ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பரந்துபட்ட முன்னணியானது சஜித் பிரேமதாச தலைமையிலேயே எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதுவே கட்சியின் கீழ்மட்ட ஆதரவாளர்கள் முதல் பெரும்பான்மையானவர்களின் விருப்பாக இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டுள்ளாரா?
பதில்:- நாங்கள் கிராமங்களுக்குச் செல்கின்றபோது ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாளர்களின் கருத்துக்களை உள்வாங்கிய பின்னரே கட்சியினுள் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருந்தனர். இருப்பினும் தற்போது வரையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. கலந்துரையாடல்கள் நீடித்துக்கொண்டேயிருக்கின்றன.
எவ்வாறாயினும் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் பங்காளிக் கட்சிகளும் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து சஜித் பிரேமதாஸவினை பிரதமர் வேட்பாளராக கொண்டு பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த இரண்டு வாரங்களில் கட்சியின் தலைமைத்துவம் சார்ந்த பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் அதேநேரம் பலமான அணியாக நாம் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி:- அப்படியாயின் அடுத்த பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகம் எவ்வாறிருக்கப் போகின்றது?
பதில்:- அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் களமிறங்குவாரா இல்லை பாராளுமன்றத் தேர்தல் போட்டியினை தவிர்த்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது பற்றி உத்தியோகபூர்வமாக அவர் எவ்விதமான கருத்துக்களையும் எம்முடனான கூட்டங்களின்போது பகிர்ந்து கொள்ளவில்லை.
இருப்பினும் அவர் தனது அரசியல் வாழ்க்கைக்கு சொற்பகாலத்தில் விடைகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் எம்மைப் போன்ற கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு உள்ளது.
எமது எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் அவர் தனது நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பாராயின் நாம் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்கி அனுப்பிவைப்பதற்கும் தயாராகவே உள்ளோம். மேலும், அனைத்து தரப்பினரது எதிர்பார்ப்பினையும் பூர்த்திசெய்யும் வகையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் பலமான புதிய கூட்டணியை ரணில் விக்கிரமசிங்க உருவாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
கேள்வி:- மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரை கட்சித் தலைமையே நியமிக்கின்றமையால் தற்போதைய தலைமையும் தீர்மானங்களில் அதீத தலையீட்டினை செய்ய முனைந்தால் குழப்பமான நிலையொன்று ஏற்படுமல்லவா?
பதில்:- ஆம், மத்திய செயற்குழுவானது தற்போது செயலிழந்துள்ளது. எனினும் கட்சி யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு உட்பட அனைத்து அதிகாரங்களும் தலைமையிடத்தில் உள்ளன. அதன் காரணமாகவே கட்சித் தலைமை மாற்றத்திலும் தாமதமான நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கேள்வி:- சிறுபான்மை தரப்புக்கள் உங்களது கூட்டணியில் அங்கத்துவத்தினைக் கொண்டிருப்பதால் சிங்கள, பௌத்த வாக்குகளை பெறுவதற்கு இம்முறையும் சவால்கள் ஏற்படுமல்லவா?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியானது மூன்று இனங்களையும் உள்ளீர்த்து உருவாக்கப்பட்டது என்பதே வரலாறாகும். ஆனால் ஐ.தே.க பற்றி தவறான நிலைப்பாடொன்றை எடுக்கும் வகையில் மக்கள் மத்தியில் பிரசாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவ்வாறிருக்க, பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுள்ள தற்போதைய தரப்பினரின் செயற்பாடுகள் மூலம் அவர்களின் சுயரூபத்தினை உணர்ந்து கொள்வார்கள். அதன் மூலம் எமது கட்சியையும் கொள்கைகளையும் மக்கள் புரிந்து கொள்வதற்கு சரியான சந்தர்ப்பம் நிச்சயமாக ஏற்படும்.
எது எவ்வாறிருப்பினும் இந்த நாடு பல்லினங்களைக் கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையும் கூட்டணியானது அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும். ஆகவே, பொய்யான பிரசாரங்கள் எமக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தாது.
கேள்வி:- சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் குறித்து எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடயம் சம்பந்தமாக கலந்துரையாடும் உரிமைகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றை இரகசியமாக ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொள்வது பொருத்தமற்ற செயற்பாடாகின்றது. அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல. அவற்றை நியாயப்படுத்தவும் முடியாது என்பது தான் எனது நிலைப்பாடாகும்.
ஆனாலும், வெளியிடப்பட்டுள்ள குரல்பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட போலியான பல குரல்பதிவுகள் கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட அனுபவங்களும் எமக்கு இருக்கின்றன.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகளில் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது என்று உறுதியாகக் கூறமுடியாது. ஆகவே முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்பதோடு கட்சியும் அவர் குறித்த தீர்மானத்தை எடுக்கும்.
கேள்வி:- ஊழல், மோசடிகள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதியளித்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நீங்கள் அதனை நிறைவேற்றாது தற்போது உங்களுடைய உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றபோது அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றீர்களே?
பதில்:- நாங்கள் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி அதிகாரத்தை பெற்றிருந்தது உண்மையே. ஆனால் நாம் தனித்து ஆட்சி அமைத்திருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பகுதியளவான உறுப்பினர்களும் அரசாங்கத்தில் பங்கேற்றிருந்தார்கள்.
ஊழல் மோசடிகள் சம்பந்தமாக ஆணைக்குழுக்களையும் விசேட நீதிமன்றங்களையும் அமைத்து படிப்படியாக நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தபோதும் அவற்றை முழுமையாக முன்னெடுக்க முடியாது போனது. அதனையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
அரசாங்கத்தில் இருந்தவர்கள் சிலரும் அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எமக்குள்ளன. கூட்டு அரசாங்கமாக நாம் இருந்ததன் காரணத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்றபோது சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
குறிப்பாக ராஜபக் ஷவினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்பிலும் விமர்சனங்கள் இல்லாமலில்லை. ஆகவே, அவையனைத்தும் எமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இடையூறுகளாக இருந்துள்ளன.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் முறையாக எந்த விடயங்களையும் முன்னெடுக்கவில்லை. குற்றமிழைத்தவர்களை கைதுசெய்து விசாரணைகள் மேற்கொள்ளக்கூடாது என்று நாம் கூறவில்லை. ஆனால் அதற்கான நியமங்கள் உள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதானால் அதற்குரிய நியமங்களை பின்பற்ற வேண்டும். இதனைவிடுத்து, இரவு வேளைகளில் தேடுதல்களை மேற்கொண்டு வேட்டையாட விளைவது அரசியல் பழிவாங்கலே. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
நேர்காணல் - ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM