இணையம் இல்லாத உலகினை எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு அது மனித வாழ்வுடன் இணைந்ததாக மாறிவிட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விடயங்களும் இணையத்தினை அடிப்படையாக கொண்டே கட்டியெழுப்பப்படுகின்றன. எனவே, இந்த இணைய வலையமைப்பினை கட்டியெழுப்புவதால் ஏற்படும் வர்த்தக வாய்ப்பினைக் கருத்திற் கொண்டு, அதனை வெவ்வேறு அணுகுமுறைகளில் கட்டமைக்க பாரிய வர்த்தக நிறுவனங்கள் முண்டியடிக்கின்றன. இதில் ஒரு முறையாக சமுத்திரங்களினூடான ஒளியியல் தரவு கடத்திகள் கட்டமைக்கப்பட்டு விரைவான இணைய வலையமைப்பு விரிவாக்கப்பட்டு வந்தது. இதற்கு அடுத்தபடியாக, புவியை வலம் வரும் செய்மதிகள் ஊடாக இணைய வலையமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்புத் திட்டத்திற்கான மூன்றாம் கட்ட செய்மதிகள் கடந்த 6 ஆம் திகதி ஏவப்பட்டன.
விண்ணில் செய்மதிகளை ஏவி இணைய இணைப்பினை விண்ணிலிருந்து வழங்கும் கருத்திட்டத்தினை ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத் தலைவர் எலொன் மொஸ்க் முன்வைத்தபோது, அனைவரும் அத்திட்டம் குறித்து கேலி செய்தனர். ஏனெனில், அவர் உலகம் முழுவதற்குமான இணையத்தினை வழங்குவதற்கு 42,000 செய்மதிகளை ஏவ வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது, தற்போது புவியை வலம்வரும் செய்மதிகளின் எண்ணிக்கையிலும் பல மடங்கு அதிகமானதாகும். இந்த முயற்சியில் முன்னோக்கி நகர்ந்த எலொன் மொஸ்க், முதற்கட்டமாக இதற்கான அனுமதியினை அமெரிக்காவின் அனுமதி வழங்கும் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இதன்பின்னர், முதலாவது கட்டமாக 60 செய்மதிகள் கடந்த வருடம் மே மாதம் விண்ணிற்கு ஏவப்பட்டன. இரண்டாவது கட்டமாக மற்றைய 60 செய்மதிகள் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இவ்வருட ஆரம்பத்தில் மூன்றாம் கட்ட செய்மதிகள் 60 விண்ணிற்கு அனுப்பப்பட்டு, மொத்தமாக 180 செய்மதிகள் விண்ணிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த செய்மதிகள் ஏவுகலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, படிப்படியாக புவித்தாழ் ஒழுக்கில் நிலைப்படுத்தப்படுகின்றன. 6 தொடக்கம் 8 கட்ட செய்மதிகள் அனுப்புகையுடன் முதற்கட்ட இணைய சேவை வழங்கல் ஆரம்பிக்கும் எனவும் 24ஆவது கட்டமாக செய்மதி அனுப்பிய பின்னர், உலகளாவிய இணைய இணைப்பிற்கான ஆரம்பம் சாத்தியம் எனவும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ தெரிவித்துள்ளது. எனினும், முன்மொழியப்பட்ட அதிவேக தரவு பரிமாற்றம், தாமதமற்ற இணைய வழங்கல் என்ற முன்னேற்றகரமான இலக்கினை அடைவதற்கு 42,000 செய்மதிகள் என்ற இலக்கு எய்தப்படவேண்டும் எனக் குறிப்பிடப் படுகின்றது.
இந்த செய்மதி இணையத் திட்டம் புவிக்கான விரைவான இணைய வலையமைப்பைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இதன் நீண்டகால நோக்கில், மனிதர் குடியேற எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோளிற்கும் புவிக்குமான தகவல் தொடர்பாடலினை விருத்தி செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இந்த இலக்கினை அடைவதற்காக, இத்திட்டம் தொடர்பான அடுத்தகட்ட செய்மதித் தொகுதிகளை தொடர்ச்சியாக ஏவுவதற்கு ‘ஸ்பேஸ்எக்ஸ்’ திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஏவுகையின் போதான முதற்கட்ட உந்தத்தினை வழங்கும் பகுதியை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் வழியினை ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. இது, உந்து இயந்திரத்தினை புதிதாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் காலத்தினை இல்லாமல் செய்துள்ளது. கடந்த 6 ஆம் திகதி உபயோகிக்கப்பட்ட உந்து இயந்திரம் 48 ஆவது தடவையாக மீளப் பயன்படுத்தப்பட்டதாகும். எனவே, எதிர்வரும் மாதங்களில் இத்திட்டத்திற்கான செய்மதி ஏவுகைகள் தொடர்பான செய்திகளை எதிர்பார்க்கலாம்.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று “இணையமின்றேல் இன்றைய நாள் இல்லை” என்னுமளவிற்கு அதனூடான சேவைகள் மனிதருக்கு அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எனவே, தடை, தாமதமற்ற அதிவேக இணைய வழங்கல் சேவைகள் மனிதர் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
பெரும் எண்ணிக்கையிலான செய்மதிகளை விண்ணிற்கு ஏவி, அவற்றினை சிறப்பாக முகாமை செய்யாதுவிடின் அது, விண்வெளிக் குப்பைகள் பெருகுவதற்கு இடமளிக்கும் என்பது திண்ணம். இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்படும் விண்வெளிப் பயணங்களுக்கு, இவைகள் எமனாகவும் மாறிவிடவும் கூடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM