மலர்ந்துள்ள 2020 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலும் அதைத் தொடர்ந்து வரும் மாதங்களில் கலைக்கப்பட்டுள்ள 9 மாகாணங்களுக்குமான மாகாண சபைத் தேர்தலும் நடைபெறுமென்ற எதிர்பார்ப்புமுள்ளது.
அந்தவகையில்,இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கடந்த கால பொதுத் தேர்தலை விடவும் பலப் பரீட்சை மிக்க தேர்தலாக அமையக் கூடும். ஏனெனில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கூட்டணிக் கட்சிகள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு கட்சி சார்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள வேளை ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய தேசிய முன்னணி பிரதமர் கனவோடு இத்தேர்ததலைச் சந்திக்கவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் மக்கள் சார்பான தனித்துவக் கட்சிகள் கூட்டாகவும், தனித்தும் இத்தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், அதற்கு வெளியிலும் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு முன்னணியும் ஏனைய கட்சிகளும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முன்னகர்வுகளை மேற் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைமை கள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப் போகின்றன? சமூகம் சார்பில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக எத்தகைய வியூகங்களை வகுக்கும்? இதில் முஸ்லிம் மக்கள் எத்தகைய தீர்மானத்துக்கு வரப்போகிறார்கள் என்ற கேள்விகளுக்கு மத்தியில்,தனித்துவக் கட்சிகளை நிராகரித்து பெரும் தேசிய கட்சி சார்பான வேட்பாளர்களை ஆதரிக்கும் ஒரு மன நிலைக்கு குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் வந்துவிட்டார்களா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
இவற்றுக்கெல்லாம் அப்பால் முஸ்லிம்கள் கடந்து வந்த அரசியல் பாதையில் முஸ்லிம் அரசியல் எத்தகைய நிலையில் காணப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேணடியுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் உருவான சில சூழ்நிலைத்தாக்கங்களின் விளைவுகளால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் உதயமாகியிருக்கின்றன. ஆனால், இக்கட்சிகளினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக கூட்டாக இணைந்து செயற்படவும் முடியவில்லை. இதனால், முஸ்லிம் அரசியல் பலவீனடைந்தது.
அத்துடன் கால ஓட்டத்தில் இக்கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டுக் காலம் வரை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பலமிக்கதொரு அரசியல் கட்சி உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் ஆரோக்கியமாக இதயசுத்தியோடு முன்னெடுக்கப்படவில்லை என்பதை இக்கட்சிகளின் செல்வாக்கிழப்பையும் அதனால் ஏற்பட்ட பலவீனத்தையும் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நோக்க முடிகிறது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக் காயங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டுமாயின் தன்மானத்தை இழக்காத, உறுதியான, கொள்கைப் பிடிப்போடு கூடிய, தனித்துவ மிக்க, பலமான அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என்ற சிந்தனை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்ரபிடம் உதித்தது. இந்த சமுதாயச் சிந்தனையின் வழியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி 1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1986இல் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரவு வடக்கு, கிழக்கு அரசியலில் மாத்திரமின்றி தென்னிலங்கை அரசியலிலும் விமர்சனங்களை உருவாக்கியது. இருப்பினும் அன்றைய தேவை தனித்துவக் கட்சியாகக் கருதப்பட்டதனால் முஸ்லிம் காங்கிரஸை பலமுள்ள அரசியல் சக்தியாக புடம் போட வேண்டிய நிர்ப்பந்தம் மறைந்த தலைவர் அஷ்ரப்புக்கு ஏற்பட்டது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலினூடாக 4 ஆசனங்களையும், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது 7 ஆசனங்களையும் பெற்றதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சி அஷ்ரபின் யுகத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
அத்துடன் அஷ்ரப்பின் ஆரோக்கிய மிக்க அரசியல் பயணம் தென்னிலங்கையில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆளுமையும் அரசியல் எதிர்கால வியூக சிந்த னையும் நிறைந்த அஷ்ரபின் அரசியல் பயணத்தின் வெற்றி ஒளி இலங்கை முழுதும் பிரகாசிக்கத் தொடங்கியதன் விளைவு அவரை நோக்கிய கருத்துவாதங்களையும் விமர்சனங்களையும் அதிகரிக்கச் செய்தது. அவரால் சமூக நலன்கொண்டும் நாட்டின் நலன் கருதியும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கூக்குரல்களை பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் சில்லறை முஸ்லிம் அரசியல் நபர்களைக்கொண்டே முன்னெடுக்கச் செய்யப்பட்டன.
இந்நிலையில்தான், அவரது சிந்தனை யில் மாற்றம் ஏற்பட்டது. வற்புறுத்தல், வலுக்கட்டாயமில்லாத வழிகளினூடாக மக்களைச் செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் ஒரு திட்டமிட்ட திசையில் நகர்த்திச் செல்லும் செயல்முறை கொண்ட தலைமைத்துவத்தால் நீண்ட கால, குறுகிய கால நோக்கங்களை அடைய முடியும். அதன் அடிப்படையில் பல குறுகிய கால செயற்றிட்டங்களில் வெற்றி கண்ட அஷ்ரப் நீண்ட கால செயற்றிட்டங்கள் பலவற்றையும் வகுத்துச் செயற்பட்டார். அதில் ஒன்றுதான் புது யுகத்தை நோக்கிப் புறப்பட அவர் முயற்சித்ததாகும். 2012ஆம் ஆண்டை நோக்கி என்ற அடிப்படையில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை புறாச் சின்னத்தில் ஸ்தாபித்து அதில் அனைத்து இனங்களையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் இணையச் செய்ததாகும்.
1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி குறித்து 1999ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட விவாதத் தின் போது மறைந்த தலைவர் அஷ்ரப் பாரளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "ஒரு மாற்றம் ஒன்று தேவை என்றே நான் உணர்கின்றேன். இலங்கை மக்களுடைய நாடு, ஸ்ரீலங்கா என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இனம், மதம், மொழி எனக் கருதாமல் ஒவ்வொரு ஸ்ரீலங்கா பிரஜைக்கும் நாடு சொந்தமானது. பெரும்பான்மை, சிறுபான்மைச் சமூகங்கள் எனும் வார்த்தைகள் பாவிப்பதைத் தடுக்கும் வகையிலும் அவ்வாறு பாவிப்பவர்களைத் தண்டிப்பதற்காகவும் சட்டங்கள் ஏற்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்ட அவர், "முஸ்லிம் காங்கிரஸ் பார்வையில் மனித இனமும் அனைத்து ஸ்ரீலங்கா மக்களும் ஒரு குடும்பமே. எல்லாம் வல்ல இறைவனின் படைப்புகளே நாம் அனைவரும். நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு குறுகிய பாதைகள் இல்லை என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம். அது மலர்கள் இல்லாத முட்கள் நிறைந்த, நீண்ட கஷ்டமான பாதையாகும். நாட்டில் புரையோடிப் போயிருக்கும் சில பிரச்சினைகளுக்கு விடை காண்பதில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளது.
ஐக்கியத்தையும், ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கும் பொருட்டு மூன்று நிறங்களையும் தேசியக் கொடியில் சந்திக்கச் செய்துள்ளோம். மூன்று சமூகங்களையும் கொண்டதாக, ஒற்றுமைப்பட்ட மக்களின் நிறம் ஒன்றையும் கண்டெடுப்பதில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதுதான் சிவப்பும், கருமஞ்சளும், பச்சையும் கூட்டுச் சேர்ந்த நிறமாகும். நிறம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளை அறிந்து வானவில்லின் ஏழு அழகிய நிறங்களையும் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணிக் கொடியை ஏற்றியுள்ளோம். இறைவன் நாடினால் 2012ஆம் வருடமளவில் நமது மக்கள் அனைவருக்கும் சமாதானம் கிடைக்கும் வகையில் தொழிற்படுகின்றோம்” என்று கூறிய மறைந்த தலைவர் அஷ்ரப், இலங்கைத் தாய்க்கு ஒவ்வொரு பிரஜையும் தேவை, அனைத்துப் பிரஜைகளுக்கும் ஓர் இலங்கை தேவை. இதுதான் தேசிய ஐக்கிய முன்னணியின் இலச்சினையாகும் என அவர் அன்று தெரிவித்து இனத்துவ அரசியலிலிருந்து விடுபட்டு அனைத்து இனத்தவர்களையும் கொண்ட ஒரு தேசிய அரசியல் கட்சியினூடாக இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற இலக்குடன் அதற்கான அரசியல் பயணத்தை அவர் முன்னெடுத்தார்.
ஆனால்,அவரது அரசியல் சிந்தனை மாற்றமும் அந்தப் பயணமும் வெற்றியளிக்கவில்லை. அவரது அகால மரணத்தின் பின்னர் பாசறைப் போராளிகளால் அவரது இலக்கு முன்னெடுக்கப்படவில்லை. மாறாக சொற்ப இலாபங்களுக்காகவும் சுயநல, பெயர்தாங்கி அரசியலுக்காகவும் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டன. அவர் விட்ட இடத்திலிருந்து அவரது இலக்கு முன்னெடுக்கப்படாது கைவிடப்பட்டதன் பாவம் முஸ்லிம் சமூகத்தை மீண்டும் முப்பது வருடங்கள் பின்னோக்கி நகர்ந்து சிந்திக்கச் செய்துள்ளது. இதனை பச்சையையும், நீலத்தையும், சிவப்பையும் ஆதரிக்குமாறுவிடுக்கப்படுகின்ற கோரிக்கைகள், அறிக்கைகள் மூலம் புரியக் கூடியதாகவுள்ளது.
"எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் இன ரீதியிலான கட்சிகளைத் தவிர்த்து பெரும் தேசியக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும். அக்கட்சிகளினூடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும். பாதுகாப்பைப் பெற முடியும். முஸ்லிம் கட்சிகள் பின்னடைவைக் கண்டுள்ளன. பெரும்பான்மைக் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஆதலால், தங்கள் நலன் பேணும் பெரும்பான்மைக் கட்சிகளை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண் டும்” என்ற கருத்துகள் தென்னிலங்கை முஸ்லிம்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன.
ஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்களை இந்நாட்டில் அந்நியப்படுத்தும் அளவுக்கு இட்டுச் சென்றிருப்பது உண்மை. அவற்றிற்குச் சான்றான பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இருப்பினும், 'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலையிலான முஸ்லிம் அரசியல் சிந்தனையும் அதன் வழியிலான நகர்வும் ஆரோக்கியமானதாகுமா என்று சிந்திப்பதும் அவசியமாகிறது. சமூக ரீதியிலான அரசியல் பலம் ஆரோக்கியமானதா அல்லது எடுப்பார் கைப்பிள்ளை அரசியல் ஆரோக்கியமானதா என்று சிந்திக்க வேண் டிய சூழலும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் அரசியலின் பலவீனம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க பலமாக அமையும். ஏனெனில், தற்போது முஸ்லிம்களின் மூக்கின் நுனி வரை இனவாதம் வந்து நிற்கிறது என்பதையும் காண முடிகிறது.
உலகில் எல்லா மக்களும், மதங்களைத் தழுவியே வாழ்கின்றனர். எல்லா மதங்களும் நல்லவற்றையே போதிக்கின்றன. சமயம், மார்க்கம், மதம் என்பன கருத்தொருமித்த சொற்களாகும். மதம் என்பதற்கு 'வெறி' என்னும் ஒரு கருத்தும் உள்ளது. மதம் வெறியாக மாறும்போதுதான் விரும்பத்தகாத பல பிரச்சினைகள் உருவெடுக்கின்றன. இவை இனங்களுக்கிடையில் காணப்படும் சமாதானம், சகவாழ்வு. இன ஒற்றுமை, இனங்களுக்கிடையிலான நம்பிக்கை என்பவற்றை சவாலுக்குட்படுத்தி பலமிழக்கச் செய்வதை அவதானிக்கலாம்.
ஓர் இனம் மற்றைய இனத்தை விட மேலானது என்ற உள்ளார்ந்த நம்பிக்கையே இனவாதம் எனக் கருதப்படுகிறது. இனவாதமானது ஓர் இனம் தொடர்பான தப்பபிப்பிராயம், ஓரினத்துக்கெதிரான வன்முறை, அடக்குமுறை, ஒடுக்குமுறை போன்றவற்றைக் கொண்டது. இன மேலாண்மை நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்மறை மனப்பாங்குகளோடு ஏனைய இனங்களை வெறுத்து, வெறுப்படையச் செய்து செயற்படுகின்றவர்கள் இனவாதிகளாகக் கருதப் படுகின்றார்கள்.
பல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாடு சுதந்திரத்துக்கு முன்னரும் சுதந்திரத்தின் பின்னரும் எதிர்கொண்ட அழிவுகளுக்கு இனவாதமும், மதவாதமும் முக்கிய காரணிகளாகும். இனவாதத்தையும், மதவாதத்தையும் இயக்கும் பெரும் சக்தியே அரசியலாகும். சுய இலாபங்களை அடைந்து கொள்வதற்காக அரசியலால் தூண்டப்படுகின்ற இனவாதமும், மதவாதமும், பிரதேசவாதமும் இந்நாட்டை அபிவிருத்தியடைவதிலிருந்தும் சர்வதேசத்தில் நன்மதிப்பைப் பெறுவதிலிருந்தும், நல்லிணக்க சகவாழ்விலிருந்தும் வரலாற்று நெடுகிலும் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
உலகுக்கு அமைதியையும், சகவாழ்வை யும் விட்டுக்கொடுப்பையும் அறிமுகப்படுத்திய இஸ்லாதத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் திருந்தவில்லை, திருந்துங்கள் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுவது அல்லது முன்வைக்கப்பட்டது தொடர்பில் முஸ்லிம்கள் சிந்தித்தார்களா?, அவர்கள் முஸ்லிம்கள் மீது அன்று சுமத்திய குற்றங்களுக்கும், விமர்சனங்களுக்கும் முறையாக பதிலளித்தார்களா? முஸ்லிம் தரப்பு பிழைகளைத் திருத்த முயற்சித்தார்களா அல்லது முஸ்லிம்களது பக்கம் எந்தப் பிழையுமில்லை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்களா என்ற கேள்விகளையும் தற்போது எழுப்ப வேண்டியுள்ளது. அது மாத்திரமின்றி பிழையான செயற்பாடுகளையும் திருத்தாமல் இருக்க முடியாது என்பதை யும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் ஒவ்வொரு துறையிலும் விடும் சிறு சிறு தவறுகளும் சட்டத்துக்குப் புறம்பான விடயங்களும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், வர்த்தக நடவடிக்கை தொடர்பிலும் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்மறை சிந்தனைகள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பாக சமூக வலைத் தளங்கள் இச்செயற்பாடுகளுக்கு பேராயுதமாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சமகால அரசியல் சூழல் தொடர்பில் சிந்திப்பதும் சாணக்கியமாகச் செயற்பட்டு முஸ்லிம்களுக்கெதிரான பரப்புரைகளையும் செயற்பாடுகளையும் வெற்றி கொள்வதும் அவசியமாக உள்ளது.ஏனெனில், இந்நாடு எல்லோருக்கும் சொந்தமானது. இந்நாட்டின் அரசியலமைப்பானது இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் சமூகங்களும் தங்களுக்குரிய உரிமைகளோடு வாழ முடியும் என்றே கூறியிருக்கிறது. அதனால் சந்ததி சந்ததியாக இந்நாட்டில் வாழவிருக்கும் முஸ்லிம் கள் பொருளாதாரத்தை மாத்திரமின்றி அத்தனை சமூகக் கூறுகளையும் பாதுகாத்து இன ஐக்கியத்துடன் வாழ வேண்டிய தேவையுள்ளது.
இஸ்லாம் மார்க்கமானது முஸ்லிம்களின் சகோதரத்துவம் என்ற ஒற்றுமையில் உருவான ஒப்பற்ற வாழ்க்கை நெறி. இருந்தும், இதன் ஒழுக்கப் பண்புகளையும் மாண்புகளையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி சுய இலாபங்களுக்காகவும், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், கட்சி ரீதியாகவும், ஆன்மீகக் கொள்கைகள் ரீதியாகவும், அமைப்புகள் ரீதியாகவும் தனித்தனியே பிரிந்து செயற்பட்டதன் பலாபலன்களை சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது
சமூக ஒற்றுமை என்பது ஒரு கடமை, ஒரு வணக்கம். சமூகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு தனி நபர்களுக்கிடையே பரஸ்பர அறிமுகம், புரிந்துணர்வு, ஒப்பந்தம், ஐக்கியம் இருக்க வேண்டும்.
இந்த எதிர்பார்ப்வை நிறைவேற்ற வேண் டிய முஸ்லிம்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது. ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டிய சமூகம் நான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும். இந்நாட்டில் ஏற்படும் ஆட்சி அதிகார மாற்றப் பரப்புக்குள் வாழும் முஸ்லிம் சமூகம் எத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் என்று சிந்தித்து அச்சவால்களை வெற்றி கொள்ளவும்,எழுந்துள்ள மற்றும் எழும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்பபைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இராஜதந்திர ரீதியில் நிதானத்துடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேற்றுமைக்குள் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டியது தற்கால அரசியல் சூழலின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. இத்தேவையானது முஸ்லிம்களின் அரசியலுக்குப் பலத்தை அளிப்பதுடன் எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
அத்தோடு, இனத்துவத்தினூடான அரசியலை மாத்திரம் முன்னெடுப்பது எதிர்கால நலன்களில் பாதிப்பை ஏற்படுத்த லாம் என்றும் தேசிய இனமாக வாழும் முஸ்லிம்களை தேசிய அரசியலினூடாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டும் என்றும் கருதியே அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்து அக்கட்சியினூடாக தேசிய மட்டத்தில் பல இலக்குகளை அடைந்து கொள்ளவும் திட்டமிட்டு, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸை இணைத்து போட்டியிடச் செய்த அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னணியையும் தேர்தல் களத்தில் இறக்கினார்.
இருப்பினும், அத்தேர்தலை அவரால் சந்திக்க முடியவில்லை. தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவரை அகால மரணம் அழைத்துக் கொண்டது. இருந்தும், அததேர்தலில் 1,97,983 வாக்குகள் தேசிய ரீதியாக தேசிய ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்ததுடன் ஒட்டுமொத்தமாக 11ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாகக் கிடைக்கப்பெற்றன. அஷ்ரபின் அரசியல் சாணக்கியம் பல்வேறு அரசியல் வெற்றிகளை முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு சிறுபான்மை சமூகத்துக்கும் பெற்றுக் கொடுத்தது. அந்த வெற்றியின் பலன்களை அதிகம் நுகர்ந்தவர்கள் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும் அவரின் மரணம் முஸ்லிம் காங்கிரஸை பிளவுக்குள்ளாக்கியதோடு அவரின் தேசிய மக்கள்சார் இலக்குகளை அடைந்து கொள்ளும் தலைமைகளையும் அடையாளம் காண முடியாது பெரும் தலைமைத்துவ இடைவெளியை விட்டுச் சென்றது.
இத்தலைமைத்துவ இடைவெளிதான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பின்னோக்கி சிந்திக்கச் செய்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் மக்களை இணைத்து அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியினூடாக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்த கட்சியாக பரிணமிக்கச் செய்து இந்நாட்டில் புதிய அரசியல் யுகத்தை உருவாக்கும் அஷ்ரபின் முயற்சியையும், இலக்கையும் கைவிட்டு தங்களது நலன்களுக்காக கட்சி ரீதியாக பிரிந்து நின்று செயற்பட்ட பாவத்தின் விளைவு நிழலாடிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுவதற்கான வியூகங்களை வகுத்துச் செயற்படுவது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மீது காலம் சுமத்தியுள்ள சுமையாகும். இந்தச் சுமையைச் சுமந்த வர்களாகச் செயற்பட்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகளவிலான ஆசனங்களைப் பெறுவதன் மூலமே முஸ் லிம் அரசியலைப் பலமிக்கதாக மாற்ற முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் ஆலோசனையாக உள்ளதைக் காண முடிகிறது. முஸ்லிம்களின் அரசியல் பலம் அதிகரிக்கப்பட வேண்டுமாயின் அதற்கு ஒருமித்த வாக்குப்பலம் அவசியமாகவும், தேவையாகவும் கருதப்படுகிறது. இந்த அவசியத்தையும், தேவையையும் காலம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சுமத்தியிருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.
- எம்.எம்.ஏ.ஸமட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM