தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கும் ஆசை பல பேருக்கு இருந்தாலும், அடுத்ததாக அந்த வாய்ப்பை பெறப் போகிறவர் யார் என்ற கேள்விக்கு கூடிய விரைவில் பதில் கிடைக்கும் போலவே தெரிகிறது.
ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் தலைமைத் தாங்கி வந்த தமிழர் அரசியல், ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் கைக்கு சென்றது.
முள்ளிவாய்க்கால் பேரழிவை அடுத்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றது என்ற வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அந்த தலைமை சென்றது.
கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் தலைவராக சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக இருக்கிறார். அவருக்குப் பின்னர், கூட்டமைப்பின் தலைவர் யார் என்ற கேள்விக்கான விடை இன்னமும் இல்லை.
இரா.சம்பந்தன் வகிக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பதவி மீது பலருக்கு ஆசை இருப்பது ஒன்றும் இரகசியம் இல்லை. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பலரும் பல்வேறு இரகசிய முயற்சிகளை முன்னெடுத்தனர். அதில் தோல்வி கண்டவர்கள் தான் ஏராளம்.
வரும் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலில் இரா.சம்பந்தன் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருப்பதாக தகவல்.
மூப்பும், வயது முதிர்ச்சியால் வரும் உடல் உபாதைகளும், ஓய்வின் அவசியத்தை அவருக்கு உணர்த்தியிருக்கலாம். ஆனால், அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெறப்போகிறாரா, தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கப் போகிறாரா அல்லது தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மாத்திரம் விலகிக் கொள்ளப் போகிறாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, தேசியப் பட்டியல் மூலம் இரா.சம்பந்தன் பாராளுமன்றம் செல்வார் என்றொரு பேச்சும் அடிபடுகிறது. அவ்வாறு நடந்தால், கூட்டமைப்பின் தலைவர் பதவி தொடர்பாக உடனடியாக முடிவு ஏதும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அவர் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆனால், அரசியல் ரீதியாக அவர் தலைமைத் தாங்க முடியும்.
அரசியலை விட்டே ஓய்வுபெறும் முடிவை எடுத்தால், கூட்டமைப்பு இன்னொரு தலைவரைத் தேட வேண்டியிருக்கும்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், அடுத்த தலைமைத்துவம் யாருக்குச் செல்லும் என்ற கேள்வி உள்ளது.
தமிழ் மக்களுக்கான தலைமையை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தன்னால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் சில நாட்களுக்கு முன்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பகிரங்கமாகவே கோரியிருந்தார்.
கூட்டமைப்பையும் இரா.சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா, சிறிதரன் போன்றவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தவறுகளை உணர்ந்து தமிழரசுக் கட்சியினர் தம்முடன் இணைய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில், சிங்களத் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வொன்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தனக்கு வழங்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போதுள்ள மூத்த அரசியல் தலைவர்கள் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாத்திரமன்றி, தமிழ் மக்களின் சார்பில் அந்தக் கட்சியினால் நடத்தப்பட்ட அஹிம்சைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர், அதற்காக சிறைக்கும் சென்றவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளை விட தமிழரசுக் கட்சி தான் பெரியது, பலமானது. ஏனைய கட்சிகளின் தலைவர்களை விட மூத்த தலைவர்களையும் கொண்டது.
எனவே, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான், கூட்டமைப்புக்கு அடுத்த தலைவராக வேண்டும் என்ற கருத்து உள்ளது.
அவ்வாறு நோக்கினால் அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் அரசியல், போராட்ட அனுபவங்கள் குறைத்து மதிப்பிட முடியாதவையாக இருந்தபோதும், அவர் தமிழ் மக்களின் அரசியலை கையாளுவதற்குத் தேவையான முழு ஆளுமை பெற்றவரா என்ற கேள்விகள் எழுப்பப்படுவதும் உண்மை.
குறிப்பாக, இராஜதந்திர தொடர்பாடல்களில் அவர் பலவீனமானவர் என்றும் தனது ஆளுமையை நிரூபிக்கவில்லை என்றும் ஒரு கருத்து அரசியல் வட்டாரங்களில் இருப்பது மறுக்க முடியாத விடயம்.
அதற்காக, அவர் கூட்டமைப்பின் தலைவருக்கான போட்டியிலிருந்து ஒதுக்கப்பட வேண்டும் என்பதோ, ஒதுக்கப்படுவார் என்பதோ இந்தப் பத்தியின் கருத்து அல்ல.
அதேவேளை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வேறு சிலருக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பதவி மீது கண் உள்ளதை மறுக்க முடியாது.
சுமந்திரன் அதனை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதனை கூறாதவர்களும் இருக்கிறார்கள்.
இந்தக் கட்டத்தில் மாவை சேனாதிராசாவின் பெயருக்கு முன்பாகவே, சுமந்திரனின் பெயர் அடிபடத் தொடங்கியிருப்பது முக்கியமானது.
சுமந்திரன் தான் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் என்ற பேச்சு உருவாகத் தொடங்கியது இப்போது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வாறான ஒரு கருத்து இருந்தது.
இரா.சம்பந்தனே, அவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர், சம்பந்தனுடன் கூட இருந்து அவரது அரசியல் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்டவர். கடந்த 10 ஆண்டுகளில் கூட்டமைப்பின் என்பதை விட, தமிழர் அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சர்வதேச அரசியல் போக்கை முழுமையாக அறிந்து கொண்டிருப்பவரும் அவர் ஒருவர் தான்.
கூட்டமைப்பின் சர்வதேச விவகாரத் தொடர்புகள் அனைத்திலும் சுமந்திரன் தனியாகவோ, இரா.சம்பந்தனுடனோ பங்கேற்றிருக்கிறார்.
எனவே, அடுத்தகட்டத்துக்கு தமிழர் போராட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்ற ஒரு தெளிவான படம் அவருக்கு இருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், சுமந்திரன் உள்ளக அரசியலில் அதிகம் எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பவர்-. இதுதான் அவருக்கு உள்ள மிகப்பெரிய ‘மைனஸ்’.
தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் எழுச்சி வேறெவரையும் உதாரணமாக குறிப்பிட முடியாதளவுக்கு வலுவானது. அது அவருக்கு அவரது கட்சிக்குள் எதிர்ப்பையும் சேர்த்தே வளர்த்திருக்கிறது. மற்றொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும், அவருக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன.
கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் பிரிந்து போனதற்கு, சுமந்திரன் தான் காரணம் என்று அண்மையில் கூட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறியிருந்தார்.
சுமந்திரன் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார் என்றும், அவரது செயற்பாடுகள் தான், கூட்டமைப்பை விட்டு தாம் வெளியேறுவதற்குக் காரணம் என்றும் பல கட்சிகளும், தலைவர்களும் கூறியிருக்கிறார்கள்.
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வெளியேற்றத்துக்குக் கூட, சுமந்திரன்- சம்பந்தனை மீறி நடந்து கொள்ள முடியாமல் போனது தான், காரணம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
அதனால் தான், தமிழரின் அரசியல் தலைமை சுமந்திரனுக்கு சென்றால் அது தமிழ் மக்களின் சாபக்கேடு என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
இரா.சம்பந்தன் அரசியல் ஓய்வுபெறும் முடிவை எடுத்தால், கூட்டமைப்பின் அடுத்த தலைமைத்துவம் தொடர்பான தெளிவான தீர்மானத்தையும் சேர்த்தே எடுக்க வேண்டும்.
விமர்சனங்களுக்கு அப்பால் இரா.சம்பந்தனின் தலைமைத்துவத்தை பங்காளிக் கட்சிகள் ஏற்று மதித்து செயற்படுகின்ற நிலை கூட்டமைப்புக்குள் இருக்கிறது. அந்த நிலை அவருக்குப் பின்னரும் தொடர வேண்டும். கூட்டமைப்பை வலுவான நிலையில் வைத்திருப்பதற்கு அது அவசியம்.
அதேவேளை மக்களின் ஆதரவையும் ஆணையையும் பெறுவதும் முக்கியம்.
தமிழ் மக்களின் அரசியலை சரியான திசைக்கு கொண்டு செல்லும், வலுவானதொரு கட்சியாக கூட்டமைப்பு செயற்பட வேண்டுமாயின், ஒற்றைத் தலைமைத்துவ நிலை மாற்றப்படுவது முக்கியமானதாக இருக்கும்.
கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெளியேறிய கட்சிகள் அனைத்தும் கூறிய ஒரே குற்றச்சாட்டு, தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்துகிறது.சம்பந்தன், சுமந்திரனே முடிவுகளை எடுக்கிறார்கள், திணிக்கிறார்கள் என்பது தான்.
எனவே, பங்காளிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுத் தலைமைத்துவம் அமைக்க வேண்டும் என்ற யோசனை பல ஆண்டுகளுக்கு முன்னரே முன்வைக்கப்பட்ட போதும், அதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்கவில்லை.
இந்தநிலை நீண்டகாலம் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, கூட்டமைப்பு தனது போக்கை மாற்றிக் கொண்டு கூட்டுத் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கும் காலம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது.
அந்த வாய்ப்பை தவறவிட்டால், தலைமைத்துவ சிக்கல்களே கூட்டமைப்பை சிதறடித்து விடும் ஆபத்து இருக்கிறது. அதனை தலைமைக்கு குறிவைக்கும் தலைகள் உணர்ந்து கொள்ளுமா?
- கபில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM