(ஆர்.யசி)
இவ்வளவு காலம் கூட்டு ஒப்பந்தம் மூலம்தான் தீர்வு காணலாம் எனக் கூறி அதற்காகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்திய அதே தொழிற்சங்க அரசியல் தலைவர்கள்தான் இன்று அந்த ஒப்பந்தம் பற்றிய எந்தப் பேச்சுக்களும் இல்லாமல் அரசாங்கத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை வழங்கப் போவதாக தெரிவிக்கிறார்கள். அப்போது இத்தனை கால கூட்டு ஒப்பந்தம் வெறும் நாடகம் தானா? இந்த அறிவிப்புத் தொடர்பில் கம்பனிகளினதும் நிலைப்பாட்டையும் அறியவேண்டியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா குறைந்தபட்ச வேதனம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்கவுள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு கிடைத்தால் அது வரவேற்கக் கூடியதே. முறைப்படி 2015 மார்ச்சில் செய்திருக்க வேண்டிய கூட்டு ஒப்பந்தம் 2016 ஒக்டோபரிலேயே செய்யப்பட்டது. அங்கு 19 மாதங்கள் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக் கவில்லை. அதன்பிறகு 2018 செப்டெம்பர் செய்திருக்க வேண்டிய ஒப்பந்தம் 2019 டிசம்பரிலேயே செய்யப்பட்டது. எனவே ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தோட்டத்தொழி லாளர்களுக்கு சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை. அதற்கான நிலுவைக் கொடுப்பனவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே இப்போதைய 750/= வில் இருந்து ஆயிரம் ரூபா அதிகரிப்பு சாதாரணமாக கிடைத்திருக்க வேண்டியதே.
கடந்த 2018 சம்பள பேச்சுவார்த்தைகளின்போது மொத்த சம்பளமாக 950/= ஐ வழங்க கம்பனிகள் சம்மதித்து இருந்தன. நல்லாட்சி அரசாங்கம் 50/= வழங்க அத்தனை ஏற்பாடுகளும் செய்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்த நிலையிலேயே இருந்தது. எனவே இந்த இரண்டையும் சேர்த்துத்தான் 1000/= என அறிவிக்கிறார்களோ தெரியவில்லை. அப்படி ஆயின் அது மொத்தசம்பளமே அதற்கு கம்பனிகள் பல நிபந்தனைகளையும் விதித்து இருந்தன. இப்போதைய அறிவிப்பில் அப்படியான எந்த விளக்கமும் இல்லை. ஆயிரம் ரூபா வழங்குவதற்கான பரிசீலனை அறிவிப்பாகவே உள்ளது.
ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க அரசு அறிவித்தாலும் அதனை வழங்க வேண்டிய கம்பனிகள் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. எனவே இதன் நடைமுறை சாத்தியம் பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.
கடந்த காலங்களில் கம்பனிகள் இத்தகைய அறிவிப்புகளின்போது காட்டிய எதிர் வினைகளை நாம் மறந்துவிடவில்லை. அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்து நிதி ஒதுக்கீடுகள் செய்த போதும் கூட கம்பனிகள் பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்தன.
இந்தநிலையில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த முடிந்தால் அரசாங்கமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இனி திகழவேண்டும். இடையில் கூட்டு ஒப்பந்தம் எனும் பேச்சு வார்த்தை நாடகம் அவசியமற்றது. அதற்கான உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.
பெருந்தோட்டத்துறை சார்ந்த பிரச்சினை தனியே ஆயிரம் ரூபா மாத்திரமல்ல. அந்தக் கட்டமைப்பில் மலையக சமூகம் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலைமையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த முறைமை மாற்றமே ஒரே தீர்வு . அதுவே எமது இலக்கு. தொழிலாளர்களை சம்பளத் தொகைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாது அவர்களது அடிமை வாழ்வு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM