தைப்பொங்கலுக்கு முதல் நாள், அலரிமாளிகையில் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய சந்திப்பில், இரண்டு முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
முதலாவது, அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை மூட்டி விடும் வேலையை தமிழ் ஊடகங்கள் கைவிட வேண்டும் என்பது.
இரண்டாவது, தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வைப் பெற்றுத் தரும் என்று நம்பிக்கையூட்டுவதை தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் கைவிட்டு, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக தீர்வைப் பெறுவதற்கு வழிகாட்ட வேண்டும் என்பதை அறிவுறுத்துவது.
தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்திய அந்தச் சந்திப்பின் நோக்கம், தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்தியை கூறுவதல்ல, தமிழ் ஊடகங்களின் போக்கைச் சுட்டிக்காட்டி- தமது பக்கம் வந்து விடுங்கள் என்று கூறுவதற்கானதாகவே தென்படுகிறது.
அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான பணிகள், வேலைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ‘சிண்டு முடிந்து விடும்’ வேலையைப் பார்க்கக் கூடாது என்ற அன்புக் கட்டளையை பிரதமர் இட்டிருக்கிறார்.
தமிழ் மக்களின் நிலைப்பாட்டிலிருந்து, தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துகிறது என்பது இதிலிருந்து புரிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பதற்கு, சுதந்திர தினத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்ற சர்ச்சை, காரணமாக அமைந்திருக்கலாம்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வெளியிட்ட கருத்தின் அடிப்படையிலும் அதற்கு சார்பாக அமைச்சர்கள், ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த பீடங்கள், பிக்குகள், கடும்போக்குவாத அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளியிட்ட கருத்துக்கள் தான் இந்த விவகாரத்தை பூதாகாரப்படுத்தியிருந்தன.
அதனை விட்டுவிட்டு, தமிழ் ஊடகங்கள் தான் இவற்றை பெரிதுபடுத்தி விட்டன என்பது போல, அரசாங்கம் கருதுவதாக தெரிகிறது.
இந்த விடயம் தொடர்பான பங்காளிக் கட்சிகளின் கருத்துக்கள் எல்லாம் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்று ஒரு போடு போட்டிருக்கிறார் பிரதமர்.
அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன கூட, சிங்கள மொழியிலேயே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது தான் 69 இலட்சம் மக்களின் ஆணை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கூட, அதிகாரபூர்வமானவையா என்று கேள்வி எழுப்ப வேண்டிய நிலை உள்ளதை பிரதமர் மஹிந்தவின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
தேசிய கீத விவகாரத்தில் தமிழ் ஊடகங்கள் இனவாதத்தை கிளறிவிடவில்லை. ஆனால் சிங்கள அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெறுப்பையும் இனவாதத்தையும் தான் உமிழ்ந்தன என்பதை மறந்துவிட முடியாது.
ஒரு நாட்டுக்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க முடியும் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ கூட கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் சிக்கலாகியதும் அவர்கள் நழுவிக் கொள்ளப் பார்க்கின்றனரே தவிர, எல்லோருடைய அடிப்படை எண்ணப்பாடும் ஒரேவிதமானதாகத் தான் இருக்கிறது.
இனிமேலாவது தமிழ் ஊடகங்கள் இணக்கப் போக்குடன் செயற்பட வேண்டும் என்ற தொனியில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் ஊடகங்கள் தொடர்பாக அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் ‘கோள் மூட்டி’ விடுவது தமிழ் ஊடகங்களின் வேலை அல்ல. அதேவேளை, தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் போது, அந்த மக்களின் நலன்களையும் அவர்களின் அபிலாஷைகளையும் தமிழ் ஊடகங்கள் மறந்து விடவோ அதனைப் புறக்கணித்து நடக்கவோ முடியாது.
அவ்வாறு புறக்கணித்து, தமிழ் மக்களின் நலன்களை மறந்து செயற்பட முனைந்த அரசாங்கத்துக்கு துதிபாடும் வேலையை மாத்திரம் மேற்கொண்ட ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போனது தான் வரலாறு.
தமிழ் மக்களின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் அரசாங்கத்துக்கு காவிச் செல்லுகின்ற ஒரு அஞ்சல்காரனாகத் தான் தமிழ் ஊடகங்கள் செயற்படுகின்றன.
அதனை அரசாங்கம் தனக்கு எதிரான விமர்சனங்களாகவோ தமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்ற செயற்பாடாகவோ நோக்குவது அபத்தம்.
தமிழ் மக்களுடன் நெருங்கி செயற்பட விரும்பினால், அதற்கான வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டியதும் அதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பு.
உதாரணத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு பற்றி தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தெளிவான எந்தக் கருத்தையும் வெளியிட வில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது அபிவிருத்தி மட்டும் தான் தீர்வு என்று குறிப்பிட்டிருந்தார்.
அபிவிருத்தியைத் தவிர வேறெந்த உபாயமும் அரசாங்கத்திடம் இல்லாத நிலையில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்துக்கான தீர்வு என்ன என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பின.
அரசியல் தீர்வு என்ற விடயத்தை அபிவிருத்தி என்ற படகின் மூலம், கடந்து செல்வதற்கு புதிய அரசாங்கம் முனைகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அதனை பகிரங்கப்படுத்தி, கேள்வி எழுப்பியது தமிழ் ஊடகங்கள் தான்.
அந்தக் கேள்வி தான், இப்போது பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவையும் வாயைத் திறக்க வைத்திருக்கிறது.
இப்போது தான் அவரும் அமைச்சர்கள் சிலரும் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டு பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
13 பிளஸ் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய போது இப்போதும் கூட தான் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன் என்று பதிலளித்திருக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ.
அதேவேளை, அவர் சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது என்றும் சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வு ஒன்றை தான் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வு கிடைக்காது என்பதும் சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வு தான் கிடைக்கும் என்பதும் யாசகம் கேட்பவருக்கும் கொடுப்பவருக்குமிடையில் எத்தகைய தொடர்பு இருக்கிறதோ அதனைத் தான் நினைவுபடுத்துகிறது.
யாசகம் கொடுப்பவரின் மனோநிலையில் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நிலைப்பாட்டில் தான் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அவரது அரசாங்கம் உள்ளது.
பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை, 69 இலட்சம் மக்களின் ஆணை இது என்ற வாசகங்களின் மூலம் அரசியல்வாதிகள் தான் முடிவுகளை எடுக்கிறார்கள் அறிவிக்கிறார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை, எந்த அடிப்படையில் தீர்வைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவோ அவரது அரசாங்கமோ ஒருபோதும், வெளிப்படுத்தியதில்லை. இப்போது நிலைமை இன்னமும் மோசமாகியுள்ளது.
தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த, அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் விரும்பினால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றிய ஆரோக்கியமான நகர்வுகளை முன்னெடுத்திருக்கலாம்.
அவ்வாறான முயற்சிகளில் இறங்கினால் பொதுத்தேர்தலில் தனிச் சிங்கள வாக்குகளால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறும் கனவு தோற்றுப் போய் விடலாம் என்ற அச்சத்தினால் அரசாங்கம் மௌனமாக இருக்கிறது.
ஆனால் தமிழ் மக்களோ, தமக்கான அரசியல் தீர்வு காணாமல் போகச் செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் கவலையும் அச்சமும் அரசாங்கத்துக்கு புரிகிறதோ இல்லையோ, அதன் கவலைகளும் அச்சமும் சிங்கள மக்களின் வாக்குகளின் மீதே இருக்கின்றன.
தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றி, சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்றுக் கொள்வது முடியாத காரியம். ஏனென்றால், சிங்கள பௌத்த பேரினவாதம் அவ்வாறானதொரு புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறது.
இதனை மீறி அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. அவ்வாறானதொரு மனோநிலையில் இருக்கின்ற அரசாங்கத்துடன் தமிழ் மக்களால் இணங்கிச் செயற்படவும் முடியாது.
ஏனென்றால், தமிழ் மக்கள் நம்பி நம்பி இழந்து விட்டவை ஏராளம். இனிமேலும் ஏமாந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அவர்களிடம் எப்போதும் இருக்கும்.
எனவே, தமிழ் மக்களுடன் உறவுகளைப் பலப்படுத்தி, அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடியதொரு ஆக்கபூர்வமான செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்திருந்தால் அதன் மீது ஊடகங்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
அவ்வாறானதொரு நிலையில் எந்தவொரு தமிழ் ஊடகமும், சிண்டு முடியும் வேலையை செய்து விட முடியாதே.
சத்ரியன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM