மில்லேனியம் வருடம் ஆரம்பமாகி 19 வருடங்கள் கடந்து விட்டன. 2020 புதிய ஆண்டு பிறந்துள்ளது. வழமை போல ஒவ்வொரு புதிய ஆண்டும் பிறக்கும் போது, நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்த்து வாழ்த்துக்கள் பரிமாறப்படுவதுண்டு. அதே எதிர்பார்ப்போடு இந்த ஆண்டையும் வரவேற்போம். அதேநேரம், கடந்த காலத்தை அசை போட்டுப் பார்த்து நிகழ்காலத்தில் திட்டமிட்டு செயற்படுவதற்கும் எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
2019 - ஒரு முக்கியமான ஆண்டு
நேற்றோடு விடைபெற்றுச் சென்றுள்ள 2019 ஆம் ஆண்டு எமது நாட்டைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகும். ஏனெனில், இரண்டு தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் 2017 ஒக்டோபர் மாத இறுதியில் மாற்றம் பெறத் தொடங்கியது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் 2018 டிசம்பர் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறியதால், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சி அமைத்தது. அதுவரை எதிர்க்கட்சியாக அங்கம் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி எதிர்க் கட்சித் தலைவராக இருந்த இரா. சம்பந்தன் மிகவும் நாகரிகமான முறையில் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
52 நாள் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அமைச்சுகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அபிவிருத்திப் பணிகளில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்து வந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் முக்கியமான தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றில் முஸ்லிம் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார்கள். வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் நாடு துயரத்தில் மூழ்கியிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலும் முடிவுகளும்
2020ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நேரத்தில் முன்கூட்டியே 2019 நவம்பர் 16 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாயிற்று. இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ, அமைச்சராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில் பாதுகாப்பு செயலாளராக மாத்திரம் பதவி வகித்த கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் காணப்பட்டார். வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறுபான்மை மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே அதிகமாகக் கிடைத்திருந்தது. இருந்தும் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை வாக்குகளுடன் கோத்தபாய வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகி அவரது தலைமையில் காபந்து அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுபான்மை மக்கள் சார்பில் ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமைச்சர்களாக இருந்த போதிலும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட அமைச்சராகவோ, பிரதியமைச்சராகவோ நியமனம் பெறவில்லை.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்புக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினார்கள். முஸ்லிம் அமைச்சர்களும் தமது ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் எல்லோரும் ஒரே நேரத்தில் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
வடக்கு–கிழக்கு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள்
2019ஆம் ஆண்டிலிருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் வடக்கில் பாதுகாப்பு படையினர் கையகப்படுத்தியிருந்த ஆயிரக் கணக்கான அரசாங்க மற்றும் தனியார் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாவிட்டாலும்கூட ஓரளவு காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. அதேநேரம், காணாமல் போனோர் தொடர்பாக வருடக்கணக்கில் அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தும்கூட அதற்கு எந்தவிதமான தீர்வையும், பதிலையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவருமே தீவிரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்லர் என்பதை நிரூபித்து வந்துள்ளார்கள். குண்டு வெடிப்பில் உயிரிழந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் உடல்களைக் கூட புதைப்பதற்கு அங்குள்ள மக்கள் இடம் கொடுக்கவில்லை. அவர்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் காட்டியும் பெரும்பான்மை சமூகம் அதன் கடும் போக்கிலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லை. எனவே, சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமையே இந்த நாட்டில் அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கு வழி சமைக்கும் என்பது உணரப்பட்டு வருகின்றது.
மேலும் கூட்டணி அமைக்கும் முயற்சி
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பொருந்திய அமைப்பாக இருந்து வந்துள்ளது. எனினும், அதன் போக்கில் இளைய சமூகம் திருப்தி கொள்ளாத நிலையிலேயே இருந்து வருகின்றது. அதற்கான காரணத்தை ஜனாதிபதித் தேர்தலின்போது வெளிப்படையாகவே கூறியும் இருந்தார்கள். இருந்தும் அவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காத நிலையில், மேலும் ஒரு கூட்டணி உருவாகும் வாய்ப்பும் தோன்றியுள்ளது. விரைவில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் மற்றுமொரு கூட்டணி உதயமாகி தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இவ்வாறு பல கூட்டணிகள் உருவாகி தலைமைத்துவப் போட்டிகள் அதிகரிக்கும் போது, சிறுபான்மை மக்களின் பலத்தை இழக்கக்கூடிய ஆபத்தும் காத்திருக்கின்றது. அதேநேரம், பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் போது, ஆட்சியாளர்களிடம் பேரம் பேசும் சக்தியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது.
மலையக மக்கள் அன்றும் இன்றும்
மலையக மக்களைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டு அவர்களின் அரசியல் உரிமைகளுக்கு வழிவகுத்த ஆண்டாகத் திகழ்ந்துள்ளது. மலையக மக்களுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் முன்னாள் அமைச்சர் பி. திகாம்பரம் தலைமையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக இடம்பெற்று வந்ததோடு, அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் 4ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உலக வங்கியின் உதவியுடன் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வந்தது. சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்த 5 பிரதேச சபைகளுக்கு மேலதிகமாக இன்னும் 5 பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டு மொத்தமாக 10 பிரதேச சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைகள் 6இல் தமிழர்களே தலைவர்களாக பதவி வகித்து நிர்வாகம் செய்து வருகின்றார்கள்
பிரதேச சபைகள் ஊடாக தோட்டப் பகுதிகளுக்கு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியாது என்றிருந்த பிரதேச சபை சட்டத்தில் கடந்த ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளிவந்துள்ளது. அதன்படி இனிமேல் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க எந்த விதமான தடையும் சட்ட ரீதியில் கிடையாது. தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இதற்கான முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளார்கள்.
பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டது போல, மேலதிகமாக ஐந்து பிரதேச சபைகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல, மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கு மலையகத்துக்கென தனியான “அபிவிருத்தி அதிகார சபை” உருவாக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன் தலைவராக சந்திரா சாப்டர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆறு பேர் கொண்ட பணிப்பாளர் சபையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
நீண்ட காலத்துக்குப் பிறகு தனி வீடுகள் தேவை என்ற சிந்தனை கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் மனங்களில் வேரூன்றத் தொடங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தில் கட்டப்பட்ட பல வீடுகள் முழுமை பெறாமல் உள்ளன. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தால் அவற்றை பூரணப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே, அவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது இப்போதைய அமைச்சரின் பொறுப்பாகும். முன்னாள் அமைச்சர் திகாம்பரம் ஆரம்பித்த வேலைத் திட்டத்தை இப்போதைய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இடைநிறுத்தி விடக்கூடாது. அவற்றோடு மேலும் பல பயனுள்ள திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
மலையகத்துக்கான தனியான பல்கலைக் கழகம் தேவை என்பது நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த ஒரு விடயமாகும். கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பான அறிக்கையை தயாரித்திருந்தார்கள். இப்போது அதற்கான முயற்சிகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைமையில் மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்க விடயம் ஆகும்.
அதேபோன்று, பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள், போக்குவரத்து வீதிகள் அனைத்தும் தேசிய ரீதியில் உள்வாங்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா சுகாதார மேம்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்து பல சிபாரிசுகளை வழங்கியுள்ளார். அவற்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
மலையகத்தில் தேசியப் பாடசாலைகள் இல்லாமல் உள்ளன. ஒரு காலத்தில் சில அதிபர்கள் மலையகத்துக்கு தேசியப் பாடசாலைகள் தேவையில்லை என்று எழுதிக் கொடுத்து நிராகரித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டு வந்துள்ளது. எனினும், எமது மாணவர்களுக்கு தேசியப் பாடசாலைகளை காலம் கடந்தாவது பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
இன்று மலையக இளைஞர்கள் சர்வதேச ரீதியில் விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை வென்று வருகின்றார்கள். மேலும் பலர் சாதனை படைக்கத் தயாராக இருக்கின்றார்கள். விளையாட்டுப் பயிற்சிக்கான கல்லூரிகள் எதுவுமே இல்லாத நிலையில் அவர்களால் சாதனை படைக்க முடியும் என்றால் எதிர்காலத்தில் SPORTS COLLEGE அமைக்கப்பட்டால் அவர்கள் எந்தளவுக்கு உச்சத்தைத் தொடுவார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அத்தோடு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஒரு வருடத்துக்கு அமுலில் இருக்கும். அதற்கிடையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஆறுமுகன் தொண்டமான் கூறியிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவும் உறுதியளித்திருந்தார். எனவே, எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளமை தொழிலாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மலையகத்துக்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகார சபைக்கு ஆளணியினரை நியமித்து அதன் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சுருக்கமாக கூறப் போனால், மலையகத்துக்குத் தேவையான சில அடிப்படை அரசியல் உரிமைகள் கடந்த காலத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில அமுல்படுத்தப்படாமலும் உள்ளன. எனவே, எதிர்காலத்தில் மக்களின் நலன் கருதி அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய பாரிய பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இன்னும் இரண்டு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் வெற்றி பெற்று தமது அரசியல் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாத்திரம் மலையக அரசியல்வாதிகள் நினைக்கக் கூடாது. தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உரிமைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். புதிய ஆண்டு மலையகத்துக்கு விடிவை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய பிரார்த்திப்போம்!
பானா.தங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM