மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டு வந்தபோதிலும் இன்று அது சாத்தியப்படும் தருவாயில் காணப்படுகின்றது. மலையக மக்கள் ஒவ்வொருவரினதும் கனவாகிய மலையக பல்கலைக்கழகத்தை எம்மால் உருவாக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் இன்று மலையகத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒருமித்து செயற்பட்டு வருகின்றனர்.
இதற்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெறுவதற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பரிந்துரைக்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் தலைமையில் குழுவொன்றை அமைத்து ஆராயப்பட்டதுடன் , அதற்கான ஆரம்பக்கட்ட நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவுப்பெற்றிருக்கின்றன.
இதன் அடுத்தகட்ட வெற்றிப்படியாக நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தேசிய பல்கலைக்கழகமொன்றை உருவாக்குவது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு கடிதமொன்றை கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அவதானம் செலுத்தியுள்ளதாகவும் , அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்க்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு அவர் பதில் கடிதமொன்றை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுப்பியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இணைந்து முன்னெடுக்கவும் இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் அறிமுகம் மற்றும் கோட்பாடு என்ற இரு தலைப்பின் கீழ் பல்கலைக்கழகத்தின் அவசியம் தொடர்பில் விளக்கியுள்ள குழுவினர், பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதியால் பூரண ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.
அறிமுகம்
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை தயாரித்து பிரதம வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 32 அம்சக் கோரிக்கை பட்டியலில் முதலாவது அம்சம் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
தங்களோடு (வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ) பேச்சுவார்த்தை நடத்திய போது எங்களுடைய முதலாவது கோரிக்கையான மலையக பல்கலைக்கழகம் பற்றி கவனம் செலுத்துவதாக உறுதியளித்திருந்தார். பேச்சுவார்த்தைகளின் போது தற்போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக் கழக பரீட்சைக்காக தோன்றி தகுதி பெற்றிருந்தாலும் பல்கலைக்கழகங்களில் இடப்பற்றாக்குறையினால் 50 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. அண்மையில் வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பல் கலைக்கழக விரிவாக்கம் வெகு துரிதமாக இடம்பெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு நீண்ட கால வரலாறு உண்டு.
இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் நுவரெலியா மாவட்டத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் கருத்து உடன்பாடு இருந்தாலும் பல்வேறு காரணங்களால் இது ஒத்திப்போடப்பட்டது. நிர்வாக தாமதங்களினாலும் ஆக்கபூர்வமற்ற விவாதங்களினாலும் இது நடைமுறை சாத்தியமாகவில்லை. இந்த காலதாமதத்தினால் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. மேலும் மலையக பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவோருடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பொழுது ஒரு அவசர தேவையை பூர்த்தி செய்யும் நிலையை இது உருவாக்கியுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி நிலை இப்பொழுது உருவாகியுள்ளது.
சிந்தனை பூர்வமான விதத்திலும் ஆற்றலுடனும் கூடிய நிர்வாக திறனோடும் தங்களுடைய ஆட்சியில் துரிதமாக மலையக பல்கலைக்கழகம் உருவாகும் என்பதில் எங்களுக்கு பூரண நம்பிக்கையுண்டு. பல்கலைக்கழகம் உருவாவதற்கு மலையக சமூகம் தங்களுடைய பூரண ஆதரவை தெரிவிக்கும் என்பதில் ஐயமில்லை. இடங்களை தேர்ந்தெடுப்பது முதற்கொண்டு சகல வகைகளிலும் தங்களுக்கு உறுதுணையாக செயற்படுவோம் என்று நான் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன்.
கோட்பாடு
1942 ஆம் ஆண்டு முதற்கொண்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் 15 தேசிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இப்பொழுது வவுனியாவிலே 16ஆவது பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ளது. கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழக கல்வி நாட்டில் விஸ்தரிக்கப்பட வேண்டியது அரச நிர்வாகத்துக்கு ஒரு அடிப்படை தேவையாக இருந்தது. அதே நேரத்தில் பிரதேசவாசிகளின் கோரிக்கையும் பிரதேச அரசியல் தலைவர்களின் அழுத்தமும் இத்தகைய பல்கலைக்கழக விஸ்தரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.
கிழக்கு மாகாண தேசிய பல்கலைக்கழகமும் தென்கிழக்கு தேசிய பல்கலைக் கழகமும் முன்னாள் அமைச்சர்களான கே.டபிள்யூ. தேவநாயகம் மற்றும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆகியோரின் வேண்டு கோளுக்கிணங்க உருவாக்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தியில் பங்கேற்று சிறந்த சேவையாற்றி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் பிரதேச கலாசார விழுமியங்களை முன்னெடுத்து செல்வதில் சிறந்த பங்கு வகிக்கின்றன. இதேபோல் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் அவ்வப் பிரதேச கலாசார விழுமியங்களை முன்னெடுத்து செல்வதில் சிறந்த பங்காற்றுகின்றன. இத்தகைய செயற்பாடுகளின் மூலம் நாட்டின் அபிவிருத்தியும் கலாசாரமும் செழுமை பெறுகிறது.
மலையக பிரதேசத்தில் தற்போது 3 தேசிய பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அவையாவன பேராதெனிய, சப்ரகமுவ மற்றும் ஊவா வெல்லஸ்ஸ என்பனவாகும். மலையகத்தில் பிரதான சமூகமாக வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்களின் கலாசார விழுமியங்களும் அவர்களுக்கே உரிய சில அபிவிருத்தி பிரச்சினைகளும் கவனயீர்ப்பு பெறுவதில்லை என்பது இப்பொழுது ஓர் குறைபாடாகவுள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் நிறுவப்படவிருக்கும் தேசிய பல்கலைக்கழகம் பாரிய விதத்தில் உதவும் என்பதில் ஐயமில்லை.
முழு நாடும் அறிந்துள்ளது போல் இன்று பெருந்தோட்ட பொருளாதாரம் பாரிய சோதனைகளுக்கு ஆளாகியுள்ளது. பல தோட்டங்கள் காடாகி வருகின்றன. சில தேயிலை மலைகள் கைவிடப்படுகின்றன. தோட்டத் தொழிலாள இளைஞர்களும் யுவதிகளும் தங்களது நாளாந்த வாழ்க்கைக்கான ஊதியத்தை பெற நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த தோட்ட பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இக்கட்டான நிலையை அடைந்துள்ளது. இதை மாற்றியமைக்க புதிய விவசாய முறைகளும் பயிர்களும் அறிமுகமாக வேண்டும். நிறைய முதலீடுகள் வேண்டும். ஆனால் இதற்கு நவீன விஞ்ஞான விவசாயத்திலும் இதர துறைகளிலும் பயிற்சிபெற்றுள்ள தொழிலாளர்களும் அவசியமாகும். இதர நாடுகளிலே இத்தகைய முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் அமையவிருக்கும் தேசிய பல்கலைக்கழகம் இதற்கொரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே இது சம்பந்தமாக துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி உயர் கல்வி அமைச்சுக்கு பணிப்புரை வழங்குமாறு தங்களிடம் கேட்டுகொள்கின்றோம். சகல வழிகளிலும் பூரண ஒத்தாசை நல்க நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செ.தேன்மொழி -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM