“அதிகாரத்துவ பாதுகாப்பு அரசியலை நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில், eastasiaforum என்ற இணையத்தில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
ரொட்ரெடாமில் உள்ள Erasmus பல்கலைக்கழகத்தில், சமூக கற்கைகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் மோதல்கள் மற்றும் அமைதிக் கற்கைகள் பீடத்தின் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் ஷியாமிகா ஜயசுந்தர இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரையின் இறுதிப் பந்தியில், வன்முறை தொடர்பான நிபுணர்களால் கட்டுப்படுத்தப்படும் ஆட்சி, ஜனநாயக எதிர்ப்புக் குரல்களுக்கும், சிறுபான்மை சமூகங்களின் நீடித்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் குறைந்தளவு இடமே அளிக்கப்படுவது போன்ற காரணிகளால், இலங்கை இன்னும் சர்வாதிகார பாதுகாப்பு அரசியலை நோக்கி வருவதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் ஷியாமிகா ஜயசுந்தர.
இந்தக் கட்டுரை வெளியாகிய அடுத்த சில நாட்களில், சிங்கப்பூரின் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
ஜனவரி முதல் வாரத்தின் இறுதியில், மூன்று நாட்கள் பயணமாக வந்திருந்த அவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடன் நடத்திய பேச்சுக்கள் குறித்து, ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்றே கூறலாம்.
அந்தப் பேச்சுக்களின் உள்ளடக்கம், ஷியாமிகா ஜயசுந்தரவின் கட்டுரையின் இறுதி பந்தியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது என்பதில் சந்தேகமில்லை.
இணையப் பாதுகாப்பு, வெறுப்பு பேச்சு சட்டங்கள், சமூக ஊடக புலனாய்வு, பயோமெட்ரிக்ஸ் ஆகிய நான்கு விடயப் பரப்புகளை மையப்படுத்தி, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ.
பொதுவாக இரண்டு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்ளும் போது, இருதரப்பு உறவுகள் குறித்து பேசிக் கொள்வது வழக்கமான ஒன்று. அதற்கு அப்பால் முதலீடுகள், பொருளாதார உறவுகள் குறித்துப் பேசப்படுவதும் வழக்கம். அந்த வகையில் சிங்கப்பூர் சட்ட மற்றும் உள்துறை அமைச்சருடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இருதரப்பு உறவுகள் குறித்து பேசியதில் ஆச்சரியம் இல்லை.
அதேவேளை, பொருளாதார முதலீடுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், முதலாவது பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டம், சிங்கப்பூரை தளமாக கொண்ட நிறுவனத்துக்கே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் ஷங்ரிலா விடுதிக்கு அருகில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை, 250 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டத்துக்காக அரசாங்கம் வழங்க முடிவு செய்திருக்கிறது.
இன்னும் கூடுதல் முதலீடுகளை சிங்கப்பூரிலிருந்து ஈர்க்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதுகுறித்த பேச்சுக்கள் இடம்பெற்றிருப்பினும், அதைவிட முக்கியமான சில விடயங்கள் பேசப்பட்டிருப்பது தான் கவனிக்கத்தக்கது.
தீவிரவாத முறியடிப்பு, இணைய பாதுகாப்பு, அடிப்படைவாதத்தை ஒடுக்குதல், வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் தலையீடுகள் குறித்த அச்சுறுத்தல்கள், புலனாய்வு முன்னேற்றம் குறித்து சிங்கப்பூர் அமைச்சருடன் விரிவாகப் பேசியிருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ.இந்த விடயங்களில், சிங்கப்பூரிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் அதனுடன் இணைந்து செயற்படவும் இலங்கை விரும்புகிறது.
சிங்கப்பூரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு சட்டம், இணையத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுதல், மத நல்லிணக்கத்தை பராமரித்தல், சட்டம் மற்றும் தரவு முகாமைத்துவத்துக்காக சமூக ஊடக புலனாய்வு மாதிரிகள் ஆகியவை குறித்தும் பேசப்பட்டுள்ளன. இதற்காக கையாளப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் சிங்கப்பூரின் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விடயங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடியனவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த விடயப் பரப்புகளினுள் அடங்கியிருக்கும் விடயங்கள் தீவிரமானவை.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், பொதுவாக நாட்டை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று தேர்தலின் போது வாக்குறுதிகளைக் கொடுப்பது வழக்கம். அது வெறுமனே பொருளாதாரச் செழிப்பை மாத்திரமே, அர்த்தப்படுத்துகின்ற விடயம்.
1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் தான் இருந்தது. சிங்கப்பூரை வடிவமைத்த சிற்பி என்று அடையாளப்படுத்தப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, இலங்கைக்கு வந்திருந்த போது, இலங்கையைப் போல சிங்கப்பூரை மாற்றுவோம் என்று கூறியிருந்தார்.
ஆனால், அதற்குப் பின்னரான 50 ஆண்டு சரித்திரத்தில், இலங்கை படு பாதாளத்துக்குள் வீழ்ந்து விட்டது. சிங்கப்பூர் எட்ட முடியாத உயரத்தை தொட்டு விட்டது.
அரை நூற்றாண்டுக்குள் சிங்கப்பூர் அடைந்திருக்கின்ற வளர்ச்சி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது. சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ அறிமுகப்படுத்திய, சுதந்திர பொருளாதார கொள்கையும் ஊழல் இல்லாத முறைமையும் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளன.
சிங்கப்பூரின் பொருளாதாரம் சுதந்திரமான, மிகவும் புதுமையான, போட்டித்தன்மை வாய்ந்த, ஆற்றல்மிக்க, வணிக நட்பு வாய்ந்த ஒன்று எனக் கூறப்படுகிறது.
அவ்வாறானதொரு முன்னுதாரணத்தைப் பின்பற்றுவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் இலக்குகளில் ஒன்றாக தெரிகிறது.
அபிவிருத்தியின் மூலம், நாட்டின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து விடலாம் என்று அவர் கருதுகிறார்.
சிங்கப்பூரிலும் கூட 1969இல் இன ரீதியான மோதல்கள் உருவெடுத்திருந்தன. அதற்குப் பின்னர், லீ குவான் யூ விரைவான பொருளாதார வளர்ச்சி, வணிகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான ஆதரவு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளக ஜனநாயகம் ஆகியவற்றின் மூலம், சிங்கப்பூரை முன்னேற்றப் பாதைக்கு நகர்த்தினார்.
அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட சில கடுமையான சமூக ஒழுங்கு கட்டுப்பாடுகளும் ஊழலை ஒழிக்கும் நடைமுறைகளும் அந்த இலக்குகளை அடைய பெரிதும் உதவியது. சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருப்பதற்குக் காரணம், அதன் அழகு மாத்திரம் அல்ல. சுத்தமான நகராக இருப்பதும் தான்.
சிங்கப்பூர் சுத்தமான நகராக இருப்பதற்கு அங்குள்ள இறுக்கமான சட்டங்கள் தான் காரணம். அதுபோல ஊழல்கள் குறைவாக இருப்பது, முதலீட்டாளர்களை ஈர்க்க வைத்தது. கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கம் சிங்கப்பூரின் முன்மாதிரிகளையே பல விடயங்களில் பின்பற்ற முனைகிறது. ஆளும்கட்சியினர் பலரும், கோத்தாபய ராஜபக் ஷவை இலங்கையின் லீ குவான் யூ என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
பொருளாதாரச் செழிப்பினால், இனப்பிரச்சினை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியும் என்று நம்புகின்ற ஒருவராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இருக்கிறார்.
இராணுவப் பின்னணியைக் கொண்ட அவர், இறுக்கமான ஒரு ஒழுக்க கட்டமைப்புக்குக் கீழ் தான், அவ்வாறான பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியை எட்ட முடியும் என்று நம்புகிறார்.
அதற்காக அவர், ஜனநாயகத்தில் கை வைப்பதற்கும் தயாராகவே இருக்கிறார். அதற்கும் அவர் சிங்கப்பூரின் அனுபவங்களையும், வழிமுறைகளையும் தான் நம்பியிருக்கிறார் என்பதை, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்துடன் நடத்தியுள்ள பேச்சுக்கள், மையக் கருத்துக்களை வைத்து உணர முடிகிறது.
சிங்கப்பூர் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அது ஒரு வெஸ்ட் மினிஸ்டர் முறை பாராளுமன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும், ஜனநாயக நாடு என்று கூறப்பட்டாலும், அது முழுமையான ஜனநாயக நாடு அல்ல என்பதே உண்மை.
2018ஆம் ஆண்டுக்கான ஜனநாயக சுட்டியில், (Democracy Index-– 2018) சிங்கப்பூர், “குறைபாடுள்ள ஜனநாயகம்” (flawed democracy) கொண்ட நாடு என்று விபரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், அங்கு ஜனநாயகத்தின் முக்கியமான பல அம்சங்களாக கருதப்படும் பேச்சு, ஊடக சுதந்திரம், சிவில், அரசியல் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதேயாகும்.
ஆர்.எஸ்.எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு 2019இல் வெளியிட்ட ஊடக சுதந்திரப் பட்டியலில், 180 நாடுகளில் சிங்கப்பூர், 151ஆவது இடத்தில் தான் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை 126ஆவது இடத்தில் இருக்கிறது.
சிங்கப்பூரின் அரசியலமைப்பில் 14(1) பிரிவு, பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை, அதே அரசியலமைப்பின் 2 ஆவது உப பிரிவினால் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
தகுதி மற்றும் நல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும், வலுவான கிட்டத்தட்ட சர்வாதிகார அரசாங்கமாகச் செயற்படும், சிங்கப்பூரின் தனித்துவமான கலவை, "சிங்கப்பூர் மாதிரி" என்று அழைக்கப்படுகிறது. இது சிங்கப்பூரின் அரசியல் உறுதிப்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் இணக்கமான சமூக ஒழுங்கு போன்றவற்றுக்கான ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. அதே பாணியிலான ஒரு மாதிரியை இலங்கையில் அறிமுகம் செய்யும் திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் இருக்கிறது.
இணையப் பாதுகாப்பு, வெறுப்பு பேச்சு சட்டங்கள், சமூக ஊடக புலனாய்வு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டுள்ள பேச்சுக்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்துதல் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த சிங்கப்பூர் முன்மாதிரியை பின்பற்ற தற்போதைய அரசாங்கம் தயாராகி வருகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பதவியிலிருந்த போது ஊடக சுதந்திரம் மிக மோசமான நிலையில் இருந்தது. அப்போது, ஆர்.எஸ்.எவ். ஊடக சுதந்திர பட்டியலில் சிங்கப்பூரை விட பின்னால் 165 ஆவது இடத்தில் இலங்கை இருந்தது.
மீண்டும் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கினால், பழைய இடத்தை நோக்கியே நகரும் ஆபத்து உள்ளது.
ஜனநாயகம், நல்லிணக்கம் போன்றவற்றுக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்று பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, எள் என்றால் அதனை எண்ணெயாக்கிக் கொடுக்கக் கூடியவர் அவர். அவரிடமிருந்து இவ்வாறான கருத்து வெளியாகியது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கது அல்ல.
தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்காக ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படுவதைப் பற்றி தற்போதைய அரசாங்கம் கவலைப்படக் கூடிய ஒன்று அல்ல. சிங்கப்பூரின் ஜனநாயகம் குறைபாடானதாக இருந்தபோதும், சர்வதேசம் அதனை முன்மாதிரியான ஒரு நாடாக பார்க்கிறது. ஏனென்றால், சட்டத்தின் ஆட்சி விடயத்தில் சிங்கப்பூர் முன்னுதாரணம் மிக்க நாடாக உள்ளது அதற்கு முக்கிய காரணம். 2019ஆம் ஆண்டின், உலக நீதி திட்டத்தின் சட்டஆட்சி பட்டியலில், உலகின் 126 நாடுகளில் சிங்கப்பூர் 13 ஆவது இடத்தில் இருக்கிறது.
ஆனால் இலங்கை 63 ஆவது இடத்தில் இருக்கிறது. சட்டத்தின் ஆட்சி இப்போது இன்னும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவது என்ற இலக்கு பொருளாதார அபிவிருத்தியை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கப் போவதில்லை. அது உரிமைகளை மட்டுப்படுத்துவதாகவும் தான் இருக்கும். பொருளாதார அபிவிருத்தியை செய்தால், இலங்கையும் சிங்கப்பூராக மாறிவிடும் என்று கருதக் கூடாது. சிங்கப்பூரைப் போலவே, சட்டத்தின் ஆட்சியும் இங்கு முக்கியமானது.
- கார்வண்ணன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM