முஸ்லிம் மக்கள் மீதான விரோத போக்கை மேன்மேலும் வலுப்படுத்தும் வகையில் இனவாத எண்ணம் கொண்ட பௌத்த பிக்குகள், தொடர்ந்தும் தமது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இது இன நல்லிணக்கத்துக்குப் பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாளாந்தம் முஸ்லிம் மக்களையும் அவர் தம் தலைமைகளையும் மையப்படுத்தி பரப்புரைகளை மேற்கொள்வது சில பௌத்த துறவிகளுக்கு முழுநேரப் பணியாக இருக்கின்றது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் “இலங்கையில் சிங்களவர்களைப் பாதுகாக்க மூன்றாவது சக்தியொன்றின் தேவை ஏற்பட்டுள்ளது எனவும் சிங்களவர்களின் பிரச்சினைகள் பற்றிக் கதைத்தாலே தவறாகச் சித்திரிக்கிறார்கள் எனவும் புதிதாக ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கமும் சிங்களவர்களின் உரிமைக்காகப் பெரிதாக அக்கறை எடுப்பதுமில்லை” எனவும் அவர்களால் பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.
இவை சிறுபான்மையினர் மத்தியில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. முழுமையான ஆட்சிபலத்துடன் எதற்கும் அஞ்சாத இறையாண்மையோடும் பெரும்பான்மை மக்களும் அவர்களது அரசும் இந்த நாட்டில் ஆட்சி நடத்தி வருகின்ற நிலையில் இன்னமும் சிங்களவர்களின் உரிமைகள் சிங்களவர்களின் உரிமை என இவர்கள் எதனைக் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை.
இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் பெரும்பான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவற்றின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்தமையே வரலாறாக இருக்கின்றன. அதையே தற்போதைய அரசும் செய்து வருகின்றது. இத்தகைய நிலையில் இன்னமும் சிங்கள மக்களின் உரிமைகள் குறித்து அக்கறை எடுப்பதில்லை என எதனை அவர்கள் கேட்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவர்களது கூற்றுகளின்படி சிங்கள மக்களின் பாதுகாப்பு சிறுபான்மை மக்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற தோற்றப்பாடே முன்னிலைப்படுத்தப் படுகின்றது. உண்மைக்குப் புறம்பாக இவ்வாறு முன்னெடுக்கப்படும் பரப்புரைகள் ஒரு திட்டமிடப்பட்ட அடக்குமுறையைச் சிறுபான்மை மக்களின் மத்தியில் திணிக்கும் நோக்கம் கொண்டவையாக இருப்பனவாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
‘தனித்து பெரும்பான்மை மக்களால் நாம் ஜனாதிபதியைத் தேர்ந்து எடுத்துவிட்டோம் எவர் தயவும் இன்றி ஆட்சி அமைக்கப்பட்டுவிட்டது. இனி எமக்கு அமைப்புகள் தேவையில்லை அவற்றைக் கலைத்து விட்டோம்’ எனக் கூறியவர்கள். இப்போது அந்த அரசின் மீதே குற்றம் கூறுவது எதனைக் காட்டுகிறது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
தத்தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பரப்புரைகளை இனியும் சிங்கள மக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது. இதனைத் தடுத்துநிறுத்த ஜனாதிபதியும் பிரதமரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM