சுதந்திரம் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து இலங்கையின் அரசியலிலும் நாட்டு மக்களின் ஒற்றுமை மனோநிலையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிற்று. இலங்கை மக்கள் என்று பொதுமைப்படுத்தி யோசிக்கப் பழக்ககப்பட்டிருந்த பிரஜைகளிடத்தே இனரீதியான சிந்தனை ஒரு புற்றுநோய்போல கிளைவிட்டு மெல்லமெல்ல அதன்பாட்டுக்குப் பரவத் தொடங்கிற்று. இதனை நமது பிரதிநிதித்துவ அரசியலின் ஜனநாயக வழிமுறை நன்கு தூபமிட்டு வளர்த்தது.
அது இலகுவாக அதிகாரத்தைக் கையகப்படுத்தும் நோக்கத்தையும்,கைப்பற்றிய அதிகாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கத்தையும் பிரதானமாகக் கொண்டது மட்டுமன்றி, அதிகார வேட்கையுள்ளோரின் ஒரு போர்க்கருவியாகவும் அது பயன்பட்டு வந்துள்ளது. இதன் உச்சக்கட்டம் தலைதூக்கும்போது சிறுபான்மைத் தமிழர்களுக்கான அத்துமீறலும் இனவன்முறையும் காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வந்தது.
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கையின் புவியியல் வரைபடம் உலகின் பலபாகங்களுக்கும் தெரிய வந்தது. அதற்கான அடிப்படைக்காரணம் அவ்வாண்டு இலங்கை முழுவதுமாக தழிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற காலக்கறை படிந்த ஜூலைக் கலவரம். 1958,1978, 1981ஆகிய காலக்கட்டங்களிலும் கூட தமிழ்மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. ஆனாலும் சர்வ தேசரீதியான முக்கியத்துவத்தை அவை பெருமளவுக்குப் பெறவில்லை.
1978, 1981 ஆகிய காலங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தபோது அதனை தங்கள் விடுதலைப் பரீட்சைக்கான ஒரு பாடத்திட்டமாகவே தமிழ்த்தலைமைகள் எடுத்துக்கொண்டன. அதற்கு வாய்ப்பாக அப்போது எதிர்க்கட்சித் தலைமை என்ற சிம்மாசனத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்ற தியாகதீபம் அமர்ந்திருந்தார். தனது காலக்கட்டத்தில் நிகழ்ந்த தன்னுடைய இனத்துக்கு எதிரான வன்முறைகள்பற்றி தனது பதவியின்மூலம் சர்வதேச அளவில் ராஜதந்திரரீதியாக சாதிக்க முடிந்த அனைத்தையும் அவர் முழுமூச்சுடன் செய்து முடித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைமை எனும் அந்தப் பதவியின் பின்னாலுள்ள அந்தஸ்தின் உதவியுடன் யாரின் கட்டுப்பாட்டிலே உள்ள ஸ்விச்சை எந்த இடத்தில்வைத்துப் போட்டால் உலகப்படத்தின் பல்வேறு திக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் எரியத் தொடங்கும் என்பதை அவர் அனுபவப்பாடமாகக் கற்றுக்கொண்டார். அதன்படி 1983இன் கலவரமும் தமிழ்மக்களுக்கு எதிராகப் பயங்கரமாக உருவெடுத்தபோது,தான் ஏற்கனவே தன்னுடைய பதவிமூலம் அடையாளம் கண்டிருந்த ஸ்விச்சுக்களைஅமுக்கி உலகின் பல பாகங்களுக்கும் அந்த நிலைமையின் பயங்கரத்தைப் பிரகடனம் செய்தார்.
அதனால் தமிழீழத்தின் போராளிகள் சர்வதேசத்தின் முழுமொத்தக் கவனஈர்ப்பினையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து செல்லவும்சிவில் சமூகத்தினர் தங்களின் ஜீவமரணப்போராட்டத்துக்கு ஒரு முடிவைப் பெற்றுக்கொள்ளவும் அதன்மூலம் வழியேற்பட்டது. புலம்பெயர்ந்துபோன மக்கள் மனோ உறுதியுடன் பல்வேறு திக்குகளுக்கும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு சென்றனர். இப்பிரச்சினைக்கு உள்ளே சர்வதேசத்தின் பச்சாதாபம் மென்மேலும் தூண்டப்பட்டது.
இவை கலவரங்களின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அனுகூலமான பக்க விளைவுகளே. அதேவேளை,மீண்டும் ஒருமுறை சிறுபான்மையினரின் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்று விடக்கூடாது என்பதுநிச்சயமாக நிகழத்தக்க முறையில் பேரினவாதம் தனக்கான ஆகச்சிறந்த தேர்தல்முறையை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் எனும்பெயரில் வகுத்துக்கொண்டது.
அதேவேளை பின்வரும் அம்சங்களும்அதன் பிரதிகூலங்களாக அமைந்துவிட்டன. அவற்றின் மூலம் முழுமொத்த இலங்கைச் சமூகமும் சொல்லொணாத் துயரங்களுக்குள் சிக்குண்டது.
முதலில் தீராப்பசியோடு மிகக்கவனமாக தருணம் பார்த்திருந்த சர்வதேச ஆயுத அங்காடி வியாபாரிகளின் தரகு முதலாளிகள் கவனம் இலங்கையை நோக்கி சுழல்மையம் கொண்டது. இதுவரை மத்திய கிழக்கிலும் கிழக்காசியாவிலும் மையம்கொண்டிருந்த ஆயுதபூஜைக்கு ஆசையூட்டும் புரோகிதர்கள் ஈழம்நோக்கி தங்கள் பார்வைகளைக் கூர்மைப்படுத்தினர். இதனால் போராளிகளுக்கு அவர்களின் ஆற்றலுக்கும் கொள்வனவுச் சக்திக்கும் (purchasing power) அளவிலான ஆயுதங்கள் அந்தத் தரகர்களால் விநியோகம் செய்யப்பட்டன. அதனைப்போல அவர்களை அழிப்பதற்கு அதனைவிட சக்தி வாய்ந்த ஆயுதமும் கருவிகளும் அரசுக்கு வழங்கப்பட்டன.இதனை விநியோகம் செய்யும் சந்தை வசதியை சர்வதேச ஆயுத வியாபாரத்தின் தரகு முதலாளித்துவம் மிகுந்த பரோபகாரத்துடன் இலங்கையின் சகல தரப்பினருக்கும் வஞ்சகமின்றி ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் ஆயுத தரகு முதலாளிகள் மேற்படி இரண்டு தரப்பாருக்கும் பூஜைக்கு வேண்டிய பவித்திரமான பொருளாக மாறிவிட்டனர்.
இரண்டாவதாக,விடுதலை இறையியல் என்ற தத்துவத்தின் கூர்மையான பார்வை சில புவிசார் அரசியல் (Geo Politics) எதிர்பார்ப்புடன் இங்கு நிலைகொண்டது. அதன் மூலம் தெற்காசியாவின் புவிசார் அரசியலில் புதியதோர் ஒழுங்கை அது ஸ்தாபிக்க முயன்றது. தமிழ் ஈழம் அமைவதன் மூலம் அதற்கான நிலப் பரப்பைத் தெற்காசியாவில் உருவாக்கிக்கொள்ளலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு பிறிதொரு வகையான முக்கியத்துவம் இருந்தமையால் அவர்களின் பிரசன்னத்தையும் அடக்கி வாசிக்கவேண்டிய அவசியம் உள்ளூர் அதிகாரத்துக்கு இருந்தது. ஆனாலும்கூட, பிராந்திய விஸ்தரிப்புவாதத்தின் அடங்காப்பசியுடனான எதிர்வலுச் சமநிலைக்கு விடுதலை இறையியலால் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க முடியாமல்போய்விட்டது. ஏனெனில் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இயங்கியலின் பின்னால் செல்வாக்குச் செலுத்திய வேறோர் அணியினர் விடுதலை இறையியலாளர்களை மிகவும் கவனமாக கையாண்டனர். அதனால்தான் பிற்காலத்தில் நோர்வேயால்கூட இலங்கையில் ஆழக்கால் பதிக்க முடியவில்லை.
மூன்றாவதாக ஏற்பட்ட எதிர்வினை, அகன்ற பாரதக் கனவுடன் கூடிய இந்திய விஸ்தரிப்புவாதம் ஈழத்தை நோக்கி வெளிப்படையாகவே அகலக்கால் பதிக்கத் தொடங்கியமை. அதனால்,அகன்ற பாரதக் கனவுகளுக்கு எதிரான தெற்காசிய மற்றும் கிழக்காசிய சக்திகளும் மேற்கத்தைய சக்திகளும் அவர்களின் ஆதார சுருதியான ஸியோனிஸ சாணக்கியமும் தங்கள் பார்வையின் சுழலிடத்தை இலங்கையை நோக்கி மூர்க்கமாக நகர்த்தின. இதுதான் யுத்தம் முடிந்து ஒரு தசாப்பதம் நிறைவெய்திய பின்னர்கூட இங்கு நிலைகொண்டு வேர்விட்டுள்ள அபாயம். இதனால் ஈழப் போராட்டத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் தென்கிழக்கிலங்கையில் மற்றொரு சர்வதேச வியாதியைப் பெற்றுக்கொண்டன.
அதாவது ஈழப்போராட்டத்தின் திசையறி கருவிகள் அவர்களைப் புதிய பாதைக்கு நகர்த்திச்செல்ல நிர்ப்பந்தித்தன. சிறுபான்மையின் மற்றுமொரு உபஇனமாக விசேடமான தனித்துவ அடையாளங்களுடன் காணப்பட்ட மொழிவழிச் சகோதரர்களான முஸ்லிம்களையும் தழிழ்மக்களையும் பிரித்தாளும் தந்திரம் இச்சந்தர்ப்பத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அது மேற்கத்தைய ஸியோனிஸஆயுத வியாபாரத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள ஒருபக்கம் பேரினவாதத்துக்கும்,மறுபுறத்தில் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் சகல அனுசரணைகளையும்பெற்றுக்கொள்ள தத்துவார்த்த முதிர்ச்சிபெறாத (philosophically immature) போராளி ஒட்டுக் குழுக்களுக்கும் பெரிதும் பயன்பட்டது.
இத்தகைய பின்னணியில், தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்தின் அனுதாபிகளாகவே முஸ்லிம்கள் பேரினவாதத்துக்கு அப்போது எடுத்துக்காட்டப்பட்டனர். மறுதலையாக,பேரினவாதத்தின் ஒற்றர்களாகவே வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் சர்வதேச சக்திகள் மூலமும் மற்றும் பிராந்திய விஸ்தரிப்புவாத சக்திகள் மூலமும் ஒட்டுமொத்த விடுதலைப்போராளிகளுக்கும்,எதிரிகளாக காட்சிப்படுத்தப்பட்டனர். இந்த அனைத்து முயற்சிகளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கிலும் அது செறிவுக்குள்ளான தென்கிழக்கிலும் ஸ்திரமான புவியியல் இருப்பைஅமைத்துக்கொண்டன.
இந்த இருபக்க நெருக்குவாரமும் முஸ்லிம்கள் செறிந்திருந்த புவியியல் மையப்புள்ளியை நோக்கி நகர்ந்துவந்தது. அதேவேளை, தமிழீழ ஆயுதக் குழுக்களுடன் சங்கமித்திருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் வலுவேறாக எடுக்கப்பட்டு, பேரினவாதத்தால் மட்டுமன்றி சர்வதேச ஆயுத அங்காடிகளின் தரகு முதலாளிகளாலும் எடுப்பார் கைப்பிள்ளை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த அபாயகரமான சூழலிலிருந்து முஸ்லிம் சமூகத்தையும் அதன் இளைய தலைமுறையையும் பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை முஸ்லிம் புத்திஜீவிகளால் பெரிதும் உணரப்பட்டது.
கருத்தியல் ரீதியாக இஸ்லாமிய தனித்துவத்துடன் பக்குவப்படுத்தப்பட்டிருந்த ஆங்கிலப் புலமைவாய்ந்த முஸ்லிம் புலமைத்துவ இளைஞர்களின் தோள்களின் மீதுஇருபக்க நெருக்குவாரத்தின் அழுத்தம் இயல்பாகவே வந்து விழுந்தது. ஏற்கனவே பேரினவாதத்தின் நெருக்குவார அரசியல் ஆழத்தைப் புரிந்துகொண்ட எம்.எச்.எம். அஷ்ரஃப் என்ற சட்டத்தரணி இளைஞனும் அஹமட்லெவ்வை என்ற காத்தான்குடியைச்சேர்ந்த உள்ளூர் அரசியல் தலைவர்களும் இணைந்து 1980இல் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் ஸ்தாபனத்தைத் தோற்றுவித்திருந்தனர். 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர் தோன்றிய ஆயுதம்தரித்த பேரினவாதத்தின் தோற்றத்தினால் அந்த ஸ்தாபனம் வீரியம் இழந்தபோதிலும் 1985இன் பின்னர் ஏற்பட்ட புதிய அரசியல் சூழ்நிலைகளின் அழுத்தத்தினால் புதிய வீரியத்துடன் 1986இல் அது தலைநிமிர்ந்தது.
காலத்தின் நிர்ப்பந்தத்தால் ஆயுத கலாசாரத்தின் கெடுபிடிக்குள் செதுக்கி எடுக்கப்பட்டு, ஆங்கில அறிவும் புத்திக்கூர்மையும் தீவிரவாதப் போர்க்குணம் இயல்பாகவே கலந்திருந்த, அதேவேளை சூபிஸ, வாரப்பாடு முதலிய பல்பரிமாண ஆளுமையைத் தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட மற்றொரு இளைய சக்தியான சேஹு இஸ்ஸதீன் என்ற சட்டத்தரணி இளைஞனின் பின்னணி உந்துதலுடன் அது மீளவும் பிரகாசிக்கத் தொடங்கிற்று.அஷ்ரஃபும், சேஹு இஸ்ஸதீனும் பிராந்தியமொழிமூலம் கல்வி கற்ற இளைஞர்களிடையே (Vernacular Educated Youths)ஆதர்ஸம் மிக்க ஆளுமைகளாகத் திகழ்ந்த காரணத்தால், ஆயுதக்கவர்ச்சியினால் அள்ளுப்பட்டுப்போன முஸ்லிம் இளைஞர்களும்கூட ஓடிவந்து தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு ஒரு நிவாரணமாக இவர்களைக்கருதி முஸ்லிம் காங்கிரஸை வலுப்படுத்தினர்.முஸ்லிம்களுக்கு ஆயுதரீதியான பரித்தியாகம் பெருமளவு தேவைப்படாதிருந்த இக்கட்டத்தில் அஷ்ரஃப் என்ற புலமைத்துவமிக்க இளைஞனிடம் முஸ்லிம் சமூகத்தின் சுக்கான் வந்து சேர்ந்தது. அதனால் துப்பாக்கி ஏந்தாத ஒரு போராட்டத்தை முஸ்லிம் இளைஞர்களிடையே அவர் ஏற்படுத்தினார். அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் பயங்கரமாக எதிர்த்த போதிலும் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்துடன் அறிமுகமான மாகாணசபைகளின் தேர்தல்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்டது. அதிலும் வடக்குக் கிழக்கு மகாணசபைத் தேர்தலை முகங்கொடுத்தமை அன்றைய பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கிடையே சந்தித்த பாரியதொரு சவால். இதனால் மும்முனையில் இருந்து புறப்படும் சவால்களைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் புதிய முஸ்லிம் அரசியல் சக்திக்கு ஏற்பட்டது.
அதிகார வேட்கைகொண்ட பேரினவாதத்தையும், விடுதலை வேட்கைகொண்டு ஆயுதப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபடும் தமிழ்த் தீவிரவாதத்தையும், அகன்ற பாரத வேட்கைகொண்ட இந்திய விஸ்தரிப்புவாதத்தின் பயங்கரவாத ஒட்டுக்குழுக்களையும் ஒரே நேரத்தில் முகங்கொள்ளவேண்டிய நிலைமையே அதுவாக இருந்தது. வேறு வழியின்றி இந்த மும்முனைப் போராட்டத்தை அஷ்ரஃப் தலைமை தாங்கினார்.
அவரின் புத்திக்கூர்மையும் சாணக்கியமான காய்நகர்த்தல்களும் முஸ்லிம் சமுகம் கிழக்கில் தங்கள் பெரும்பாலான தாயது நிலங்களில் கால்களை மீளவும் ஸ்திரமாக்க முடிந்தது. என்றபோதிலும் 1988இல் நிகழ்ந்த வடக்குக் கிழக்கு மாகாணசபை, 1989இன் பாராளுமன்றம், 1994இல் நடந்த கிழக்கு மாகாண பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றில் இந்த முத்தரப்பாரிடமும் இருந்து அது எதிர்கொண்ட சவால்களும் இழப்புக்களும் கொடூரமான மனக்காயங்களாகும்.
இந்தப் பின்னணியில் பல்வேறு பேரினவாத அச்சுறுத்தல்களையும், அது காலத்துக்குக் காலம் தோற்றுவித்த பிதேசவாத பிராந்தியவாத கெடுபிடிகளையும்,பயங்கரவாத தாக்குதல்களையும், நிறைவேற்று அதிகாரம் தன்னைக் கூர்பார்த்துக்கொள்ளும் கொடிய ஒருதலைப்பட்சமான வன்முறைகளையும் நிலைமாறுங்கால சதுரங்க சகுனி விளையாட்டுக்களையும் அஷ்ரஃபுக்குப் பின்னர் முஸ்லிம்களின் தலைமைப்பொறுப்பை ஏற்றுவந்த ரவூப் ஹக்கீம் முகங்கொடுக்க வேண்டியிருந்தது.
புதிய நூற்றாண்டு தொடக்கம் 2005 ஆண்டுவரையான பாராளுமன்றங்கள், உள்ளூர் அதிகார சபைகள் முதலிய பல்வேறு தேர்தல்களிலும் பல்வேறு உயிரிழப்புக்களையும் அஷ்ரஃபின் மரணத்தோடு அவர் ஸ்தாபித்த அரசியல் இயக்கம் கடந்துவந்திருக்கின்றது. அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே அந்த இயக்கத்தின் உயிரான உறுப்பினர்களைக் களையெடுக்கும் வேலைகளை நிறைவேற்று அதிகாரம் நிகழ்த்திக்காட்டி இருக்கின்றது. அவர் மறைந்ததன் பின்னர் பாரிய அளவில் தொடர்ச்சியாக இருந்துவந்த நிறைவேற்று அதிகாரங்கள் அத்தகைய காவுகொள்ளல்களை வகை தொகையின்றி நிகழ்த்தியிருக்கின்றன. தேர்தல் காலங்களில் முடிந்த அளவுக்கு பிரச்சினைகளைக் கொடுப்பதும் அதனையும் கடந்து வென்றுவந்த உறுப்பினர்களைப் பல்வேறு வகையில் அச்சுறுத்தி அவர்களின் தனிமனித பலவீனங்ளில் தன் நிறைவேற்று அதிகார வாளைக் கூர்பார்க்கும் நிறைய சந்தர்ப்பங்களையும் இக்கட்சியின் அடுத்த தலைமையின் காலம் சந்தித்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் முஸ்லிம் மக்களின் ஐக்கியம் பல்வேறு வகைகளில் குறிவைக்கப்பட்டது பிரபலமானதே.
தற்போது பேரினவாதம் ஓர் அறிவியல் யுத்தம்போல் நடத்தி முடித்திருக்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சிறுபான்மைக் கட்சிகள் உயிர்வாழ்க்கைக்கு மடிப்பிச்சை கேட்டு கையேந்த வேண்டிய ஒரு நிலைமை உருவாகியுள்ளது. அதன்வெற்றியின் பின்னர் பாராளுமன்றத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கைப்பற்றுதல் என்ற கோஷத்தை முன்வைத்து அதனை நோக்கி காய்களை நகர்த்திக்கொண்டு வருகின்றது வியத்மக என்ற அறிவார்ந்த அரசியலமைப்பு.
பொதுவாக எல்லா தரப்பிலும் உள்ள அரசியல் நோக்கர்களுக்குத் தெரியும் தற்போதுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறைமூலம் கூட்டணி அமைக்காத ஓர் அரசியல் பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது சிம்மசொப்பனம் என்பது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் தன்னுடைய உச்சபட்ச சக்தியைப் பாவித்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை பாமரர்களிடையே மட்டுமன்றி கல்வியறிவாளர்களிடமும் காணப்படுகின்றது.
எனினும் இப்போதுள்ள அரசியல் சூழலில் இவ்விலக்கை நோக்கிப் பயணித்தால்தான் அறுதிப் பெரும்பான்மையை யாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வியத்மகவாண்மையாளர்கள் சரியாகக் கணிப்பீடு செய்திருப்பர். அதனால் மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தல் என்ற பகிரங்கப்படுத்தப்பட்ட இலக்கு அந்தரங்கமாக அறுதிப்பெரும்பான்மை என்பதை நோக்கி நகர்வதைத்தான் முதன்மைப் படுத்தும்.
அதனால் பின்வரும் வேலைத்திட்டங்களை திட்டமிட்டு, அதன்வழியே அது முன்னேறிக்கொண்டு வருகின்றது. அந்த இலக்கு அடையப்படும் பட்சத்தில் மூன்றில் இரண்டு பங்கு இல்லாவிட்டாலும் அறுதிப்பெரும்பான்மை இருந்தால்கூட உறுதியான அரசு ஒன்றை வைத்து தாக்காட்ட முடியும் என்பது வியத்மகவின் அரசியல் வாண்மையாளர்களுக்குத் தெரியும். முதலாவதாக,வடக்கில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எதிரணிகளில் தீவிரமான கருத்துக்களைக்கூறி மக்களைக் கவரக்கூடியவர்களைப் பலப்படுத்தல். இதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மக்கள் குவிமையங்களைச் சிதறடித்து அவர்களின் பிரதிநிதித்துவ வாய்ப்புக்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள கட்சிகள் சிறிதளவுக்கேனும் பெற்றுக்கொள்ள வழிசெய்தல்.
உதாரணமாக விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்களின் அணிகளை நோக்கி, மக்களை கூடுதலாகக் கவரக்கூடிய எளிதான சூழ்நிலைகள் அமையுமாறு அரச கட்டமைப்புக்கு சமிக்ஞை கொடுத்தல். இதனால் கூட்டமைப்பின் ஆதரவுக் குவியலைக் குறைத்து கூட்டமைப்பின் எதிரிகளின் வாக்குகளை அதிகரிக்கும்போது,மீதிவாக்குகளில் தங்கள் ஆதரவுக்கட்சியின் உறுப்பினர் தொகையைக் கூட்டுதல். இத்தகைய நடவடிக்கைகளை வடக்கில் எடுத்து தங்கள் அதிகாரத்தைப் பாராளுமன்றில் அதிகரித்தல்.
இரண்டாவதாக,கிழக்கில் வேறொரு வாய்ப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது. கிழக்கில் கூட்டமைப்பின் ஆதரவுத்தளத்தாலும் புலிகள் அனுதாப ஆதரவுத்தளத்தாலும் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுத் தளத்தாலும் தங்களை வளப்படுத்திக்கொண்டு தற்போதைய அரசை ஆதரிக்கும் நிலையில் பல தனிநபர்கள் உள்ளனர் அல்லது தனிநபர்சார் கட்சிகள் உள்ளன. இவர்கள் எல்லோரையும் ஒருமுகப்படுத்தி, ஆளும் கட்சியின் வேட்பாளர்களாகக் களமிறக்குதல். அதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவற்றின் ஆதரவுத் தளத்தில் பாரிய சரிவை உண்டு பண்ணி, குறித்த கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை கபளீகாரம் செய்தல்.
கிழக்கை நோக்கிய இந்த அரசியல் சண்டமாருதத்தை தென்கிழக்கில் மையம்கொள்ளச்செய்து அங்கு பாரியளவில் சேதத்தை உண்டுபண்ணுவதே அடுத்த முயற்சி. இதற்கு வாய்ப்பான பல நிலைமைகள் தென்கிழக்கில் ஏற்கனவே கருக்கூட்டியுள்ளன. அதற்கு அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான துவேஷத்தை அள்ளி எறியும் வேலைத்திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னாள் பிரதி அமைச்சரும் புலிகளின் பெயரில் முஸ்லிம்களைக் கொத்துக்கொத்தாக அழித்தவருமான அம்மான் ஒருவர் வலுப்படுத்தப்பட்டுள்ளார். அவர் பொது பெரமுன சார்பில் திகாமடுல்ல தமிழ் வேட்பாளராக வருவதற்கான சாத் தியப்பாடுகளே அதிகம் காணப் படுகின்றன. ஏனெனில் அவர் தனது மாவட்டத்தைவிட தற்போதைக்கு தென்கிழக்கிலேயே அதிகம் நிலை கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத்தளத்தை உடைத்தெடுத்து ஏற்கனவே அம்பாறைத் தொகுதியில் நிலையான வைப்புப்போல் பெரமுனைக்கு இருக்கின்ற 96 ஆயிரம் சிங்கள மக்களின் வாக்குகளோடு சேர்த்து திகாமடுல்லவில் மூன்று பெரும்பான்மை இன உறுப்பினர் களைப் பெறுவதற்கு பேரினவாதம் கணக்குப்போட்டுள்ளது. கூட்டமைப்பின் தமிழ் வேட்பாளர்களும்கூட தங்கள் தலைமைகளின் அறிவுரையையும் கவனத்திற் கொள்ளாது துவேஷ கருத்துக்களையே தூவிவருகின்றனர். இதனால் யார் அதிகப்படியாக முஸ்லிம் களுக்கு எதிரான துவேஷத்தைக் கக்கி தமிழ்மக்களிடையே உணர்ச்சியை ஏற் படுத்தலாம் என்ற ஒரு போட்டி நிலையும் இங்கு காணப்படுகின்றது.
தென்கிழக்கின் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையிலும் பேரினவாதம் மற்றொரு அனுமானத்தை கொண்டுள்ளது. தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் கூட் டுப்பலவீனமாக புலனுக்குத் தெரிவது அப்பிராந்திய மக்களிடம் ஏற்கனவே தூண்டிவிடப்பட்ட பிரதேசவாதம். சென்ற பல தேர்தல்களிலும் ஊருக்கு எம்.பி. வேண்டும் என்ற கோஷத்தைக் குறிப்பாக சில ஊர்களின் மாவட்டமட்ட பலவீனமான வேட்பாளர்கள் தங்களின் ஊரைச்சேர்ந்த மக்களிடையே விதைத்து அதன்மூலம் வெற்றிவாகை சூடி அமைச்சரவையையும் அலங்கரித்துள்ளனர்.
தற்போது வேறுபல திசைகளிலும் வெவ் வேறு பல பெயர்களில் பிரதேசவாதம் வெற்றிகரமான தேர்தல் உபாயமாக இங்கு அண்மைக் காலங்களில் பரிணமித்துள்ளது. ஆகவே, தற்போதைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபரிமிதமான செல்வாக்கை உடைக்கும் பலமிக்க சக்தியாக இந்த உபாயமும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
ஆக, பேரினவாதத்துக்கு ஆதரவான சமூகச்சூழலும் ஆட்சியாளர் தனித்தனியே தம்மை இலக்குப்படுத்தலாம் எனும் அச்ச உணர்வும் தென்கிழக்கில் குறிப் பாக மையம் கொண்டுள்ளது. இந்த சூறாவளிக்குத் தமிழ், முஸ்லிம் சமூகங் களின் உண்மையான சக்திகள் எவ்வளவு தூரம் நின்றுபிடிக்கப்போகின்றன என்பதே சமூக உணர்வுள்ள மக்களின் வினாவாக இருக்கின்றது.
- கங்கத்தியப்பா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM