தமிழ் சமூகத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றியைப் பெற்றுக்கொண்டது. அக்கட்சி இன்னமும் கூட சிறுபான்மை சமூகங்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதற்கான வெளிப்படையான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 2020 ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் அந்தச் சமூகங்களுடன் பொதுஜன பெரமுன உறவுகளைக் கட்டியெழுப்புவது சாத்தியமென்று அதன் தலைமைத்துவத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.
பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக சிங்கள வாக்காளர்களை தங்களுடன் வைத்திருப்பதற்காக பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் அரசாங்கமும் அவற்றின் கடும்போக்கு சிங்களப் பெரும்பான்மைவாத நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைப் பிடிக்க வேண்டியிருக்கிறது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழர்களுடன் நல்லிணக்கம் பற்றிப் பேசுவதன் மூலமோ அல்லது தமிழ்பேசும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதாக வாக்குறுதிகளை வழங்குவதோ அல்லது தற்போதைய தருணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் உறவாடி அவர்களுடன் உடன்பாடுகளுக்கு வருவதன் மூலமோ கடும்போக்கு பெரும்பான்மைவாத நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்த முயற்சியும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அதிருப்தியை மாத்திரமே சம்பாதிக்கும் என்று பொதுஜன பெரமுன அஞ்சுகிறது. சிங்கள சமூகத்திடமிருந்து சற்றேனும் எட்டச்செல்வது பாராளுமன்றத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வாய்ப்புக்களைப் பெருமளவுக்கு பாதிக்கக்கூடும்.
பாராளுமன்றத் தேர்தல் முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதிக்கம் செலுத்திய பிரச்சினைகள் பாராளுமன்றத் தேர்தல்களில் முக்கியமற்றவையாகப் போகலாம். பாராளுமன்றத் தேர்தல்களில் மாவட்டங்களின் அல்லது தொகுதிகளின் பிரச்சினைகளும் வேட்பாளர்களின் தகுதியும் மதிப்புமே முக்கியத்துவம் பெறும். பொதுஜன பெரமுன பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் நேரத்தில் ஆக 4 மாதங்கள் மாத்திரமே அதிகாரத்தில் இருந்திருக்கும் என்ற போதிலும் பதவியிலிருக்கும் அரசாங்கம் இயல்பாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.
இந்தக் காரணிகள் பொதுஜன பெரமுனவுக்குப் புதிய சவால்களைத் தோற்றுவிக்கும். இந்தப் பின்புலத்தில் அந்தக் கட்சி அதனிடம் ஏற்கனவே இருப்பதை- அதாவது சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குகளை இழப்பதற்கு விரும்பப்போவதில்லை. எனவே ஏப்ரலில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினம் வரையாவது பொதுஜன பெரமுனவின் பல்லவி “ஆயுதப்படைகளின் கௌரவத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் நல்லிணக்கச் செயன்முறைக்கு இடமில்லை”, “அரசின் ஒற்றையாட்சி கட்டமைப்பை பாதிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்கான கோரிக்கைக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை”, “தமிழ் தீவிரவாத சந்தேகநபர்களுக்கு விடுதலை இல்லை” மற்றும் “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையின் பிரகாரம் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இடமில்லை” என்பதாகவே இருக்கும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் இனவாத மற்றும் தீவிரவாத தலைவர்களுடன் தொடர்பு வைப்பதில்லை என்ற சுலோகத்தையே பொதுஜன பெரமுன உரக்கச்சொல்லும். கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னரான காலகட்டத்தில் முஸ்லிம் தலைவர்களுடனான உறவு மீதான வெறுப்பு அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிமும் சேர்த்துக்கொள்ளப்படாத (பிரதியமைச்சராகக் கூட இல்லை) அளவுக்கு சென்றிருக்கிறது.
அண்மையில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஒரு மட்டுப்பாடு இருப்பதன் காரணத்தினாலேயே எந்தவொரு முஸ்லிமும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை என்று கூறினார். ஆனால் அவரது அந்தப் பதில் எந்தவகையிலும் நம்பிக்கையைத் தரவில்லை. குறைந்தபட்சம் தற்போதைக்கு எனினும் மிதவாதிகளான தனது சொந்தக் கட்சியை சேர்ந்த பைஸர் முஸ்தபா அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கூட சேராதிருப்பதாகத் தென்படுவது தனக்கு நல்லதென்று ஜனாதிபதி உணர்ந்தார்.
சமநிலைப்படுத்தும் சக்தியாக மஹிந்த
ஆனால் சிறுபான்மை சமூகங்களிடமிருந்து தூரவிலகி சிங்கள மக்களின் ஆதரவைத் தக்கவைக்கும் தந்திரோபாயத்தை ஜனாதிபதி கோத்தபாய கடைப்பிடிக்கும் அதேவேளை, அவரது சகோதரரான பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக் ஷ சிறுபான்மை சமூகங்களுடன் தொடர்பில் இருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழக்கால் பதித்த நிலைப்பாடுகளை கொண்டிருப்பதன் காரணத்தினால் அவர்களை மஹிந்த தவிர்த்து வருகின்ற போதிலும் கூட, கடந்த காலத்திலிருந்து வேறுபட்ட முறையில் பிரச்சினைகளை நோக்கவும் அவற்றைக் கையாளவும் வேண்டுமென்ற யோசனைகளுக்கு இணங்கக் கூடியவர்களாகக் கருதப்படுகின்ற தமிழ்த் தலைவர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் சந்திப்புக்களை நடத்துகின்றனர்.
இந்தச் சிறுபான்மையின அரசியல்வாதிகள் மஹிந்தவுடனான சந்திப்புக்கள் குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது. பொதுஜன பெரமுனவின் சில கடும்போக்காளர்களைப் போலன்றி மஹிந்த ராஜபக் ஷ விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழான பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதென்பது சாத்தியமானதல்ல என்பதை அறிவார். வேறுபடுகின்ற ஆற்றல்களைக் கொண்ட பல வேட்பாளர்களுடனான மாவட்ட அடிப்படையிலான தேர்தலில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதையும் அவர் நன்கு அறிவார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது ஒரு கானல் நீராக இருக்குமேயானால் கோத்தபாய அரசாங்கம் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தைக் கைவிடுவது என்ற யோசனைக்கு மாற்றுத்தெரிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். அதாவது அந்தத் திருத்தத்தில் ஒட்டுவேலைகளை செய்து, நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியைப் பலப்படுத்துவது குறித்தும் சுமுகமான நிர்வாகத்தை நடத்துவதற்கு ஏற்றவகையில் குழப்பநிலைகளைக் குறைப்பதற்கு அதன் பிரிவுகளில் பொருத்தமான சில மாறுதல்களை செய்வது குறித்தும் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க முடியும்.
உண்மையில் 19 ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாகக் கைவிடாமல் அதை மேம்படுத்துவதற்கு பல காரியங்களை செய்யமுடியும். அதை செய்வதற்கு பாராளுமன்றத்தில் கருத்தொருமிப்பு பெறுவது சாத்தியமானது. அந்த 19ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாகக் கைவிடுவது ஜனநாயக விரோதமானதாகக் கருதப்படும். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கத்தைத் தாக்குவதற்கு ஒரு கருவியைக் கொடுப்பதாகவும் இலங்கையின் தாராளவாதிகளையும் மேலும் அந்நியப்படுத்துவதாகவும் அது அமையும்.
அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கக் கூடியவர்களும் பிறகு ஒரு கட்டத்தில் அமைச்சர்களாக அரசாங்கத்தில் இணையக்கூடியவர்களுமான கிழக்கு மாகாண தமிழ்த் தலைவர்களை வளைத்துப் பிடிக்கும் முயற்சிகளிலும் மஹிந்த ராஜ
பக் ஷ ஈடுபடுகிறார். அருண் தம்பிமுத்து, வியாழேந்திரன் எம்.பி. போன்றவர்களின் தலைமையிலான கிழக்குத் தமிழர் குழுவொன்று இருக்கிறது. அது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவது தங்களது மாகாணத்திலுள்ள தமிழர்களின் நலன்களுக்கு உகந்தது என்று உணர்கிறது.
அரசாங்கத்தில் இணைவதன் மூலம் ஆட்சியதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்ததன் மூலமும் முஸ்லிம்கள் பெருமளவுக்கு சாதித்திருக்கிறார்கள் என்று கிழக்கு தமிழர்களில் ஒரு பிரிவினர் (அவர்கள் சிறிய எண்ணிக்கையினராக இருந்தாலும்) உணர்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தமிழர்கள் ஓரங்கப்படாதிருக்க வேண்டுமானால் அவர்கள் அதிகாரத்தின் கருவிகளைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டங்களைச் செய்வதும் வீராவேச உரைகளை நிகழ்த்துவதுமான அரசியல் நடவடிக்கைகளுடன் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடாது. உணர்ச்சிப் பரபரப்புக்கு அப்பால் சென்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் அக்கறை காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
அவ்வாறான அணுகுமுறையை தமிழ் அரசியல் சக்திகள் கடைப்பிடிக்குமேயானால் தமிழர்களுக்கு நல்ல பணிகளைச் செய்வதற்கு இந்தியாவுக்கும் அது உதவியாக இருக்கும். கொழும்பின் நல்லெண்ணத்தைப் பெறுவதன் மூலமாக இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வளர்ப்பதில் அக்கறை கொண்டுள்ள புதுடில்லி தமிழ்பேசும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதில் பேரார்வமாக உள்ளது.
இந்தியாவின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவு செயலாளராக இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசியபோது அவர்கள் தங்களது அரசியல் கோரிக்கைகளிலிருந்து பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவத்தை வழங்கும் வகையில் நகர்வை செய்யவேண்டும். ஏனென்றால் அரசியல் முனையில் மட்டுப்பட்ட அளவிலான செயற்பாடுகளை மாத்திரமே இந்தியாவினால் செய்யக்கூடியதாக இருக்கும். தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் இந்தியா தன்னால் இயன்ற பணிகளை செய்திருக்கிறது. அதற்கு மேலும் எதையும் செய்யமுடியாது. கடந்த நவம்பரில் ஜனாதிபதி கோத்தபாய டில்லிக்கு விஜயம் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி செய்ததைப் போன்று இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சுயாதிபத்தியம் கொண்ட இலங்கை அரசாங்கத்துக்கு வேண்டுகோளை மாத்திரமே இந்தியாவினால் விடுக்கமுடியும். 1977 –- 1990 காலகட்டத்தில் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியும்கூட அன்றைய இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு அதைச் செய்ய முடியாமற்போன நிலையில், இந்தியாவுக்கு கொழும்பை பலவந்தப்படுத்துவதற்கான எந்த வழியும் கிடையாது.
அதிகார சமநிலையில் நகர்வு
2020 ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடும்போக்குடைய ஜனாதிபதி கோத்தபாயவை விடவும் கூடுதலான அளவுக்கு மிதவாதியாக இருக்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் கரங்களைப் பலப்படுத்தும் என்று பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான தமிழர்களில் ஒரு பிரிவினர் நம்புகிறார்கள். மஹிந்தவினதும் பசில் ராஜபக் ஷவினதும் தலைமையிலான பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறாவிட்டாலும் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்தவினதும் அவரது சகோதரர் பசிலினதும் தலைமையிலேயே தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும் என்பதால் கடும்போக்குடைய ஜனாதிபதியிடமிருந்து கூடுதல் மிதவாதத்தன்மையும் நடைமுறைச் சாத்திய அணுகுமுறையும் கொண்ட மஹிந்தவின் தலைமையிலான பாராளுமன்றத்துக்கு அதிகார சமநிலை ஓரளவுக்கு நகரும். இத்தகையதொரு நிலை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை நோக்கிய அரசாங்கத்தின் கொள்கைகளில் உருமாற்றம் ஒன்றைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
(நியூஸ் இன் ஏசியா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM