புதிய ஆண்டான 2020 பிறந்து ஐந்தாவது நாட்பொழுது நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்புதிய ஆண்டிலும் முற்றிலும் புதுமையான அனுபவங்கள் மனித குலத்திற்கு காத்திருக்கின்றன. அவை மனிதருக்கு உவப்பான அனுபவங்களையும் சிலவேளைகளில் சவால்களையும் வழங்குவதாக அமையக்கூடும். அவ்வாறான சவால்களை எதிர்கொள்வது குறித்து பல்வேறு தரப்பினரும் தத்தமது நிலைகளிலிருந்து சிந்தித்து வருகின்றனர், சிறுபான்மை இன மக்கள் தம்மீது பெரும்பான்மை இனவாத அரசுகளினால் மேற்கொள்ளப்படும் நேரடி மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட அடக்குமுறைகளை எவ்விதம் எதிர்கொள்ளலாம் எனத் தமது தயார்ப்படுத்தல்களை மேற்கொள்கின்றனர். நவீன காலனித்துவ நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரசுகள் அவற்றினை சமாளிப்பது தொடர்பான திட்டமிடல்களை மேற்கொள்கின்றனர். அறிவியலாளர்கள் தாம் கண்டுபிடித்த படைப்புக்களைக் காலத்தின் கோலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவது தொடர்பிலும், புதிய சவால்களை அறிவியலால் எதிர்கொள்ளவும் தம்மைத் தயார்ப்படுத்துகின்றனர்.
அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் அறுவடைகள் மனித வாழ்வினை வளப்படுத்தியுள்ளபோதிலும், மனிதனின் மனோவேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையவில்லை எனலாம். எனவே, அக்குறிப்பிட்ட மனோவேகத்தினை மிஞ்சும் விதத்தில் அறிவியல் படைப்புக்களை மேம்படுத்த ஆய்வாளர்கள் முனைகின்றனர். அதேவேளை, அறிவியலின் பக்கவிளைவுகளால் விளைந்த சூழல் மாசடைதல் போன்ற சவால்களை அறிவியலால் தீர்ப்பது தொடர்பிலும் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர்.
இவ்வகையில், இப்புதிய ஆண்டில் அறிவியல் உலகம் சில துறைகளில் புதிய பரிமாணத்தினைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தற்போது அடிக்கடி கேள்விப்படும் ‘குவாண்டம்’ இயற்பியல், மீள்புதுப்பிக்கப்படும் பசுமைச் சக்தி மற்றும் சிறப்பு மின்கடத்திகள் ஆகியவற்றில் புதிய அறிவியல் அடைவுகள் எய்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் அணுவிற்குள் இலத்திரன், புரோத்திரன் மற்றும் நியூ த்திரன் ஆகிய உப அணுத்துணிக்கைகள் மாத்திரமே உள்ளன என்ற கருத்து நிரூபிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இந்த உப அணுத்துணிக்கைகளைப் பார்க்கிலும் வேறு பல துணிக்கைகளும் இருக்கின்றன என்பது பல்வேறு ஆய்வுகளால் ஐயந்திரிபற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான பாரிய நிலக்கீழான ஆய்வகம் பிரான்ஸ் -– சுவிட்ஸர்லாந்து எல்லையில் அமைக்கப்பட்டு, ‘ஹிக்ஸ்போசன்’ (சிலேடையாக அழைக்கப்பட்ட கடவுளின் துணிக்கை) என்ற உப அணுத்துணிக்கை 2012 இல் கண்டறியப்பட்டிருந்தது. இதுதவிர வேறுசில ஆய்வுகளும் இக்குறிப்பிட்ட ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அணுவிற்குள் பொதிந்திருக்கும் உப அணுத்துணிக்கைகளின் நடத்தைகள், அந்நடத்தைகள் விளைவிக்கும் தாக்கங்களை அவதானித்து, குவாண்டம் இயற்பியலின் புதிய அறுவடைகள் இந்த ஆண்டில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, கணினித் துறை, தகவல் பரிமாற்றம் போன்ற அதிவேகத்தினை எதிர்பார்க்கும் துறைகளில் ‘குவாண்டம்’ பொறிமுறை தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது எமது உதடுகள் உச்சரிக்கும் இ-அஞ்சல் (e-–mail) இவ்வருட இறுதியில் க்யூ-அஞ்சல் (q-–mail) என அழைப்பதாக மாற்றமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அறிவியலால் விளைந்த பெற்றோலிய எரிபொருளை உபயோகிக்கும் இயந்திரங்கள் அறிமுகமாகியதை அடுத்து வளிமண்டலம் மாசடைவது அதிகமாகியது. இவ்வாறான இயந்திரங்களை முற்றாகத் தடை செய்வது என்பதும் இயலாத காரியமாகும். பல நாடுகளில் மின்னுற்பத்திக்கு டீசல் மற்றும் நிலக்கரி ஆகியவற்றினைப் பயன்படுத்தும் எரிதகனப் பொறிமுறையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சூழல் ஆர்வலர்களின் தொடர்ச்சியான விழிப்பூட்டல் மற்றும் உணரத்தக்கதான காலநிலை மாற்றங்கள் காரணமாக, பெற்றோலிய எரிபொருட்களை தவிர்த்து மீள்புதுப்பிக்கத்தக்க பசுமை சக்தி பிறப்பாக்கம் தொடர்பில் பலரின் கவனம் திரும்பியுள்ளது. இவ்வாண்டில் பசுமைச் சக்தி உற்பத்திப் பொறிமுறைகள் பல அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்றாவதாக, இலத்திரனியல் உலகம் எதிர்கொள்ளும் சவால் ஒன்று இந்த ஆண்டில் தீர்க்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன. இலத்திரனியல் சாதனங்களின் இயக்கம் மின்சக்தியில் தங்கியுள்ளது. கடத்தி வழியே மின்னோட்டம் நடைபெறுகையில், அக்கடத்தியில் காணப்படும் தடை காரணமாக, சக்தி இழப்பு ஏற்படுவதுடன், இழக்கப்படும் சக்தி வெப்பசக்தியாக வெளியேறி இலத்திரனியல் சாதனங்களை சூடேற்றுகின்றது. கடத்தி வெப்பமடைகையில் அதன் தடைத்திறன் அதிகரித்தும் செல்கின்றது.
சக்தி இழப்பு மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் வெப்பமடைதல் போன்ற பாதக இயல்புகளைத் தவிர்க்கும் வகையில் உயர் வெப்பநிலையிலும் சிறந்த கடத்தியாகத் தொழிற்படும் சடப்பொருளினை ஆக்கும் முயற்சிகள் அறிவியல் உலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவுகள் இப்புதிய வருடத்தில் வெளிவரக்கூடும் என எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றது.
இவை தவிர, இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் சேமிப்பு மின்கலங்களிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இந்த சேமிப்பு மின்கலங்கள் அளவில் சிறிதாகவும் அதிக மின்சக்தியை சேமிக்கும் தகவுள்ளவையாகவும் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, இவற்றினை மின்னேற்றுவதற்கான நேரத்தினை குறைக்கவும் பாதுகாப்பானதாகவும் மாற்றவும் அறிவியலாளர்கள் முயல்கின்றனர். இந்த முயற்சிக்கான அறுவடைகள் இவ்வாண்டில் எட்டப்படவும் கூடும்.
மேற்குறிப்பிட்ட எதிர்பார்ப்புக்கள், தற்போது எதிர்கொள்ளப்படும் சவால்களை முறியடிக்க அறிவியல் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்வுகூறல்களே. இரவு, பகல் என்று பாராது உழைக்கும் ஆய்வாளர்களின் கடின முயற்சிகள் மேலே கூறப்பட்ட சவால்களுக்கான தீர்வுகளை அறுவடை செய்யும் என நம்பலாம்.
சில்லையூர் றெ.அலெக்ஸ் யாழ்ப்பாணம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM