரிந்து கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது.
கல்வி உரிமை மறுக்கப்பட்டதால், வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டதால், அபிவிருத்தியில் ஒதுக்கப்பட்டதால், மொழி உரிமை மறுக்கப்பட்டதால் தான், தமிழர்கள் தனிநாடு கோரி போராட்டத்தில் இறங்கினர் என்ற புரிதலின் அடிப்படையிலேயே, அபிவிருத்தியை முன்னெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பது, அவரது கணிப்பாக இருக்கலாம்.
தமிழ் மக்களின் அபிலாஷைகள் அவற்றுக்கு அப்பாற்பட்டது என்பதை, இராணுவ மொழியிலேயே விளங்கிக் கொள்ளும் ஒரு ஜனாதிபதி எந்தளவுக்குப் புரிந்து கொள்வார் என்பது கேள்விக்குறிதான்.
இவ்வாறான ஒரு நிலையில் தான் இலங்கை விவகாரத்தை இந்தியா எப்படிக் கையாளப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எப்போது, எந்த இடத்தில், யாரை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இராஜதந்திரத்தின் முக்கியமான அம்சம். அதனை இந்தியா புரிந்து வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு விட்டுத் திரும்பினார்.
அவரிடம் அதிகாரப்பகிர்வு குறித்து பேசப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய போது, அதுபற்றி பேசவில்லை. வெளிவிவகார அமைச்சுக்கு உட்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே பேச்சுக்களை நடத்தியிருந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம், அதிகாரப்பகிர்வு விவகாரம் வெளிவிவகார அமைச்சுக்கு உட்பட்ட விவகாரம் அல்ல, அது ஒரு அரசியல் விவகாரம் என்று, தினேஸ் குணவர்தன, பூடகமான முறையில் குறிப்பிட்டிருந்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வலியுறுத்திக் கூறிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகள், இந்த விடயத்தில் இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதுபற்றிப் பேசுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
ஆனாலும், புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுக்களில் 13ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு பற்றியோ பேசப்படவில்லை.
எனினும், 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள், கைவிடப்பட்டு விடவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியான ஷிசிர் கோத்தாரி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அவ்வாறாயின், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் இதுபற்றிப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு இந்தியா வந்திருக்கிறது என்றே கருத வேண்டும்.
யாருடன், எப்போது, எங்கு பேச வேண்டும் என்ற இராஜதந்திர அணுகுமுறையை இந்தியா கையாளுகிறது. தினேஸ் குணவர்தன இடதுசாரியாக காட்டிக் கொண்டாலும் தமிழர் பிரச்சினை, அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்களில் ஒரு இனவாதியாகவே நடந்து கொண்டிருக்கிறார். இது முதலாவது.
தினேஸ் குணவர்தன மஹிந்த ஆதரவு வட்டத்தில் முக்கியமானவராக இருந்தாலும், மஹிந்த ராஜபக் ஷவின் பொதுஜன பெரமுன கட்சியில் அவர் இருக்கவில்லை. இது இரண்டாவது விடயம்.
எனவே, தினேஸ் குணவர்தனவிடம் அதிகாரப்பகிர்வு பற்றியோ, 13 ஆவது திருத்தம் குறித்தோ பேசுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்ற கருத்து இந்தியாவிடம் இருக்கிறது. இது மூன்றாவது விடயம்.
அவ்வாறாயின் இந்த விவகாரத்தை இந்தியா எப்படி, யாரை வைத்துக் கையாளப் போகிறது?
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அடுத்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, இந்த விவகாரத்தை புதுடெல்லி கையில் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மஹிந்த ராஜபக் ஷ தான், இந்தியாவுக்கு, 13க்கு அப்பாலான தீர்வு குறித்து வாக்குறுதி கொடுத்தவர். கோத்தாபய ராஜபக் ஷவைப் போல நறுக்கென பதிலளிக்காதவர் அவர். நிதானமாக முடிவெடுக்கக் கூடியவர்.
மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, அவரைக் கொண்டு, அதிகாரப்பகிர்வு பற்றிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரும் என்றே தெரிகிறது.
இந்த இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் குரலாக மஹிந்த ராஜபக் ஷ செயற்பட முடியாது. ஏனென்றால், தனது வழிகாட்டலில் தான், கோத்தாபய ராஜபக் ஷ செயற்படுவார் என்று மஹிந்த ராஜபக் ஷ தேர்தலின் போது கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷவே அரசியல் முடிவுகளை எடுப்பார். தான் ஒரு நிர்வாகியாகவே இருப்பேன் என்றே கோத்தாபய ராஜபக் ஷவும் கூறியிருந்தார்.
எனவே, அரசியல் விவகாரங்களை மஹிந்த ராஜபக் ஷவின் மூலம் கையாளுவதே பொருத்தம் என்று இந்தியா கருதும். அவர் கோத்தாபய ராஜபக் ஷவை காரணம் காட்டி தப்பிக்கவும் முடியாது. ஏனென்றால் தான் சொல்வதன்படியே, தனது ஆலோசனைப்படியே கோத்தாபய ராஜபக் ஷ செயற்படுகிறார் என்று கூட, மஹிந்த ராஜபக் ஷ வார்த்தைகளை கொட்டி விட்டார்.
மஹிந்த ராஜபக் ஷவின் இந்தியப் பயணத்தின் போது, 13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் பேசப்படும் சூழலில் அவர் எப்படி அதற்கு பதிலளிக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயமாக இருக்கிறது.
எனினும், இந்தியா இந்த விவகாரத்தை காதும் காதும் வைத்த மாதிரிக் கையாளவே முனையும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான், சீனா போன்ற போட்டி நாடுகளின் நட்பு வட்டத்தில் உள்ள ராஜபக் ஷ சகோதரர்களின் அரசாங்கத்தை, அந்தப் பக்கம் சாய்ந்து கொள்வதற்கு இந்தியா அனுமதிக்காது.
எனவே, கொழும்புடன் இடைவெளி வந்து விடாதபடி, உறவுகளைப் பேணவே முனையும். அதற்காக இந்தியா, பின்கதவு இராஜதந்திரத்தைக் கையாளும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
எது எவ்வாறாயினும், தமிழகத்தில் மீண்டும் இலங்கைத் தமிழர் விவகாரம் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் அதனை மறந்து விட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னர், அதிகாரப்பகிர்வு பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிவரத் தான் வேண்டியிருக்கும்.
- ஹரிகரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM